உடல் என்கிற நிலையாமை
- கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சாம்பன். இவன் சிறந்த உடல் நலமும் அழகும் அமையப் பெற்றவன். துரியோதனனுடைய மகளாகிய இலக்கணையை இவன் மணம் புரிந்திருந்தான். ஒருநாள் மாலையில் சாம்பன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நண்பர்கள் இவனுக்குக் கர்ப்பவதி வேடம் புனைந்தனர். அங்கு விஷ்வாமித்திரர், கன்வர், நாரதர் ஆகிய மூன்று முனிவர்களும் தவம் செய்துகொண்டிருந்தனர். அவர்களிடம் சாம்பனைக் கொண்டுசென்று நிறுத்தினர். ‘இந்தப் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறக்குமா? பெண்குழந்தை பிறக்குமா?’ என்று நண்பர்கள் கேட்டனர். உண்மையை உணர்ந்த முனிவர்கள், ‘உங்கள் குலத்தை அழிப்பதற்கு ஓர் இரும்பு உலக்கை பிறக்கும்’ என்று கூறினர். அவ்வாறே சாம்பனுக்கு இரும்பு உலக்கை பிறந்தது. சாபத்தின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட யாதவர்கள், அந்த உலக்கையைத் தூள் தூளாக்கிக் கடலில் கரைத்தனர். ஆனாலும் அதிலிருந்து தோன்றிய கோரைப் புற்கள் அவர்கள் குல அழிவுக்குக் காரணமானது. இதுதான் வியாச பாரதத்தின் மௌசல பருவம் கூறும் சாம்பனின் கதை.
- சாம்பனின் பிற்பகுதிக் கதையை வடமொழிப் புராணங்கள் வேறுமாதிரியாகச் சொல்லியுள்ளன. அதிவீரராம பாண்டியர் வடமொழி நூலான சங்கரசங்கிதையைத் தழுவி, ‘காசி காண்டம்’ என்றொரு நூல் எழுதியுள்ளார். எழுத்தாளர் இமையம் ‘சாம்பன் கதை’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையின்மீது நடத்தப்படும் இடையீடுகள்தாம் இமையத்தின் புனைவுகள். எளிய மக்களின் மொழியையே தன் புனைவு மொழியாகவும் கொண்டிருக்கிறார். தற்போது தொன்மம் சார்ந்த கூறுகளையும் தம் புனைவுகளில் பயன்படுத்தி, மறுவாசிப்புச் செய்துவருகிறார். இதனை இமையத்தின் அடுத்தகட்ட நகர்வாகவும் கருதலாம். சாம்பன், யாதவர் குலத்தை அழிக்கப் பிறந்தவன் என்ற அடையாளத்தை இவரது சிறுகதை உடைக்கிறது; அவனது வரலாற்றை விரிக்கிறது.
- சாம்பனின் வரலாற்றைக்கொண்டு இமையம் தன் அரசியல் பார்வையையும் இக்கதையில் ஆங்காங்கே ஊடாட விட்டிருக்கிறார். சாம்பன் தன் சாபத்தின் காரணமாகத் துவாரகையை விட்டுப் பிரிகிறான். அவன் மனைவி இலக்கணையும் உடன்வர விரும்புகிறாள். சாம்பன் அவளுக்கு அறிவுரை கூறுகிறான். “நீயும் நானும் கணவன் மனைவி என்றாலும் இருவரும் ஒன்றல்ல. சந்தர்ப்பத்தால் இணைந்திருக்கிறோம். எனக்கான சாபம் உன்னைச் சேராது. இரண்டு உடல்கள்; இரண்டு உயிர்கள்; இரண்டு மனங்கள்; இரண்டு உலகங்கள். கணவன் மனைவி என்ற பந்தத்தால் மட்டுமே நாம் இணைந்திருக்கிறோம்” என்கிறான். இந்த இடம் சிறுகதையில் அழகாகத் தொழிற்பட்டுள்ளது. ராமாயணப் பிரதிமீது நிகழ்த்தப்பட்ட இடையீடாகவும் இதனைக் கருதலாம்.
- காந்தாரியின் சாபம், கிருஷ்ணன் மூலமாகச் சாம்பனை அரண்மனையை விட்டு வெளியேற்றுகிறது. அங்கே தசரதன் கைகேயிக்குக் கொடுத்த வரம் ராமனைக் காட்டுக்கு அனுப்புகிறது. தண்டனை ராமனுக்கானது. ஆனால், சீதையும் ராமனுடன் காட்டுக்குச் சென்று பெருந்துன்பத்தை அனுபவிக்கிறாள். ராமன் எவ்வளவோ மறுத்தும், ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ என்று உடன் செல்கிறாள். இந்த இடத்தில் ராமனைவிட சாம்பன் தெளிவாக முடிவெடுத்திருப்பதாகப் பிரதி கூறுகிறது. இந்த ஒப்பீடு என்பது வாசிப்பில் அடைவதுதான்.
