TNPSC Thervupettagam

ஈரோடு வெங்கடப்பா இராமசாமி

September 22 , 2018 2108 days 44461 0

ஈரோடு வெங்கடப்பா இராமசாமி

  • ஈரோடு வெங்கடப்பா இராமசாமி 1879-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17-ஆம் தேதி கன்னட மொழி பேசும் குடும்பத்தில் ஈரோட்டில் பிறந்தார்.
  • ஈ.வெ. இராமசாமியின் தந்தை வெங்கடப்பா நாயக்கர் (வெங்கடா) ஆவார். இவருடைய தாயார் சின்னத்தாயி ஆவார்.
  • ஈ.வெ. இராமசாமி தனது 19-வது அகவையில் திருமணம் செய்தார். இவருடைய முதல் மனைவி நாகம்மை 1933-ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவருடைய பெண் குழந்தை 5 மாதம் மட்டுமே உயிர் வாழ்ந்தது.
  • ஈ.வெ. இராமசாமி 1949-ஆம் ஆண்டு, ஏப்ரல் 9 -ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்தார். இவருடைய இரண்டாவது மனைவியின் பெயர் மணியம்மை. 1973-ஆம் ஆண்டு ஈ.வெ. இராமசாமியின் மறைவுக்குப் பின் அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிகளை மணியம்மை தொடர்ந்தார்.
  • சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் ஆகியவற்றை தொடங்கிய ஈரோடு வெங்கடப்பா இராமசாமி ஒரு இந்திய சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியலாளர் ஆவார்.
  • இவர் “நவீன தமிழ்நாட்டின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். மேலும் பகுத்தறிவு பகலவன் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • பெரியார் 1973-ஆம் ஆண்டு, டிசம்பர் 24 அன்று, தனது 95-வது அகவையில் காலமானார்.
  • 1978-ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறையானது ஈ.வெ.ரா. பெரியார் பெயரில் அஞ்சல் தலையை வெளியிட்டது.

இளமைக்காலம்

  • பெரியார் 1885-ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவருடைய வயது 6 ஆகும்.
  • 1889-ஆம் ஆண்டு பெரியார் தனது 10-வது வயதில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். அவர் 5 ஆண்டுகள் மட்டுமே பள்ளிக்குச் சென்றார்.
  • 1891-ஆம் ஆண்டு பெரியார் தனது 12-வது வயதில் தந்தையின் வணிகத் தொழிலில் ஈடுபட்டார்.
  • இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மூன்று திராவிட மொழிகளிலும் பேசும் திறன் பெற்றவர்.

பெரியார் – பட்டம்

  • மெட்ராஸில் 13-11-1938-ல் புகழ்பெற்ற தமிழ் அறிஞரான மறைமலை அடிகளின் மகளான நீலாம்பிகை அம்மையாரின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டின்போது ஈ.வெ. இராமசாமிக்கு “பெரியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் தர்மாம்பாள் ஈ.வெ. இராமசாமிக்கு “பெரியார்” என்ற பட்டத்தை வழங்கினார்.
  • “பெரியார்” என்ற சொல்லுக்கு தமிழில் “மதிக்கத்தக்க ஒருவர்” அல்லது “மூத்தவர்” என்று பொருள்.

காசி புனிதப் பயணம்

  • 1904-ஆம் ஆண்டில், ஈ.வெ. இராமசாமி காசியில் உள்ள சிவன் ஆலயமான காசி விஸ்வநாதன் ஆலயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.
  • இவர் அங்கு பிச்சை எடுத்தல் மற்றும் நதிகளில் சடலங்கள் மிதத்தல் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதை பார்வையிட்டார்.
  • காசியில் நடந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வு ஈ.வெ. இராமசாமியின் சித்தாந்தங்கள் மற்றும் எதிர்காலப் பணிகள் மீது தாக்கத்தை செலுத்தியது.

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் (1919-1925)

