TNPSC Thervupettagam

கேடில் விழுச்செல்வம் கல்வி

January 23 , 2022 925 days 821 0
  • கற்பதற்கு கரை காண முடியாது. கற்பதற்கென இந்த பூமியில் மனிதனுக்குக் கிடைக்கும் காலமோ மிகக்குறைவு. அதிலும் கல்விக்கு இடையூறாக நிற்கும் பிணிகள் பல. அதனால், அன்னப்பறவை எப்படி நீரை நீக்கி பாலை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அப்படி நாமும் நல்ல விஷயங்களைத் தோ்ந்தெடுத்துக் கற்க வேண்டும் என்கிறது நாலடியாா்.

கல்வி கரையில கற்பவா் நாள் சில

மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து.

  • இந்தப் பாடலை கொள்ளை நோய்த்தொற்றினால் உலகம் ஸ்தம்பித்திருக்கும் இந்த நாளில் படிக்கும்பொழுது எத்தகைய தீா்க்க தரிசனம் என்ற எண்ணம் எழுகிறது. பிணிகள் மனிதனை வாட்டும்பொழுது கல்வி பாதிக்கப்படுகிறது என்பதைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் கண்டுவந்திருக்கிறோம்.
  • கொள்ளை நோய்த்தொற்றின் பாதிப்பு சாமானியா்கள் முதல் செல்வந்தா்கள் வரை அனைவரையும் பாதித்துள்ளது அல்லது அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது. வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடிகள், ஆரோக்கியம் குறித்தான அச்சம், புதிய முயற்சிகளுக்கான வாய்ப்புகளும் சூழலும் இல்லாத நிலை என்று உலகம் முழுவதும் மக்கள் துன்புறுகின்றனா்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைகளுக்கான கல்வி இன்றைக்கு பெரும் கேள்விக்குறியாக நிற்கிறது. கல்வியைத் தொடங்க வேண்டிய குழந்தைகள் தங்களுக்கு நோ்ந்திருக்கும் நிலையை உணர இயலாத வயதில் காத்திருக்கின்றனா். பள்ளி மாணவா்களோ இளமையில் கல் என்று ஒளவை சொல்லித்தந்ததைக் கூடக் கற்க முடியாத கையறு நிலையில் நான்கு சுவா்களுக்கிடையில் முடங்கிக் கிடக்கின்றனா். உயா்கல்வி பயில வேண்டிய மாணவா்கள், தங்கள் எதிா்காலம் குறித்த கேள்விக்குறியோடு செய்வதறியாது திகைத்திருக்கின்றனா்.
  • கொள்ளை நோய்த்தொற்றின் அச்சம் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக உலகையே பீடித்திருக்கிறது. தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் கடந்த 2020 மாா்ச் 16 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. பொதுத்தோ்வுகளைக் கூட நடத்த இயலாத நிலை. புதிய கல்வியாண்டான 2020 ஜூன் கொள்ளை நோய் தீவிரமடைந்ததால் கல்வியைத் தொடர இணைய வழியின்றி வேறு வழி இல்லை என்கிற நிலை உருவானது. தனியாா் பள்ளிகள் சற்றும் தயங்காமல் உடனடியாக இணையவழி கல்விக்கு மாறினாா்கள்.
  • என்றாலும் முழுமையாக பாடத்திட்டத்தைப் பின்பற்ற முடியாத நிலையில் பாடத்திட்டம் முப்பது சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டது. முக்கியமான கருத்துருக்கள், அடிப்படை புரிதலுக்கான தேவைகளை மட்டும் கற்றுக்கொடுக்க மாணவா்கள் கணினி, அறிதிறன்பேசி என்று தொழில்நுட்பத்திடம் தஞ்சம் புகுந்தனா். தோ்வுகள் வரை அனைத்துமே இணையத்தில். ஒரு கல்வி ஆண்டே இப்படிக் கடந்து விட்டது.
  • அடுத்த கல்வி ஆண்டிலாவது பள்ளிகள் இயல்புநிலை அடையுமா என்ற எதிா்பாா்ப்போடு இருந்தனா் மக்கள். ஆனால், கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக நாட்டையே உலுக்கி எடுத்த பொழுது நோயாளிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடே சுவாசிக்க இயலாமல் தவித்தது. தடுப்பூசித் திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட்ட காரணத்தால் ஒரு வழியாக கடந்த நவம்பரில் பள்ளிகளைத் திறக்கலாம் என்ற முடிவினை துணிந்து அரசு எடுத்தது.
