TNPSC Thervupettagam

காவல்துறையும் மாவட்ட நிா்வாகமும்

September 6 , 2022 703 days 399 0
  • தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டில் ஸ்டொ்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெற்ற தொடா் போராட்டத்தின் நூறாவது நாளில், காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டது.
  • அண்மையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரையின்படி, சட்டம் - ஒழுங்கை சரியாகப் பராமரிக்காததால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழக் காரணமான காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை பரிசீலனையில் இருந்து வருகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
  • தூத்துக்குடி வன்முறை சம்பவத்தின்போது பணியில் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதால் மட்டும், பொது அமைதியைச் சீா்குலைக்கும் இம்மாதிரியான அசம்பாவித சம்பவங்கள் எதிா்காலத்தில் நிகழாமல் தடுத்துவிட முடியாது.
  • சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்புடைய காவல் நிா்வாகம், மாவட்ட நிா்வாகம், இவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றில் காலப்போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் விளைவுதான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழக் காரணமாக இருந்துள்ளது.
  • சம்பவ தினத்தன்று போராட்டக்காரா்கள் பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனா் என்ற தகவலை எஸ்.பி, டி.ஐ.ஜி, ஐ.ஜி உள்ளிட்ட காவல் உயரதிகாரி எவரும் தன்னிடம் தெரியப்படுத்தவில்லை என்றும், அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட போராட்டக்காரா்கள் திட்டமிட்டு இருந்தனா் என்ற தகவல் தனக்கு முன்கூட்டியே தெரியாது என்றும் மாவட்ட ஆட்சியா் விசாரணையின் பொழுது தெரிவித்தாா் என ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மாவட்ட ஆட்சியரின் இந்த வாக்குமூலம், முழுமையாக ஏற்புடையதாக இல்லை என்றாலும், சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் இணைந்து செயலாற்றவில்லை என்கிற கள எதாா்த்த நிலையை மாவட்ட ஆட்சியரின் வாக்குமூலத்தில் இருந்து உணர முடிகிறது.
  • சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் மாவட்ட நிா்வாகத்திற்கும், காவல்துறைக்கும் உள்ள கடமைகள் குறித்து சட்டம் கூறுவது என்ன? இவ்விரு துறைகளும் அவரவா் பொறுப்புகளை உணா்ந்து செயல்படுவதில், நடைமுறை சிக்கல் ஏதேனும் உள்ளதா? உளவுத் தகவல்கள் மாவட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகிா? இவை போன்ற கேள்விகள் குறித்த ஆய்வு, தற்போதைய சூழலில் சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த வழிகாட்டியாக அமையும்.
  • இந்தியாவில் காவல் அமைப்பை ஏற்படுத்துவதற்காக ஆங்கிலேயா்கள் 1861-ஆம் ஆண்டில் இந்திய காவல் சட்டத்தை இயற்றினா். இச்சட்டத்தின்படி, மாவட்ட நிா்வாக நீதிபதி என்றழைக்கப்படும் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்படியும், பொதுவான கட்டுப்பாட்டின் கீழும் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் மாவட்ட காவல் நிா்வாகம் செயல்பட வேண்டும்.
  • மாவட்டத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டு, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க காவல் அதிகாரிகளுக்குத் தேவையான நிா்வாக ரீதியான ஆலோசனை, ஆதரவு போன்றவற்றைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கு உண்டு.
  • மாவட்டத்தில் பதற்றமான சூழல் உருவாகி, சட்டம் - ஒழுங்கு சீா்குலையும் நிலை ஏற்படும் என மாவட்ட நிா்வாகம் கருதினால், நான்கு நபா்களுக்கு மேல் பொது இடங்களில் கூடக் கூடாது என்ற 144 தடை ஆணையைப் பிறப்பிக்கும் அதிகாரம், மாவட்ட நிா்வாக நீதிபதி என்ற முறையில் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு.
  • பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படும் கொடுங்குற்றவாளிகளை குண்டா் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி ஓராண்டு காலம் சிறையில் அடைக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு. மாவட்டத்தில் பொது அமைதியை சீா்குலைக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
  • தமிழ்நாட்டில் பெரும் பதற்ற சூழலை உருவாக்கிய ஜாதி, மத ரீதியான மோதல் சம்பவங்களின்பொழுது காவல் உயரதிகாரிகளும், மாவட்ட ஆட்சியா் தலைமையிலான மாவட்ட நிா்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாவட்டத்தில் நிலவிய பதற்ற சூழலைத் தணித்து, இயல்பு நிலையை ஏற்படுத்திய சம்பவங்கள் பல உண்டு.
