TNPSC Thervupettagam

ஆணாதிக்கப் பார்வையை உடைக்கும் தருணம்!

March 6 , 2025 5 hrs 0 min 7 0

ஆணாதிக்கப் பார்வையை உடைக்கும் தருணம்!

  • ‘டாக்டர் சுப்ரஜா எதிர் அரசு’ வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மஞ்சுளா எழுதிய ஒரு தீர்ப்பை அண்மையில் வாசித்தேன். பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதில் தற்போதுள்ள சட்டம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது ஆகியவை தொடர்பான வழக்கு அது.
  • இப்பிரச்சினையை விவாதிக்கும்போது நீதியரசர் ஒரு சுவையான, முக்கியமான கண்ணோட்டத்தை முன்வைக்கிறார். அது ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து பிரச்சினையைப் பார்ப்பது அல்லது ஒரு அறிவார்ந்த பெண்ணின் அளவுகோலைப் பயன்படுத்துவதாக உள்ளது.

அடிப்படை மாற்றம் தேவை:

  • ஒரு பெண் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டிய வழக்கு​களின் எண்ணிக்கை, அவருக்கு ஏற்பட்ட கருச்சிதைவின் காரணமாகக் குறைந்​த​தாகக் கூறிப் பதவிநீக்கம் செய்யப்​பட்​டார். அந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.​நாகரத்னா வழங்கிய கருத்து​களையும் வாசித்தேன். அதில் அவர், “ஆண்களுக்கும் மாதவிடாய் இருந்​திருந்தால் மட்டுமே, அவர்களால் இதனைப் புரிந்து​கொள்ள முடியும்” என்று குறிப்​பிட்​டிருந்​தார்.
  • பாலியல் வன்முறை தொடர்​பாகச் சமூகம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எலிசபெத் சேஷாத்ரி அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையையும் வாசித்தேன். ஒரு முறைசார் பாடத்​திட்​டத்தின் வழியாகச் சிறுவர்​களுக்குக் குழந்தைப் பருவத்​திலிருந்தே கற்றுத்​தரும் செயல்பாடு வேண்டும் என்று அவர் அக்கட்டுரையில் வலியுறுத்து​கிறார்.
  • பாலினங்​களுக்கு இடையிலான ஊடாட்​டத்தின் சிக்கல் மிகுந்த சேர்க்கை​களில், பெண்களின் கண்ணோட்​டத்தைப் புரிந்து​கொள்வது மிக முக்கிய​மாகிறது; உண்மையான பாலினச் சமத்து​வத்தை நோக்கிய பயணத்​துக்குச் சாதாரண சட்ட வரையறை​களைத் தாண்டி, சமுதாய விழிப்பு​ உணர்வு அடிப்​படையிலான புத்துரு​வாக்​கமும் தேவைப்​படு​கிறது. இந்தியக் காப்பி​யங்களான ராமாயணமும் மகாபாரதமும் ஆற்றல்​மிக்க வரலாற்று அடையாளங்கள் ஆகின்றன. ஆழமாக ஆணாதிக்கப் பார்வைகள் பெண்களின் வாழ்க்கை அனுபவங்களை விளிம்பு நிலைக்குத் தள்ளி​விட்​டதையே அவை வெளிப்​படுத்து​கின்றன.
  • இந்தக் கதையாடல்கள் அடிப்​படை​யில், பெண்களைத் தன்னுரிமை​யுள்ள தனியாள்களாக இல்லாமல், ஆண் கதையாடலின் கருவிகளாக ஆக்கி​விட்டன என்றே நான் கருதுகிறேன். ராமாயணத்தில் சீதையின் பயணம் பெண்களின் தனிப்பட்ட போராட்​டங்களை வலிமையாக எடுத்​துக்​காட்டு​கிறது. அவர் வலுக்​கட்​டாயமாக நாடுகடத்​தப்​பட்டது, அவமானகரமான அக்னிப்​பிர​வேசம் போன்றவை பெண்கள் அனுபவித்த துன்பத்தின் அடையாளங்கள்.
  • பெண் ஒரு விற்பனைப் பொருளாக நடத்தப்​படுவதை மகாபாரதம் எடுத்​துக்​காட்டு​களுடன் முன்வைக்​கிறது. பலரும் பயன்படுத்தும் ஒரு கிண்ணத்தைப் போலவும், பந்தயப் பொருளாகவும் திரௌபதி நடத்தப்​படு​கிறார். இது பெண்களை முரட்டுத்​தனமாக ஒரு பண்டமாற்றுப் பொருளைப் போல நடத்தி​யதற்கான சான்று. அரசவையில் எல்லோர் முன்னிலை​யிலும் அவர் துகிலுரியப்​பட்டது, ஆண்களின் பழிவாங்குதலுக்கும் அவமானப்​படுத்​துதலுக்​குமான கருவி​களாகப் பெண்கள் கருதப்​பட்​டார்கள் என்பதை விளக்கு​கிறது.
  • பாலினச் சீண்டு​தலும் பாலினம் சார்ந்த வன்முறையும் அங்கொன்றும் இங்கொன்​று மாக நிகழ்​கின்றவை என்று கருதக்​ கூ​டாது. இவை பழைமை ஊறிப்போன ஆணாதிக்க மனநிலை சார்ந்த கட்டமைப்பின் வெளிப்​பாடுகள். நீதியரசர்கள் மஞ்சுளா, நாகரத்னா, எலிசபத் சேஷாத்ரி போன்ற வழக்கறிஞர்கள் பகிர்ந்து​கொண்ட பார்வைகள் பெண்களின் அனுபவங்களை ஆண் என்கிற கண்ணாடி வழியாகப் பார்ப்​ப​திலிருந்து விலகி, அவர்களது மெய்யான வாழ்க்கை அனுபவங்களைப் புரிந்து​கொள்ள அடிப்படை மாற்றம் உடனடி​யாகத் தேவை என்பதை விளக்கு​கின்றன.