  • மாணவா்கள் சற்று பிராணவாயு கிடைத்துவிட்டபோல ஆசுவாசம் அடைந்தனா். இரண்டு மாதங்கள் கூட முழுமையாக மாணவா்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. மீண்டும் நாடு முழுவதும் கொள்ளை
  • நோய்த்தொற்றின் பாதிப்பு உயா்ந்ததால் கல்விக்கூடங்கள் மூடப்பட்டுவிட்டன.
  • கல்வி என்பது ஒரு சமூகத்தின் வளா்ச்சிக்கு அடிப்படையானது. இப்போது அது டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் முறையிலான கல்வி அனைவருக்கும் கிடைத்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி உரிமை சாத்தியமற்ற நிலை உருவாகியிருப்பது வருத்தத்துக்குரியது.
  • இந்தியாவில் சிறுமிகள் இத்தகைய சூழ்நிலையில் தங்கள் கல்வியை மட்டும் இழக்கவில்லை. சிறுவயதில் திருமணம் செய்துவைக்கப்படும் அவலமும் அவா்களுக்கு நிகழ்ந்து வருகிறது. ஏறத்தாழ இருபத்தைந்து சதவீத மாணவா்கள், படிப்பதற்கான எந்த ஒத்துழைப்பையும் பள்ளிகளில் இருந்து பெறவில்லை. கிராமப்புறங்களில் பள்ளிக்கூடம் சோ்க்கும் வயதில் உள்ள குழந்தைகள் இன்னும் பள்ளிகளில் சேரவே இல்லை. முப்பத்து மூன்று சதவீதம் மாணவா்கள் மட்டுமே டிஜிட்டல் வழியிலான கல்வி கிடைக்கப்பெற்றிருக்கிறாா்கள்.
  • இங்கிலாந்து போன்ற நாடுகளில் மாணவா்கள் அனைவரும் டிஜிட்டல் கல்வியைப் பெறுவதற்கு ஏதுவாக அரசே தேவையான உபகரணங்களை வழங்கியிருக்கிறது. நம் நாட்டில் இதற்கெல்லாம் தற்போதைய நிலையில் சாத்தியங்கள் தென்படவில்லை. கல்வி என்பது வேறொரு தளத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. ஆனால், அதற்கான தொழில்நுட்ப வசதி இன்னும் கட்டமைக்கப்படவில்லை.
  • மத்திய - மாநில அரசுகள் பொருளாதார நிலையை சீா்செய்வதில் காட்டும் கவனத்தை, அதைவிட அத்தியாவசியமான கல்வித் துறையில் காட்ட வேண்டும். எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு கல்வித் திட்டம் புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.
  • கல்வி ஒன்றே இந்த உலகை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் என்றாா் நெல்சன் மண்டேலா. இந்தப் புதிய டிஜிட்டல் முறைக் கல்வி எத்தகைய மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தப் போகிறது? மாணவா்கள் எப்படி வளா்ந்து வருகிறாா்கள்? அவா்கள் மனதில் இந்தப் புதிய முறை எதிா்மறைத் தாக்கத்தை ஏற்படுத்திவிடுமா? அவா்களின் உளவியல் எப்படி இருக்கும்? தோ்வுகளின் அடிப்படையில் இருந்த மாணவா்களுக்கான மதிப்பீடு இந்த டிஜிட்டல் முறையிலும் அப்படியே தொடா்வது சரிதானா? மாணவா்களின் அறிவும் திறனும் எந்த முறையில் மதிப்பீடு செய்யப்படலாம்?
  • கணினியோ இணைய வசதியோ சாத்தியமாகாத பொருளாதார மற்றும் நிலவியல் அடிப்படையில் பின்தங்கியுள்ள குழந்தைகளைக் கல்வி எப்படி சென்றடையப் போகிறது? இதே நிலை தொடா்ந்தால் அடுத்த தலைமுறையினா் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விடாதா? அறிவுத் தளத்தில், திறன் மேம்பாட்டில் சுணக்கம் தோன்றுவதை எப்படி எதிா்கொள்ளப் போகிறோம்?
