TNPSC Thervupettagam

ஒலிம்பிக்: லட்சியங்களின் ஆடுகளம்

July 23 , 2021 1105 days 465 0
  • மனித குலத்தின் சாத்தியங்களை அதிக அளவில் வெளிப்படுத்துபவையாகப் போரும் விளையாட்டும்தான் இருக்கின்றன. முந்தையது அழிவை ஏற்படுத்துவது; பிந்தையது ஆக்கபூர்வமானது.
  • அது மட்டுமல்லாமல் பசி, பஞ்சம், போர்கள், பிரிவினைகள், நோய்கள் என்று ஏராளமான இன்னல்களால் பீடிக்கப்பட்டிருக்கும் மனித குலத்துக்கு விளையாட்டுகளில் ஈடுபடுவதும் அவற்றைக் கண்டுகளிப்பதும் பெரும் ஆசுவாசத்தையும் பொழுதுபோக்கையும் தருகின்றன. அதனால்தான், ஒலிம்பிக் போட்டிகள் போன்றவை மிகவும் முக்கியமானவை யாகின்றன.

பண்டைய ஒலிம்பிக்

  • பண்டைய ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறு கி.மு. 776-ல் தொடங்குகிறது. கிரேக்கத்தின் அப்போதைய நகர அரசுகளுள் ஒன்றான எலிஸ் அரசால் ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது.
  • வரலாற்று ஆவணங்களின்படி முதல் சாம்பியன் எலிஸ் நகரத்தைச் சேர்ந்த சமையற்காரரான கரோபஸ். இவர் கி.மு. 776-ல் நடந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்றார்.
  • பழங்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே ஆண்கள்தான். இவர்கள் அனைவரும் ஆடையின்றியே போட்டிகளில் கலந்துகொண்டனர்.
  • ஓட்டப் பந்தயம், வட்டு எறிதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, தாண்டுதல் ஆகிய விளையாட்டுகள் மட்டும் இடம்பெற்றன.
  • பிற்பாடு குதிரைப் பந்தயம், குதிரை வண்டிப் பந்தயம் போன்றவை சேர்க்கப்பட்டன. போட்டிகளில் பெண்கள் கலந்துகொள்ள முடியாது என்றாலும் பெண்கள் வைத்திருக்கும் குதிரை வண்டிகள் கலந்துகொள்ளலாம்.
  • விதிமுறைகளின்படி போட்டியில் வென்ற குதிரை வண்டிகளின் உரிமையாளர்களே வெற்றியாளர் என்று கருதப்பட்டதால், பெண்கள் வெற்றிபெற்றது பற்றிய பதிவுகளும் வரலாற்றில் உண்டு.
  • ஒலிம்பிக் போட்டிகளின் புகழ் உச்சத்தில் இருந்தபோது அந்தப் போட்டிகள் நடைபெற்ற அரங்கில் 40 ஆயிரம் பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்ததாக வரலாறு சொல்கிறது.
  • கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கமானது ரோமானிய அரசிடம் வீழ்ந்த பிறகு, ஒலிம்பிக்கின் மவுசு குறைய ஆரம்பித்தது. ஒலிம்பிக் போட்டிகள் பாகன் மதங்களுடன் தொடர்புடையவை என்று ரோமானியப் பேரரசர் தியோடோஸியஸ் கி.பி. 400 வாக்கில் அவற்றைத் தடைசெய்தார்.

நவீன ஒலிம்பிக்கின் வரலாறு

  • நவீன ஒலிம்பிக்கை மீட்டெடுத்தவராக பிரான்ஸைச் சேர்ந்த பியர் தெ கூபர்தின் கருதப் படுகிறார்.
  • 1894-ல் கூபர்தினும் கிரேக்கத்தைச் சேர்ந்த திமித்ரியோஸ் விகேலஸும் இணைந்து சர்வதேச ஒலிம்பிக் குழுவைத் தொடங்கினார்கள்.
  • அதைத் தொடர்ந்து 1896-ல் ஏதென்ஸ் நகரத்தில் முதல் நவீன ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. முதல் ஒலிம்பிக்கில் மொத்தம் 14 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் கலந்து கொண்டார்கள். அமெரிக்காவைத் தவிர, ஏனையவை ஐரோப்பிய நாடுகள்.
  • 1896-லிருந்து நான்காண்டுகள் இடைவெளியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 1924-லிருந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறத் தொடங்கின.
  • இதுவரை கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் 28 முறைகளும், குளிர் கால ஒலிம்பிக் 23 முறைகளும் நடைபெற்றிருக்கின்றன.
  • முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் ஆகிய காலகட்டங்களில் போட்டிகள் நடைபெறவில்லை.
  • இதுவரையிலான போட்டிகளில் அமெரிக்கா 2,542, ரஷ்யா 1,010, பிரிட்டன் 867 என்று பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன.
  • இந்தியா இதுவரை 28 பதக்கங்களை மட்டுமே வென்றிருக்கிறது. இந்தியாவுக்காக முதல் பதக்கத்தைப் பெற்றவர் நார்மன் ப்ரிட்சார்டு என்ற ஆங்கிலேயர்.
  • இந்திய ஹாக்கி அணி மட்டும் 8 தங்கப் பதக்கங்கள் உட்பட இதுவரை 11 பதக்கங்களை வென்றிருக்கிறது.
  • எனினும், பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் நாடுகளைப் பார்க்கும் போது இந்தியா செல்ல வேண்டிய தூரம் மிகவும் அதிகம் என்று தோன்றுகிறது.
  • ஒலிம்பிக் போட்டிகள் உலக ஒற்றுமை, ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை போன்றவற்றுக்கு அடையாளமாக இருந்தாலும் அவற்றை யொட்டிப் பல்வேறு சர்ச்சைகளும் பிரச்சினைகளும் கடந்த காலத்தில் உருவாகியிருக்கின்றன.
  • 1936-ல் பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை ஹிட்லர் தனது நாஜி பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த முயன்றார்.
  • மெக்ஸிகோ நகரத்தில் 1968-ல் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, அந்நாடு பொருளாதாரரீதியாகத் தள்ளாடிக்கொண்டிருந்த நிலையில், அந்தப் போட்டிகள் தேவையா என்று கேள்வி கேட்டு, மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
  • அவர்களின் மீது மெக்ஸிகோவின் துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1972 ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் நடந்த ஒலிம்பிக்கின்போது பயங்கரவாதிகளால் இரண்டு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • இவற்றைத் தவிர லஞ்சக் குற்றச்சாட்டு, ஊக்க மருந்து சர்ச்சைகள், ஒலிம்பிக்கை வணிகமயமாக்கிவிட்டார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.
  • தற்போதைய ஒலிம்பிக் போட்டியானது கடந்த ஆண்டே டோக்கியோவில் நடந்து முடிந்திருக்க வேண்டியது. கரோனா பெருந்தொற்றால் உலகமே முடங்கிப் போனதையொட்டி ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெறுகின்றன.
  • எனினும் மனித குலம் எந்தவொரு துயரத்திலும் மூழ்கித் தன்னை இழந்ததில்லை; எப்போதும் மீண்டெழுந்தே வந்திருக்கிறது.
  • அந்த மீளுதலின் அடையாளங்களுள் ஒன்றாக இந்த ஒலிம்பிக் போட்டிகள் இருக்கட்டும். மானுட சமுதாயம் தன் உடலின் சாத்தியங்களை அறிவின் சாத்தியங் களோடு ஒன்றிணைத்து வெளிப்படுத்தட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்