TNPSC Thervupettagam

இலட்சுமணன் இளையபெருமாள்

June 12 , 2023 391 days 910 0

(For the English version of this Article Please click Here)

  • இலட்சுமணன் இளையபெருமாள் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் மற்றும் அகில இந்தியத் தீண்டாமை ஒழிப்புக் குழுவின் முதல் தலைவர் ஆவார்.
  • இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் (1979-1980), இருபது வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் ஆவார்.
  • இவர் இந்திய மனித உரிமைக் கட்சியினை ஆரம்பித்து மக்களுக்காகப் போராடியவர் ஆவார்.
  • இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவிலில் பிறந்தார்.  
  • இவர் 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 தேதியன்று பிறந்தார்.  

பள்ளிப்பருவம்

  • இவர் பள்ளிகளில் பறையர்களுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக தனி பானையும் இருப்பதைப் பார்த்திருக்கிறார்.
  • எவருக்கும் தெரியாமல், பறையர்களின் பானை என்று எழுதப்பட்டிருக்கும் பானையை தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார்.
  • ஒரு நாள் உடைக்கும் போது பள்ளி முதல்வரிடம் பிடிபட்ட போதும், தன்னுடைய செய்கையின் நியாயத்தினை அவர் முன் வைத்தார்.
  • இதனால் அன்று முதல் மாணாக்கர்களுக்கு இருந்து வந்த இரட்டைக்குவளை முறை நீக்கப் பட்டது.

பறையர்களைக் காப்பதற்கான முதல் போராட்டம்

  • இளையபெருமாள் 1945 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்துப் பணியாற்றினார்.
  • 1946 ஆம் ஆண்டில் காட்டுமன்னார் கோவிலுக்குத் திரும்பும் போது ஒரு போராட்டத்தினை மேற் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.
  • உடல் நிலை சரியில்லாததால், வேலைக்கு இரு நாள் செல்லாத பறையர் ஒருவர், பண்ணையார் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
  • காயமுற்றவரை இளையபெருமாள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும், அங்கு குற்றப் பத்திரிக்கையினைப் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.
  • இதனால் பட்டியலின மக்களை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் இளைய பெருமாள்.
  • துன்புறுத்திய அந்தப் பண்ணையாரிடமிருந்து நூறு ரூபாய் அபராதம் பெற்று தரும் வரை இளையபெருமாள் ஓயவில்லை.
  • நிலமற்றக் கூலி வேலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்த்தும்,  சூத்திர சாதியினர் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிகளைப் பறையடித்து அறிவிப்பதற்காக மட்டுமே பறையர்கள் ஈடுபடுத்தப் படுவதை எதிர்த்தும் அவர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்.
  • அவர் சூத்திர சாதி மக்களால் போலிக் குற்றம் சாட்டப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைக்கப் பட்டார்.
  • இந்திய நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு இவருடையச் சமூகச் சேவைக்காக தங்கப் பதக்கம் இவருக்குக் கொடுக்கப் பட்டது.

குடும்ப வாழ்க்கை

  • இவர் தையல்முத்து என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
  • இவரின் மகன்கள் வெற்றி வீரமணி, ஜோதி மணி மற்றும் நந்தகுமார் ஆகியோர் ஆவார்.
  • இவரது மனைவி தையல்முத்து உடல் நலக் குறைவால் காலமாகி ஐந்தாவது மாதத்தில் அய்யா இளையபெருமாள் காலமானார்.
  • பல் மருத்துவரான இவரது மகன் நந்தகுமார் சிறுநீரகக் கோளாறால் உயிரிழந்தார்.
  • நந்தகுமார் சில காலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்துப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

  • இளையபெருமாள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக 1952 ஆம் ஆண்டு  முதல் 1967 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை பதவி வகித்தார்.
  • இவர் 1962 ஆம் ஆண்டு  முதல் 1967 ஆம் ஆண்டு வரை அப்போது பிரதமராக இருந்த நேருவின் அரசில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் குழுவினை உருவாக்கி அதன் முதல் தலைவராக பணியாற்றினார்.
  • தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்ட போது, இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரிவின் தமிழகத் தலைவராக 1979 ஆம் ஆண்டில்  பதவியேற்று அதில் பணியாற்றினார்.
  • 1980 ஆம் ஆண்டு நடைபெற்றப் பொதுத்தேர்தலில் இந்திராகாந்தி திமுகவுடன் கூட்டணி அமைத்தார்.
  • 1980 ஆம் ஆண்டில்  சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இவர்  பணியாற்றினார்.
  • கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்த இளையபெருமாள் 1989 ஆம் ஆண்டில் இந்திய மனித உரிமைக் கட்சியை தொடங்கி அதனை நடத்தி வந்தார்.
  • 2003 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி முன்னிலையில் மீண்டும் இணைந்தார்.