- சாம்பன் அழகன். பெண்களை எளிதில் வசீகரிக்கக் கூடியவன். இதுதான் அவனுக்குள் ஆணவத்தை உருவாக்குவதாக நாரதர் கருதுகிறார். அதனைச் சாம்பனுக்கு உணர்த்தவே அப்படியொரு சாபத்தை அளிக்கிறார். இந்தப் பார்வையில் பிரதியை வாசிக்கும்போது, ‘யாக்கை நிலையாமை’ என்ற தத்துவத்தைச் சாம்பன் வரலாற்றின் மூலம் இமையம் நிறுவ முயன்றிருக்கிறார் என்றும் கருதலாம். சாம்பன், விஷ்வகர்ம இனத்தவர்களைக் கொண்டு சூரியனுக்கு மூன்று கோயில்களைக் கட்டுகிறான். அவன் பெயரால் ‘சம்பா பூர்’ என்ற நகரமே உருவாகிறது. மகர் இனத்தவர்களைக்கொண்டு தம்மைப்போன்ற குஷ்ட நோயால் பாதித்தவர்களைக் குணப்படுத்துகிறான். யாக்கை, செல்வம், காமம் எல்லாவற்றையும் கடந்த சாம்பனை நாரதர் இறுதியில் ஆசீர்வதிக்கிறார். சாபம் தீர்ந்ததாகக் கூறி, துவாரகைக்குப் புறப்படச் சொல்கிறார். “நான் இப்போது விரும்பும் வாழ்க்கை துவாரகையில் இல்லை. இந்த மித்திரவனத்தில்தான் இருக்கிறது. மலையளவுக்குக் குவியல் குவியலாக ஒன்பது வகை ரத்தினங்களைக் கொட்டிக் கொடுத்தாலும் போக மாட்டேன்” என்கிறான் சாம்பன். ஆண் பெண் என்பது சதைப் பிண்டம்; மாமிசம் என்பதை அறிந்துகொண்டேன் என்ற இடத்திற்குச் சாம்பன் நகர்ந்து விடுகிறான். இந்தப் பகுதியில் பிரதிக்குக் கொஞ்சம் நீதி இலக்கியத்தின் சாயை வந்துவிடுகிறது. பிரதியில் இதுவொரு பகுதி; அவ்வளவுதான்.
- சாம்பனின் வழியாக இந்த உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார் இமையம். மகாபாரதக் கதையில் சாம்பனுக்குப் பெரிய இடமில்லை. ஆனால், சாம்பன் குறித்து எழுதப்பட்ட வடமொழிப் புராணங்களில் அவனது இடம் முக்கியமானதாக இருந்திருக்கிறது. சாபத்தை வரமாக மாற்றும் விந்தையைச் சாம்பன் நிகழ்த்துகிறான். பிரிக்கப்படாத பாரத தேசத்தில் சூரியனுக்கு மூன்று கோயில்களைக் கட்டியிருக்கிறான் சாம்பன் என்று சொல்லப்படுகிறது. குலோத்துங்கச்சோழனின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுத் தகவல் கூறும் தஞ்சைக்கு அருகில் உள்ள ஒரு கோயிலும் இவ்வாறு கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இக்கதையின்மொழி இதுவரை இமையத்தின் புனைவுகளில் காணவியலாதது. பொருண்மை சார்ந்து மொழியிலும் வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார் இமையம்.
- இக்கதை விவாதிக்கும் தளங்கள் அதிகம். மனிதன் தன்னிலிருந்தே தன்னை முதலில் விடுவித்துக்கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் இந்த உலகத்தையும் சக உயிர்களையும் நேசிக்க முடியும் என்ற இடத்தையும் இக்கதை அடைகிறது. இமையம் இக்கதைக்கு முன்புவரை இப்படி எழுதியதில்லை என்றே கருதுகிறேன். ‘சாம்பன் கதை’யில் தத்துவத்தையும் புராணத்தையும் மோதவிட்டிருக்கிறார். அதனால் வாசிப்பவர்களுக்குப் பல்வேறு திறப்புகளை உருவாக்குகிறது. சூரியனுக்கே கோயில் கட்டிய சாம்பனின்மீது புதிய வெளிச்சம் விழுந்திருக்கிறது. அதற்குத் துணை நின்றிருக்கிறார் இமையம்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 03 – 2025)