TNPSC Thervupettagam

இந்திய வரலாற்றில் தென்னிந்தியாவுக்கு இடமில்லையா?

July 14 , 2021 1114 days 511 0
  • நாடெங்கிலும் பல்கலை, கல்லூரிகளில் ஒரே சீரான பாடத்திட்டங்களை அமல்படுத்தும் விதமாகப் பல்கலைக்கழக மானியக் குழு, புதிய பாடத்திட்டங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
  • இதற்காக அமைக்கப்பட்ட குழுக்களில் அங்கம் வகித்த வல்லுநர்கள் பற்றி, ஏற்கெனவே பல்வேறு விமரிசனங்கள் எழுந்துள்ள நிலையில், அதனுள் செல்லாது எனது துறையாகிய வரலாறு பற்றி மட்டுமே நான் இங்கு விவாதிக்க விரும்புகிறேன்.
  • பொதுவாக, பாடத்திட்டத் திருத்தக் குழு தனது பணியின் தொடக்கத்தில் பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டத்தைப் பரிசீலித்து, அதன் குறைபாடுகளைக் கவனத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டத்தைப் பரிந்துரைக்கும்.
  • ஆனால், மாற்றுப் பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ள பல்கலைக்கழக மானியக் குழு, அத்தகைய முயற்சியை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
  • கடந்த 50 ஆண்டுகளில் வரலாற்றியல் மாபெரும் வளர்ச்சியை, மாற்றத்தைக் கண்டுள்ளது.
  • மாறியுள்ள அணுகுமுறைகளையும், புதிய ஆய்வு உத்திகளையும் கையாண்டதால், வெளிவந்த ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய பாடத்திட்டங்கள், பல மத்திய பல்கலைக் கழகங்களிலும் தென்னிந்தியாவில் சில மாநிலங்களின் பல்கலைக் கழகங்களிலும் நடைமுறையில் உள்ளன.
  • கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் பட்ட வகுப்புப் பாடங்களைக் காலத்துக்கேற்றாற்போலச் செறிவூட்டி, மாற்றிட 1990-களிலிருந்தே தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.
  • கேரளத்தில் வரலாற்றறிஞர் ராஜன் குருக்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரை முழுமையாக அமல்படுத்தப்பட்டது.
  • ராஜன் குருக்கள் கல்விக் குழு, வரலாற்று ஆய்வுக்கும் பாடத்திட்டத்துக்கும் அப்போது நிலவிய பரந்த இடைவெளியை இவ்வாறாகச் சுட்டிக்காட்டியது: “இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் வின்சென்ட் ஸ்மித்தின் வரலாற்று ஆய்வு முடிவுகள் அடுத்த பத்தாண்டிலும் (1920-களில்), ஆர்.சி.மஜூம்தார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி 1930-களில் எழுதிய வரலாற்று நூல்கள் 1940-களிலும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன. அப்படிப் பார்க்கும்போது, 1980-களில் வெளியான புதிய வரலாற்று ஆய்வு முடிவுகளை 1990-களில் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், நாம் அரை நூற்றாண்டு பின் தங்கியிருக்கிறோம்.''
  • ராஜன் குருக்கள் குழு சுட்டிக்காட்டிய குறை, தமிழ்நாட்டில் அதற்கு முன்பே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (AUT) முன்முயற்சியின் விளைவாக, பாரதியார் பல்கலைக்கழகத்திலும் (1990-91), மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர் வே.வசந்தி தேவி முயற்சியால் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் (1993-94) அமல்படுத்தப்பட்ட புதிய வரலாற்றுப் பாடத்திட்டத்தின் கீழ் நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது.
  • இவ்விரு பல்கலைக்கழகங்களிலும் அன்றைய வரலாற்றுப் பாட திட்டக்குழுவில் இருந்த நான், டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தைப் பின்பற்றியதற்கான காரணத்தை நினைவுகூர விரும்புகிறேன்.
  • டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டம் அலகுவாரியாக, உட்தொகுதிவாரியாகத் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. ஒரு நாட்டின் வரலாற்றைப் பயில காலத்தின் எல்லையை 1945/1950-லிருந்து 1991 வரை விஸ்தரித்திருந்தது.
  • இதற்குள் 1992-93 ஆண்டிலிருந்து பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தால் அன்றைய துணைவேந்தர் பேராசிரியர் ஞானம் அறிமுகப்படுத்திய மாணவர் விருப்பத் தேர்வு அடிப்படையில், கல்வி (Choice-based Credit System) என்ற முறையானது கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
