TNPSC Thervupettagam

கையால் கழிவு அகற்றுவோர்: முழுமையாக மீட்கப்பட வேண்டும்

May 22 , 2024 42 days 110 0
  • “கையால் கழிவு அகற்றும் தொழிலில் ஈடுபடுத்தப்படுவோர் பணி செய்யும்போது இறந்தாலோ, கடுமையாக ஊனமுற்றாலோ தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், நகராட்சி ஆணையர், பஞ்சாயத்துத் தலைவர் போன்றோர் மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்யப்பட வேண்டும்.
  • ஆனால், கீழ் மட்டப் பணியாளர் அல்லது ஒப்பந்ததாரரின் கூலி வேலையாள் மீதுதான் முதல் தகவலறிக்கை (FIR) பதிவுசெய்யப்படுகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. கையால் கழிவு அகற்றும் இந்த அவலம் 2026ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கப்பட வேண்டும்” - சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா, நீதிபதி ஜே.சத்யநாராயணா அடங்கிய இரு நபர் அமர்வு சமீபத்தில் அளித்த தீர்ப்பில் தெரிவித்த கருத்து இது.
  • கையால் கழிவு அகற்றுவோர் (Manual Scavengers) என்ற சொற்றொடர் இந்தியாவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது என்று விக்கிப்பீடியா தெரிவிக்கிறது. இந்த மானுட அவலம் சாதியத்தில் வேர் கொண்டிருப்பதால், இழிந்த சாதிகள் என்று சபிக்கப்பட்டவர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலை மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?

பொய் அறிக்கைகளும் உண்மையும்:

  • சாக்கடைகளைத் தூய்மைப்படுத்தும்போது ஐந்து நாள்களுக்கு ஒருவர் உயிரிழக்கிறார் என தேசிய சஃபாய் கரம்சாரிகள் ஆணையம் (National Commission for Safai Karamcharis) சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்தது.
  • இவை அரசு செய்யும் கொலைக் குற்றம் என்கிறார், இந்தக் கேவலத்துக்கு எதிராக வாழ்நாள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெஸவாடா வில்சன். இந்த எண்ணிக்கை ஆணையத்தைச் சென்றடைந்த புள்ளிவிவரம்தான். உண்மை நிலவரம் இன்னும் மோசமாக இருக்கலாம். ஏனெனில், நாட்டின் ஏராளமான மாவட்டங்கள் தங்கள் பகுதிகளில் இந்த அவலம் ஒழிக்கப்பட்டுவிட்டதாகப் பொய் அறிக்கை அளித்திருக்கின்றன.
  • தேசிய சஃபாய் கரம்சாரிகள் ஆணையம், 1993இல் இருந்து, 2022 வரை 1,054 பேராவது மலக்குழியில் இறந்திருக்கின்றனர் என்கிறது. இப்பணியில் உயிரிழப்பவர்களின் சராசரி வயது 32 என்று 2017-2018 ஆண்டு புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்த அமைப்பு சொல்கிறது.
  • மத்திய அரசின் ஒரு கணக்கின்படி 1993-2021 வரை 971 பேர் சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவில் 1,80,657 குடும்பங்கள் கைகளால் கழிவெடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதாகச் சமூகப் பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு, 2011 (Socio Economic Caste Census 2011) சொல்கிறது.

சட்டங்கள் சொல்வதென்ன?

  • இந்த இழிவைத் தடைசெய்யும் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. முதலாவது, கைகளால் கழிவு அகற்றுவோர் பணி நியமித்தல், உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டம், 1993 (Employment of Manual Scavengers and Construction of Dry Latrines [Prohibition Act]). இந்தச் சட்டத்தை மீறுவோருக்குச் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.
  • கடந்த 20 ஆண்டுகளில் இந்தச் சட்டத்தின்கீழ் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை என்பதுதான் வேதனை. ஆகவே, இந்தச் சட்டம் திருத்தப்பட்டு, கையால் கழிவு அகற்றுவோரைப் பணியமர்த்துதலைத் தடை செய்யும் சட்டம் - அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம், 2013 (Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act) கொண்டுவரப்பட்டது.
  • ஆனால், இவை இரண்டுமே ஒடுக்கப்பட்டோருக்கான ஏனைய பல சட்டங்கள்போல் செயலிழந்து கிடக்கின்றன. சட்டத்தை மீறி இப்பணியில் ஈடுபடுத்துவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மேற்குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறியுள்ளதுபோல, அடித்தட்டுப் பணியாளர் எவரேனும் தண்டிக்கப்படுவது மட்டுமே நடக்கிறது.

