TNPSC Thervupettagam

கிழக்காசிய கூட்டமைப்பு

December 22 , 2017 2383 days 2526 0
கிழக்காசிய கூட்டமைப்பு

- - - - - - - - - - - - - - -

  • கிழக்காசிய கூட்டமைப்பு என்பது ஆசிய- பசிபிக் பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளத்தை மேம்படுத்துவதற்கான அமைப்பு ஆகும். ஆசிய பசிபிக் பகுதியின் 18 நாடுகளின் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டது
  • 2005ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம், ஆசிய-பசிபிக் பகுதிக்கான பொதுவான விஷயங்கள் அனைத்தும் அதிக வெளிப்படைத்தன்மையுடன் உயர் நிலை அதிகார மையங்களினால் விவாதிக்கப்படுகின்றன
  • தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ASEAN ஆல் தொடங்கப்பட்டு, அதனை மையமாகக் கொண்டது.
  • கிழக்காசிய பிராந்திய குழுவினை அமைப்பதற்கான ஆலோசனை முதன் முறையாக 1991ல் அப்பொழுதைய மலேசிய பிரதமர் மஹதிர் பின் மொஹமதால் வழங்கப்பட்டது. ASEAN+3 நாடுகளின் (சீனா, ஜப்பான், கொரிய குடியரசு) முயற்சியில் உருவாக்கப்பட்ட கிழக்காசிய ஆராய்ச்சிக் குழு 2002ல் வெளியிட்ட இறுதி அறிக்கையில், கிழக்காசிய பிராந்திய குழுவை பரிந்துரை செய்தது. ஆரம்ப காலத்தில் இது ASEAN+3 நாடுகளுக்கு உட்பட்டதாகவே தொடங்கப்பட்டது.
  • பின்னர், 2005 ஜூலை 26ல் வியன்டியனில் நடைபெற்ற ஆசியான் நாடுகளின் அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஆசியான், சீனா, ஜப்பான், கொரியக் குடியரசு, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதல் கிழக்காசிய பிராந்தியக் குழு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாக 2011 நவம்பர் 19ல் இந்தோனேசியாவில் பாலி நகரில் நடைபெற்ற 6வது கிழக்காசிய மாநாட்டில் இணைத்து கொள்ளப்பட்டன .
 

கிழக்காசிய மாநாட்டு உறுப்பினர்கள்

அனைத்து ஆசியான் உறுப்பினர்கள் (10 நாடுகள்) புரூனி, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் 10
6 பிராந்திய கூட்டு நாடுகள் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து 6
2 வல்லரசு நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா(2011முதல்) 2
மொத்த உறுப்பினர்கள் 18

சமீபத்திய வருடாந்திர மாநாடுகள்

மாநாட்டு  எண் ஆண்டு நாடு நடைபெற்ற நாடு மாநாட்டு தலைவர்
7 2012  கம்போடியா  நோம் பென் பிரதமர் ஹுன் சென்
8 2013  புரூனீ பண்டர் செரி பெகாவான் சுல்தான் ஹசானால் போல்கியா
9 2014  பர்மா (மியான்மர்) நைப்பியதோ அதிபர் தெய்ன்சீன்
10 2015  மலேசியா கோலாலம்பூர் பிரதமர் நஜீப் ரசாக்
11 2016  ல்வோஸ் வியன்டியன் தோங்லவுன் சிசவுலித்
12 2017  பிலிப்பைன்ஸ் ஏஞ்சல்ஸ் அதிபர் ரோட்ரிகோ ரோ டியூடெர்டே

பிராந்திய ஒத்துழைப்பின் 6 முக்கிய பகுதிகள்

  1. சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி ஆற்றல்
  2. கல்வி
  3. நிதி
  4. சர்வதேச சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்று நோய்கள்
  5. தேசிய பேரிடர் மேலாண்மை
  6. ஆசியான் நாடுகள் இணைப்பு

பிராந்திய கூட்டமைப்பில் இந்தியாவின் பங்கு

கல்வி

  • இந்தியாவில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பித்து ஆசியாவின் அனைத்து நாடுகளிலும் உள்ள அறிஞர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைத்து செயல்பட கிழக்காசிய தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். 2009ம் ஆண்டு அக்டோபர் 24-25 ஆகிய தேதிகளில் தாய்லாந்தில் நடைபெற்ற 4வது கிழக்காசிய மா நாட்டில் இந்த முடிவு எட்டப்பட்டது
  • இந்த ஆலோசனை முதலில் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் 2006ல் வழங்கப்பட்டது. ராஜ்கீரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 7 பாடசாலைகள் அமைக்க இப்பல்கலைக்கழகம் நோக்கம் கொண்டுள்ளது.
  • தொல்லியல் இடமான நாளந்தா மஹாவிஹாரா எனப்படும் நாளந்தா பல்கலைக்கழகம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமாக ஜூலை 2016ல் அறிவிக்கப்பட்டது.

