TNPSC Thervupettagam

ஆய்வுக்கல்வி பாதையில் பயணிப்போம்

June 26 , 2021 1132 days 476 0
  • கல்வி என்பது அடிப்படையில் நல்லொழுக்கத்தையும் சிந்திக்கும் திறனையும் மேம்படுத்த வல்லது.
  • அதன் இன்னொரு பலனாக, மக்கள் தங்களது பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்யும் கருவியாகவும் விளங்குகிறது.
  • தரம் மிக்க உயர்ந்த கல்வி என்பது நாட்டின் பெரும் வளர்ச்சிக்கும் மக்களின் உயரிய வாழ்க்கைத் தரத்திற்கும் அடிப்படையாகும்.
  • உயர்கல்வியின் இன்னொரு நோக்கமும் பயனாகவும் விளங்குவது ஆய்வுக்கல்வி ஆகும்.
  • பல்கலைக்கழகங்கள், தனியார்துறை, இந்திய அரசின் ஆய்வு நிறுவனங்கள் என பல்வேறு தளங்களில், அறிவியல், பொறியியல் மட்டுமின்றி, பொருளாதாரம், விவசாயம், மருந்தியல், சரித்திரம், இலக்கியம் என பல துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • ஆராய்ச்சி என்பது கல்வியின் நீட்சியாகவும், வளர்ச்சிக்குத் துணையாகவும் கருதப் படுகிறது.
  • ஆராய்ச்சிக்காக செலவிடப்படும் பொருள், ஈடுபடுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை குறித்த சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.
  • அமெரிக்காவின் மக்கள்தொகையில், லட்சம் நபர்களுக்கு 440 பேர், சீனாவில் லட்சத்துக்கு 130 நபர்கள், இஸ்ரேலில் லட்சத்துக்கு 825 நபர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் லட்சத்திற்கு 27 நபர்கள்.
  • மேலும், ஆண்டொன்றுக்கு அமெரிக்காவில் தனி நபர் ஒருவருக்கு 1,866 டாலர், சீனாவில் 1,368 டாலர், இஸ்ரேல் நாட்டில் 1,810 டாலர் ஆராய்ச்சிக்கென செலவிடப்படுகிறது. இந்தியாவில், தனி நபருக்கு ஆண்டொன்றுக்கு 167 டாலர் செலவிடப்படுகிறது . இத்தரவுகளுடன் இந்நாடுகளின் பொருளாதாரத்தையும் இணைத்துப் பார்ப்போம்.
  • அமெரிக்கா - 23 டிரில்லியன் டாலர்; சீனா 17 டிரில்லியன் டாலர்; ஜப்பான் 6 டிரில்லியன் டாலர்; இந்தியா 3 டிரில்லியன் டாலர்; இஸ்ரேல் 400 பில்லியன் டாலர்.
  • இந்தியாவின் மக்கள்தொகையில் நூற்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ள இஸ்ரேல், பொருளாதாரத்தில் எட்டில் ஒரு பங்கு உள்ளது.
  • மேலும், ஆய்வின் அடிப்படையில், புதிய வடிவமைப்பு, கண்டுபிடிப்பு, தயாரிப்புகள் ஆகியவற்றுக்கு காப்புரிமைப் பட்டயம் (பேட்டன்ட்) பெறுவது என்பது தற்போதைய போட்டி சார்ந்த உலகத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
  • சந்தைப் பொருளாதாரத்தில் , காப்புரிமைப் பட்டயம் என்பது பொருளாதார வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.
  • இவ்விஷயத்திலும், இந்நாடுகள் நம்மை விட பல மடங்கு அதிகமாக உள்ளன. உதாரணமாக, 2018-ஆம் ஆண்டு வரை சீனா 4.5 லட்சம், அமெரிக்கா 3.54 லட்சம், ஜப்பான் 1.8 லட்சம், இந்தியா 25,000 காப்புரிமைப் பட்டயங்களைப் பெற்றுள்ளன.
  • இத்தரவுகளிலிருந்து அறியப்படும் இன்னொரு தகவல், ஆராய்ச்சிக்கான அதிக செலவு செய்யும் நாடுகள் பெரும் வளர்ச்சியை - அதிவேக வளர்ச்சியை அடைகின்றன.
  • இந்தியாவில், ஆய்வுகளுக்கான செலவு அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் பலர், ஆய்வு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதில் இரண்டுவித கருத்துகளுக்கு இடமில்லை.
  • இந்தியாவில், கல்விக்கூடங்களில் இடை நிற்றல் குறைக்கப்பட்ட போதும், உயர்கல்வி - ஆராய்ச்சிக் கல்வி சார்ந்த ஊக்கம் அளிக்கப்பட்ட போதும், ஆராய்ச்சித் துறையில் நுழைவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.
  • நமது நாட்டில், ஏராளமான மக்களை அடிப்படைக் கல்வி என்ற வளையத்துக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருந்தபடியால், ஆய்வு சார்ந்த கல்வி அதற்குரிய இடத்தை தொடக்கத்தில் பெற இயலாது போய்விட்டது. ஆனால், இப்போது கள நிலவரம் பெருமளவு மாறியுள்ளது.

