TNPSC Thervupettagam
August 10 , 2021 1088 days 548 0
  • அரசு நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதை உறுதிப்படுத்துவது என்பதைத் தாண்டி, நிலைமை மோசமானதற்குத் தான் காரணமில்லை என்பதையும் அதைச் சீர்ப்படுத்துவது எளிதாக இல்லை என்பதையும் எடுத்துச் சொல்வதற்காகவும் வெள்ளை அறிக்கைகள் பயன்படுகின்றன.
  • தமிழ்நாடு அரசின் அதிகரித்துவரும் கடன் சுமை குறித்து வெளியாகியிருக்கும் தற்போதைய வெள்ளை அறிக்கையும் அத்தகையதே.
  • இருபதாண்டு காலமாகத் தொடர்ந்து தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துவருவது இந்த அறிக்கையின் வழியே தெளிவாகிறது.
  • அதே நேரத்தில், பெருந்தொற்று காரணமாக அரசின் வருவாய் குறைந்து சுமையின் அழுத்தம் அதிகரித்துவருகிறது.
  • இதையும் கவனத்தில் கொண்டே, வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கும் இந்த நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகளை மதிப்பிட வேண்டும் என்பதுதான் வெள்ளை அறிக்கையின் நோக்கமாக இருக்க வேண்டும்.
  • வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே சேலம் கொங்கணாபுரத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பக்க நியாயமாகச் சில கருத்துகளைத் தெளிவுபடுத்திவிட்டார்.
  • அவற்றில் முக்கியமானது, தமது ஆட்சிக் காலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது. மின்னுற்பத்திக்கான செலவு உயர்ந்துவிட்ட நிலையில், மின்கட்டணம் உயர்த்தப்படாததும் வருவாய் இழப்புக்கு முக்கியக் காரணம்.
  • இந்தப் பிரச்சினையை மேலும் நீண்ட காலத்துக்குத் தள்ளிவைக்கவும் முடியாது.
  • பழனிசாமி சுட்டிக்காட்டியிருக்கும் மற்றொரு நெடுநாளைய சிக்கல், எரிபொருட்களின் விலை உயர்ந்தாலும் அதற்கேற்ப பொதுப் போக்குவரத்தின் பயணக் கட்டணம் உயர்த்தப் படவில்லை என்பது. இவ்விரண்டு விஷயங்களிலும் திமுக தெளிவான ஒரு முடிவை எடுக்கக் காலத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.
  • கடன் சுமைக்கான பழியிலிருந்து தம்மைக் கவனமாக விடுவித்துக்கொள்ள விரும்பும் அதிமுகவானது, திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
  • இன்றைய நிதிநிலையில், பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பு சாத்தியமில்லை.
  • புதிய திட்டங்களுக்கும் பெரிதும் வாய்ப்பில்லை, அப்படியே தொடங்கப்பட்டாலும் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவியலாது என்பது அதிமுகவுக்குத் தெரியாதா என்ன? அரசியலும் நிதியியலும் இணைகோடுகள். இரண்டும் ஒன்றாகச் சேர முடியாது.
  • அரசியலில் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். நிதியியலைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிதி நிர்வாகத்தில் பெரும்பாலும் ஒரே மாதிரியான அணுகுமுறையைத்தான் கையாள வேண்டியிருக்கிறது.
  • அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் இணைந்து பணியாற்றும் அதிகாரிகளும் கூட இதை நன்றாகவே அறிவார்கள்.
  • தமிழ்நாட்டின் உடனடித் தேவை கடன் சுமைகளுக்கான பழியை யார் மீது சுமத்துவது என்பது அல்ல, அரசுக்குப் புதிய வருவாய் வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது என்பதும் அதை எப்படித் திட்டமிட்டுச் செலவிடுவது என்பதும்தான்.
  • திமுக அரசு எதிர்கொண்டிருக்கும் இந்தச் சவாலை மக்களும் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
  • எனவே, தேர்தல் நேரப் பிரச்சாரங்களைப் போல பரஸ்பரக் குற்றச்சாட்டுகளைத் தவிர்த்துத் தீர்வுகளை நோக்கி தமிழ்நாடு அரசு முதலடியை எடுத்துவைக்கட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்