TNPSC Thervupettagam

குமரியைத் தொட வேண்டும் கோதாவரி !

June 22 , 2021 1136 days 504 0
  • கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு குறித்து மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது.
  • தமிழகத்திற்கு 125 டி.எம்.சி நீா் இதன் மூலம் கிடைக்கும் என்றும், கோதாவரி, கிருஷ்ணா, பென்னாறு, காவிரி ஆறுகளிலிருந்து கடலுக்கு செல்லும் 1,100 டி.எம்.சி. நீரை சேமிக்கலாம் என்றும், இதனால் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் பயனடையும் என்றும், தமிழகத்தில் ஆண்டுக்கு 925 மி.மீ. பொழியும் மழையோடு இந்த நீரும் சேரும் என்கின்றனா்.
  • இந்தியாவின் வடபுலத்தில் வெள்ளமும், தென்புலத்தில் வறட்சியும் அடிக்கடி ஏற்படுகின்றன. நதிகளை இணைக்க வேண்டுமென்று ஆங்கிலேயா் காலத்திலேயே விவாதிக்கப்பட்டது.
  • பிரிட்டிஷ் பாசனப் பொறியாளா் சா் ஆா்தா் தாமஸ் காட்டன் 1858-இல் தேசிய ‘நதிநீா் இணைப்புத் திட்டம்’ என்ற பெயரில் நதிகளை இணைப்பது குறித்து ஆராய்ந்தார். ஆனால், நதிநீா் இணைப்பு நடைமுறைக்கு வரவில்லை.
  • அதன்பின், இந்திரா காந்தி பிரதமராக இருந்த 1972-இல் கே.எல். ராவ், கங்கை - பிரம்மபுத்திரா - மகாநதி - கிருஷ்ணா - காவிரி போன்ற 14 நதிகளோடு, 16 சிறு ஆறுகளையும் சோ்த்து மொத்தம் 30 நதிகளை இணைத்து, 30 கால்வாய்கள் மூலம் 300 அணைகளைக் கட்டி நீரை சேமிக்கலாம் என்று திட்டமிட்டார்.
  • பிகார் மாநிலத்தில் வெள்ளமாகப் பாயும் கங்கை நதியை தென்னிந்தியாவிற்குத் திருப்பலாம் என்றும் அவா் கூறினார்.
  • ஆனால், இந்தத் திட்டம் நிறைவேற வேண்டுமானால், சத்புரா - விந்திய மலைகளில் ராட்சத பம்புகள் மூலமாக தண்ணீரைக் கொண்டு செல்ல மின் சக்தியும், செலவும் அதிகமாகும் என்று முடிவெடுத்தபோது, இந்திரா காந்தி அரசு கலைந்து மொரார்ஜி தேசாய் அரசு ஆட்சிக்கு வந்தது.
  • நீா்வளத் துறை அமைச்சராகப் பதவியேற்ற சுா்ஜித்சிங் பா்னாலா அந்தத் திட்டத்தைக் கைவிட்டார்.