  • பண்டைய இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்ற புத்த கல்வி மையமாக விளங்கியது. இங்கு மருத்துவம், கணிதம், வானியல் சாஸ்திரம், அரசியல் ஆகியவை கற்பிக்கப்பட்டன
  • ராஜ்கீரில் உள்ள பல்கலை வளாகத்தில் ஏழு பாடசாலைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • கம்போடியா, மியான்மர், லாவோஸ் மக்கள் குடியரசு வியட்னாம் ஆகிய நாட்டு மாணவர்கள் நாளந்தா பல்கலைக்கழகத்தில் உயர்படிப்பு மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை 6 வகை கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றது
 

உலக சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்று நோய்கள்

  • தரமான மருந்துகள் மற்றும் தொழில் நுட்பங்கள் கிடைப்பதற்கான செயல் திட்டக்குழுவின் (Access to Quality Medicines and other Technologies Task Force - AQMTF) இணைத் தலைவர்களாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளன.
  • விபத்து/அவசர சிகிச்சை மற்றும் செவிலியர்களுக்கான வட்ட மேசை மாநாட்டை இந்தியா 2015 அக்டோபர் 15-16 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடத்தியது.
 

தேசிய பேரிடர் மேலாண்மை

  • 2012: ‘கிழக்காசிய கூட்டமைப்பு-இந்தியா பயிற்சிப் பயிலரங்கம் 2012: நில நடுக்கம் மேலாண்மைக்கானப் பிராந்திய ஒத்துழைப்பை உருவாக்குதல்’ எனும் பயிலரங்கத்தினை புது டெல்லியில் இந்தியா நடத்தியது.
  • 2014:கிழக்காசிய கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பேரிடர் மீட்பு குழுக்களிடையே 24*7 மணி நேர தொடர்பினை ஏற்படுத்துவதற்கான முதல் கூட்டத்தினையும் இந்தியா நடத்தியது.
  • மெய்நிகர் அறிவு தளம் எனப்படும் கல்வி சார் இணைய வழி தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிழக்காசிய நாடுகளிடையே இயற்கை பேரிடர் மேலாண்மை மற்றும் மதிப்பீடு ஆகியவை குறித்த தகவல்கள் மற்றும் சிறந்த பயிற்சிகள் பறிமாறிக் கொள்ளப்படும். டெல்லியில் உள்ள பேரிடர் மேலாண்மைக்கான இயற்கை கழகம் இதனை வழி நடத்துகின்றது.

பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணி [RCEP]

  • நவம்பர் 2012-ல் நடைபெற்ற 7-வது கிழக்கு ஆசிய கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில், பங்கேற்ற 16 கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள், RCEP எனப்படும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணியை உருவாக்கினர்.
  • RCEP-யின் முக்கிய நோக்கம் யாதெனில், ஓர் ஒட்டுமொத்தமான, நவீன, உயர்தரம் மிக்க மற்றும் பரஸ்பர பலனுடைய பொருளாதாரப் பங்களிப்பு உடைய ஓர் ஒப்பந்தத்தினை உருவாக்குதல் ஆகும். இந்த ஒப்பந்தம், சரக்கு வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, அறிவுசார் சொத்துரிமை, போட்டி, கருத்து வேறுபாடுகளில் சமரசம் மற்றும் பிற விவகாரங்கள் ஆகிய அனைத்தினையும் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • RCEP-யின் பேச்சுவார்த்தைகளில் இந்தியா குழு அளவிலான பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்கிறது.
  • ஆசியான் நாடுகளும் , இந்தியா உட்பட ஆசியான் கூட்டமைப்புடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) உடைய ஆறு நாடுகளும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணியில் பங்கேற்கின்றன.

ASEAN தொடர்பு

  • ASEAN தொடர்பினைப் பொறுத்தவரை, 6-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், MPAC (Master Plan on ASEAN Connectivity) எனப்படும் ஆசியான் நாடுகளை இணைப்பதற்கான பெரும் திட்டத்தினை முன் வைத்தனர். இது ஆசியானுக்கு மட்டும் பலன்களை வழங்காது, ஒட்டுமொத்த கிழக்காசிய மண்டல பகுதிக்கும் பலன் வழங்கும். ஆசியான் தொடர்பு என்பது, கிழக்காசிய உச்சிமாநாட்டின் கூடுதல் ஒத்துழைப்புப் பகுதியாகும்.
  • கம்போடியாவின் போன்பென் நகரில் 19-நவம்பர் 2012 அன்று நடைபெற்ற 10-வது ASEAN-இந்தியா உச்சி மாநாட்டில், பிரதமர் ASEAN உடனான தொடர்பினை, இயல்நடைமுறை, நிறுவன அமைப்பு, மக்களிடையே தொடர்பு ஆகிய அனைத்து பரிணாமங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இது இந்தியாவிற்கு யுக்திரீதியாக முன்னுரிமை அளிக்கும்.
  • பொது-தனியார் கூட்டமைப்பின் மூலம் அணுகப்படும் மண்டல ஒத்துழைப்பு திட்டப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல இது உதவும். மேலும் இந்தியா பிராந்திய கூட்டமைப்பு நாடுகளுடன் தொடர்ந்து கலந்துரையாட இது உதவும்.

