TNPSC Thervupettagam

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணிப்பு பற்றிய தலையங்கம்

February 23 , 2022 894 days 425 0
  • இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சென்டர் ஃபார் மானிடரிங் இண்டியன் எகானமி) என்கிற ஆய்வு நிறுவன கணிப்பின்படி, கடந்த டிசம்பர் மாதம் 7.9%-ஆக இருந்த வேலையின்மை விகிதம், ஜனவரி மாதத்தில் 8%-ஆக அதிகரித்திருக்கிறது.
  • நவம்பர் மாதம் 8.2%-ஆக இருந்த நகர்ப்புற வேலையின்மை, டிசம்பரில் 9.3%-ஆகவும், கிராமப்புற வேலையின்மை 6.4%-ஆக இருந்தது 7.3%-ஆகவும் அதிகரித்திருக்கிறது.
  • மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2020-இல் வேலைவாய்ப்பின்மையால் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3,548 என்று அரசு தெரிவித்திருக்கிறது. 2018-இல் 2,741 இளைஞர்களும், 2019-இல் 2,851 இளைஞர்களும் வேலைவாய்ப்பின்மையால் தற்கொலை செய்து கொண்டனர் என்கிற புள்ளிவிவரமும் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, மிக அதிகமான வேலை வாய்ப்பின்மைத் தற்கொலைகள் கர்நாடகம் (720), மகாராஷ்டிரம் (625), தமிழ்நாடு (336) ஆகிய மூன்று மாநிலங்களில்தான் காணப்படுகின்றன.
  • மத்திய - மாநில அரசுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, போதுமான முனைப்பு காட்டுவதில்லை. அறிக்கைகள் வெளிவருகின்றனவே தவிர, புதிய வேலைவாய்ப்புகள் உருவானதாகத் தெரியவில்லை.
  • இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வின்படி, 2021 டிசம்பரில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 5.3 கோடி. மேலும் 1.7 கோடி பேர் வேலைக்குச் செல்லத் தயாராக இருக்கிறார்கள்.
  • உலக வங்கியின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில், வேலை செய்ய உகந்த வயதினரில் 43% பேர் மட்டுமே அதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.
  • இதுவே பாகிஸ்தானில் 48%, வங்க தேசத்தில் 58%. வேலை செய்யும் வயதிலான மக்கள்தொகையினர் 2021-31-இல் ஆண்டொன்றுக்கு 97 லட்சம் என்கிற அளவிலும், 2031-41-இல் 42 லட்சம் என்கிற அளவிலும் மேலும் அதிகரிப்பார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வேலைவாய்ப்பில்லா வளர்ச்சி!

  • இந்தியா மிகப் பெரிய வேலைவாய்ப்பு பிரச்னையை எதிர்கொள்கிறது. இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்த 60% மாணவர்களுக்குத்தான் உடனடியாக வேலை கிடைக்கிறது.
  • 2000 முதல் 2008 வரை தொடங்கப்பட்ட பொறியியல், நிர்வாக மேலாண்மை கல்லூரிகள் பரவலாக மூடப்படுகின்றன.
  • வேலைவாய்ப்புகள் இல்லை என்பது மட்டுமல்ல, கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதும் மிகப் பெரிய பிரச்னை.
  • சமீபத்தில் உத்தர பிரதேசத்திலும், பிகாரிலும் ரயில்வே வேலைக்கான தேர்வுக்கு வந்த இளைஞர்கள் நடத்திய வன்முறைப் போராட்டம் அதன் வெளிப்பாடே.
  • 2018-19-இல் 2,83,747 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே வெளியிட்டது. அதற்கு நான்கு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. 1.32 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
  • தொழில்நுட்பம் சாராத சாதாரண 35,000 வேலைகளுக்கான பணியிடங்களுக்கு 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர்.
  • இரண்டு ஆண்டுக்கு முன்பு அதற்கான தேர்வு நடத்தப்பட்டு கடந்த டிசம்பர் - ஜனவரி மாதங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
  • அந்த முடிவுகள் முதல் சுற்று தேர்வுக்கானவை என்றும், விரைவிலேயே அடுத்தச் சுற்று தேர்வு நடைபெறும் என்றும் ரயில்வே அறிவித்ததுதான் வன்முறைப் போராட்டம் வெடிக்கக் காரணமானது.
  • விண்ணப்பித்தவர்களில் பலரும், குறைந்த ஊதியமுள்ள கடைநிலை ஊழியர் பணிக்காக விண்ணப்பித்திருப்பவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வருபவர்கள்.
  • விண்ணப்பத்துக்கு ரூ.500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்து பல்லாயிரம் கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது ரயில்வே நிர்வாகம்.
  • இதன் பின்னணியில் பல கேள்விகளுக்கு விடை அளிக்க இந்திய ரயில்வேத் துறை கடமைப் பட்டிருக்கிறது.
  • பணியிடங்களை நிரப்புவதற்கு மூன்று ஆண்டு இடைவெளி தேவைதானா? சாதாரண அடிமட்டப் பணிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் எதற்கு? ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் பணியிடங்களை நிரப்பாமல் மொத்தமாக தேர்வுகள் நடத்தி நிரப்புவது ஏன்? இதுபோன்ற பல கேள்விகளை எழுப்புகிறது அந்த வன்முறை நிகழ்வு.
  • காவல்துறையில் காவலர் பணியிடங்களுக்கும், ஏனைய அரசுத்துறைகளில் கடைநிலை ஊழியர் பணியிடங்களுக்கும் ஆயிரக்கணக்கான பொறியியல், நிர்வாகவியல், முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிப்பது, பரவலாக இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காணப் படுகிறது.
  • அரசுத்துறை தவிர்த்த தனியார் துறை வேலைவாய்ப்பு என்பதும்கூட, கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு குறைந்துவிட்டது.
  • "கிக்' எனப்படும் ஓலா, உபேர் ஓட்டுநர்கள், ஸ்விக்கி, ஜொமேட்டோ உணவு விநியோக ஊழியர்கள் போன்றோர் "கிக்' தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
  • அதாவது தின ஊதியமோ, வார ஊதியமோ, மாத ஊதியமோ இல்லாமல் ஒவ்வொரு பணிக்கும் ஊதியம் பெறுபவர்கள் இவர்கள்.
  • இதற்கான வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதால் வேலையின்மை அகன்றுவிட்டதாகக் கருத முடியாது.
  • பொருளாதார வளர்ச்சி என்பது இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக இல்லாமல் போனால், வளர்ச்சி என்பது கானல் நீராகத் தான் இருக்குமே தவிர, நிஜமான வளர்ச்சியாக இருக்காது.
  • இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் வேலைவாய்ப்பின்மை என்பதை உணர்ந்து மத்திய - மாநில ஆட்சியாளர்கள் செயல்படாமல் போனால், விளைவு விபரீதமாக இருக்கும்.

நன்றி: தினமணி (23 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்