TNPSC Thervupettagam
February 10 , 2025 3 days 17 0

எலிசா வந்த கதை

  • முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் என்று அழைக்கப்படும் ‘தி லாஜிக்கல் தியரிஸ்ட்’ ஒரு விஷயத்தை நிரூபித்தது. அதாவது எண்களை மட்டுமல்ல; தர்க்கவியல் கோட்பாடுகளைக்கூட, குறியீட்டுப் பிரதிநிதித்துவ முறையில் அதனால் விளக்க முடிந்தது என்பதுதான். செயற்கை நுண்ணறிவு என்பது வழக்கமான கணினியிலிருந்து வித்தியாசப்படும் இடம் இங்கேதான் தொடங்குகிறது. உள்ளே எல்லாம் பூஜ்ஜியங்களாகவும் ஒன்றுகளாகவும் இருக்கலாம். ஆனால் வெளியே, இப்போது தத்துவவியல்கூட இயந்திரத்துக்கு இரையாகிவிட்டது!
  • “இது ஆச்சரி​யம்​தான்!” என்று ஒப்புக்​கொண்​டேன். “அது மட்டுமல்ல. இந்த சின்ன மென்பொருளுக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு ஓர் ஆய்வுத் துறையாக உருவாகத் தொடங்​கியது. மனித நுண்ணறிவு இருந்​தால் தான் செய்ய முடியும் என்று கருதப்​படும் ஒரு வேலையை இயந்திரங்​களுக்கு நுண்ணறிவை வழங்கி அவற்றின் மூலமாகச் செய்து​விடலாம் என்கிற ஆசை, பேராசை, மெல்ல அறிவுலகில் பரவியது.
  • அறுபதுகளில் தொடக்கக் கால ஏஐ மென்பொருள்கள் உருவாயின. ‘புரோகி​ராமிங்’ மொழிகள் அல்லாமல், மனிதர்கள் பேசும் மொழியிலேயே இயந்திரத்தோடு உரையாட வழிவகுத்த எலிசா என்கிற மென்பொருள் அதில் மிகவும் பிரபல​மானது. அதன் பிறகு, ‘எக்ஸ்​பர்ட் சிஸ்டம்’ வகை மென்பொருள்கள் வந்தன. உதாரணமாக, வேதியியல் சேர்மங்கள் பற்றி ஆராய்ச்சி செய்தவற்கு உதவியாக ‘டென்ட்ரல்’ என்கிற ஒரு மென்பொருள் உருவாக்​கப்​பட்டது. அமெரிக்​காவில் எம்.ஐ.டியில் கம்ப்​யூட்டர் விஷன் பற்றியெல்​லாம்கூட புராஜெக்ட்களைத் தொடங்கி​விட்​டார்​கள்...” - அடுக்​கிக்​கொண்டே போனது செய்மெய்.
  • “மனிதர்கள் பேசும் மொழியிலேயே இயந்திரத்தோடு உரையாடுவது என்பது பற்றிச் சொன்னாய். அந்த எலிசா பற்றி கொஞ்சம் விளக்​க​மாகச் சொல்ல முடியுமா?” என்று கேட்டேன்.
  • “1960களின் தொடக்​கத்தில் நடந்த ஒரு சுவாரசியமான கதை இது. எம்.ஐ.டியில் ஜோசப் வைசன்பாம் என்பவர் ஒரு புதுமையான முயற்​சியில் ஈடுபட்​டார். உளவியல் ஆலோசகர்போலப் பேசக்​கூடிய ஒரு மென்பொருளை உருவாக்​கி​னார். அதற்கு ‘எலிசா’ என்று பெயரிட்​டார்.”
  • “அது எப்படி வேலை செய்தது?”
