TNPSC Thervupettagam

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்-III

May 24 , 2019 1865 days 3911 0

இவரது கொள்கைகள்

  • ஜான் டேவே மற்றும் அவரின் மக்களாட்சி என்ற படைப்பின் மீதான எழுத்துக்களால் அம்பேத்கர் ஈர்க்கப்பட்டார்.
  • தீண்டத்தகாதோரை ஹரிஜன் என்று அழைக்கும் காங்கிரஸ் மற்றும் காந்தி ஆகியோரின் முடிவை இவர் எதிர்த்தார்.
  • சமத்துவத்திற்காக வாதிட்ட அவர் பொதுப்பணிகள், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தும் முடிவிற்குப் பரவலான ஆதரவையும் பெற்றார்.
  • இது பல நூற்றாண்டுகளாக கடுமையான அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கென்று குரல் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • சூத்திரர்களும் ஆரியர்களே எனக் கருதிய அம்பேத்கர் ஆரியப் படையெடுப்பு கோட்பாட்டைத் தீவிரமாக மறுத்தார்.
  • உண்மையில் சூத்திரர்களை இந்தோ – ஆரிய சமூகத்தில் ஷத்திரிய வர்ணத்தைச் சேர்ந்தவர்களாகவே அவர் கருதினார். ஆனால் பிராமணர்களின் கொடுங்கோன்மையால் சமூக அளவில் அவர்கள் கீழ்ப்படுத்தப்பட்டனர் எனவும் அம்பேத்கர் கருதினார்.
  • ஆரியர்களின் தாயகமானது இந்தியாவிற்கு வெளிப்புறத்தில் உள்ளது எனும் பல்வேறு கருத்தியல்களை விவாதித்து இந்தியாவே ஆரியர்களின் தாயகம் என அவர் முடிவு செய்தார்.
  • அம்பேத்கரைப் பொறுத்தவரை, ரிக் வேதத்தில் கூறப்படும் ஆரியர்கள், தாசர்கள் மற்றும் தாசாயூக்கள் ஆகியோர் ஒரு போட்டியாளரான சமயக் குழுக்கள் தானேயன்றி வெவ்வேறு மக்கள் அல்லர்.
  • அம்பேத்கரின் விருப்பத்திற்கு எதிராக சேர்க்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பின் சரத்து 370ஐ அவர் கடுமையாக எதிர்த்தார்.
  • அரசியலமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களின் போது இந்தியச் சமுதாயத்தைச் சீரமைக்க பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் பரிந்துரை செய்தார்.
  • இந்தியாவின் முதன்மை தொழிலான விவசாயத்தில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
  • விவசாயப் பிரச்சினைகளை சமாளிக்க நிலங்களை நாட்டுடைமையாக்குவதையும் விவசாயப் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கும் கருத்தினையும் அவர் வலியுறுத்தினார்.
  • இந்தியாவில் தற்போது தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக நடைமுறையில் உள்ள அனைத்து தொழிலாளர் சட்டங்களும் 1942-46 காலகட்டங்களில் மத்திய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
  • மொழிவாரி மாநிலச் சீரமைப்புகளை அம்பேத்கர் எதிர்த்தார். மேலும் ஒட்டு மொத்த வளர்ச்சி மற்றும் திறமையான நிர்வாகத்தை அடைவதற்காகவே சிறிய மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென அவர் கூறினார்.
  • அம்பேத்கர் கீழ்க்காணும் மூவரையும் தனது குரு அல்லது ஆசிரியர் எனக் கருதினார்.
    • முதலாவதாக ததாகத்தா கவுதம புத்தர்
    • இரண்டாவதாக கபீர் துறவி மற்றும்
    • மூன்றாவதாக மகாத்மா ஜோதிராவ் பூலே
  • அறிவு, சுயமரியாதை, அறநெறி ஆகிய மூன்றை மட்டுமே வணங்கத் தகுந்தவை என அம்பேத்கர் கருதினார்.
  • மேலும் இவர் தனது மூன்று ஆசிரியர்களையும் மேற்கண்ட மூன்றையும் வணங்கியதால் தான் தனது வாழ்வு முழுமை பெற்றது என நம்பினார்.

 