11-வது கிழக்காசிய மாநாடு (East Asia Summit - EAS)

  • 11-வது EAS, 8 செப்டம்பர் 2016-ல் நடைபெற்றது. இதில் பின்வரும் பிரகடனத்தை தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
    • வியன்டைன் பிரகடனம் - இது கிழக்கு ஆசியாவில் உட்கட்டமைப்பு மேம்பாட்டின் மீதான கூட்டு உழைப்பை உயர்த்துவது தொடர்பானது.
    • ஆயுதப் பெருக்கத்திற்கு எதிரான கிழக்கு ஆசியப் பிரகடனம்.
    • சிக்கல்களில் தவிக்கும் ஆதரவற்ற அகதிகள் மற்றும் மனிதக் கடத்தல் ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை உறுதி செய்யும் கிழக்காசிய உச்சிமாநாட்டுப் பிரகடனம்.

இறுதி அறிக்கை

  • கிழக்காசிய மாநாட்டின் இறுதி அறிக்கை, லவோஸில் நடைபெற்ற மாநாட்டில் 2016-ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இந்தியா உட்பட 18 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்காசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அணு ஆயுத ஒழிப்பு, அணு ஆயுத பரவல் தடுப்பு ஆகியவற்றிற்கு பலமான ஆதரவு தெரிவித்தனர். மேலும் அணு ஆயுத தீவிரவாதத்தைத் தடுப்பதற்கு சர்வதேச, தேசிய மற்றும் பிராந்திய அளவில் அணுசக்தி பாதுகாப்பு தேவை என்பதையும் வலியுறுத்தினர்.
  • அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும், அணு ஆயுதங்கள் பரவுவதை தடுக்க வேண்டும், அணு சக்தியை அமைதியான/ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கைகளை “பரஸ்பர உறுதித் தூண்கள்“ என்று வலியுறுத்தினர்.
  • இதில் குறிப்பிடத்தக்க செய்தி யாதெனில், அணுஆற்றலின் குடிமைப்பயன்பாட்டின் ஊகிக்கப்பட்ட உலகளாவிய வளர்ச்சி, இந்தோ-பசிபிக் மண்டலத்திலேயே நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • கிழக்காசிய உச்சிமாநாடானது, வடகொரியா தனது அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முழுமையாக, சரிபார்க்கக்கூடிய விதத்தில், மீண்டும் அப்பாதைக்கு திரும்பாவகையில், நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இது சர்வதேச நாடுகளின் சட்டப்பூர்வ வேண்டுகோளுக்கிணங்க எழுப்பப்பட்டது.
  • மேலும் இக்குழு, கொரியக் குடியரசின் (DPRK) அணு ஆய்வுகள், ஏவுகணைச் சோதனைகளை நிறுத்தி, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த அந்நாட்டிற்கு கோரிக்கை வைத்துள்ளன. இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2005 கூட்டறிக்கையும் அடக்கம்.
  • மேலும், பயனளிக்கக்கூடிய ஆறு குழுக்கள் பங்குபெறும் பேச்சுவார்த்தை நடவடிக்கையை மீட்க கூட்டுமுயற்சி தேவை என்றும் கொரிய தீபகற்பத்தில் அமைதியான முறையில் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கும் கிழக்காசிய மாநாடு அழைப்பு விடுத்தது.
  • அணு ஆயுத பரவல் தடுப்புக் கருத்தரங்கில் கலந்துக் கொண்ட உறுப்பினர்கள், இனி அணு ஆயுதம் மற்றும் குண்டு வெடிப்புகளில் அணுப்பிளவுறும் பொருட்களை உபயோகிப்பதைத் தடுக்கும் FMCT (Fissile Material Cut - off Treaty) எனப்படும்  ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்த முன்மொழிந்தனர். அணு ஆயுதப் பரவல்களை தடுக்க அனைவரும் முன்மொழிந்த, விரிவான மற்றும் சமநிலையான திட்டங்களை வகுக்க அறிவுறுத்தினர்.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்