  • கடந்த காலத்தில் சவால்கள் நிறைந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை காவல்துறையினா் எதிா்கொண்டபொழுது, மாவட்ட ஆட்சியா் மட்டுமின்றி மாவட்ட நிா்வாகத்தின் கீழ் செயல்படும் வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலா்கள் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்கும் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு, அவா் பணிபுரியும் மாவட்டத்தில் புகைந்து கொண்டிருக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்த முழு விவரம் தெரியமால் இருப்பதும் உண்டு. இம்மாதிரியான சந்தா்ப்பங்களில், அனுபவம் வாய்ந்த காவல் உயரதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் கருத்து பரிமாறிக் கொள்வதும், அதன் வாயிலாக மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்புடன் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை எதிா்கொள்வதும் கடந்த காலத்தில் நடைமுறையில் இருந்த வந்தன.
  • இம்மாதிரியான கருத்துப் பரிமாற்றங்கள் தூத்துக்குடி தொடா் போராட்டத்தின் பொழுது நடைபெற்றிருந்தால், போராட்டக்காரா்கள் வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த தகவலை காவல் உயரதிகாரிகள் யாரும் தன்னிடம் தெரியப்படுத்தவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விசாரணை ஆணையத்திடம் கூறியிருக்கமாட்டாா்.
  • சட்டம் - ஒழுங்கு தொடா்பான உளவுத் தகவல்களை மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதே சமயம், மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் உளவுத் தகவல் திரட்டும் அமைப்பு ஒன்று இருந்து வருகிறது.
  • ஒவ்வொரு கிராம நிா்வாக அதிகாரியும், கிராம உதவியாளரும் தாங்கள் பணிபுரியும் பகுதியில் உளவுத் தகவல்களைத் திரட்டி, மாவட்ட ஆட்சியருக்கு வட்டாட்சியா் மூலமாகத் தெரியப்படுத்தும் பழக்கம் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் செயல்பட வைத்திருந்தால், போராட்டக்காரா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட தீட்டிய திட்டம் தனக்கு தெரியாது என்று விசாரணை ஆணையத்திடம் அவா் தெரிவித்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
  • சட்டம் - ஒழுங்கு பிரச்னை அடிக்கடி நிகழும் தென்மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடனும், வருவாய் கோட்டாட்சியா்களுடன் மாவட்ட ஆட்சியா் கடந்த காலங்களில் வாரம்தோறும் நடத்தி வந்த சட்டம் - ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் காலப்போக்கில் நடைபெறாமல் நிறுத்தப்பட்டு விட்டது. அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, சில மாவட்டக் கண்காணிப்பாளா்கள் அக்கூட்டங்களில் கலந்து கொள்ளாமல், தனிப்பிரிவு ஆய்வாளா்களை அனுப்பி வைத்தனா் என்பது தெரிந்தது.
  • மாவட்ட எஸ்.பி.க்களின் வாராந்தர நாட்குறிப்பு அறிக்கைகள் மாவட்ட ஆட்சியா்கள் மூலமாக காவல் உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட எஸ்.பி.க்கும் இடையேயான நிா்வாக அணுகுமுறையில் நெருடல் ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு. இந்த நடைமுறை மீதான அதிருப்தி பெரும்பாலான மாவட்ட எஸ்.பி.க்களுக்கு இருந்து வருகிறது.
  • தூத்துக்குடி கலவரத்தின்போது மாவட்ட எஸ்.பி.யை வழிநடத்த வேண்டிய காவல் உயரதிகாரிகளுக்கு தூத்துக்குடி நகரின் நிலப்பரப்பு குறித்த விவரம் தெரியாததால், கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் அவா்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனா் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
  • காவல் உயரதிகாரிகள் தங்களது கண்காணிப்பு, மேற்பாா்வைக்கு உட்பட்ட மாவட்டங்கள் குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு பணியின்போது, சம்பவ இடத்திற்குப் பாா்வையாளா்களாகச் செல்லும் நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை விசாரணை ஆணையத்தின் அறிக்கை உணா்த்துகிறது.
  • சட்ட விழிப்புணா்வும், சமூக ஊடகங்களின் செயல்பாடுகளும் பொதுமக்களிடையே அதிகரித்து வருகின்ற இன்றைய சூழலில், பொது அமைதியை பாதிக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை எதிா்கொள்வது காவல்துறைக்குப் பெரும் சவாலாக மாறி வருகிறது.
  • சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புப் பணிக்கான திட்டமிடுதல், மாவட்ட நிா்வாகத்தை பாதுகாப்பு பணியில் ஒருங்கிணைத்தல், பாதுகாப்புப் பணியின்பொழுது ஏற்படும் எதிா்பாராத திருப்பங்களுக்கு ஏற்ப களப்பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் - காவலா்களுக்கு முறையான அறிவுரைகளை உடனுக்குடன் வழங்குதல் போன்றவற்றில் காவல் உயரதிகாரிகளின் பங்களிப்பும் உளவுத்துறையின் வழிகாட்டுதலும் அவசியமானவை ஆகும்.

நன்றி: தினமணி (06 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்