இவரின் படைப்புகள்
  • மராத்தி (தாய்மொழி), ஆங்கிலம், ஹிந்தி, பாலி, சமஸ்கிருதம், குஜராத்தி, ஜெர்மன், பாரசீகம், பிரெஞ்ச், கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட 11 மொழிகளை இவர் அறிந்திருந்தார்.
  • 1936 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் “சாதிகள் அழிக்கப்படுதல்” என்ற தனது புத்தகத்தை அவர் வெளியிட்டார்.
  • 1940ல் நடைபெற்ற முஸ்லீம் லீக் கட்சியின் தனி பாகிஸ்தான் கோரிக்கையின் மீதான லாகூர் தீர்மானத்திற்குப் பிறகு பாகிஸ்தான் எனும் கருத்தின் அனைத்துக் கோணங்களையும் ஆராய்ந்து 400 பக்கங்களைக் கொண்ட “பாகிஸ்தானின் எண்ணங்கள்” எனும் புத்தகத்தை அம்பேத்கர் எழுதினார்.
  • 1946 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “சூத்திரர்கள் எங்கே?” எனும் அவரது படைப்பில் தீண்டத்தகாதோர்கள் உருவான விதம் பற்றி அவர் விளக்க முயன்றார்.
  • இப்புத்தகத்தை இவர் ஜோதிராவ் பூலேவிற்கு (1827 – 1890) அர்ப்பணித்தார்.
  • 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் நாள் இவரின் “புத்தர் அல்லது கார்ல் மார்க்ஸ்” எனும் நூலின் இறுதி கையெழுத்துப் பிரதியை நிறைவு செய்தார்.
  • நவாயான புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கான உரை ஆவணமான இவரின் “புத்தரும் அவரின் தர்மமும்” எனும் நூலானது இவரின் மறைவிற்குப் பின்னர் 1957 ஆம் ஆண்டு வெளிவந்தது.
  • இவர் கீழ்க்காணும் 3 பொருளாதார ஆய்வு நூல்களை எழுதினார்.
    • கிழக்கிந்திய நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிதிநிலை
    • ஆங்கிலேயர் கால இந்தியாவில் மாகாண நிதி நிலையின் பரிணாம வளர்ச்சி
    • ரூபாயின் பிரச்சினை: அதன் தோற்றமும் தீர்வும்
  • நுழைவு இசைவுச் சீட்டுக்காக காத்திருப்பு (Waiting for a Visa) எனும் இவரின் சுயசரிதையானது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு பாடநூலாக பயன்படுத்தப்படுகிறது.
  • இவரது பிரபல இதர புத்தகங்கள்
    • ரானடே, காந்தி மற்றும் ஜின்னா – 1943
    • திரு. காந்தி மற்றும் தீண்டத்தகாதவர்களின் விடுதலை – 1943
    • தீண்டத்தகாதவர்களுக்காக காங்கிரஸ் மற்றும் காந்தி செய்தது என்ன? -1945
    • அமைச்சரவைக் குழுத் திட்டமும் தீண்டத்தகாதவர்களும் – 1946
    • மாநிலங்களும் சிறுபான்மையினரும் – 1947
    • தீண்டத்தகாதவர்கள்: யார் அவர்கள், ஏன் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள் – 1948
    • மொழிவாரி மாநிலங்கள் மீதான சிந்தனைகள்: மாநில மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கையின் மீதான விமர்சனம் – 1955
    • பாலிமொழியின் அகராதி (பாலி – ஆங்கிலம்).

  • அவரது பத்திரிக்கைகள்
    • பகிஷ்கிரித் பாரத்
    • பிரபுத்தா பாரத்
    • சமத்துவ ஜந்தா

 

நினைவுச் சின்னங்கள்
  • அலிப்பூர் சாலையில் உள்ள அவரின் டெல்லி இல்லத்தில் அம்பேத்கரின் நினைவகமான டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவு இல்லம் நிறுவப்பட்டது.
  • பம்பாயில் “ராஜ கிருஹா” எனும் இல்லத்தில் உள்ள பாபா சாஹிப்பின் தனிப்பட்ட நூலகமானது 50,000க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் உலகின் மிகப்பெரிய தனிநபர் நூலகமாகத் திகழ்கிறது.
  • ராஜ கிருஹா என்பது பம்பாயின் தாதர் இந்து காலனியில் உள்ள அம்பேத்கரின் பழைய வீடாகும்.
  • இது ராஜகிருஹா (தற்போது ராஜ்கிர்) என்ற பண்டைய புத்த சமய அரசின் பெயரை அடிப்படையாகக் கொண்டது.
  • 1920களில் அம்பேத்கர் மாணவராக லண்டனில் வசித்த இல்லத்தை மகாராஷ்டிரா அரசு வாங்கியுள்ளது.

  • 2015 ஆம் ஆண்டில் அந்த இல்லமானது அருங்காட்சியகம் மற்றும் நினைவகமாக மாற்றப்பட்டது.
  • அவரின் நினைவாக அம்பேத்கர் நினைவகமானது லக்னோவில் அமைக்கப்பட்டது.