பி.எஸ்.கிருஷ்ணனின் பங்களிப்பு:

  • மேலே குறிப்பிட்ட இரண்டு சட்டங்களையும் உருவாக்குவதற்குப் பல ஆண்டுகள் பாடுபட்டு உழைத்தவர் மறைந்த ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன். ஒவ்வொரு சட்டத்தை வகுப்பதற்கும் அவர் அளித்த பல பரிந்துரைகளில் ஒரு சிலவே ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளாமல் விடப்பட்ட சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
  • இந்தியச் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினரும் விடுதலையும், சமத்துவமும், கண்ணியமும், அவற்றுக்கான வாழ்வாதாரங்களும் பெறுவதற்கான, விரிவான, விவரமான ஒரு பயணப் பாதையை கிருஷ்ணன் வகுத்துக் கொடுத்திருக்கிறார். கையால் கழிவு அகற்றுவோருக்கான பாதையும் அதில் அடங்கும்.
  • சாதியச் சமுதாயம் தன் பல்லாண்டு கால மாபாதகத்துக்கு மன்னிப்புக் கேட்பதுடன், பரிகாரம் தேடும் முயற்சிகளையும் தொடங்க வேண்டும். முதலில் சட்டத்தை மீறி, இவர்களைப் பணியமர்த்துவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இந்த இழிவை ஒழிக்கச் சட்டம் மட்டும் போதாது. இத்தொழில்கள் தேவையில்லை என்கிற நிலை உருவாக வேண்டும்.

செய்ய வேண்டியவை:

  • முதல் முன்னுரிமையாக, மற்ற நாடுகள்போல் சாக்கடை, கழிப்பறைகள், கழிவுநீர்த் தொட்டிகள் சுத்தப்படுத்தப்படும் முறை முழுமையாக இயந்திரமயமாக்கப்பட வேண்டும். இத்தொழிலிலிருந்து இவர்கள் மீட்கப்பட்டவுடன், மாற்றுத் தொழில்களில் பணி அமர்த்தப்பட வேண்டும்.
  • இத்தகைய வேலைகளைச் செய்வதற்கு யாரும் கிடைப்பதில்லை என்கிற நிலை உருவாக வேண்டும். மீட்கப்படுபவர்கள் கல்வி, தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, கண்ணியமான பணிகள் என்று கருதப்படும் தொழில்களில், முன்னுரிமை அடிப்படையில் பணி அமர்த்தப்பட வேண்டும்.
  • இத்தொழில்களிலிருந்து மீட்கப்படுவோர் மட்டுமல்ல, அவர்கள் எந்தச் சாதிகளிலிருந்து இத்தொழிலுக்கு வருகின்றார்களோ, அந்தக் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தோர் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியும், பல்தொழில் பயிற்சிகளும், பணி அமர்த்தலும் நடைபெற வேண்டும். ஏனெனில், ஒருவர் மீட்கப்பட்டால், அந்தச் சமூகத்திலிருந்து இன்னொருவர் அந்தத் தொழில் செய்ய அழைக்கப்படுவார். இந்தச் சங்கிலித் தொடரை முதலில் உடைக்க வேண்டும்.
  • அந்தச் சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் சிறந்த தரமுடைய இலவசக் கல்வி அளிக்க உயர்தரப் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகளை அரசு நிறுவ வேண்டும். மற்றவர்களைவிட உயர்தரமான கல்வி வசதி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் வரலாறு முழுதும் கல்வியும் கண்ணியமும் மறுக்கப்பட்ட இவர்களுக்கும், மற்றவர்களுக்குமான 1,000 ஆண்டுகால இடைவெளியைக் கொஞ்சமாவது குறைக்க இயலும்.
  • நாடு முழுதும் பால் விநியோகம் செய்யும் தொழிலில் அரசின் பால் விற்பனை மையங்களில் (Milk Booths) இவர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும். மறுவாழ்வு பெறும் இம்மக்களின் கைகளிலிருந்து மட்டும்தான் இந்நாட்டு மக்கள் பால் வாங்க முடியும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.
  • இத்தொழிலாளர்களை மிக அதிகமாகச் சுரண்டுவது ரயில்வே துறைதான். அதற்குப் பரிகாரமாக ரயில் நிலையங்களில், வண்டிகளில் அனைத்து சமையல், உணவு விநியோகம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றில் இம்மக்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட வேண்டும்.
  • ரயில் நிலையங்களில் உணவகம், மற்ற உணவு விற்பது சார்ந்து தனியாருக்கு ஒப்பந்தத்துக்கு விடப்படும்போது, இத்தொழிலாளர்களும், அவர்களின் சாதிகளைச் சேர்ந்தவர்களும் மட்டுமே அனைத்துப் பணிகளிலும் அமர்த்தப்பட வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகவே விதிக்கப்பட வேண்டும்.
  • இவை சில எடுத்துக்காட்டுகள்தாம். பல தொழில்களிலும் இம்மக்களுக்கு இத்தகைய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் இவர்களுக்கான பணி ஒதுக்கீடு அல்ல. நமது அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தியிருக்கும் தீண்டாமை ஒழிப்புக்கான அடிப்படைக் கடமைகள்.
  • சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஒளியில் மத்திய அரசும் தமிழக அரசும் இந்த மாபெரும் மானுட இழிவை ஒழிக்கும் உறுதியை ஏற்று, உடனடித் திட்டங்கள் தீட்டி நிறைவேற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்