  • ஈ.வெ. இராமசாமி 1919-ல் இந்திய தேசியக் காங்கிரஸில் இணைந்தார்.
  • இவர் ஈரோடு நகராட்சியின் தலைவராகப் (1918) பணியாற்றினார். மேலும் இவர் காதியைப் பயன்படுத்துவதை பரவச் செய்தல், கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளைப் புறக்கணித்தல் மற்றும் தீண்டாமையை ஒழித்தல் போன்ற கட்டமைப்புப் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.
  • மக்கள் அனைவரும் காதி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று காந்தி அறிவித்தவுடன் பெரியார் தனது இல்லத்திலுள்ள அனைத்து அந்நிய ஆடைகளையும் புறக்கணித்து காதி ஆடையைப் பயன்படுத்தினார். மேலும் இவர் தனது 80 வயதான தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை காதி ஆடைகளை மட்டும் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தினார்.
  • ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தின்போது (1920) இவர் கைது செய்யப்பட்டார்.
  • 1921-ஆம் ஆண்டில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காக இவர் கைது செய்யப்பட்டார்.
  • 1921-ஆம் ஆண்டில் நடைபெற்ற மதுவிற்கு எதிரான பிரச்சாரத்தின் போது, தனது சொந்த நிலத்தில் 1000 மரங்களை வெட்டினார்.
  • 1922-ஆம் ஆண்டில் பெரியார், அவருடைய மனைவி நாகம்மாள் மற்றும் சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் பெண் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து கள்ளுக்கடைகள் முன்பு போராட்டம் நடத்தினர்.
  • 1922-ஆம் ஆண்டில் நடைபெற்ற திருப்பூர் மாநாட்டின் போது பெரியார் மதராஸ் மாகாண காங்கிரஸ் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அம்மாநாட்டில் அரசாங்கப் பணிகள் மற்றும் கல்விச் சாலைகள் ஆகியவற்றில் இடஒதுக்கீடு கோரி கடுமையாக வாதாடினார்.
  • பாகுபாடு மற்றும் அலட்சியம் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இவரது முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக இவர் 1925-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
  • பெரியார் 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த மாநாட்டில் வகுப்புவாத பிரதிநிதித்துவம் தொடர்பாக தமிழக காங்கிரசின் தீர்மானத்தை நிறைவேற்ற ஆறாவது மற்றும் கடைசி முறையாக முயற்சி செய்தார்.
  • அந்த நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக திரு.வி.க. இருந்தார். காங்கிரஸ் மாநாட்டில் பெரியாரின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு இருப்பதை உணர்ந்து, பெரியாருக்கு அத்தீர்மானத்தை முன்மொழிய திரு.வி.க அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.
  • பெரியார் வகுப்புவாத பிரதிநிதித்துவம் தொடர்பாக பொதுக் கூடங்கள் மூலமாக அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். இதன் காரணமாக 1928 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி அரசாணை எண் 1129 ஐ வெளியிட்டது. அரசாங்கம் அந்த ஆணையில் பொது அலுவலகங்களில் பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று கூறியது.

வைக்கம் சத்தியாகிரகம் (1924-1925)

  • வைக்கம் சத்தியாகிரகத்தின் (1924 மார்ச் 30) நோக்கம் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் வைக்கம் என்ற இடத்தில் உள்ள சிவா / மகாதேவா ஆலயத்திற்கு அருகில் உள்ள சாலையை கீழ் சமுகத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்வதாகும்.
  • கேரளாவில் தீண்டாமையை எதிர்த்து போராடுவதற்காக பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவர் கே. கேளப்பன் ஆவார். டி.கே. மாதவன், வேலாயுத மேனன், குரூர் நீலகண்டன் நம்பூதிரிபட் மற்றும் டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்ற மற்ற உறுப்பினர்கள் ஆவர்.
  • இந்த இயக்கத்தில் காந்திஜி, சதம்பி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் பங்கு பெற்றனர்.
  • பெரியார் வைக்கம் சத்தியாகிரகத்தை தொடங்குவதற்கு முன்பு
  • டி.கே. மாதவன்
  • கே.பி. கேசவ் மேனன்
  • ஜார்ஜ் ஜோசப்

           ஆகியோர் வைக்கம் சத்தியாகிரகத்தை தொடங்கினர்.

  • கேரள மக்கள் வைக்கம் சத்தியாகிரகத்தை தலைமை தாங்கி நடத்துவதற்காக தமிழ்நாட்டில் இருந்த பெரியாருக்கு அழைப்பு விடுத்தனர். இவர் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். அதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இப்போராட்டத்தின் போது இவர் இருமுறை சிறை சென்றார். இப்போராட்டத்தின் விளைவாக கீழ் சமூகத்தில் உள்ளவர்கள் அந்த சாலையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.
  • இந்தப் போராட்டம் வெற்றி பெற்றது. பெரியாருக்கு “வைக்கம் வீரர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