  • மும்பையில் சமத்துவத்திற்கான சிலை எனும் ஒரு மிகப்பெரிய நினைவகம் அல்லது டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் நினைவகம் அமைக்க அளிக்கப்பட்ட முன்மொழிதலுக்கு 2015 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது
  • அம்பேத்கரின் பிறந்த நாளானது அம்பேத்கர் ஜெயந்தி அல்லது பீம் ஜெயந்தி என பிரபலமான வருடாந்திர விழாவாகவும் பொது விடுமுறை நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.
  • 2016 ஆம் ஆண்டிலிருந்து அம்பேத்கர் ஜெயந்தியானது ஐ.நா. சபையால் அனுசரிக்கப்படுகின்றது.
  • இவரின் பிறந்த நாளானது உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகின்றது.
  • அவரின் பிறப்பு மற்றும் மறைந்த தினம் மற்றும் நாக்பூரின் தர்ம சக்கர பிரவர்த்தன தினம் ஆகிய நாட்களில் (அக்டோபர் 14), ஏறக்குறைய ஒரு மில்லியனின் பாதி அளவு மக்கள் மும்பையில் உள்ள அவரின் நினைவகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக கூடி வருகின்றனர்.
  • முன்னதாக தேசிய சட்ட நாளாக அனுசரிக்கப்பட்ட நவம்பர் 26 ஆம் நாள் அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட காரணத்தினால் ஒவ்வொரு ஆண்டும் தற்போது அரசியலமைப்புத் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டச் சமயத்தில் (2015) இந்திய அரசு 2015 ஆம் ஆண்டின் நவம்பர் 19 ஆம் தேதி அன்று ஒரு அரசிதழ் வெளியீட்டின் மூலம் நவம்பர் 26-ஐ அரசியலமைப்புத் தினமாக அறிவித்தது.
  • பீம் (Bharat Interface for Money-BHIM) என்ற கைபேசி பண வழங்கீட்டுச் செயலியானது இந்திய தேசிய பண வழங்கீட்டு நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பண வழங்கீட்டு இடைமுக அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் அம்பேத்கரின் பெயரிட்டு இச்செயலி வெளியிடப்பட்டது. 2016 ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பணமற்றப் பரிவர்த்தனைகளை நோக்கி முன்னேறும் திட்டம் ஆகிய முயற்சிகளின் ஒரு பகுதியாக மின்னணுப் பண வழங்கீடுகளை நேரடியாக வங்கிக் கணக்கிலேயேச் செலுத்துவதற்கு வழிவகை செய்யும் நோக்கத்துடன் இது வெளியிடப்பட்டது.
  • History TV18 மற்றும் CNN IBN ஆகியவற்றால் 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மிகப் புகழ்மிக்க ஒரு இந்தியராக அம்பேத்கர் வாக்களிக்கப்பட்டார்.
  • உலகளாவிய அளவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் “உலகை உருவாக்கியோர்” என்றழைக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் 100 சிறந்த மனிதநேய மிக்க மனிதர்களின் பட்டியலில் அம்பேத்கர் 4வது இடத்தில் உள்ளார்.
  • 2004 ஆம் ஆண்டில் கொலம்பியாப் பல்கலைக் கழகமானது அதன் 250வது வருட துவக்க தினக் கொண்டாட்டத்தில் அம்பேத்கரை கௌரவித்தது.
  • இந்தப் பல்கலைக் கழகமானது “நவீன இந்தியாவை உருவாக்கிய தந்தை” என அவரைக் குறிப்பிட்டுள்ளது.
  • லண்டன் அருங்காட்சியத்தில் கார்ல் மார்க்ஸ் உடன் இணைத்து வைக்கப்பட்ட ஒரே சிலை அம்பேத்கருடையது ஆகும்.
  • இந்திய மூவர்ணக் கொடியில் அசோகச் சக்கரத்திற்கு இடமளித்த பெருமை அம்பேத்கரையேச் சாரும்.
  • உலகின் எல்லா இடங்களிலும் புத்தரின் சிலைகள் மற்றும் ஓவியங்கள் கண்கள் மூடிய நிலையிலே காணப்படுகின்றன. ஆனால் சிறந்த ஓவியரான பாபா சாஹிப் புத்தரின் ஓவியத்தை முதல்முறையாக கண்கள் திறந்த நிலையில் வரைந்தார்.
  • பாபா சாஹிப்பைப் புத்த சமயத்திற்கு மாற்றிய புத்த சமயத் துறவியான மஹந்த் வீர் சந்திரமணி இவரை “இந்த யுகத்தின் நவீன புத்தர்” என்றழைத்தார்.
  • அம்பேத்கர் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பை "முதல் மற்றும் முன்னணி சமூக ஆவணம்" என்று கிரான்வில் ஆஸ்டின் விவரித்துள்ளார்.
  • நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்த்தியா சென் அம்பேத்கரைத் தனது பொருளாதாரவியல் தந்தை எனக்  கருதுகிறார்.
  • இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, "டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கர் இந்து சமுதாயத்தின் அனைத்து விதமான  அடக்குமுறை அம்சங்களுக்கும் எதிரான எழுச்சியின் ஒரு சின்னமாக இருந்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • உலகில் மிக அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் இவருடையதே  ஆகும்
  • பாபா சாஹிப் உயிருடன் இருந்த போதே அவரின் முதல் சிலையானது  1950 ஆம் ஆண்டில்  மகாராஷ்டிராவின் கொல்ஹாபூர் நகரத்தில் நிறுவப்பட்டது.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்