ஒருசேர உயரும்

  • ஆய்வுக்கூடங்களில் கண்டுபிடிப்புகள் மூலம் பெறப்படும் அறிவுசார் சொத்துரிமை, ஆய்வு முடிவுகள் தொழில் கூடங்களில் செயல் வடிவம் தரப்பட்டு, தரம் உயர்த்தப்பட்ட உற்பத்திப் பொருள் அல்லது புது கண்டுபிடிப்புப் பொருளாக மாற்றப்பட்டு சந்தைக்கு வந்து, அது பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.
  • இதற்கு பல்கலைக்கழகங்கள்- ஆய்வுக்கூடங்கள் - தொழிற்கூடங்கள் மற்றும் அரசு இடையேயான நெருக்கமும் ஒருங்கிணைப்பும் அதிகரித்தல் அவசியம்.
  • இவை ஒருபுறமிருக்க, ஆராய்ச்சி - கண்டுபிடிப்பு - பொருளாதார வளர்ச்சி என்றெல்லாம் இணைத்துப் பேசப்பட்டாலும், இந்த சங்கிலியில் உள்ள மிக முக்கியமான வளையம் ஆராய்ச்சியாளர் என்ற தனி மனிதர்தான். தேடலும் - ஆய்வுக் கண்ணோட்டமும் மிக்க தனி மனிதர்கள் தான், ஆராய்ச்சித் துறையின் முதுகெலும்பாக உள்ளனர்.
  • இச்சூழலில், ஆராய்ச்சி, அதன் அவசியம், தனி மனிதனுக்கு அது தரும் பலன்கள் குறித்த சரியான புரிதலும் கண்ணோட்டமும் பொதுவெளியில் நிலவ வேண்டும். ஆராய்ச்சி என்பது சாமானியர்களுக்கு இயலாத ஒன்று என்ற தவறான கருத்தில் இருந்து வெளி வருதல் அவசியம்.
  • மாறாக, அது ஆராய்ச்சியாளருக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, அவரது அடுத்த தலைமுறையினரின் சிறந்த வாழ்விற்கும் பெரும் அடித்தளம் அமைக்க வல்லது என்ற புரிதல் ஏற்பட வேண்டும்.
  • உதாரணமாக, தொடக்கப் பள்ளி முதல் சுமார் 15 ஆண்டுகள் பயின்றால், ஒருவர் இளங்கலை பட்டம் பெறுகிறார். அதற்குப் பின்னர் பணியில் அமர்ந்து பத்து வருடங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊதியமாகப் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
  • இன்னொரு புறம், தொடக்கப் பள்ளியில் தொடங்கிய ஒருவர், சுமார் 20 ஆண்டுகளில், ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுகிறார்; பணிக்கு செல்கிறார்.
  • அப்போதிலிருந்து, ஐந்து ஆண்டுகளில் அவர், இளங்கலை பயின்ற ஒருவர் பத்து ஆண்டுகளில் அடைந்த பதவி - பெற்ற சம்பளம் ஆகியவற்றினை விட, உயர்ந்த பதவி, கணிசமாக அதிக சம்பளம் மற்றும் உயரிய சமூக அந்தஸ்து ஆகியவற்றினை பெறுகிறார். இந்தப் புரிதல் மாணவர் - பெற்றோருக்கு இருப்பது அவசியம்.
  • குறுகிய காலப் பலன்களைக் கருத்தில் கொள்ளாமல், தொலைநோக்குப் பார்வையுடன் மாணவர்கள் ஆராய்ச்சிக் கல்வி நோக்கி பெருமளவில் பயணிக்க வேண்டும்.
  • அப்போதுதான், நாட்டின் வளர்ச்சியும் தனி மனிதனின் வளர்ச்சியும் ஒருசேர உயரும்.

நன்றி: தினமணி  (26 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்