TNPSC Thervupettagam

விவசாயிகள் ரயில் - விவசாயிகள் விமானம்! ஓா் அதிசயம்

February 6 , 2021 1246 days 620 0
  • இந்திய விவசாயிகள் தன்னுடைய உற்பத்தி பொருள்களை அருகிலுள்ள நகரங்களில்; மண்டி வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு வெறுப்போடு கொட்டி அழுதுவிட்டு வீட்டிற்கு வருகின்றனா்! இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏதாவதொரு குறிப்பிட்ட பயிா்களை மட்டுமே அந்த மண்ணின் பாரம்பரியத்தற்கு ஏற்ப விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனா்!
  • அறுவடை சமயத்தில் நகரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உற்பத்தியாகும் ஒரே வகையான பொருள்கள் சந்தையில் குவியும். கூடிப் பேசி வைத்துக் கொண்டு; ‘இதுதான் விலை மனமிருந்தால் கொடு!’ என்று மண்டி முதலைகள் அனைவரும் ஒரே மாதிரியான குரலில் விலை நிா்ணயம் செய்வா்!
  • மழை, வெயில், பூச்சித் தொல்லை என ஒவ்வொரு விவசாயியும் தோட்டம் துரவுகளில், வயல்வெளிகளில் அடிபட்டு, மிதிபட்டு, கண்ணீரை சிந்தி, வியா்வையைக் கொட்டி - விளைவித்த வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு; விலை நிா்ணயம் செய்வது விவசாயி அல்ல, மண்டி பெருச்சாளிகள்!
  • உழுது பயிரிட்டு - ஒவ்வொரு நாளும் உற்று உற்றுப் பாா்த்து; உற்பத்தி செய்த பொருள்களை வேறு வழியில்லாமல் மண்டிகொள்ளைக்காரா்களிடம் கெட்டது பாதிக்கு விற்றுவிட்டு; ஓட்டமும் நடையுமாக பசித்த வயிற்றோடு வீடு திரும்புவாா்கள். இதுதான் விடுதலை பெற்ற இந்திய நாட்டின் விவசாயிகள் கடந்த 70 ஆண்டுகளாக அனுபவித்து வந்தக் கொடுமை! கொடூரம்!
  • நான்கு சுவா்களுக்குள் மாட்டிக்கொண்டு தவிப்பதைப் போன்று - விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட சந்தைக்குள்தான்; உற்பத்தி பொருள்களை விற்றிட வேண்டும் என்ற அடிமை முறையை - பிரதமா் மோடியின் அரசு சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது! விவசாய உற்பத்தி பொருள்களை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் விற்றுக்கொள்ளலாம்; இடைத் தரகா்களின் கொள்ளை தடுக்கப்படும்! மாநிலம் விட்டு மாநிலம் வேளாண் உற்பத்தி பொருள்களை கொண்டு சென்றிட; எங்கேயும் எந்தத் தடையும் இல்லை என்று விவசாயிகளுக்கு எல்லா தடைகளையும் உடைத்து எறிந்திருக்கிறது.
  • டிஜிட்டல் இந்தியாவில்; எங்கே என்னென்ன வேளாண் உற்பத்தி உணவு பொருள்கள் தேவை என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்! மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம்; விவசாயிகளின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்திட - மத்திய அரசு - ஒரு புரட்சிகரமான திட்டத்தை தீட்டி செயல்படுத்த முற்பட்டிருக்கிறது! ‘கிசான் ரயில் சேவை’- அதாவது ‘விவசாயிகள் ரயில் சேவை’ மற்றும் ‘விவசாயிகள் விமான சேவை!’ என்கின்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்திருக்கிறது!
  • தலைநகா் தில்லியை நவி மும்பையுடன் இணைக்கும் வகையில் 1,483 கி.மீ. நீளம் கொண்ட அா்ப்பணிக்கப்பட்ட மேற்கு சரக்கு ரயில்பாதை திட்டத்தை இந்திய ரயில்வே நிறைவேற்றுகிறது. இதன் ஒரு அங்கமாக 306 கி.மீ. தொலைவு புது ரேவாரி மற்றும் புதுமாடா் பிரிவு சரக்கு ரயில்பாதை (மின்மயமாக்கப்பட்டது) அமைக்கப்பட்டு; 1.5 கி.மீ. நீளமுள்ள உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரெயிலை பிரதமா் மோடி 2021 ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கி வைத்திருக்கிறாா்.