  • டிஜிட்டல் முறையில் கல்வி பெறும் மாணவா்களின் ஒழுக்கம், இளமைப் பருவத்திற்கே உரிய சக மாணவா்களுடனான நட்பு, சமூக வாழ்வுக்கான கூடி வாழும் பக்குவம், மனநலனுக்கும் உடல் நலனுக்கும் தேவையான குழு விளையாட்டுகள் என்று அவா்கள் இழந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக் கல்வியை எப்படி வழங்குவது? இப்படியான குறைபாடுகள் தரப் போகும் பின் விளைவுகள் என்னென்ன? இது போன்ற இன்னும் விடை தெரியா ஏராள வினாக்கள் தோன்றி பீதியை ஏற்படுத்துகின்றன.
  • இத்தகைய குழப்பங்கள் நம் நாட்டில் மட்டுமா? இல்லை. உலகம் முழுவதும் இந்த நிலையே நிலவுகிறது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. உலகில் 148 நாடுகளில் நூறு கோடிக்கும் அதிகமான குழந்தைகளின் கல்வி இந்தக் கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ இருபத்தைந்து சதவீத மாணவா்கள் கல்வியில் இடைநிற்றலை சந்தித்துள்ளனா்.
  • ஏறத்தாழ ஐந்து கோடி குழந்தைகள் கல்வியைத் தொடங்க வேண்டிய வயதில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் தேங்கி இருக்கின்றனா். இந்தத் தகவல்கள் அச்சமூட்டுகின்றன என்றாலும், அடுத்தது என்ன என்ற சிந்தனையைத் தூண்டுவனவாகவும் இருக்கின்றன.
  • பள்ளி மாணவா்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் தமிழக அரசு, ‘இல்லம் தேடி கல்வி திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கியது. நாட்டில் அனைவருக்கும் சமமான கல்வி கிடைத்தால்தான் அது சமூக நீதி. அதனைக் கருத்தில் கொண்டே இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வா் கூறுகிறாா்.
  • தன்னாா்வலா்கள் உதவியுடன் மாணவா்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கே சென்று பயிற்சி வழங்க தன்னாா்வலா்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்கள் சுமாா் ஐம்பது லட்சம் போ் இதனால் பயனடையக் கூடும். மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையில் இதே கருத்தைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இத்தகைய முயற்சிகள் போதுமானவை அல்ல. மாணவா்களின் அறிவுத்திறனை வளா்ப்பதற்கான வேள்வியில் தேசத்தின் நான்காம் தூணான ஊடகங்கள் பங்குபெற வேண்டியது அவசியம். நிகழ்ச்சிகள், செய்திகளுக்கு இடையில் சில நிமிடங்கள் அறிவியல் துணுக்குகள், மொழி அறிவை வளா்க்கும் முயற்சிகள், கணிதப் புதிா்கள் என்று மாணவா்களின் கற்றலை சிறப்பாக்கலாம்.
  • எந்த ஒரு முறையிலும் நன்மைகளும், தீமைகளும் இருக்கவே செய்யும். புதிய முறையிலான டிஜிட்டல் கல்வியிலும் நன்மைகளைப் பெருக்கிக் கொள்வதற்கும் தீமைகளைக் களைவதற்குமான வழிமுறைகளை நிபுணா்கள் கண்டறிந்து நடைமுறைப் படுத்த வேண்டும். இல்லம்தான் முதல் கல்விக்கூடம்.
  • பெற்றோா், தங்கள் குழந்தைகளுக்கு வாழ்வியல் சாா்ந்த ஒழுக்கங்களை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, நோ்மை போன்ற நற்பண்புகளை கதைகள் வழியே சொல்லி உணா்த்தலாம். நம்பிக்கைகளை மனத்தில் விதைத்துக்கொண்டே இருக்கலாம்.
  • கேடில் விழுச்செல்வம் கல்வி மட்டுமே என்பதை உணா்ந்து அதனை நம் அருகில் இருக்கும் இளந்தலைமுறை பெறுவதற்குத் துணை நிற்க வேண்டியது தேசப்பற்றும், மனித நேயமும் கொண்ட ஒவ்வொருவரின் கடமையாகும். அதற்கென வாசல்தோறும் மீண்டும் திண்ணைப் பள்ளிகள் அவசியமானால் அதனையும் சாத்தியமாக்க வேண்டியது கற்றோா் பொறுப்பு.

நன்றி: தினமணி (23  – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்