எல்லைக்​கோடு​களைத் தாண்டி...

  • பணியிடத்தில் பாலியல் தொந்தர​வுகள் பற்றி ஆராய்ந்தபோது ‘டாக்டர் சுப்ரஜா எதிர் அரசு’ வழக்கில் நீதியரசர் மஞ்சுளா, அறிவார்ந்த ஒரு பெண்ணுக்கான அளவுகோலைப் பயன்படுத்துவதை வலியுறுத்​தி​யுள்​ளார். ஆண்களை மையப்​படுத்துவதை விட்டு​விட்டு, பெண்களின் கண்ணோட்​டத்தில் அனுபவங்​களைப் புரிந்து​கொள்ள வலியுறுத்தும் ஒரு புரட்சிப் பார்வை இது.
  • நீதியரசர் நாகரத்​னாவின் கூர்ந்த பார்வை​யில், “ஆண்களுக்கு மாதவிலக்கு இருக்க வேண்டும் என்று விரும்​பு​கிறேன்” என்பது, ஆண்களை அவர்களது சிறப்புரிமை பெற்ற பார்வையி​லிருந்து வெளியே வருமாறும் பெண்களின் அனுபவங்களை அவர்கள் நிலையி​லிருந்து பார்க்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்​கிறது; மேலோட்டமான புரிதலை விடுத்து அனுபவபூர்வமான கரிசனையை இது எதிர்​பார்க்​கிறது.
  • ஜிசெலா பெலிகட் நிகழ்வு போன்ற வழக்கு​களில் வெளியாகி​யுள்ள அதிர்ச்சி​யூட்டும் தகவல்கள் நம்மைத் தொந்தர​வுக்கு உள்ளாக்கும் உண்மைகளை அழுத்தமாக எடுத்​துரைக்​கின்றன. பாலின வன்முறைகளை மேற்கொள்வோர் யாரோ கொடுமையான வெளியாள்கள் இல்லை, சமுதா​யத்தில் மரியாதைக்​குரிய இடத்தில் இருப்​பவர்களே. பொறுப்புடன் நடந்து​கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கும் தந்தைகள், கணவர்கள், அதிகாரிகள் ஆகியோரே அவர்கள்.
  • பாலியல் வன்கொடுமைக்​காரர்கள் பற்றி நாம் குறுகலாகப் புரிந்து​கொண்​டிருக்கும் கதையாடலுக்கு இது சவால் விடுக்​கிறது. திட்ட​மிட்டு நடத்தப்​படும் பாலியல் வன்முறையை இன்னும் நுணுக்கமாக நாம் புரிந்து​கொள்ள வேண்டிய அவசியத்தை இது உணர்த்து​கிறது. பெலிகாட் வழக்கு பற்றிய வழக்கறிஞர் எலிசபெத் சேஷாத்​ரியின் ஆய்வு இந்தக் குற்ற​வாளிகள் 27 முதல் 74 வயதுக்கு உட்பட்​ட​வர்கள் என்றும் அவர்களில் தந்தைகள், கணவர்கள், சிறைக் காவலர், தகவல் தொழில்​நுட்பத் துறைப் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர் என்றும் காட்டு​கிறது. பாலின வன்முறைக் குற்றங்கள் சார்ந்து நாம் வைத்திருக்கும் அச்சில் வார்த்த எல்லைக்​கோடுகள் தகர்க்​கப்​படுவதை இது வெளிப்​படுத்து​கிறது.

