TNPSC Thervupettagam

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு: வலுக்கும் விவாதங்கள்

January 17 , 2022 931 days 386 0
  • நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தேர்தல் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்- 2021, வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் அலுவலர்கள் வாக்காளர்களிடம் அவர்களது ஆதார் எண்ணைக் கேட்டுப் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது.
  • ஆதார் எண் இல்லாதபட்சத்தில் வேறு அடையாளச் சான்றுகளைக் காட்டவும் இச்சட்டத் திருத்தம் அனுமதிக்கிறது என்றபோதும், இச்சட்டத் திருத்தம் அரசியல் வெளியில் தொடர்ந்து சூறாவளிகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.
  • தேர்தல் ஆணையம், அரசின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாமல் தனித்தியங்கும் அதிகாரத்தை அரசமைப்பின் வாயிலாகப் பெற்றுள்ளது; ஆதார் தரவுகளை நிர்வகிக்கும் ஆணையமோ மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இயங்கிவருகிறது என்பதே இந்த எதிர்ப்புக்கான முதன்மைக் காரணமாக முன்வைக்கப்படுகிறது.
  • புதுச்சேரியிலும் தெலங்கானாவிலும் நடந்த வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு முயற்சிகள், அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியலைத் தங்களுக்கேற்றவாறு திருத்திக்கொள்ளும் வாய்ப்புகளுடன் இருப்பதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றன.
  • ஏற்கெனவே, தொழில்நுட்பச் சிக்கல்களுடன் இயங்கிவரும் ஆதார் தரவுத்தளத்துடன் தேர்தல் ஆணையம் தன்னுடைய தரவுகளையும் பகிர்ந்துகொள்வது சரியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
  • வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பதை ஆதரிப்பவர்களும்கூட அதே அளவுக்குக் காரணங்களைப் பட்டியலிடுகின்றனர். இதன் மூலமாக, ஒரே நபர் இருவேறு இடங்களில் வாக்குரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது அவர்களது முக்கிய வாதம்.
  • சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றுவதற்கான ஒரு கருவி என்று ஆதார் திட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரைக்கும் அதற்கு எதிராகப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன, அதன் தொடர்ச்சியே இப்போதைய எதிர்ப்புப் பிரச்சாரமும் என்று இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • வாக்காளர் அட்டையில் புகைப்படம் இடம்பெற்றபோதும், எதிர்ப்புகள் எழத்தான் செய்தன. ஆனால், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் கள்ள வாக்குகள் போடுவது குறைந்தது.
  • வாக்கு இயந்திரங்கள் குறித்து நம்பிக்கையின்மையும் சந்தேகங்களும் எழுந்தபோது, வாக்குப் பதிவை உறுதிசெய்துகொள்ளும் வகையில், விவிபாட் இயந்திரங்கள் இணைக்கப் பட்டன.
  • எனவே, இந்த எதிர்ப்புகள் காலப்போக்கில் மறைந்துவிடும். எதிர்ப்புக்கு வலுவான காரணங்கள் இருக்கும்பட்சத்தில், அவை சரிசெய்யப்படும்.
  • வருமான வரித் துறையின் நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைத்ததால், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை நிர்வகித்துவருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது.
  • வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதன் மூலமாகப் போலி வாக்காளர் பிரச்சினைகளுக்கும் முடிவுகட்ட முடியும். 18 வயதாகும் புதிய வாக்காளர்களைப் பட்டியலில் இணைப்பதும் எளிதாகும்.
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலிலிருந்து தங்கள் பெயரை நீக்கி, புதிய பட்டியலில் சேர்ப்பதற்கான நடைமுறைகளும் எளிதாகும். நேர்மையான, வெளிப்படையான ஜனநாயக நடைமுறைக்குத் துல்லியமான வாக்காளர் பட்டியலே தொடக்கப்புள்ளி.
  • ஆனால், நாடாளுமன்ற நிலைக் குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட்டபோது, எதிர்ப்புத் தெரிவிக்காத எதிர்க்கட்சிகள் மக்களவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டபோது மட்டும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அப்பட்டமான கட்சி அரசியலாகவே பார்க்கப்படும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 - 01 - 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்