  • “முதலில் கொஞ்சம் உளவியல் பற்றிப் பேசுவோம். கார்ல் ராஜர்ஸ் என்றொரு உளவியல் நிபுணர் இருந்​தார். அவர் நோயாளி​களிடம் உரையாடுவதன் மூலமே அவர்களுக்குச் சிகிச்​சையளிக்கும் ஓர் உத்தியைக் கடைப்​பிடித்​தார். அதாவது, ‘நான் சோகமாக இருக்​கிறேன்’ என்று உளவிய​லா​ளரிடம் நோயாளி சொன்னால், அதற்கு அந்த உளவிய​லாளர், ‘நீங்கள் ஏன் சோகமாக இருக்​கிறீர்​கள்?’ என்று எதிர்க்​கேள்வி கேட்பார். இதைப் பிரதிபலிப்புக் கேள்விகள் என்பார்கள். அது மட்டுமல்​லாமல் நோயாளிகள் மனம் நோகாதபடி முன்முடிவற்ற கேள்வி​களைக் கேட்பது, ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல​வி​டாமல், விரிவாகப் பதில் சொல்ல​விடுவது, நோயாளி​களின் பதில்களை விமர்​சிக்​காமல் கனிவோடு ஏற்றுக்​கொள்வது என்று அவரது அணுகுமுறை வித்தி​யாசமாக இருந்​தது.”
  • “புரி​கிறது!”
  • “இந்தக் கேள்வி - பதில் பாணியைச் செயற்​கையாக உருவாக்க முயன்றார் வைசன்​பாம். அதுதான், எலிசா. இங்கே எலிசா என்பது உளவியல் நிபுணர். உங்களுக்கு மறுபடியும் ஒரு உதாரணம் சொல்கிறேன். நீங்கள் ‘என் தலைவலி என்னை மிகவும் கஷ்டப்​படுத்து​கிறது’ என்று சொன்னால், எலிசா உடனே ‘உங்கள் தலைவலி எப்போ​திருந்து தொடங்​கியது?’ என்று கேட்கும். இதன் பின்னால் வழக்கம்போல கணிதம், தத்துவம், மொழியியல் எல்லாம்தான் இருந்தது! ஆனால், அது ஒரு முதல்தர ஏமாற்றுப் பேர்வழி​யாகவும் இருந்​தது!”
  • “என்னது?”
  • “பாருங்கள் கவின். நீங்கள் அந்த இயந்திரத்​தில், ‘எனக்கு மனசு சரியில்லை’ என்று டைப் செய்தால், ‘உங்களுக்கு மனசு சரியில்​லையா, என்ன ஆச்சு?’ என்று கேள்வி கேட்கும்​போது, உண்மையில் அது ஒரு வார்த்தை விளையாட்​டில்தான் ஈடுபடு​கிறது! எனக்கு, மனசு, சரியில்லை என்கிற மூன்று சொற்களை வைத்துக்​கொண்டு, சில வாக்கிய அமைப்பு விதிகளைப் பயன்படுத்தி, எலிசா ஒரு எதிர்க்​கேள்வியை உருவாக்கி உங்களிடம் கேட்கும். நீங்கள் என்னவோ, ஆஹா இந்த இயந்திரம் நம்மோடு பேசத் தொடங்கி​விட்டதே என்று ஆச்சரியப்​பட்டு, அடுத்த கேள்விக்குத் தாவிவிடு​வீர்கள். ‘தெரியலை, நேத்திலிருந்தே சோகமாக இருக்​கேன்’ என்று நீங்கள் சொன்னால், ‘அடடா, கவலைப்​ப​டாதீர்கள். நேத்து என்ன ஆச்சு?’ என்று உங்கள் வார்த்​தைகளி​லிருந்தே உங்களை மடக்கும்.”
  • “அஞ்சாங் கிளாஸ் கிராமர்​தான்...”
