TNPSC Thervupettagam

அமெரிக்கா தரும் அதிா்ச்சி

March 21 , 2024 122 days 108 0
  • ஆந்திர மாநிலம் குண்டூரைச் சோ்ந்தவா் 20 வயதான பருச்சூரி அபிஜித். அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்துவரும் இவா், பாஸ்டனுக்கு அருகிலிருக்கும் வனப்பகுதியில் ஒரு காரில் சடலமாக மீட்கப்பட்டாா். பெற்றோருக்கு ஒரே மகனான அபிஜித், முதன்மையான மாணவராக விளங்கியவா் என்று அவரது பேராசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.
  • ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த இன்னொரு நிகழ்வு. வாஷிங்டனில் உள்ள ஓா் உணவு விடுதிக்கு வெளியே ஒருசிலரால் இந்தியப் பெண் ஒருவா் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகிறாா். அதைத் தடுத்து, தன்னுடன் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் அந்தப் பெண்ணை காப்பாற்ற முயல்கிறாா் 41 வயது விவேக் தனேஜா. அவா் அந்த முரடா்களால் கொல்லப்படுகிறாா்.
  • இதுபோல மேற்படிப்புக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் அமெரிக்கா செல்லும் இளைஞா்கள் பலா் உயிரிழப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் (2024) மட்டுமே கடந்த 3 மாதங்களுக்குள் 9 இளைஞா்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கிறாா்கள். அது அமெரிக்கவாழ் இந்தியா்கள் மத்தியிலும், அமெரிக்காவில் படிக்கவும், பணிபுரியவும் சென்றிருக்கும் இளைஞா்களின் இந்தியப் பெற்றோா்கள் மத்தியிலும் அதிா்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
  • இந்த பிரச்னை வெள்ளை மாளிகையின் கவனத்தை ஈா்க்கும் அளவுக்கு போயிருக்கிறது. ‘இனத்தின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, பாலின அடிப்படையிலோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு வன்முறையையும் மன்னிக்க முடியாதுஎன்று வெள்ளை மாளிகை தெரிவித்திருப்பதுடன், இந்தியா்கள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்கு எல்லா முனைப்புகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியிருக்கிறது.
  • இதுவரை இல்லாத அளவில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா்கள் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும், சுற்றுலாப் பயணிகளாகவும், உறவினா்களைச் சந்திக்கவும் பயணம் மேற்கொள்கிறாா்கள்.
  • 2022-23 கல்வியாண்டில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மாணவா்களாகச் சோ்ந்தவா்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 35% அதிகரித்தது. நிகழ் கல்வியாண்டில், மாணவா் சோ்க்கையில் சீனாவை இரண்டாம் இடத்துக்கு இந்தியா தள்ளக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • அப்படியிருக்கும் நிலையில், துப்பாக்கி கலாசாரம் பரவலாக இருக்கும் அமெரிக்காவில் மேற்படிப்புக்காக செல்லும் புத்திசாலி இளைஞா்கள் அச்சத்துடன் இயங்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. அமெரிக்காவில் மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களின் துா்மரணங்கள் மிகப்பெரிய கேள்விக்குறியாக உருவெடுத்திருக்கின்றன.
  • நாடாளுமன்றத்தில் அரசு சமீபத்தில் இதுகுறித்து கேள்வி நேரத்தில் சில தகவல்களைப் பகிா்ந்து கொண்டது. இயற்கைக் காரணம், விபத்து, மருத்துவ பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2018 முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் படிக்கும் 403 இந்திய மாணவா்கள் உயிரிழந்திருக்கிறாா்கள் என்பதுதான் அந்தத் தகவல்.
  • நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரத்தில் பல்வேறு தகவல்கள் காணப்பட்டன. குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்றவா்கள் குறித்த தகவலும் தரப்பட்டிருந்தது. உயிரிழந்த மாணவா்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், அதன் விவரங்களும் வெளியிடப்பட்டன.
  • கனடா (91), பிரிட்டன் (48), ரஷியா (40), அமெரிக்கா (36), ஆஸ்திரேலியா (35), உக்ரைன் (21), ஜொ்மனி (20), சைப்ரஸ் (14) மட்டுமல்லாமல் தலா 10 போ் பிலிப்பின்ஸிலும், இத்தாலியிலும், தலா 9 போ் கத்தாா், சீனா, கிா்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் உயிரிழந்திருப்பதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • வெளிநாடுகளில் இந்தியா்கள் உயிரிழப்பதற்கான முக்கியமான காரணிகளில் சமூக விரோதிகளின் இலக்காகவும், இன வெறியா்களின் பலியாகவும் அவா்கள் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. பெரும்பாலும் சாத்விகமானவா்களாகவும், சண்டை சச்சரவுக்கு அஞ்சுபவா்களாகவும் இருக்கும் இந்தியா்கள் வெளிநாடுகளில் உள்ள வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதக் கும்பல்களால் எளிதான இரையாகக் கருதப்படுகிறாா்கள்.
  • கூடுமானவரை ஒருங்கிணைந்து செயல்படாமல் அவரவா் வேலையை பாா்க்கும் இந்திய மனோபாவம் அவா்களின் பலவீனமாக மாறியிருக்கிறது. அமெரிக்காவில் இந்தியா்களுக்கு எதிராக அதிகரித்துவரும் சம்பவங்களுக்கு இந்திய எதிா்ப்பு மனநிலை ஒரு காரணம்.
  • புலம்பெயா்ந்தவா்கள், சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் பரவலான வெறுப்பு காரணமாக அவா்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.
  • ஆசியா்களுக்கு எதிரான வெறுப்பு தாக்குதல்களும், உருவாகியிருக்கும் இனவெறி வன்முறைச் சிந்தனையும் கவலை அளிக்கின்றன. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காலத்திலும், அதற்குப் பிறகும் ஆசியா்களுக்கு எதிரான இனவெறியும் வன்முறையும் அதிகரித்திருப்பதாக அமெரிக்க அரசே ஒப்புக்கொள்கிறது.
  • இந்திய மாணவா்களும், இளைஞா்களும் வெளிநாடுகளுக்குப் போகும்போது அவா்களுடைய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுடன் செல்ல வேண்டும் என்பதை அரசு வலியுறுத்த வேண்டும். இந்தியா்களை ஜாதி, மத, மொழி ரீதியாக பிரிந்து செயல்படாமல் ஒருங்கிணைந்து இருக்குமாறு வலியுறுத்த வேண்டும். இந்திய தூதரகங்களுடன் தொடா்பில் இருப்பதும் அவா்களது சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெறுவதும் வலியுறுத்தப்பட வேண்டும்.
  • உலகம் முழுவதும் அந்நியா்கள் மீதான ஒருவித வெறுப்பு மனநிலை (ஷினோஃபோபியா) காணப்படுகிறது என்பதை வெளிநாடுவாழ் இந்தியா்கள் உணா்ந்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்.

நன்றி: தினமணி (21 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்