  • அம்முறை தன்னாட்சிக் கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில், வே.வசந்தி தேவி அம்முறையை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 1997-98-லிருந்து அமல்படுத்தினார்.
  • 2009-10- லிருந்து தமிழ்நாட்டில் அன்றைய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்துதலின் பேரில் அனைத்துக் கல்லூரிகளிலும் இம்முறை செயல்படுத்தப்பட்டு, இன்றும் நடைமுறையில் இருந்துவருகிறது.
  • பல்கலைக்கழக மானியக் குழு இத்திட்டத்தை 2015-லிருந்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் கட்டாயமாக அமல்படுத்தியபோதுதான், வடஇந்தியக் கல்வி நிறுவனங்களில் இம்முறை அமலுக்கு வந்தது.
  • தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் வல்லுநர் குழு தயாரித்திருக்கும் புதிய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் பாரதம் பற்றிய கருத்து (The Idea of Bharath) ஒரு அலகில் அடக்குவதற்குப் பதிலாக ஒரு பிரதானப் பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
  • வரலாற்றுப் பின்னணியில் புரிந்துகொண்டு படிக்க வேண்டிய பல கருத்துகளையும் கோட்பாடுகளையும் பாரதம் பாடத்தில் அந்தக் குழு இணைத்துள்ளது.
  • புராணக் கதைகளை வரலாறாக முன்வைப்பது அன்றைய ஏற்றத்தாழ்வுடனான சமூகக் கட்டுமானத்தை நியாயப்படுத்தும் முயற்சியோ என சந்தேகப்பட வைக்கிறது.
  • 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடைபெற்ற சமூக நீதிப் போராட்டங்கள் இந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெறாதது இச்சந்தேகத்தை அதிகரிக்கிறது. இந்திய வரலாற்றில் சமூக-பொருளாதாரக் காரணிகளின் தாக்கங்களை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு உகந்ததாக இந்திய வரலாற்று பாடத்திட்டம் வகுக்கப்படவில்லை.
  • துரதிர்ஷ்டவசமாக, பிரபல வரலாற்று அறிஞர்கள்கூடத் தென்னிந்திய வரலாற்றுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை.
  • இந்திய வரலாறு வடஇந்திய வரலாறாகவே தொடர்கிறது. 1857-ல் நடைபெற்ற பெரும் கிளர்ச்சியை முதல் சுதந்திரப் போராக அறிவித்து, நூற்றாண்டு விழா எடுத்துக் கொண்டாடியபோது (1957), அரசு சார்பாக வெளியிடப்பட்ட நூலில் (எஸ்.என்.சென்: 1857) வேலூர் புரட்சி (1806) பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
  • அன்றைய சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் சஞ்சீவி 1956-ல் ‘வேலூர் புரட்சி’ என்ற நூலைத் தமிழில் வெளியிட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
  • 1806-ல் வேலூர் கோட்டையில் தொடங்கி பெங்களூரு, ஹைதராபாத் போன்ற தென்னிந்தியாவின் பல ஆங்கிலேய ராணுவத் தலங்களுக்கும் பரவி, கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்துக்குப் பெரும் நெருக்கடியைத் தந்த வேலூர் புரட்சி பற்றி, வடஇந்தியாவில் பயிலும் மாணவர்களுக்கு இன்று வரை தெரியாது.
  • பல்கலைக்கழக மானியக் குழு தற்போது தயாரித்துள்ள புதிய பாடத்திட்டத்தில் வட்டார, உள்ளூர் வரலாறு படிப்பதற்கான வாய்ப்பை வழங்காததால், தமிழ்நாட்டில் நடைபெற்ற அந்நியர் எதிர்ப்புப் போராட்டங்களாகக் கருதப்படும் பாளையக்காரர் எழுச்சிகள் (1758-1801), வேலூர் புரட்சி (1806) போன்றவை விடுபட்டிருக்கின்றன.
  • வரலாற்றுப் பாடத்திட்டக் குழுவில் தமிழ்நாட்டுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்பது ‘காஞ்சி சோழர்கள்’ எனக் குறிப்பிடப்பட்டதிலிருந்து தெரிகிறது.
  • மேற்கூறியதுபோல் ஒவ்வொரு மாநிலமும் அதனதன் கண்ணோட்டத்தில் குறைபாடு களைச் சுட்டிக்காட்ட முடியும். மேலிருந்து திணிக்கும் எத்தகைய திட்டமும் எப்போதும் வெற்றி பெற்றதில்லை.
  • மாநிலப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும், பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் பேராசிரியர்களிடம் தேவையான தகுதி, திறமை, அனுபவம் உள்ளதால் கல்லூரி-பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பை நடைமுறையில் உள்ளதுபோல் அந்தந்தப் பல்கலைக்கழகத்திடமே விட்டுவிடுவது நல்லது.

நன்றி: இந்து தமிழ் திசை (14 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்