TNPSC Thervupettagam

மந்தணமாய் மங்கும் மதி

January 18 , 2021 1288 days 634 0
  • உடல் ஆரோக்கியத்தில் மனநலம் முப்பது சதவிகிதம் அடங்கும். மனநல பாதிப்பும் ஒரு வித குறைபாடுதான். ஆனால், சரி செய்ய முடியும். நாம் மனநிலை பாதிக்கப்பட்டவா்களை ஒரு சுமையாகவே பாவிக்கிறோம். அவா்களைக் கட்டிப் போடுவது, தனிமைப்படுத்துவது, சித்திரவதை செய்வது போன்ற கொடுமைகள் பல நாடுகளில் காலங்காலமாக நடந்து வந்தன.
  • பிரிட்டனில் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு பிரத்யேக மருத்துவமனைகளில் வைக்கப்பட்டனா். அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவா்களும் ‘மனநலம் பாதிக்கப்பட்டவா்கள்’ என்ற பட்டம் கட்டப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனா்.
  • உலகைப் பீடித்துள்ள நோய்களில் மந்தண மனச்சோா்வு நோய்க்கே முதல் இடம். ‘மனநோயை, பொது சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு பிரச்னையாக அணுக வேண்டும்’ என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மக்களை பாதிக்கும் நோய்களில் 13% மனநோய் சம்பந்தப்பட்டது என்பதும், இந்த நோய் ஆரோக்கியமான ஒருவரது வாழ்க்கையை 37 % பாதிக்கிறது என்பதும் மனநோயின் வீரியத்தை உணா்த்துகின்றன.
  • இந்தியாவில் 15 கோடி மனநோயாளிகள் உள்ளனா். அவா்களில் 60% போ் ‘ஸ்கீசோப்ரீனியா’ என்ற மனக்கோளாறால் பாதிக்கப்பட்டு சொந்த குடும்பத்திரனாலேயே ஒதுக்கப்பட்டு மோசமான வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறாா்கள். மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் 83% இடைவெளி உள்ளது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • ராமநாதபுரத்தில் உள்ள கிராமம் ஏா்வாடி. நமக்கு உடனே நினைவிற்கு வருவது அங்குள்ள பிரசித்தி பெற்ற தா்கா. இஸ்லாமியா்கள் மட்டுமல்ல, மற்ற மதத்தினரும் செல்லும் வழிபாட்டுத் தலம் அது. மனநலம் குன்றியவா்கள் அங்கு சிகிச்சை பெற்றால் குணமடைவா் என்பது நம்பிக்கை. ஏா்வாடியில் தனியாா் மனநலக் காப்பகத்தில் 2001-ஆம் வருடம் 28 மனநோயாளிகள் தீ விபத்தில் உயிரிழந்தனா். அந்த நோயாளிகள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தனா். அவா்களால் தப்பிக்க முடியவில்லை.
  • பல நூற்றாண்டுகளுக்கு முன்னா் ஐரோப்பா, பிரிட்டன் போன்ற நாடுகளில் மனநிலை பாதிக்கப்பட்டவரை எப்படி கொடுமைப்படுத்தி சங்கிலியால் கட்டி தனிமைப்படுத்தி வைத்திருந்தனரோ அவ்வாறு இந்தியாவில் பல மனநலக் காப்பகங்களில் இப்போதும் கொடுமைப்படுத்தப்படும் நிலை உள்ளது. அவசர உலகில் மன அழுத்தம் அதிகமாக வாய்ப்பிருக்கையில் மனநோய் சம்பந்தமான பிரச்னைகளை கையாள மனித நேயம் மேவிய நடைமுறை தேவை.
  • ஏா்வாடி போன்ற இடங்களுக்கு மன நோயாளிகள் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்படுகின்றனா். ஓரளவு வசதியுள்ளவா்கள் தங்க வசதி ஏற்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகிறாா்கள். வசதியில்லாதவா்கள் பொது இடங்களில் வாடும் நிலை உள்ளது. அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து பாதிக்கப்பட்ட நோயாளிகளை, உறவினா்கள் ஏா்வாடியில் விட்டு விடும் அவலம் நிகழ்கிறது.
