TNPSC Thervupettagam

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலம்

March 26 , 2019 1924 days 2067 0
  • 2019 ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவின் சுந்தரவனக் காடுகளானது ராம்சார் சாசனத்தின்  கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலம் என்ற நிலையை அடைந்தது.
  • சுந்தரவனக் காடுகளானது இந்தியா மற்றும் வங்க தேசத்தின் வங்காள விரிகுடாக் கடலின் முகத்துவாரத்தில் இணையும் கங்கா மற்றும் பிரம்மபுத்திரா ஆகியவற்றின் டெல்டா பகுதியில் நூற்றுக்கணக்கான தீவுகளையும் ஆறுகளின் பிணைப்புகளையும் கிளை நதிகளையும் சிற்றோடைகளையும் கொண்டுள்ளது.

  • டெல்டாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த சுந்தரவனக் காடுகள் நாட்டின் மொத்த சதுப்பு நிலக் காடுகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியைக் கொண்டதாகும்.

  • இது இந்தியாவின் 27-வது ராம்சார் சாசன தளமாகும். மேலும் 4,23,000 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வனமானது நாட்டின் மிகப் பெரிய பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலமாகும்.

ராம்சார் சாசனம்

  • ராம்சார் சாசனம் என்று நன்கு அறியப்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களுக்கான இந்த சாசனமானது சதுப்பு நிலங்களின்  பாதுகாப்பு மற்றும் அதன் முறையான பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • ஒரே ஒரு குறிப்பிட்ட சூழலியல் மீது மட்டுமே கவனம் செலுத்தும் சர்வதேச அளவிலான ஒரே ஒப்பந்தம் இதுவேயாகும்.
  • இந்த சாசனமாது 1971 ஆம் ஆண்டின் பிப்ரவரி 2ஆம் தேதியன்று ஈரான் நாட்டின் ராம்சார் நகரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1975ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அத்தினம் உலக ஈரநில தினம் என்று அறியப்படுகின்றது.
  • காலம் காலமாக தேவையற்ற நிலம் அல்லது தொற்று நோய்களை உருவாக்கும் தளமாக பார்க்கப்பட்டு வந்த சதுப்பு நிலங்களானது உண்மையில் நன்னீர், உணவு ஆகியவற்றை வழங்கி இயற்கைப் பேரிடரின் சீற்றத்தினைக் குறைப்பனவாகவும் உள்ளன.
  • பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களானது மிக வேகமாக மறைந்து வருகின்றது. சமீபத்திய மதிப்பீடுகளானது 64% அல்லது அதற்கும் மேற்பட்ட உலகின் சதுப்பு நிலங்கள் 1900 ஆண்டிலிருந்து அழிந்து விட்டன என்பதைக் காட்டுகிறது.
  • விவசாயம் மற்றும் மேய்ச்சலுக்காக நிலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்கள், அணைகள், கால்வாய்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக செய்யப்பட்ட நீர் திசைமாற்றம் ஆகியவை சதுப்பு நிலங்களின் இழப்பு மற்றும் சீரழிவிற்கு முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.

சுந்தரவனத்தின் பல்லுயிர்த் தன்மை

  • இந்திய சுந்தர வனக் காடுகளானது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களுக்கான நிலையை அடைவதற்கான ஒன்பது விதிகளில் நான்கு விதிகளைப் பூர்த்தி செய்துள்ளது.
    • அரிதான இனங்களைக் கொண்டிருத்தல்
    • அச்சுறு நிலையில் உள்ள சூழல்சார் உயிரினங்கள்
    • உயிரியல் பல்லுயிர்த் தன்மை
    • குறிப்பிடத்தக்க மற்றும் பதிலி மீன்கள், மீன் முட்டையிடும் தளங்கள் மற்றும் புலம் பெயர் பாதை.
  • யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமான இந்திய சுந்தர வனக் காடுகளானது வங்கப் புலிகளின் (Royal Bengal Tiger) தாயகமாகும்.
  • இந்திய சுந்தர வனமானது அரிதான மற்றும் உலகளாவிய ரீதியில் அச்சுறு நிலையில் உள்ள உயிரினங்களான மிகவும் அருகி வரும் வடக்கு நதி டெராப்பின் (பட்டாகூர் பாஸ்கா) போன்ற பல உயிரினங்களுக்கும் தாயகமாக விளங்குகிறது என ராம்சார் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • மேலும் அருகி வரும் ஐராவதி டால்பின் (ஆர்கேயில்லா பிரைவிரோஸ்டிரிஸ்) மற்றும் பாதிக்கப்படக்கூடிய மீன்பிடிக்கும் பூனை (ப்ரியொநெலுரஸ் விவெரினஸ்) ஆகியவையும் இதில் அடங்கும்.
  • உலகின் உள்ள நான்கு குதிரை லாட நண்டு இனங்களில் இரண்டு இனங்களும் இந்தியாவின் உள்ள 12 மீன் கொத்திப் பறவை இனங்களில் 8 இனங்களும் இங்கே உள்ளன.
  • சமீபத்திய ஆய்வுகளின்படி 2626 விலங்கினங்கள் மற்றும் நாட்டின் 90% சதுப்புநில வகை உயிரினங்கள் ஆகியவற்றிற்கு இந்திய சுந்தரவனம் தாயமாக உள்ளது.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநில தகுதியின்  தாக்கம்

  • பல்லுயிர்க் காப்பகமாக இந்திய சுந்தரவனக் காடுகள் திகழ்கின்ற அதே சமயத்தில் அதன் வடக்கு மற்றும் வடமேற்கு எல்லைப் புறத்தில் வாழும் 4 மில்லியன் மக்கள் அந்த சூழலியலுக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கின்றனர்.
  • இறால், மெல்லுடலிகள் மற்றும் மீன்கள் வளர்ப்பிற்கென இயற்கைச் சூழலியல்கள் மாற்றப்பட்டு வருவதைப் பற்றிய கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
  • மீன் வளர்ப்பு மற்றும் நீர்வாழ் வளங்களின் அறுவடைகளானது சதுப்பு நிலப் பகுதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதென ராம்சார் தகவல் அறிக்கையானது பட்டியலிடுகிறது.
  • தூர் வாருதல், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்தல், மரங்களை வெட்டுதல், வேட்டையாடுதல் மற்றும் நிலவாழ் விலங்குகளை வேட்டையாடுதல் ஆகியவை மற்ற அச்சுறுத்தல்கள் ஆகும்.
  • உவர்ப்புத் தன்மை நடுத்தர அச்சுறுத்தலாகவும் சுற்றுலாவானது குறைந்தபட்ச அச்சுறுத்தலாகவும் இங்கே வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • காலநிலை மாற்றத்தினாலும் மனிதர்களின் நடவடிக்கைளாலும் பாதிக்கப்பட்டு சிறந்த மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தேவைப்படுகின்ற இந்திய சுந்தரவனக் காடுகளுக்கு கிடைத்திருக்கும் இந்த ராம்சார் அங்கீகாரமானது சர்வதேச அளவிலான அங்கீகார நிலையைக் கொண்டு வரும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

- - - - - - - - - -

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்