TNPSC Thervupettagam

ஏழு ஆண்டுகள் ஏராள சாதனைகள்!

June 17 , 2021 1141 days 580 0
  • இந்திய பிரதமா் நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றார்.
  • பின்னா் 2019-ஆம் ஆண்டில் 303 நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவரது தலைமையிலான ஆட்சி தற்போது ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நடக்காத பல விஷயங்கள் இப்போது நடந்து வருகின்றன.
  • வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டு ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆன பின்னரும், 2014 வரை ஏழை மக்கள், சாதாரணக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வங்கிகளில் கணக்குத் தொடங்குவது என்பது எட்டாக் கனியாக இருந்தது.
  • ஆனால் பிரதமராக மோடி பொறுப்பேற்ற வருடமே ‘ஜன் தன்’ திட்டம் என்கின்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அதனால் இதுவரை 42 கோடியே 42 லட்சம் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் 66 விழுக்காடு கணக்குகள் கிராமங்கள், சிறு நகரங்களில் வாழும் மக்களால் தொடங்கப்பட்டவை. மேலும் மொத்த கணக்குகளில் 55 விழுக்காடு பெண்களுக்கானவை.
  • அந்தக் கணக்குகளில் தற்போதுள்ள உள்ள இருப்புத் தொகை மட்டும் சுமார் ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம் கோடி ரூபாய்.
  • மேலும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2016-ஆம் வருடம் அறிமுகப்படுத்தியது. அதன்படி இதுவரை எட்டு கோடி குடும்பங்களுக்கு பெண்களின் பெயரில் எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

காப்பீட்டுத் திட்டம்

  • சாதாரண மக்களும் மருத்துவ உதவிகளைப் பெறும் வகையில் மத்திய அரசு 2018-ஆம் வருடம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
  • அதன்படி பத்து கோடி ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த ஐம்பது கோடி மக்கள், வருடம் ஒருமுறை ஐந்து லட்ச ரூபாய் அளவு மருத்துவ உதவிகளைப் பெற முடியும்.
  • அதன் மூலம் இதுவரை நாட்டிலுள்ள 22,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வகையில் சுமார் பதினாறு கோடி மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • பொதுவாக மருந்துக் கடைகளில் மருந்துகள் விலை அதிகமாக இருப்பதால், ‘மக்கள் மருந்தகம்’ என்னும் திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்து, சந்தை விலையில் ஐம்பது விழுக்காடு முதல் தொண்ணூறு விழுக்காடு வரை குறைத்து மருந்துகளை விற்கின்றன. தற்போது நாடு முழுவதும் 7,700 மருந்தகங்களில் சுமார் 1,500 வகையான மருந்துகள் கிடைக்கின்றன.

அரசின் திட்டங்கள்

  • நாட்டின் வளா்ச்சிக்கு அடிப்படையான துறைகளான விவசாயம், சிறு தொழில்கள், கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
  • சுதந்திரத்துக்குப்பின் முதல் முறையாக விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டு, பயிர்களின் உற்பத்தி விலைக்கு மேலாக 50 முதல் 190 விழுக்காடு வரை வருவாய் உறுதி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
  • குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை அதிக அளவில் உருவாக்கவும், வளா்ச்சி அடையச் செய்யவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ‘முத்ரா’ திட்டத்தின் மூலம் இதுவரை 15 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டம் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பட்டியலின, மலைவாழ் மக்களுக்கு சுமார் 26,000 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.
  • மோடி அரசு பதவியேற்ற ஆயிரம் நாட்களுக்குள் நாட்டில் மின் வசதி இல்லாத எல்லா கிராமங்களுக்கும் இணைப்புகள் கொடுக்கப்பட்டு, இப்போது நாடு முழுவதும் நூறு விழுக்காடு மின்சார இணைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த ஏழு வருட காலத்தில் கிராமப் பகுதிகளில் மட்டும் 2.84 லட்சம் கிலோ மீட்டா் அளவுக்கு சாலைகள் போடப்பட்டுள்ளன.
  • முதல் முறையாக வட கிழக்கு மாநிலங்களில் சாலைக் கட்டமைப்பு பணிகள் அதிகமாக நடைபெற்று, அவை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
  • நாடு சுதந்திரமடைந்து எழுபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்யுபோது (2022), அனைத்து மக்களுக்கும் வீடு இருக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
  • அதன்படி இதுவரை 1.87 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எல்லா வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீா் கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ‘ஜல் ஜீவன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் சுமார் 7.2 கோடி வீடுகள் அந்த வசதியைப் பெற்றுள்ளன.
  • ஜம்மு- காஷ்மீா் மாநில சட்டப்பிரிவு 370, அண்ணல் அம்பேத்கா் உள்ளிட்டோரின் எதிர்ப்புகளையும் மீறி, ‘இடைக்காலமாக’ என்ற பெயரில் தொடா்ந்து நீடித்து வந்தது.
  • 2019 ஆகஸ்டில் அது நீக்கப்பட்டு, அந்தப் பகுதி முழுமையாக நம் நாட்டுடன் இணைக்கப் பட்டுள்ளது.
  • அதனால் குடியுரிமை மறுக்கப்பட்டிருந்த இரண்டு லட்சம் பட்டியலின மக்கள் அதைப் பெற்றுள்ளனா்.
  • பெண்களுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அனைத்து சட்டங்களும் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளன. தீவிரவாதம் குறைந்து அந்தப் பகுதி வளா்ச்சியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.
  • 2019 டிசம்பரில் குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டு நமது அண்டை நாடுகாளான பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் மத அடிப்படையில் பாதிப்புக்களாகி இங்கு 2014-க்குள் வந்து சோ்ந்துள்ள சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
  • அதன் மூலம் அறுபது வருடங்களுக்கு மேலாக தீா்க்கப்படாமல் இருந்த பிரச்னைக்கு தீா்வு கிடைத்துள்ளது.
  • பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு, தக்க பதிலடிகள் கொடுக்கப்பட்டு, இப்போது சா்வதேச அளவில் அந்த நாடு தீவிரவாத நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடா்ந்து நமக்குத் தொந்தரவுகளைக் கொடுத்து வரும் சீன நாட்டுக்கு எல்லைப் பகுதிகளில் மட்டுமன்றி, உலக அளவிலும் தடை போடப்பட்டு வருகிறது.
  • உலக அளவில் கடந்த ஏழு வருடங்களாக மோடி அரசு மேற்கொண்டு வரும் அணுகுமுறைகள் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் மதிப்பு உயா்ந்து வருகிறது.
  • சா்வதேச தலைவா்களிடம் அவா் தனிப்பட்ட முறையில் கொண்டுள்ள உறவுகள், நாட்டுக்குப் பெரிதும் உதவுகின்றன. அதனால் சீனாவைத் தவிர மற்ற வல்லரசு நாடுகள் பலவும் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினா் ஆவதை ஆதரிக்கின்றன.

