TNPSC Thervupettagam

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழி பாடம் நடத்த இலவச செயலி அறிமுகம்

May 25 , 2020 1521 days 667 0
  • வகுப்பறையில் இருக்கும் குழந்தைகளுக்கு ஐசிடி எனப்படும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் வகுப்புகள் எடுக்கும் முறையைத் திறம்பட பின்பற்றும் ஆசிரியர்கள் பலர் தமிழக அரசு மற்றும் இதர பள்ளிக்கூடங்களில் இருக்கிறார்கள்.
  • அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டு பாடம் நடத்தும் முறையை இவர்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், இதே போல இணைய வழிக் கற்றல் முறை இங்கு பரவலாகவில்லை.
  • ஆசிரியர் ஒரு இடத்தில் இருக்க மாணவர்கள் வேறெங்கோ இருந்தாலும் கணினி அல்லது ஸ்மார்ட்போன் மூலமாக இணையத்தில் தொடர்பு கொண்டு கற்பித்தல் நடைபெறுவது என்பது பிரபலமாகவில்லை.
  • இந்த இணைய வழிக் கற்றல் முறை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மேலைநாடுகளில் மிகப் பிரபலம். தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதற்கான அவசியம் ஏற்பட்டதால் என்னமோ இணைய வழிக் கற்றல் முறை நம்மிடையே பரவலாகவில்லை.
  • ஆனால், அதற்கான கட்டாயத்தை தற்போது கரோனா காலம் ஏற்படுத்திவிட்டது. இதனால் வேறு வழியின்றி பாதுகாப்பற்ற இணையவழிச் செயலிகளை அவசர அவசரமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
  • இதற்கு மாற்றாகப் பாதுகாப்பான பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் எந்த விதத்திலும் கசியாத வகையில் புதிய கற்றல் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த ஜோஹோ மென்பொருள் நிறுவனம்.
  • 'தாய் மண்ணின் தயாரிப்பு' என்ற அறிவிப்புடன் உள்நாட்டிலேயே மென்பொருள் சாதனங்களைத் தரமாக தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்துவரும் நிறுவனம் இது.
  • அதிலும் அரசுப் பள்ளிகளுக்கு முற்றிலும் இலவசமாக 'ஜோஹோ கிளாசஸ்' செயலியைக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்த ஜோஹோ கார்ப் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணியுடன் உரையாடினோம்.

பாதுகாப்பாகப் பாடம் நடத்தலாம்!

  • "அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் உடனுக்குடன் தகவமைக்கப்படாமலும் பரவலாக்கப்படாமலும் இருப்பவை அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் கல்வித் துறை என்றே நினைக்கிறேன்.
  • இனியும் அப்படி இருக்கலாகாது என்பதை கரோனா கொள்ளை நோய் கற்றுக் கொடுத்து இருக்கிறது. வீடியோ கான்ஃபரன்சிங் தொழில்நுட்பம் கடந்த 30 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது.
  • ஆனால், இப்போதுதான் நாம் அதை பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். அதிலும் பள்ளிகளை எப்போது மீண்டும் தொடங்குவது, மாணவர்களை வகுப்பறைக்கு எப்படி அழைத்து வருவது என்பது பிடிபடாமல் பதற்றத்துடன் இருக்கும் காலகட்டத்தில் ஏதோ ஒரு தொழில்நுட்ப வசதியைத் தவறுதலாகப் பயன்படுத்திச் சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
  • இதற்குத் தீர்வு காண ஜோஹோ நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே 50 மென்பொருள் சாதனங்களை நாங்கள் தயாரித்து இருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் 'ஜோஹோ கிளாசஸ்' (Zoho Classes).
  • பாதுகாப்பு வசதிகளுக்குத்தாம் எப்போதுமே எங்களுடைய தயாரிப்புகளில் முதலிடம் தரப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்குப் பயன்படும் வகையில் வலுவான பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய செயலிகளை நாங்கள் ஏற்கெனவே தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்தினோம்.
  • ஆகவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை ஆன்லைனில் மாணவர்களுடன் இணைப்பதற்கான 'ஜோஹோ கிளாசஸ்' செயலியை ஓராண்டுக்கு முன்பே வடிவமைத்துவிட்டோம். தற்போதைய சூழலுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
  • இந்த செயலியைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடங்களைப் பதிவேற்றலாம், வகுப்புகளை நேரடியாக ஒளிபரப்பலாம், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின் கீழ் வீட்டுப்பாடங்களைப் பகிரலாம்.
  • மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வீடியோக்களைக் காணலாம். சந்தேகங்களைத் தெளிவுபடுத்த ஆசிரியர்களுடன் நேரடியாக இணையலாம்.

'ஜோஹோ கிளாசஸ்

  • ‘ஜோஹோ கிளாசஸ்’ல் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரே செயலியில் லாக்இன் செய்கின்றனர். இதனால், அனுப்பப்படும் அல்லது பெறப்படும் எந்தவொரு விஷயத்தையும் பள்ளி முதல்வர் அல்லது நிர்வாகியால் கண்காணிக்க முடியும்.
  • பள்ளியில் இருந்து நேரடியாக அழைப்பு அனுப்பப்பட்ட பின்னரே மாணவர்கள் ஒரு குழுவில் சேர முடியும். கடந்த சில ஆண்டுகளாக அலைபேசியானது நடுத்தர, கீழ் நடுத்தர மக்கள் இடையிலும் புழங்கத் தொடங்கி இருக்கிறது. ஆகையால் இணையப் பயன்பாடும் சகஜமாகி வருகிறது.
  • ஆனால், அதிவேக இணையச் சேவை என்பது இன்னும் பரவலாகவில்லை. இதனை மனத்தில் நிறுத்தியே ஜோஹோ கிளாசஸ் செயலி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
  • வேகம் மிகவும் குறைவான இணையச் சேவை இருக்கும் பட்சத்திலும் இது வேலை செய்யும். அதேபோல பதிவு செய்யும் வசதியையும் இதில் இணைத்துள்ளோம். இணைய வழி நடத்தப்படும் பாடங்களைச் சேமித்து வைத்து பின்னர் இணையத் தொடர்பு இல்லாமலும் காணொலியாகக் காணலாம்.
  • இதன் மூலம் மெல்லக் கற்கும் மாணவர்கள், கவனச்சிதறல் ஏற்படும் மாணவர்கள் பலமுறை பாடத்தை ஓட்டிப் பார்த்து படித்துவிடலாம்.
  • இந்தியாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஜோஹோ கிளாசஸ்-ஐ முற்றிலும் இலவசமாக வழங்கவிருக்கிறோம். மற்ற பள்ளிகளுக்கு 100 மாணவர்கள் வரை இலவசமாகும்.
  • அதற்கு மேல், ஒவ்வொரு கூடுதல் மாணவருக்கும், ஒரு ஆண்டிற்கு, பள்ளிகள் தலா ரூ.250 கூடுதலாகச் செலுத்த
  • வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு www.zoho.com இணையதளத்தைப் பார்க்கவும்”
  • இவ்வாறு ஜோஹோ கார்ப் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி கூறினார்.

நன்றி: தி இந்து (25-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்