அடிப்படை மனித மாண்பு:

  • ஆணாதிக்கக் கருத்​தமைவுகளை உடைத்​தெறியக் கல்விதான் ஒரே வலிமை​யுள்ள ஆயுதமாகத் தோன்றுகிறது, குழந்தைப் பருவத்​திலிருந்தே குழந்தை​களுக்குத் தன்னைப் போலப் பிறரையும் கருதும் கரிசனை, மரியாதை, புரிதல் ஆகியவற்றைக் கற்றுத்தர வேண்டும். பரஸ்பர ஒப்புதல், உணர்வுசார் நுண்ணறிவு, பாலினம் சார்ந்த கூருணர்வு பற்றிய அறிவு ஆகியவை பாடத்​திட்​டத்தில் மேலோட்டமாக அல்லாமல் அடிப்​படைக் கூறுகளாக இருக்க வேண்டும்.
  • பெண்களை வழிபாட்டுக்குரியவர்களாக உயர்த்திவைப்பது நோக்கமில்லை. மாறாக, அவர்களது அடிப்படை மனித மாண்புக்கு மதிப்​பளிக்​கப்பட வேண்டும் என்பதே நோக்கம். அவர்கள் வழிபாட்டுக்கு ​உரிய தெய்வங்கள் இல்லை; அதேவேளை, ஆட்டுவிக்​கப்பட வேண்டிய பொருள்​களும் இல்லை. அவர்கள் மரியாதை செலுத்​தப்பட, தன்னுரிமை பெறப்பட, வாய்ப்புகள் தரப்பட வேண்டிய சமமான மனிதர்கள்.
  • சிமோன் தி புவா போன்ற சிந்தனை​யாளர்கள், ‘ஒருவர் பெண்ணாகப் பிறப்​ப​தில்லை; மாறாக ஒரு பெண்ணாக ஆக்கப்​படு​கிறார்’ என்கிறார்கள்; எப்படி சமுதாயக் கட்டமைப்புகள் பாலின அனுபவங்களைத் திட்ட​மிட்டு உருவாக்கு​கின்றன என்பதை வெளிச்​சமிட்டுக் காட்டு​கிறார்கள். உண்மையான விடுதலையைப் பெறுவதற்கு அமைப்பு சார்ந்த அடக்கு​முறையை உடைக்க வேண்டும் என்று பெண்ணியச் சிந்தனை​யாளர்கள் வலியுறுத்து​கிறார்கள்.

புரட்​சிகரமான அணுகுமுறை:

  • நமக்கு முன்னால் இருக்கும் பாதை கூட்டுப் பொறுப்பை எதிர்​பார்க்​கிறது. ஆண்கள் வெறும் பார்வை​யாளர்களாக அல்லாமல், செயல்​படும் துணைவர்களாக இருக்க வேண்டும்; நச்சுத்​தன்மை கொண்ட ஆண்மைக்கு எதிராக அறைகூவல் விடுக்​கப்பட வேண்டும்; வேறுபடுத்திப் பார்க்கும் நடத்தை முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்; அச்சமோ, சமரசமோ இல்லாமல் பெண்கள் நடமாடு​வதற்கான வெளி உருவாக்​கப்பட வேண்டும். உண்மையான பாலினம் சார்ந்த புரிதலுக்கான புரட்​சிகரமான பாதையை இப்போது வளர்ந்து​வரும் நரம்பியல் தருகிறது. ஆணின் அறிதிறன் சட்டகம் மாற முடியாத அளவுக்கு நிலைபெற்ற ஒன்றல்ல.
  • அது நெகிழ்வுத்​தன்மை உடையது என்பதை நரம்பியல் விளக்கு​கிறது. பெண்களின் அனுபவத்தைப் புரிந்து​கொள்ள புரட்​சிகரமான அணுகு​முறையை இது தருகிறது. இலக்கு சார்ந்த தலையீடுகள் மூலமாக ஆணின் மூளையை மாற்றி அமைக்க முடியும் என்று நரம்பு நெகிழ்வுத்​தன்மை சார்ந்த ஆராய்ச்சி காட்டு​கிறது. நரம்பணுக்களை மாற்றியமைப்​ப​தற்கான ஆற்றலை மூளை பெற்றிருக்​கிறது. எனில், ஆணாதிக்கப் பார்வைகள் மட்டுமே மாற்ற முடியாத விதி இல்லை. அவை நெகிழ்​வடையக்​கூடிய அமைப்புகளே, அவற்றை மாற்றிக் கட்டமைக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்