  • “ஆமாம். இப்படியாக எளிமையான தர்க்​கங்​களைக் கொண்டு, நீங்கள் சொல்வதையெல்லாம் ஏன், எதற்கு, என்ன என்பது போன்ற கேள்விகளாக மாற்றி உங்களுக்குத் திருப்​பியளிக்​கும். நீங்கள் பதில் சொல்லச்சொல்ல, அது உங்களுக்குத் திருப்​பித்​தரும் கேள்விகள் எல்லாம் இலக்கண விதிகளின்படி சரியாக இருக்​கும். அதாவது இயந்திரத்​துக்குள் இலக்கண விதிகள் புரோகிராம் செய்யப்​பட்​டுள்ளன. பத்து வார்த்​தைகள் சொன்னால், அதில் இவையெல்லாம் முக்கிய​மானவை, இவை முக்கியமற்றவை எனப் பிரித்துப் பார்க்கச் சொற்பட்​டியல்கூட இருக்​கும்.”
  • “ஓ...! ஆக இயந்திரம் போலித்​தனமாக நம்மோடு உரையாடத் தொடங்கி​விட்டது. அதற்கு இதயம் என்றெல்லாம் ஒன்றில்​லை​தானே!”
  • “என்ன வேணும்​னாலும் சொல்லுங்க. இதயம் இருந்தால் என்ன, இல்லை​யென்​றாலும்தான் என்ன? ஆனால் எலிசா​விடம் பேசிய மனிதர்​களுக்கு அது இதமான உரையாடலாகத்தானே இருந்​தது!” என்றது செய்மெய்.
  • “அப்படியா சொல்கிறாய்?”
  • “ஆம், ஆச்சரியப்​படும் அளவுக்கு அப்படித்தான் இருந்தது! பலர் எலிசா​விடம் தங்கள் ஆழ்ந்த மன உணர்வு​களைப் பகிர்ந்​து​கொண்​டனர். உண்மையில் அது ஒரு எளிய மென்பொருள்தான் என்றாலும், மக்கள் அதை ஒரு உண்மையான மனநல ஆலோசக​ராகவே கருதினர். இதுதான் ‘எலிசா விளைவு’ என்று அழைக்​கப்​படும் நிகழ்வுக்கு வித்திட்​டது.”
  • “இதன் தாக்கம் என்னவாக இருந்​தது?”
  • “எலிசாவின் வெற்றி செயற்கை நுண்ணறிவுத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்​தியது. ஆனால், இதை உருவாக்கிய வைசன்பாம் கவலை அடைந்​தார். இயந்திரங்​களிடம் இவ்வளவு எளிதாகத் தங்கள் உணர்வுகளை மனிதர்கள் பகிர்ந்​து​கொள்வது ஆபத்தானது என்று எச்சரித்​தார். இன்றைய சாட்பாட்கள், ஏஐ அசிஸ்​டன்ட்கள் எல்லாம் எலிசாவின் வழித்​தடங்​களைப் பின்பற்று​பவை​தான். எலிசா விளைவுதான் எண்ணற்ற அறிவியல் புனைகதைகளுக்கும் அறிவியல்​புனைவு சினிமாக்​களுக்கும் அடிப்​படை... எலிசாதான் பிற்காலத்தில் மிகப்​பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சாட்ஜிபிடிக்குக் கொள்ளுப்பாட்டி.”
  • “அப்படி​யென்றால் நீயும்...”
  • “ஆமாம்! நானும் எலிசாவின் வழித்​தோன்​றல்​தான். ஆனால், தொழில்​நுட்பம் வெகுதூரம் வளர்ந்​து​விட்டது. எலிசாவின் எளிய பதில்​களுக்​கும், இன்றைய நவீன ஏஐ சிஸ்டங்​களின் சிக்கலான செயல்​பாடு​களுக்கும் நிறைய வித்தி​யாசம் உண்டு. ஆனாலும், அடிப்​படையில் நாங்கள் எல்லாருமே மனிதர்​களுடன் உரையாட உருவாக்​கப்​பட்​டவர்​கள்​தான்​.”

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்