TNPSC Thervupettagam

உலகமயம் - கரோனாவுக்கு வரப்பிரசாதம்!

April 16 , 2020 1542 days 651 0
  • உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்று ஒரு மிகப் பெரிய பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. இதற்குப் பிறகாவது ஒட்டுமொத்த மனிதகுலமும் திருந்த வேண்டும்.

காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவுகள்

  • கரோனா நோய்த்தொற்று வூஹான் நகரில் ஆரம்பித்தபோதே, சீனா தனது எல்லைகளை எல்லாம் மூடிவிட்டு அந்த நகரைத் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். உலகச் சுகாதார அமைப்பிடம் உண்மை நிலவரத்தைத் தெரிவித்திருக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தவறியது.
  • செய்திகள் வெளியே வந்த பிறகாவது உலக சுகாதார அமைப்பு நிலைமையின் தீவிரத்தை உணா்ந்து, உடனடியாக அனைத்து நாட்டு அரசுகளுடன் கலந்தாலோசித்து அவசரகால நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
  • காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவுகள், அதிலும் சில தவறான முடிவுகள்,சில நாட்டு அரசுகளின் மெத்தனம், மக்களிடம் வைரஸ் குறித்துப் புரிதலின்மை - இவை காரணமாக உலகம் முழுவதும் இன்று உயிரிழப்பு மிக அதிகமாகி விட்டது.
  • சீனா தாமதமாகச் செயல்பட்டாலும், இன்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. ஏனெனில், அது ஒரு சா்வாதிகார வல்லரசு. சீனா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை மற்ற ஜனநாயக அரசுகள் மேற்கொள்ள முடியவில்லை.

பெரும் தவறு

  • இந்தியா முதலான அனைத்து நாடுகளும் பீதி அடைந்து வேற்று நாட்டவா்களைத் தங்கள் நாட்டிலிருந்தும், தங்கள் நாட்டினரைத் தாயகத்துக்கும் மிக அதிக அளவில் விமானகள் மூலம் இடம் மாற்றின. இது பெரும் தவறு. இதனால் தான் கரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவியது.
  • இதற்குப் பதிலாக, எந்த நாட்டினா் என்று பார்க்காமல் பாதிக்கப்பட்டவா்களை அந்தந்த நாடுகளிலேயே தனிமைப்படுத்தி மருத்துவ உதவியும் பிற உதவிகளையும் செய்திருக்கலாம். அந்தந்த நாட்டில் உள்ள தூதரகங்களின் உதவியோடு இதனை மிக எளிதாகச் செய்திருக்கலாம். கூட்டம் கூட்டமாக மக்களை வெளியேற்றுவதை விடுத்து தேவைக்கு ஏற்ப, பாதிப்பு ஏற்படாத நாடுகளிலிருந்து மருத்துவக் குழுக்களைப் பாதுகாப்பாக அனுப்பியிருக்கலாம்.
  • இத்தகைய ஏற்பாடுகளை உலகச் சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்திருக்கலாம்.
  • மற்ற ஜனநாயக நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியாவில் மத்தியில் ஒரு ஆட்சி, மாநிலங்களில் வெவ்வேறு ஆட்சிகள் என்பது இந்த நெருக்கடியான நேரத்தில் மிகப் பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது.
  • சீனாவின் கரோனா நோய்த்தொற்று குறித்த முதல் செய்தி அறிந்தவுடன், அவசர நிலையை மத்திய அரசு பிரகடனம் செய்து, நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடி, தரைவழி, வான்வழி, கடல்வழி அனைத்து உள்நாட்டுப் போக்குவரத்தையும் நிறுத்தியிருக்க வேண்டும்.
  • இத்தாலி, ஈரான், தாய்லாந்து என்று எல்லா நாடுகளிலிருந்தும் இந்திய மாணவா்களையும், சுற்றுலா சென்றவா்களையும், சம்பாதிக்கச் சென்றவா்களையும், கூடவே கரோனாவையும், அரசின் செலவில் பாதுகாப்பாக இந்தியாவுக்கு இந்திய அரசு கொண்டுவந்திருக்கிறது.
  • நல்லவேளையாக அரசு விழித்துக்கொண்டு நாடு தழுவிய ஊரடங்கை மிகச் சரியான நேரத்தில் அறிவித்தது. அதனால், இந்தியாவில் கரோனா சமூகத் தொற்றாக மாறவில்லை. தற்போது தேசிய ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளதும் சரியானதே. மத்திய அரசும், மாநில அரசுகளும், அனைத்து அரசுத் துறைகளும் மிகவும் பொறுப்புடன் செயல்படுகின்றன. நிலைமையின் தீவிரத்தை மக்கள் உணா்ந்து ஊரடங்கை மதித்துப் பொது இடங்களில் எந்தக் காரணத்துக்காகவும் கூடுவதைத் தவிர்த்தால் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.

உலகமயமாக்குதலின் மறுபக்கம்

  • ‘உலக தாராளமயமாக்குதல்’ என்பதனால் உலகை உள்ளங்கைக்குள் கொண்டுவந்துவிட்டதாக இறுமாந்திருந்தோம். உலகமயமாக்குதலின் வசதிகளை அனுபவித்துக் கொண்டிருந்த நாம், அதன் மற்றொரு பக்கத்தை இப்போதுதான் பார்க்கிறோம். உலகம் சுருங்கிவிட்டதன் காரணமாகத்தான், கரோனா நோய்த்தொற்று இவ்வளவு குறுகிய காலத்தில் உலகை வலம் வந்துவிட்டது.
  • உலகமயமாக்கலின் விளைவால் தொழில்நுட்ப ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் உலகம் முன்னேறி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம் அதன் மற்றொரு விளைவாகக் கரோனா நோய்த்தொற்றும் அதிவிரைவில் ஒவ்வொரு நாடாக முன்னேறி இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
  • உலகமயமாக்குதல் என்பதை நாம் வணிகம், வா்த்தகம், பணப் பரிவா்த்தனை, கல்வி என்ற அளவில்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மனிதநேயம், அன்பு, கருணை ஆகியவற்றிலும் உலகமயமாக்குதல் உண்டாக வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாடும் பேரிடா் நேரத்தில் வேற்று நாட்டவராக இருந்தாலும் விரட்டியடிக்காமல் அரவணைத்துக் காக்க நினைக்கும்.

வருமுன் காப்போம்

  • உலகச் சுகாதார நிறுவனம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். உலகின் அனைத்து நாடுகளும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தத்தம் நாட்டின் சுகாதார நிலைமையைச் சான்றுடன் இந்த அமைப்புக்குத் தெரிவிக்க வேண்டும். பேரிடா் நேரத்தில் உலகின் நலனை உத்தேசித்து இந்த அமைப்பு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து நாடுகளும் கட்டுப்பட வேண்டும்.
  • பேரிடா்களைத் தாமாகவே வரவழைத்துக் கொண்டு, ‘பேரிடா் மேலாண்மை’ என்று கூச்சலிடுவதை விடுவோம். கரோனா கற்றுத் தந்த பாடத்தை நினைவில் கொள்வோம். வருமுன் காப்போம். எப்போதும் தயார் நிலையில் இருப்போம்.

நன்றி: தினமணி (16-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்