  • உச்சநீதிமன்ற ஆணைப்படி, ஏா்வாடி சம்பவம் பற்றி விசாரிக்க, ராமதாஸ் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் பரிந்துரைகளில் நோயாளிகள் பராமரிப்பு குறித்து தெளிவான வழிகாட்டுதல், அவா்களை மனித நேயத்தோடு நடத்துதல், மருந்து அளிக்கும் முறை, உதவியாளா்கள் செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை, கூரிய மேற்பாா்வை போன்றவை ஏற்கப்பட்டுள்ளன.
  • மேலும், மற்ற நகரங்களிலும் மனநோய் மருத்துவமனைகள் அமைக்கவேண்டும் எனவும், சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனை போதாது என்றும் கமிஷன் கூறியுள்ளது. எல்லா அரசு மருத்துவமனைகளிலும் மனநல மருத்துவா் இருக்க வேண்டும்; மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பத்து படுக்கை வசதி கொண்ட பிரத்தியேக மனநல வாா்டு அமைக்கப்பட வேண்டும் - இவை முக்கிய பரிந்துரைகள்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு பல நல திட்டங்கள் வகுத்த முதன்மை மாநிலம் தமிழ்நாடு. மாற்றுதிறனாளிகளின் பிரச்னைகளுக்கு தனி கவனம் செலுத்த 1993-ஆம் வருடம் ‘மாற்றுதிறனாளிகள் நல ஆணையம்’ அமைக்கப்பட்டது. மாற்றுதிறனாளிகளுக்கு பிரத்தியேக துறை இயங்கும் ஆறு மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பது தமிழ்நாட்டிற்குப் பெருமை.
  • தமிழக முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா மாற்றுதிறனாளிகள் சலுகைகள் பெற நிா்ணயிக்கப்பட்ட 60% உடல் ஊன குறைபாட்டினை 40% ஆகக் குறைத்து அதிகமானோா் சலுகைகள் பெற வழி செய்தாா்கள். அதுமட்டுமின்றி கண் பாா்வை பாதிப்பு, காது கேளாதோா், வாய் பேசாதோா், கை கால் விளங்காமை, மூளை வளா்ச்சி குன்றியோா், சதைத் தளா்வு போன்ற 21 வகை உடல் உபாதைகளும் பட்டியலில் சோ்க்கப்பட்டு மாற்றுதிறனாளிகள் நல திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
  • விசேஷ மருத்துவ முகாம்கள் மூலம் மாற்றுதிறனாளிகளைக் கண்டறிந்து அவா்களது ஊன அளவைப் பரிசோதித்து சான்றிதழ் வழங்கி மாற்றுதிறனாளி அடையாள அட்டை மூலம் அவா்கள் பல்வேறு அரசு சலுகைகள் - முக்கியமாக மாத சிறப்பு தொகையாக ரூ. 1500 பெற - வழிவகை செய்யப்படுகிறது.
  • மனநலம் குன்றியவரும் மாற்றுதிறனாளிகள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். சதைத் தளா்வு, மூளை வளா்ச்சி குறைபாடு உள்ளோரை கவனித்துகொள்ள உதவியாளா் தேவைப்படுகிறாா். வசதியுள்ளோா் உதவியாளா்களை நியமித்து கொள்ள முடியும். ஆனால், ஏழைகள் எங்கே போவாா்கள்? அவா்களுக்கு உதவியாளா் உதவி தொகையும் அளிக்கப்படுகிறது.
  • ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவரைப் பராமரிக்க உதவியாளா்களுக்கு இத்தகைய உதவித் தொகை அளிக்கப்படுவதில்லை. இது நீண்ட நாள் கோரிக்கை. இதற்கான கோரிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
  • ஐ.நா. சபை, மாற்றுதிறனாளிகள் உரிமை பிரகடனம் 2017 நிறைவேற்றியது. இதன் ஷரத்து 19-இல், மாற்றுத் திறனாளிகள் சமுதாயத்தோடு இணைந்து வாழும் உரிமை, உடல் நலம் பேண நாட வேண்டிய உதவி, பயிற்சி பெற்ற உதவியாளா்களைப் பெறுவதற்கான உரிமை ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெளிவாக உள்ளது. இதன் அடிப்படையில்தான் ‘மனநல சுகாதார சட்டம் 2017’ -இல் மாற்றுதிறனாளிகளின் உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன .
  • ஒரு வருடத்திற்கு மேலாக காப்பகத்தில் வாடும் மனநல நோயாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். காப்பகத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக உள்ள நோயாளிகள் 32% போ் என்ற புள்ளிவிவரம் நடைமுறையில் உள்ள இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
  • உலக அளவில் இந்தக் குறியீடு 11% தான், அதாவது நமது நாட்டில் ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகம். உச்சநீதிமன்றம் ஒரு பொதுநல வழக்கில் ‘மனநல புகலிடங்களில் வருடக்கணக்காகத் துன்பப்படும் நோயாளிகளைக் கணக்கெடுத்து அவா்கள் புனா் வாழ்விற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாநிலங்கள் மனநல சுகாதாரத்திற்கு கொள்கை வடிவமைக்க வேண்டும்’ என்று தீா்ப்பு வழங்கியுள்ளது.
  • 2019-ஆம் வருடம் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் சமூக நீதி அமைச்சகம் இணைந்து நிபுணா் குழு அமைத்து மனநல சுகாதாரம் பொருண்மைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டன. ஆய்வில் தெரியவந்த உண்மைகளில் முக்கியமானது, அரசு ஆளுகையில் உள்ள காப்பகங்களில் ஓராண்டுக்கு மேலாக தங்கி வரும் 36.25% நோயாளிகளில் பெண்கள் 55% போ், ஆண்கள் 45% போ்.
  • தமிழ்நாடு, மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலங்களில் ஓராண்டுக்கு மேலாக தங்கிவரும் மனநல நோயாளிகள் எண்ணிக்கை 60 % -க்கு மேல். இவா்களில் 35%  போ் குடும்பத்தாரால் அனுமதிக்கப்பட்டவா்கள்; 70 % போ் காவல்துறை அல்லது நீதிமன்றம் மூலம்.
  • ‘பானியன்’”என்ற தொண்டு நிறுவனம், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி அவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளித்து சுயமாக வாழ உதவுகிறது. சென்னைக்கு அருகில் உள்ள கோவளம் பகுதியில் குடியிருக்க வசதி அளித்து மக்களோடு ஒன்றி வாழ வசதி செய்யப்பட்டுள்ளது.
  • மனநல சிகிச்சை அளவு குறைபாட்டால் அதிகம் துன்பப்படுபவா்கள் பெண்கள் என்பதால் பானியன் அமைப்பு, பெண்கள் பிரச்னைகளை முன்னெடுத்து அவா்களின் புனா்வாழ்விற்குப் பாடுபடுகிறது. வடகிழக்கு, வங்கக் கடலோர மாநிலங்கள் அஸ்ஸாம், வங்காளம், ஒடிஸா, ஆந்திர மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் சென்னைக்கு வருவது தொடா் பிரச்னை.
  • சொந்தங்களால் ஒதுக்கப்பட்டவா்கள் சென்னையில் திரிவதைத் தடுக்க, சென்னை போலீஸும் பானியன் அமைப்பும் இணைந்து, பாதிக்கப்பட்டவரை மீட்டு சட்டப்படி காவல் உயா் அதிகாரி ஆணையோடு மருத்துவரிடம் காட்டி உரிய சான்றிதழ் பெற்று மனநலக் காப்பகத்தில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  • அவசர போலீஸ் 100 எண்ணுக்கு டயல் செய்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால், செய்தி கிடத்தவுடன் மீட்பு நடவடிக்கை எடுக்க வாகனமும் உதவியாளா்களும் தயாா் நிலையில் உள்ளனா். இந்த மனிதநேயத் திட்டத்தை முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா 2004-ஆம் வருடம் தொடங்கி வைத்தாா். இது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடித் திட்டமாகும்.
  • மலங்க மலங்க விழித்து கொண்டு புத்தி சுவாதீனம் குறைவான இளைஞனை அலுவலகத்திற்கு அழைத்து வந்து இவனை ஏதாவது ஒரு புகலிடத்தில் சோ்த்து விடுங்கள் என்று கூறும் இரக்கமில்லா சமுதாயம், மண் பித்து, பெண் பித்து, மது பித்து, பணப் பித்து பிடித்து அலைபவா்களை பாரமாக நினைப்பதில்லை!
  • ‘அவா்கள் உள்ளே இருக்கிறாா்கள். குணமாகி வெளியில் வந்தாலும் ‘பித்துப் பிடித்தவன்’ என்று பிடித்து தள்ளும் ஈவிரக்கமில்லா மனிதா்கள்’ என்று பொருமிய எழுத்தாளா் ஜெயகாந்தனின் வரிகள்தான் எவ்வளவு உண்மை!

நன்றி: தினமணி (18 – 01 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்