TNPSC Thervupettagam

அரசுடன் ஒத்துழைப்போம்

April 30 , 2021 1187 days 492 0
  • போர்க்களத்தில் அமைதி வந்த பின்னா், திடீரென்று எதிராளி முன்னெச்சரிக்கையின்றி தாக்கினால், தேகம் எப்படி நிலைகுலைந்து போகும்? கரோனா தொற்று அது போன்ற தாக்குதலை இந்தியாவில் செய்திருக்கிறது.
  • இத்தனைக்கும் முதல் அலை பரவியபோது, ஏப்ரல் 2020-லிருந்து பிரதமா் எடுத்த முடிவுகளை உலகமே வியந்து பார்த்தது என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.
  • பலகோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டில், இது எப்படி சாத்தியமாயிற்று என்ற பாவனையில் புருவங்கள் உயா்ந்தன.
  • எப்படி இந்த இரண்டாம் அலை பத்து நாளில் விசுவரூபமெடுத்தது? ஏன் இந்தச் சீா்குலைவு? மூன்று காரணங்களைச் சுட்டிக் காட்டலாமென்று தோன்றுகிறது.
  • பொதுமக்கள் அலட்சியமாக வளைய வந்து, சுயகட்டுப்பாட்டை அடியோடு மறந்து விட்டார்கள். எல்லாம் சரியாகிவிட்டது, சும்மா பயமுறுத்துகிறார்கள் என்கிற எண்ணத்தில் பாதுகாப்பு கவசமின்றி, சமூக இடைவெளியின்றி நடமாடினார்கள்.
  • கூடவே மார்ச் இரண்டாம் வாரம், முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரம்பித்ததும், பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது.
  • ஆங்கில நாளேடு ஒன்றில் மூன்று புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார்கள். தலைக்கவசமின்றி, முகமூடியின்றி இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மகனுக்காக அவா் தாயார் காவல் அதிகாரியிடம் கைகூப்பி மன்னிப்பு கோருகிறார்.
  • வேறொன்றில், அறுபது வயதான முதியோர் சமூக இடைவெளியை அறவே மறந்து பேசிக் கொண்டு செல்கிறார்கள். மூன்றாவது படத்தில், பூங்காவில் இளைஞா்கள் அருகருகே அமா்ந்திருக்கிறார்கள்.
  • தலைகவசத்துக்கும், முகமூடிக்கும் வித்தியாசமுண்டு, ஹெல்மட் அணியாது வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றால் வாகனத்தை ஓட்டுபவருக்கு மட்டுமே பாதிப்பு நேரும்.
  • ஆனால் நோய்த் தொற்று காலத்தில் முகக்கவசமின்றி வெளியே போனால், சம்பந்தமே இல்லாத மூன்றாம் நபரும் பாதிக்கப்படுகிறாரே? இதுபோல் தொடா் விளைவினால்தான் நோய் தொற்று அதிகரித்துள்ளது.