இளையபெருமாள் குழு அறிக்கை

  • இந்தியாவில் 1955 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1976 ஆம் ஆண்டில் பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது.
  • இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் குழுவின் முதல் தலைவர் இளைய பெருமாள் தலைமையில் ஒரு குழுவினை நாடாளுமன்றம் அமைத்தது.
  • பி.கே.கைக்வாட், சி.தாஸ், ஆர்.அச்சுதன், பி.எல்.மஜும்தார், நரேன் டின் மற்றும் வி.வி.வேஜ் ஆகிய ஆறு பேர் கொண்ட குழுவிற்கு இளையபெருமாள் தலைமை தாங்கினார்.
  • அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.எம்.சித்தய்யாவும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.
  • இக்குழு தீண்டாமை (குற்றங்கள்) சட்டம், 195 என்றச் சட்டத்தினைச் செயல்படுத்துதல் மற்றும் பொது வழிபாட்டுத் தலங்களில் தலித்துகள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் குறித்த தீண்டாமையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி ஆய்வு செய்தது.
  • இந்தக் குழுவிற்குப் பட்டியலிடப்பட்ட சாதி மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, தற்போதுள்ள நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்தல், இதுவரை அவர்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் அதற்கு ஏற்ற மாற்று/பரிகார நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது போன்ற பணிகள் வழங்கப்பட்டன.
  • இந்தக் குழுவின் முதல் கூட்டம் 1965 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி அன்று நடைபெற்றது.
  • சுதந்திர இந்தியாவில் இம்மாதிரியிலான முதல் குழு இதுவேயாகும்.
  • அதன் பதவிக்காலம் ஆறு மாதங்கள் மட்டுமே என்றாலும், இக்குழு ஆய்வு நடத்துவதற்காக பல்வேறு இந்திய மாநிலங்களுக்குப் பரவலாகச் சென்றது.
  • இக்குழு 1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது.
  • 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அப்போதைய மத்தியச் சட்டம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பி கோவிந்த மேனனிடம் இக்குழு இறுதி அறிக்கையினைச் சமர்ப்பித்தது.
  • இந்த அறிக்கை தீண்டாமை, கல்வி, பொருளாதார மேம்பாடு, பொதுச் சேவைகள் என ஐந்து பகுதிகளைக் கொண்டிருந்தது.
  • பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையர் அலுவலகத்தின் தற்போதைய அமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசியத்தை இது குறிப்பிட்டுள்ளது.
  • “காந்தி பிறந்த ஊரில், பிரதமர் இந்திராகாந்தி தொகுதியில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது” என்று 1969 ஆம் ஆண்டு இளையபெருமாள் குழு அறிக்கை சுட்டிக் காட்டியது.
  • ஆனால் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவைகள் அவருடைய காலத்திலேயே புறக்கணிக்கப் பட்டது பட்டியலினத் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
  • அவர் சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவின் மறைவிற்குப் பிறகு நந்தனார் கல்வி அறக்கட்டளையின் தலைவராகப் பணியாற்றினார்.

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம்

  • இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989 ஆம் ஆண்டில்  பட்டியல் இன மக்களைக் காப்பதற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
  • அந்தச் சட்டம் மிகவும் தாமதமாக கடந்த 1995 ஆம் ஆண்டில்  தான் நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டது.
  • தற்போது நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இளையபெருமாள் அவர்களின் பரிந்துரையின் பேரில் கொண்டு வரப் பட்டது.
  • இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய தற்போது உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்து கோவில்களில் பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்தல்

  • 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்தது.
  • அந்தத் திருத்தம் கோயில்களில் உள்ள பரம்பரை அர்ச்சகர் முறையை ரத்து செய்தது.
  • இத்திருத்தங்களை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, இளையபெருமாள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சமூகச் சீர்திருத்தங்களை அரசு செய்தது என்று மாநில அரசு அப்போது நீதிமன்றத்தில் தெரிவித்தது.
  • 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி  அன்று தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரி மற்றும் நீதிபதிகள் ஏ.என்.குரோவர், ஏ.என்.ரே, டி.ஜி.பாலேகர் மற்றும் எம்.எச்.பேக் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சேஷம்மாள் எதிர் தமிழ்நாடு அரசு என்ற வழக்கில் இத்திருத்தங்களை உறுதி செய்தது.
  • இவர் தந்தை பெரியார், காமராசர், பி. கக்கன், மு. கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர், போன்றவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர் ஆவார்.
  • தோழர் ஜீவாவை தனது முன்மாதியாக கொண்டு வாழ்ந்து வந்தவர் இளையபெருமாள்.
  • சூத்திரர்களால் புறக்கணிக்கப்பட்ட பட்டியல் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார் என்கிற காரணத்தாலே தென்னாட்டு அம்பேத்கர் என இவர் அன்புடன் அழைக்கப் படுகிறார்.
  • 1998 ஆம் ஆண்டில் தி.மு.க. அரசு இளையபெருமாளுக்கு அவரின் சமூக உழைப்பைக் கவுரவிக்க அம்பேத்கர் விருது கொடுத்தது.
  • 1998 ஆம் ஆண்டில் திமுக அரசால் ஏற்படுத்தப் பட்ட அண்ணல் அம்பேத்கர் விருதினைப் பெற்ற முதல் நபர் இவரே ஆவார்.
  • இவர் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 தேதியன்று இறந்தார்.
  • சமீபத்தில் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் அவர்கள் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., இளையபெருமாள் நினைவாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

 

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்