புதிய இந்தியாவுக்கான பாதை

  • நமது நாட்டில் பல ஆண்டு காலமாகவே அரசு நடவடிக்கைகளில் ஊழல் பிரிக்க முடியாத அங்கமாக ஆகியிருந்தது. அதனால் மக்களின் முன்னேற்றம் தடைபட்டது மட்டுமன்றி, தேசத்தின் சொத்துகளும் வீணாகி வந்தன.
  • மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னா், ஊழலை ஒழிக்கும் வழிமுறைகளை உறுதியுடன் செயல்படுத்தி வருகிறார்.
  • அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கு கொடுக்கப்படும் பணம் இடையில் செல்வதை நிறுத்த, பயனாளிகளின் கணக்கிலேயே நேரடியாக அது செலுத்தப்படுகிறது.
  • அதன் கீழ் 319 அரசின் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு இதுவரை 15.47 லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டுக்கு சுமார் 1.78 லட்சம் கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது.
  • மேலும் பெருநிறுவனங்கள் கோடிக் கணக்கில் கடன் வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தாதபோது, அதற்கு உத்தரவாதம் கொடுத்தவா்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • இதுவரை நான்கு லட்சம் கோடி ரூபாய் கடன் தொகை ஏமாற்றுப் போ்வழிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.
  • 2020 மார்ச் மாதம் தொடங்கிய கரோனா பெருந்தொற்று உலகம் முழுவதையும் நிலை குலையச் செய்து விட்டது. அதனால் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நமக்கு சவால்கள் அதிகம். ஆனால் இந்த சமயத்திலும் இந்தியா செயல்பட்டு வரும் விதம் உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
  • உலகில் தடுப்பூசிகளைத் தயாரித்து வரும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும் மேற்கத்திய நாடுகளை எல்லாம் முந்தி அதிகப்படியான பேருக்கு தடுப்பூசி போட்டுள்ள நாடாகவும் இந்தியா உள்ளது.
  • மேலும் மக்கள்தொகை அடிப்படையில் இறப்பு விகிதம் நமது நாட்டில் மிகவும் குறைவு, கரோனா தொடங்கிய பின்னா் பத்து மாதங்களுக்கு மேலாக எண்பது கோடி மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்களும், பாதிக்கப்பட்ட துறைகள் மற்றும் பிரிவினருக்கு சலுகைகள் மற்றும் உதவித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • அதனால் 2020-21 நிதியாண்டின் முதல் அரையாண்டில் வீழ்ச்சியைக் கண்ட பொருளாதாரம், இரண்டாவது அரையாண்டில் வளா்ச்சியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.
  • பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, எத்தனையோ சிரமங்களையும் மீறி பல துறைகளில் வளா்ச்சியையும், மக்களிடையே நம்பிக்கையையும் அதிகரித்து வருகிறது.
  • ஒவ்வொரு குடிமகனும் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுமளவில் அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. மோடி அரசின் ஏழு வருட கால ஆட்சி சுதந்திர இந்திய வரலாற்றில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய இந்தியாவுக்கான பாதையை வகுத்திருக்கிறது.

நன்றி: தினமணி  (17 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்