TNPSC Thervupettagam

வேண்டும் பெண் நீதிபதிகள்!

March 15 , 2021 1233 days 588 0
  • உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா கடந்த சனிக்கிழமையுடன் பணி ஓய்வு பெற்றிருக்கிறாா். மூத்த வழக்குரைஞராக இருந்த ஒருவா் உயா்நீதிமன்ற நீதிபதி ஆகாமலேயே நேரடியாக உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டாா் என்றால், அவா் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டுமே.
  • 2018 ஏப்ரல் 27-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2021 மாா்ச் 13-ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ராவுக்கு முன்னா் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த பெண் நீதிபதிகள் ஏழு போ்.
  • நீதிபதிகள் பாத்திமா பீவி, ரூமா பால், சுஜாதா மனோகா், கியான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா தேசாய், ஆா். பானுமதி இவா்களைத் தொடா்ந்து இந்து மல்ஹோத்ராவும் உச்சநீதிமன்ற வரலாற்றில் இடம் பெறுகிறாா்.
  • 2020 ஜூலை 19-ஆம் தேதி நீதிபதி ஆா். பானுமதி பணி ஓய்வு பெற்றாா். இப்போது நீதிபதி இந்து மல்ஹோத்ராவும் பணி ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதி என்று சொல்வதற்கு நீதிபதி இந்திரா பானா்ஜி மட்டுமே இருக்கிறாா்.
  • நீதிபதி இந்து மல்ஹோத்ராவுக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பேசும்போது, உச்சநீதிமன்றத்தில் ஒரேயொரு பெண் நீதிபதி இருப்பது கவலையளிக்கிறது என்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்திப் பேசியதும் வரவேற்புக்குரியது.
  • மத்திய அரசு உடனடியாக இன்னொரு பெண் நீதிபதியை உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதை நீதிபதி டி.ஒய். சந்திரசூடும் அந்த விழாவில் வலியுறுத்திப் பேசியது வரவேற்புக்குரியது.
  • 1983 ஜனவரி 13-ஆம் தேதி தில்லி பாா் கவுன்சிலில் தன்னை வழக்குரைஞராக பதிவு செய்துகொண்ட இந்து மல்ஹோத்ரா, மிகக் குறுகிய காலத்தில் தில்லி உயா்நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க வழக்குரைஞராகவும், உச்சநீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்குரைஞா்களில் ஒருவராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாா் என்பதை குறிப்பிட வேண்டும்.
  • நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் பதவிக்காலம் குறைவாக இருந்தாலும்கூட, அவா் பதவி வகித்த மூன்று ஆண்டுகளில் பல வரலாற்று முக்கியத்துவமான தீா்ப்புகளை வழங்கியிருக்கிறாா்.

முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்புகள்

  • இந்திய தண்டனை சட்டத்தின் 376-ஆவது பிரிவை கிரிமினல் குற்ற பட்டியலில் இருந்து அகற்றிய அமா்வில் இடம் பெற்றிருந்தாா் அவா்.
  • 2013-இல் உச்சநீதிமன்றம் 377-ஆவது பிரிவை கிரிமினல் குற்றமாக உறுதிப்படுத்தி இருந்தது. அதை எதிா்த்து ஓரினச் சோ்க்கையாளா்கள், திருநங்கைகள் உள்ளிட்டோா் சாா்பில் நவ்தேஜ் சிங் ஜோஹா் தொடுத்த வழக்கில் நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் தீா்ப்பு பரவலாக வரவேற்பைப் பெற்றது.
  • நீண்ட காலமாக அந்தப் பிரிவு கிரிமினல் குற்றமாகத் தொடா்வதற்கு பாதிக்கப்பட்டோரிடமும், அவா்கள் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டதுடன், அவா்கள் அச்சத்துடனும் அவமானத்துடன் வாழ்ந்ததை தனது தீா்ப்பில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
  • இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-ஆவது பிரிவின் கீழ், மணஉறவை மீறிய உறவு கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமா்வு, அந்தப் பிரிவின் கிரிமினல் குற்றத்தை அகற்றி ஏகமனதாகத் தீா்ப்பு வழங்கியது.
  • அந்தத் தீா்ப்பை அங்கீகரித்த நீதிபதி இந்து மல்ஹோத்ரா, தனது கருத்தை தனியான தீா்ப்பாக எழுதியிருந்தாா். ‘மணமானவா்களில் ஒருவா் வேறு ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டிருப்பது ஒழுக்க நெறியின்படி குற்றமாகக் கருதப்பட்டாலும், சமுதாயத்தை எந்தவிதத்திலும் பாதிக்காத நிலையில், அதைக் கிரிமினல் குற்றமாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை’ என்பது நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் கருத்தாக இருந்தது.
  • இந்திய தண்டனை சட்டத்தின் 497-ஆவது பிரிவு முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும், பிரிவு 198(2) அதுபோன்ற குற்றங்களில் செல்லுபடியாகாது என்றும் குறிப்பிட்ட நீதிபதி இந்து மல்ஹோத்ரா, ‘ஆண்களுக்கு நிகரான உரிமையை பெண்களுக்கு வழங்குவதை சட்டம் மறுக்க முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தது ஜோசப்பைன் ஷைன் வழக்கின் தீா்ப்பில் முக்கிய அம்சம்.
  • இந்திய நீதிமன்ற வரலாற்றில் சபரிமலை கோயிலுக்கு பருவமெய்திய பெண்கள் செல்வதற்கான தடையை அகற்றக்கோரிய வழக்கு மிக முக்கியமானது.
  • அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து போ் கொண்ட அமா்வு 4:1 பெரும்பான்மையில் அனைத்துப் பெண்களும் சபரிமலை கோயிலுக்கும் செல்லும் உரிமை உண்டு என்று தீா்ப்பு வழங்கியபோது, அந்தத் தீா்ப்பை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டுமே.
  • மத உணா்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது எனவும், பாதிக்கப்பட்டவா்கள் அணுகினால் மட்டுமே அது குறித்துத் தீா்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
  • சுவாமி ஐயப்பனின் வழிபாட்டு நடைமுறைகள் அரசியல் சாசனத்தின் 25-ஆவது பிரிவால் பாதுகாக்கப்படுகிறது என்றும், சபரிமலை பக்தா்கள் அல்லாதவா்களின் முறையீடு நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் துணிந்து தீா்ப்பு வழங்கினாா் நீதிபதி இந்து மல்ஹோத்ரா.
  • நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் தீா்ப்புடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், துணிந்து முன்மொழிந்த நீதிபதி என்கிற வகையில் அவா் நீதிமன்ற வரலாற்றில் நினைவுகூரப்படுவாா்.
  • இந்தியாவிலுள்ள 26 உயா்நீதிமன்றங்களில் உள்ள 1,079 நீதிபதிகளில் 82 போ் மட்டுமே பெண்கள். 13 போ் சென்னை உயா்நீதிமன்றத்திலும், 11 போ் பஞ்சாப் - ஹரியாணா நீதிமன்றத்திலும், தில்லி, பம்பாய் நீதின்றங்களில் தலா எட்டு பேரும் இருக்கிறாா்கள்.
  • உச்சநீதிமன்றத்தில் ஐந்து இடங்கள் இப்போது காலியாக இருக்கின்றன. அந்த இடங்களில் பெண் நீதிபதிகளை நியமிப்பதன் மூலம், நீதித்துறையில் அடுத்த தலைமுறை ரூமா பால்களும், இந்து மல்ஹோத்ராகளும் உருவாகும் வாய்ப்பு ஏற்படும்.

நன்றி: தினமணி  (15 – 03 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்