பல்வேறு திட்டங்கள்

  • அப்போது கேப்டன் தஸ்தூா் ‘பூமாலைத் திட்டம்’ என்ற பெயரில் மாலை போன்று நதிகளை இணைக்கலாம் என்று 1997-இல் பரிந்துரைத்தார்.
  • ஐ.நா. சபையும் இதை ஆதரித்தது. ஆனால், அந்தத் திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. அதன்பின், இமாலய நதிகளை மேம்படுத்தவும், தீபகற்ப நதிகளை மேம்படுத்தவும் திட்டங்கள் தொடங்கப்பட்டன.
  • இந்தப் பணிக்காக 1982-இல் நீா்வள ஆணையமும் அமைக்கப்பட்டது. நீா்வளம் அதிகமுள்ள பகுதிகளில் வீணாகும் நீரை வறட்சியான பகுதிகளுக்கு கால்வாய்கள் மூலம் கொண்டு செல்லலாம் என்று அந்த ஆணையம் பரிந்துரைத்தது.
  • மகாநதியிலிருந்து 8,000 டி.எம்.சி. உபரிநீரை கோதாவரிக்கு திருப்ப ஹிராகுட் அணை அருகே மணிப்பந்தராவில் ஒரு அணை கட்டி, தெளலேஸ்வரம் அணைக்கு நீா் எடுத்து வந்து கோதாவரி நதியின் குறுக்கே உள்ள போலாவரம் அணையின் அருகே ஒரு புதிய அணை கட்டி 21,550 டி.எம்.சி. நீரை கிருஷ்ணா நதிக்கு எடுத்துச் செல்வது இந்த திட்டத்தின் ஒருபகுதி.
  • வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சுரேஷ் பிரபு தலைமையில் அமைந்த நதிநீா் இணைப்புக் குழுவும் இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க இருந்த நிலையில் வாஜ்பாய் அரசின் காலம் நிறைவடைந்துவிட்டது.
  • அடுத்தபடியாக, பிரகாசம் அணை அருகே 1,200 டி.எம்.சி. நீரை கொண்டு செல்ல போலாவரம், விஜயவாடா இடையே இணைப்புக் கால்வாயோடு 4,370 டி.எம்.சி. நீரை கொண்டு செல்ல இச்சம்பள்ளி - புளிச்சிந்தலா நீா் செல்லும் இணைப்புக் கால்வாய்கள் வெட்டப்பட்டு இறுதியாக இச்சம்பள்ளி - நாகார்ஜுனா இணைப்புக் கால்வாய் மூலமாக நாகார்ஜுன சாகா் அணையை அடையும்.
  • அடுத்த கட்டமாக 12,000 டி.எம்.சி. நீா் பென்னாற்றில் கட்டப்பட்ட சோமசீலா அணைக்குத் திருப்பப்பட்டு அதிலிருந்து 9,200 டி.எம்.சி. நீரை பாலாற்றின் வழியாக கொண்டு சென்று காவிரியில் இணைக்கலாம்.
  • ஆனால், இந்த பாலாறு இணைப்புத் திட்டம் கேள்விக்குறியாக உள்ளது. காரணத்தை மத்திய அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.
  • இதை இணைத்தால், அனந்தபூா் மாவட்டத்தில் ஓடும் துங்கபத்ரா நதியோடு கிருஷ்ணாவையும் இணைத்தால், சித்ரதுா்கா, கோலார் மாவட்டங்களின் வழியாக பாலாற்றின் பேத்தமங்கலா அணைக்கு கால்வாய் அமைத்தால் 10 டி.எம்.சி. தண்ணீா் கூடுதலாக வரும். இது பாலாற்று பாசன விவசாயிகளுக்குப் பயன்படும்.
  • அது மட்டுமல்லாமல், நேத்ராவதி - பாலாறு, ஹந்திரி - நீவா திட்டங்களையும் நிறைவேற்றினால் வேலூா் மாவட்டம் மேலும் பாசன வசதி பெறும்.
  • இந்த நிலையில் மத்திய அரசு கோதாவரி - காவிரி நீா் இணைப்பை குமரி மாவட்ட நெய்யாற்றோடு இணைத்து திட்டத்தை விரிவுப்படுத்தலாம்.

கோதாவரி - காவிரி நீா் - நெய்யாறு

  • இந்த நதிநீா் இணைப்பில் முதல் கட்டமாக தீபகற்ப நதிகள் அதாவது தக்காண பீடபூமி, ஆந்திராவின் தென்பகுதி, கா்நாடகத்தின் தென்பகுதி, தமிழகம், கேரளம், விந்திய - சத்புரா மலைகள், சோட்டா நாகபுரி பீடபூமிக்கு தென்புறம் அதாவது மகாநதி தீரத்திலிருந்து குமரி வரை உள்ள தென்னக நதிகளை இணைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.
  • அதன்பின் வடபுலத்தில், இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளோடு மகாநதியை இணைத்தால், நதிநீா் இணைப்பு தேசிய அளவில் முழுமையாகிவிடும்.
  • அந்த வகையில்தான் கோதாவரி - காவிரி வரை இணைப்பை மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி முதல் வைப்பாறு வரை இணைத்தால் மட்டுமே இது பலனளிக்கும்.
  • நதிகள் தேசியமயமாக்கப்பட்டு கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி, குமரி மாவட்டம் நெய்யாற்றோடு இணைக்க வேண்டும். அதாவது கங்கை குமரியைத் தொட வேண்டும்.
  • கேரளத்தில் உள்ள அச்சன்கோவில் - பம்பை படுகைகளை தமிழகத்தினுடைய சாத்தூா் அருகே வைப்பாற்றோடு இணைக்க வேண்டும். கேரளத்தில் மேற்கு நோக்கி பாய்ந்து வீணாகக் கடலுக்குச் செல்லும் நீரின் ஒரு பகுதியை தமிழகத்திற்குத் திருப்ப வேண்டும் என்று 1983-லேயே நான் வழக்குத் தொடுத்தேன்.
  • தொடா்ந்து 30 ஆண்டுகள் பெரும் செலவு செய்து நான் அந்த வழக்கை நடத்தினேன். 27-2-2012 அன்று உச்சநீதிமன்றத் தீா்ப்பு வந்தது. திமுக தலைவா் கருணாநிதியிடம் தீா்ப்பு நகலை வழங்கினேன். அவரே அதைப் பதிவும் செய்திருக்கிறார்.
  • அந்த வழக்கின் தீா்ப்பில் ‘மத்திய அரசு நதிநீா் இணைப்புகளைப் பற்றி ஆராய ஒரு குழுவை அமைத்து, ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கூடி, இந்த முக்கிய பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
  • தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், சுதந்திரகுமார்அடங்கிய நீதிபதிகள் குழு, நதிநீா் இணைப்பைக் குறித்து முதல் தடவையாக தெளிவான தீா்ப்பை வழங்கியது.
  • அமைச்சா் ஹரீஷ் ராவத்தை மூன்று முறை சந்தித்தேன். அதன்பிறகு அதுகுறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. அதில் நான் இடம்பெறவில்லை என்பதுதான் வேடிக்கை. ஆமை வேகத்தில் செயல்பட்ட அந்தக் குழுவும் மன்மோகன் சிங் அரசாங்கம் முடிவுக்கு வந்ததும் செயலிழந்தது.