சேரன்மாதேவி குருகுலம் – 1925

  • திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மாதேவி என்னுமிடத்தில் குருகுலம் என்று அழைக்கப்படும் உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டு வி.வி.எஸ். அய்யர் அவர்களால் நிர்வகிக்கப்பட்டது.
  • பெரியார் சேரன்மாதேவி குருகுலப் பள்ளியில் பிராமணர்களின் குழந்தைகள் மற்றும் பிராமணர்கள் அல்லாதோர்களது குழந்தைகளுக்கு வெவ்வேறு இடங்களில் உணவு பரிமாறப்படுவதை பெரியார் கண்டறிந்தார்.
  • அப்பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று வி.வி.எஸ். அய்யருக்கு பெரியார் அறிவுரை வழங்கினார். இந்த குருகுலத்தில் நடைபெறும் பாகுபாடுகள் குறித்து பெரியார் பொது மேடைகளில் முழங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
  • மாநில காங்கிரஸ் கூட்டத்தில் பெரியார் சேரன்மாதேவி குருகுலத்தில் நடப்பதைப் பற்றி உரையாற்றினார். இறுதியாக அப்பள்ளி மூடப்பட்டது.

சுய மரியாதை இயக்கம் – 1925

  • காங்கிரஸிலிருந்து விலகிய பின்பு பெரியார் 1925ல் சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
  • சுய மரியாதை இயக்கத்தின் நோக்கம் திராவிடர்களின் நிலையை உயர்த்துவது மற்றும் பிராமணர்களின் ஆதிக்கத்தை வெளிக் கொணர்வதாகும்.
  • 1929-ஆம் ஆண்டு, பிப்ரவரியில், செங்கல்பட்டில் சுய மரியாதை இயக்கத்தின் முதலாவது மாநாடு பெரியாரால் ஒருங்கிணைக்கப்பட்டது. இம்மாநாட்டிற்கு திரு.டபிள்யு.பி.ஏ. சவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் சவுந்தர பாண்டியனார், குத்தூசி குருசாமி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோரும் பங்கு பெற்றனர்.
  • சுய மரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாடு ஈரோட்டில் பெரியாரால் நடத்தப்பட்டது. இம்மாநாட்டிற்கு, புனேவைச் சேர்ந்த பகுத்தறிவுத் தலைவரான எம்.ஆர். ஜெயக்கர் தலைமை வகித்தார்.
  • பெரியார் புதிய பகுத்தறிவுத் திருமண முறையான “சுய மரியாதை திருமண முறை” யை அறிமுகப்படுத்தினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

  • 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று மதராஸ் மாகாணத்தில் உள்ள 125 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்று அப்போதைய மதராஸ் மாகாண முதல்வர் சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி அறிவித்த போது, இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.
  • எதிர்க் கட்சியான A.T பன்னீர் செல்வம் தலைமையிலான நீதிக் கட்சி பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப்படுத்தியதை உடனடியாக எதிர்த்தது. பெரியாரும் இதை கடுமையாக எதிர்த்தார்.
  • மூவலூர் இராமாமிர்தம், நாராயணி, வா.பா தாமரைக்கனி, முன்னகர் அழகியர், டாக்டர் தர்மாம்பாள், மலர் முகத்தம்மையார், பட்டம்மாள் மற்றும் சீதம்மாள் ஆகியோர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட பெண்களில் சிலர் ஆவர்.
  • 1938-ஆம் ஆண்டில் பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈ.வெ. இராமசாமி “தமிழ்நாடு தமிழர்களுக்கே” என்று முதன்முறையாகக் கூறினார்.
  • தமிழ் மக்களின் முன்னேற்றத்தை இந்தி மொழி தடைபடுத்துவது மட்டுமல்லாமல் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் முன்னேற்றக் கொள்கைகளை அழித்துவிடும் என்று பெரியார் விளக்கம் அளித்தார்.
  • தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் இழந்தனர்.
  • இந்தி எதிர்ப்பு போராட்டத்தை புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களான மறைமலையடிகள், சோமசுந்தர பாரதி, கே.அப்பாதுரை, முடியரசன், கே.ஏ.பி விஸ்வநாதம் மற்றும் இலக்குவனார் ஆகியோர் ஆதரித்தனர்.
  • இந்தி எதிர்ப்பு தினம் 1938 ஆம் ஆண்டு ஜூலை 1 மற்றும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று இந்தி மொழி கட்டாயத்தை விருப்ப மொழியாக மாற்றி மதராஸ் ஆளுநர் எர்ஸ்கின் ஆணையிட்டார்.