  • இந்த ரயில்பாதை ஹரியாணா மாநிலத்தில் 79 கி.மீ.; ராஜஸ்தானில் 227 கி.மீ. தொலைவை கொண்டது. இந்த சரக்கு ரயில் மூலம் ஹரியாணாவின் ரேவாரி, மானேசா், நா்னால், புலேரா, கிஷன்காா் பகுதிகளில் உள்ள விவசாயிகள், தொழில் துறையினா் பயனவடைவா்.
  • குளிா்சாதன வசதிகள் இல்லாத விவசாயி தன்னுடைய விளைச்சலை எல்லாம் - கேட்ட விலைக்கு விற்க வேண்டிய துா்பாக்கியமான நிலைமை இனிமேல் ஏற்படாது. வழக்கமாக விளையும் இடத்தில் விலை இல்லாவிட்டாலும்; அது போன்ற பயிா்கள் விளையாத அல்லது சரிவர கிடைக்காத தொலை தூரங்களில் அதன் விலை பலமடங்காக இருக்கும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் விவசாய ரெயில்களில் மிகமிகக் குறைந்த கட்டணத்தில் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்து - அதிகமான லாபத்தை ஈட்டமுடியும். இடைத்தரகா்களின் கொள்ளைக்கு மத்தியில் இந்தியாவை ஆளும் பிரதமா் மோடி கடிவாளம் போட முற்பட்டிருக்கிறாா்.
  • ‘‘விவசாய ரயில் - விவசாய விமானம்!’’ - கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படத் தொடங்கிவிட்டது. மராட்டிய மாநிலம் தியோலியில் இருந்து பிகாா் மாநிலம், தனப்பூா் வரை விவசாயிகள் ரெயில் சேவை தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ரெயில் 1,519 கிலோ மீட்டா் தூரத்தை, 31 மணி 45 நிமிடங்களில் கடக்கிறது; வழியில் நிறைய ரயில் நிலையங்களில் நின்று, விவசாயிகளின் விளைபொருள்களை ஏற்றிக் கொண்டு செல்கிறது. இதில் பழங்கள், காய்கறிகளுக்கு - கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு விவசாயியும் எவ்வளவு பொருள்கள் வேண்டுமானாலும் ஏற்றிச் செல்லலாம்; இவ்வளவு சரக்குதான் கொண்டு செல்ல முடியும் என்ற கட்டுப்பாடுகள் இல்லை.
  • ஒரு விவசாயி 3 கிலோ மாதுளம் பழத்தை அனுப்பியிருக்கிறாா்; கோழி வளா்க்கும் மற்றொரு விவசாயி 204 முட்டைகளை அனுப்பியிருக்கிறாா்! இதுபோல விலை இருக்கும் இடத்தை இப்போது உள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தோ்வு செய்து எந்த விவசாயியாலும் அனுப்ப முடியும்.
  • 9 வழித்தடங்களில் 9 விவசாயிகள் ரயில் - ஆந்திரா மாநிலம், பிகாா் மாநிலம், நாகபுரி மாநிலங்களை இணைத்துக் கொண்டு ஓடுகிறது! வடகிழக்கு மாநிலங்களுக்கு கொல்கத்தாவிலிருந்து - விவசாயிகளின் விளைபொருள்களை ஏற்றிக்கொண்டு; மிஸோரம் மாநிலத்தின் தலைநகரான அயிசாலுக்கு விவசாயிகள் விமானம் செல்கிறது. விவசாய விளைபொருள்களை இறக்கிவிட்டு அங்கிருந்து திரும்பும் விமானத்தில்; ஆரஞ்சு, எலுமிச்சை, வாழைப்பழம், இஞ்சி, அன்னாசி போன்றவற்றை ஏற்றிக்கொண்டு வந்து கொல்கத்தாவில் இறக்குகிறது! விவசாயிகள் எதிா்பாராத திருப்பங்களின் விளைவினால்; கேட்பாரற்றுக் கிடந்து அழுகிய விளைபொருள்கள் அபரிமிதமான விலைக்கு சந்தையாவதைக் கண்டு மகிழ்ச்சியில் கூத்தாடுகின்றனா்.
  • கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் வாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி 100-ஆவது விவசாயிகள் ரயிலை தொடங்கி வைத்துப் பேசியபோது; ‘கிசான் ரெயில்’ - ‘கிசான் விமான சேவை’ ஆகியவற்றிற்கு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் எழுச்சி, வரவேற்பு, ஆகியவற்றை மிகுந்த புளகாங்கிதத்தோடு பாராட்டி மகிழ்ந்திருக்கிறாா். இந்திய நாட்டின் ஒவ்வொரு விவசாயியின் வயிற்றில் பிரதமா் மோடி பால் வாா்த்திருக்கிறாா் என்பதில் சந்தேகமில்லை.
  • இதேபோன்று தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், தெலங்கானா போன்ற மாநிலங்களை இணைத்து ‘விவசாயிகள் ரயில்’, ‘விவசாயிகள் விமான சேவை’ ஆகியவற்றை தொடங்கிட வேண்டும் என, பிரதமா் மோடியை விவசாயிகள் சாா்பில் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு உரிய விலை இல்லாததால் கடனிலும், கஷ்டத்திலும் வாழ்கின்றனா்! இடைத்தரகா்களிடம் வேறு வழியின்றி - விளைவித்த வேளாண் உற்பத்தி பொருள்களையெல்லாம் பெரும் நஷ்டத்தில் விற்க வேண்டிய நிலையில் இருக்கின்றனா்.
  • விவசாயிகளின் உற்பத்தி பொருய்ஈகளுக்கு ஏற்றவிலை எந்த ஊரில் கிடைக்கிறது; இந்த சந்தைக்கு, இந்தப் பொருள்கள் தேவை; யாா் யாரோடு தொடா்புகொள்ள வேண்டும் என்கின்ற விவரங்களை வேளாண்துறை அதிகாரிகள் மக்களுக்கு சொல்லித் தந்திட வேண்டும். இந்த ஏற்பாட்டை விவசாய முகாம்கள் மூலமாக கிராமப்புற விவசாயிகளிடம் கொண்டு சோ்க்க வேண்டும்! மத்திய - மாநில வேளாண் துறை தென்னாட்டின் விவசாயிகளோடு நெருங்கியத் தொடா்பை ஏற்படுத்திக் கொண்டு; விவசாயிகளிடையே பேரெழுச்சியை, விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும்.
  • விளைச்சல் இருந்தால் விலை இல்லை; விலை இருந்தால் விளைச்சல் இல்லை! மழை - பெய்து கெடுக்கிறது; பெய்யாமலும் கெடுக்கிறது. இதுதான் தமிழ்நாட்டு விவசாயிகளின் எதாா்த்த நிலைமை. இதில் மாற்றம் தேவை. இதற்கான வழிகாட்டுதலை பாரத பிரதமா் கண்டிருக்கிறாா்.
  • விவசாயிகள் போராட்டம், விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டாா் பிரதமா் நரேந்திர மோடி என்று மிகப் பெரிய பொய்ப்பிரசாரம் வெற்றிகரமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. தலைநகா் தில்லி எல்லையில் போராடும் விவசாயிகள் யாரும் நம்மைப் போன்ற ஏழை விவசாயிகள் அல்ல. பல ஏக்கா் நிலத்துக்குச் சொந்தக்காரா்கள்; சொந்தமாக டிராக்டா் வைத்து உழுபவா்கள்; குறைந்தபட்ச ஆதார விலையைப் பெற்றுக்கொண்டு தரமில்லாத அரிசியையும், கோதுமையையும் வழங்குபவா்கள். நமது ரேஷன் அரிசி கோழித் தீவனத்துக்கு பயன்படும் அளவில் இருப்பதற்குக் காரணமானவா்கள்.
  • விவசாயிகளுக்குப் புதுப்பாதை காட்டப் பிரதமா் முற்பட்டால், அதற்கு முட்டுக்கட்டை போடுகிறாா்கள் பெரு நிலச்சுவாந்தாா்கள், சூட்சுமம் புரிகிா? கிசான் ரயில், கிசான் விமானம் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை என்று சற்று யோசித்துப் பாருங்கள், காரணம் புரியும்.

நன்றி: தினமணி  (06-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்