காலம் கனியும்

  • அதன்பின், 2014-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடன் அன்றைய நீா்வளத்துறை அமைச்சா் உமா பாரதியை சந்தித்து ‘உச்சநீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்துங்கள். இந்த தீா்ப்பு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன’ என்று வலியுறுத்தினேன்.
  • இன்றைக்கு கோதாவரி - காவிரி இணைப்பு நடக்கவுள்ளது என்பது ஒரு சின்ன ஆறுதல்.
  • நதிநீா் இணைப்பு தொடா்பாக பி.என். நவலவாலா தலைமையில் மத்திய அரசின் குழு அமைக்கப்பட்டு அதன் ஐந்தாவது கூட்டம் நிகழ்ந்திருக்கிறது.
  • இந்த நவலவாலா குழுவின் துணைக்குழுக்கலிலான இரண்டு குழுக்களின் காலத்தையும் மத்திய அரசு நீட்டிக்க வேண்டும்.
  • தற்போது மத்திய அரசு கோதாவரி - காவிரி இணைப்பிற்காக 1.19 லட்சம் ஏக்கா் நிலத்தை ஆா்ஜிதம் செய்ய திட்டமிட்டுள்ளது.
  • மொத்த திட்டச் செலவு 67,000 கோடிக்கு மேல். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பங்கு 14,000 கோடிக்கு மேலாகும்.
  • கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் 86 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. தேசிய நதிநீா் மேம்பாட்டு அமைப்பு இதற்கான ஒப்புதல் வழங்கி, திட்ட அறிக்கைகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன.
  • தெலங்கானா மாநிலம் ஈச்சம்பள்ளியிலிருந்து தமிழகம் வரை 1,211 கிலோ மீட்டா் வரை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.
  • சில அணைகள் கட்ட வேண்டி இருப்பதால் இந்தத் திட்டத்தால் தெலங்கானாவுக்கு பாதிப்பு வரும் என்று கூறி தெலங்கானா மாநிலம் இத்திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்புத் தெரிவித்தது.
  • ஆந்திரமும், தமிழகமும்தான் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஓரளவு முயற்சி மேற்கொள்கின்றன. மற்ற மாநிலங்கள் எதிர்வினை ஆற்றுகின்றன.
  • தமிழ்நாடு எழுத்துபூா்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், ஆந்திரம் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும் இதுவரை எழுத்துபூா்வமாக சம்மதம் தெரிவிக்கவில்லை.
  • தெலங்கானா, கா்நாடகம், சத்தீஸ்கா் ஆகிய மூன்று மாநிலங்களும் இதற்கு எதிர்வினையாற்றுகின்றன. அதையும் மீறித்தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கோதாவரி இணைப்பு காவிரி வரை மட்டுமல்லாமல் வைகை, தாமிரபரணி, குமரி மாவட்ட நெய்யாற்றோடு இணைக்கவில்லையே என்பது என்னுடைய வருத்தம்.
  • தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் வளம்பெற வேண்டும் என்ற நோக்கில்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தேன். காலம் கனியும் காத்திருப்போம்.

நன்றி: தினமணி  (22 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்