நீதிக் கட்சி – தலைவர் (1938 – 1944)

  • பிராமணர்களின் பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரங்களை எதிர்ப்பதற்காக 1916-ஆம் ஆண்டு, தென் இந்திய விடுதலை கூட்டமைப்பு (பொதுவாக நீதிக் கட்சி என்று அழைக்கப்படும்) என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டது.
  • இக்கட்சியின் நோக்கம் பிராமணர் அல்லாதோர்களுக்கு சமூக நீதி அளிப்பதாகும்.
  • பெரியார் 1938-ஆம் ஆண்டில் நீதிக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

திராவிடர் கழகம்

  • 1944-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 27-ல் சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை தீர்மானம் இயற்றி நீதிக் கட்சியை “திராவிடர் கழகம்” எனப் பெயர் மாற்றினார்.
  • இக்கழகம் பெண் விடுதலை, பெண் கல்வி, திருமண உரிமை, விதவை மறுமணம், அநாதை இல்லங்கள் மற்றும் கருணை இல்லங்கள் ஆகியவற்றின் மீது கவனத்தை செலுத்தியது.
  • 1949-ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை திராவிட முன்னேற்றக் கழகம் (DMK – Dravida Munnetra Kazhagam) அல்லது திராவிட முன்னேற்றக் கூட்டமைப்பு (Dravidian Progressive Federation) என்ற தனியொரு இயக்கத்தை ஆரம்பித்தார்.

பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் – பெரியார்

  • பெரியார் 1925-ஆம் ஆண்டு, மே 2-ல் சுய மரியாதை கொள்கைகளைப் பரப்புவதற்காக ‘குடியரசு’ என்ற வார இதழைத் தொடங்கினார். இதன் பதிப்பாசிரியராக இவரே பணியாற்றினார்.
  • பெரியார் 7-11-1928-ல் ‘ரிவால்ட்’ (Revolt) என்ற ஆங்கிலப் பத்திரிக்கையை ஆரம்பித்தார்.
  • பெரியார் ‘குடும்ப கட்டுப்பாடு’ எனும் புத்தகத்தை 1930-ல் வெளியிட்டார். குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் தொடர்பான பிரச்சாரத்தை பெரியார் மேற்கொண்டார்.
  • 1933-ஆம் ஆண்டில் மற்றொரு பத்திரிக்கையான ‘புரட்சி’ (Revolution) பெரியாரால் தொடங்கப்பட்டது.
  • 12-1-1934-ல் பெரியார் ‘பகுத்தறிவு’ (Rationalism) என்ற தமிழ் வார இதழைத் தொடங்கினார்.
  • பெரியார் “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
  • 1-6-1935-ல் நீதிக்கட்சி தமிழ் வார இதழான ‘விடுதலை’ என்ற இதழைத் தொடங்கியது. பின்னர் பெரியார் இந்த இதழுக்கு பொறுப்பேற்று 1-1-1937-ல் அது தமிழ் நாளிதழாக வெளிவர காரணமாக இருந்தார்.
  • 22-1-1950-ல் பெரியார் தனது புத்தகமான ‘பொன்மொழிகள்’ (Golden Sayings) என்ற புத்தகத்தை வெளியிட்டதற்காக சிறை தண்டனை பெற்றார்.
  • 1970-ஆம் ஆண்டில் திருச்சியில் மாதத்திற்கு இருமுறை வெளிவரும் ‘உண்மை’ (Unmai) என்ற இதழ் பெரியாரால் தொடங்கப்பட்டது.
  • 1930-ஆம் ஆண்டு லாகூரில் இந்திய தீவிர தேசியவாதியான பகத் சிங் “Why I am an atheist” (நான் ஏன் நாத்திகவாதி) என்ற புத்தகத்தை எழுதினார். பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க P. ஜீவானந்தம் இந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தார்.
  • 1935 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி பெரியார் தமிழ் மொழி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். இத்தமிழ் மொழி சீர்திருத்தம் பின்னாளில் 1978 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் தலைமையிலான தமிழக அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டது.

பெரியாரின் கடைசி சொற்பொழிவு

  • 1973-ஆம் ஆண்டு, டிசம்பர் 19-ல் சென்னையில் உள்ள தியாகராய நகரில் பெரியார் தனது கடைசி சொற்பொழிவை (தி சுவன்சாங்) நிகழ்த்தினார்.

யுனெஸ்கோ

  • 1970-ஆம் ஆண்டு, ஜுன் 27-ந் தேதி யுனெஸ்கோ அமைப்பு பெரியாரை “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” என்று கௌரவித்தது.
  • யுனெஸ்கோ அமைப்பு பெரியாரை பின்வருமாறு குறிப்பிடுகிறது:
    • புதிய உலகின் தீர்க்கதரிசி
    • சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை மற்றும்
    • அறியாமை, மூடநம்பிக்கைகள், பகுத்தறிவற்ற சடங்குகள் ஆகியவற்றின் எதிர்ப்புத் தூண்.

- - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்