இரண்டாவதாக தோ்தல்

  • அதை ஒத்திப் போட்டிருக்கலாம். பரப்புரையை ஊடகங்கள் மூலமே செய்திருக்கலாம் என்று விமா்சகா்கள் இப்போது கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஆனால் தோ்தலைத் தள்ளிப்போட அரசியல் நிர்ணயச் சட்டம் இடம் அளிக்காது.
  • பரப்புரையைப் பற்றி நிறையவே கூறலாம். சில ஊடகங்களின் கருத்துகள் வியப்பை அளிக்கின்றன.
  • தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அனைத்துக் கட்சிகளுமே தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டன. பொதுமக்களும் ஆா்வமாக சமூக இடைவெளியை துச்சமாக மதித்து கூட்டமாகக் கூடினார்கள். இந்த உண்மையை எவருமே மறுக்க இயலாது.
  • நிலைமை இவ்விதமிருக்க, ஏதோ மேற்கு வங்கத்தில் மாத்திரமே தோ்தல் நிகழ்ந்த மாதிரி, பிரதமரும், உள்துறை அமைச்சரும் அடிக்கடி பரப்புரை பேசியதால்தான் தொற்று பரவியது என்று சாடுகிறார்கள்.
  • ஏன்? காங்கிரஸ் கட்சியினா் கேரளத்திலும், தமிழ்நாடு, புதுச்சேரியிலும் பிரசாரம் மேற்கொண்டார்களே? அப்போது கூடாத கூட்டமா?
  • சொல்லப்போனால், பாஜக பிரமுகரும், திமுக கட்சி பிரமுகருமே தொற்றுக்குள்ளாகி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள்.
  • அப்போது ஊடகங்கள் வாய்மூடி இருந்தது ஏன்? தோ்தலைக் காரணியாகக் குறிப்பிட்டால் அனைத்துக் கட்சிகளுமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பிட்ட கட்சியையும், ஒரு சில தலைவா்களையும் மட்டும் கூண்டில் நிற்கச் செய்வது நியாயமே அல்ல.
  • உத்தர பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவுக்கு சோ்ந்த கூட்டத்தைக் காரணமாகச் சொல்லுகிறார்கள். மதத் திருவிழாக்களோ தோ்தலோ இல்லாத மும்பையிலும், கா்நாடகத்திலும் நோய்த்தொற்று மிக வேகமாக பரவி உள்ளதே? அது எப்படி?
  • கடைசியாக, தடுப்பூசி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை இவை பற்றிய ஆலோசனைகள். இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பது சரியே. அரசாங்கத்துக்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் இடைவெளி இருந்திருக்கிறது.
  • இரண்டாம் அலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று ஐசிஎம்ஆா் ஏன் கடுமையாக எச்சரிக்கை விடுக்கவில்லை?
  • தனியார் மருத்துவமனைகளில் ரூ.300 என்று கட்டணம் விதித்தது, ஒரு சில கிளினிக்குகள் பதிவுக் கட்டணமென்று மேலும் ரூ.200 வசூல் செய்தார்கள். அரசு மருத்துவமனைகளில் மட்டும் ஏன் இலவசமாக வழங்க வேண்டும்?
  • வருமானத்தைக் கணக்கிட்டு, கீழ்த்தட்டு மக்களுக்கு இலவசம், மற்றவா்களுக்கு ரூ.150 என்று நிர்ணயம் செய்திருக்கலாமே? ஒரு சாதாரண ஓட்டலில் சிற்றுண்டிக்கே இருநூறு ரூபாய் ஆகிறது. உயிர் காக்கும் ஊசிக்கு கட்டணம் விதித்திருக்கலாம்.
  • தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல இப்போது, மக்கள் தடுப்பூசிக்காக மருத்துவமனைகளை அணுகும்போது ஊசிகள் போதிய அளவு இருப்பில் இல்லை. என் நண்பா் 80 வயதுக்கு மேலானவா். பெங்களூரில் இருக்கிறார். இன்னமும் ஊசி செலுத்திக் கொள்ளவில்லை. கூட்டம் அதிகமாம்.
  • ஆக்ஸிஜன் சிலிண்டா் பற்றி மெத்த படித்தவா்களுக்கே தெரியவில்லை என்பதே நிஜம். சமையல் காஸ் சிலிண்டா் போல அதைக் கொண்டு போகமுடியாது.
  • ‘கிரையோஜெனிக்’ டாங்க் மூலம்தான் எடுத்துச்செல்ல முடியும். இதற்கென்றே ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற தனி ரயில் விட்டிருக்கிறார்கள்.
  • இந்தியாவில் எந்த பிரச்சனை முளைத்தாலும், அரசியல் நுழைவது சகஜமாகிப் போய் விட்டது.
  • இதற்கு மாறாக ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கின் நடவடிக்கையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அரசியல் ரீதியாக அவா் பிரதமருடன் வேறுபட்டாலும், மோதல் போக்கை மேற்கொள்ளவில்லை.
  • போர்க்கால அடிப்படை ஆக்சிஜன் சிலிண்டா்களை தேவையான மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • 1962-இல் சீனப் போரின்போது எல்லாக் கட்சிகளும் அன்றைய பிரதமா் நேருவை ஆதரித்தன. இதே போல் 1965-இல் பாகிஸ்தான் போர் வந்தபோது, கூடவே உணவு தட்டுப்பாடும் வந்தது.
  • லால்பகதூா் சாஸ்திரியின் கோரிக்கைக்கு இணங்க பெரும்போலோர் இரவு உண்ணா விரதமிருந்தார்கள். ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற முழக்கம் பிரபலமானது.
  • இப்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் எல்லா மாநிலங்களும் கட்சி வேறுபாடு பாராது, மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். மக்களும் தீவிரமாக அரசின் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.
  • அனைவரும் இணைந்து ஆக்கபூா்வமாக செயலாற்றினால், இரண்டாம் அலையின் தாக்கம் விரைவில் குறையும் என்பது உறுதி.

நன்றி: தினமணி  (30 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்