TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 10

August 20 , 2022 719 days 394 0

இந்தியா-பாக் இணைந்த ஏ.ஆர்.ஆரின் வந்தே மாதரம்

  • சுதந்திரப் பொன்விழாவை நாடே கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களும் இசை ரசிகர்களும் மறுபடியும் மறுபடியும் கேட்டுப் பரவசமடைந்த இசை ஆல்பமாக வெளி வந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் `வந்தே மாதரம்'. ஆல்பத்தின் முகப்பு பாடலாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்த `மா துஜே சலாம்' (இந்தி வடிவம்), ‘தாய்மண்ணே வணக்கம்’ (தமிழ் வடிவம்) இளைஞர்களைப் பெரிதும் வசீகரித்தது.
  • இசைத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு நிறுவனமான சோனி, ஏ.ஆர்.ரஹ்மான் உடனான இந்த ஆல்பத்தின் வழியாகத்தான் இந்தியாவில் கால்பதித்தது.
  • "இந்த ஆல்பத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு, எந்த நாட்டு இசைக் கலைஞர் தேவைப்பட்டாலும் நீங்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் சோனி நிறுவனம் தெரிவித்திருந்தது.
  • அந்த ஆல்பத்தின் `குருஸ் ஆஃப் பீஸ்' (Gurus of Peace) என்னும் பாடலைப் பாடுவதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல சூஃபி பாடகர் நுஸ்ரத் ஃபதே அலிகானைத் தேர்ந்தெடுத்தார். நுஸ்ரத்தின் சூஃபி பாடல்களுக்கு ஏற்கெனவே ரசிகராக இருந்த ரஹ்மான், `சந்தா சூரஜ் லாக்கோன் தாரே... ஹேய்ன் ஜப் தேரே ஹியே ஸாரே..' எனத் தொடங்கும் பாடலை பாகிஸ்தானுக்குச் சென்று நஸ்ரத் ஃபதே அலிகானைப் பாடவைத்துப் பதிவு செய்துவந்தார்.
  • திரையிசை அல்லாத இசை ஆல்பங்களில் விற்பனையில் சாதனை படைத்தது ‘வந்தே மாதரம்’. சர்வதேச அளவில் அதிகமானோரை ஈர்க்கவும் செய்தது. ஓர் இந்தியரும் பாகிஸ்தானியரும் இணைந்த முதல் இசை ஆல்பம் `வந்தே மாதரம்' என்பது இந்த ஆல்பத்தின் மற்றுமொரு சாதனை!

விளையாட்டு: தடகள நாயகன்

  • சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் தலைசிறந்த தடகள வீரராக உருவானவர் மில்கா சிங். 1935இல் பஞ்சாபின் கோவிந்த்புராவில் (இன்றைய பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர்.
  • 1947 இல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில் மில்கா சிங்கின் பெற்றோர் கொல்லப்பட்டனர். தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்துசேர்ந்தார் மில்கா சிங். டெல்லியில் தங்கியிருந்த காலத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தார்.
  • ராணுவத்தில் சேர்ந்த பிறகுதான், மில்கா சிங்கின் வாழ்க்கை மாறியது. ராணுவத்தில் இருந்தபோது ஓட்டப்பந்தயங்களில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே ஓட்டப் பயிற்சிகளை மேற்கொண்டுவந்தார்.
  • பிரிட்டனில் உள்ள கார்டிப் நகரில் 1958 காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மில்கா சிங் இந்தியாவுக்கு முதன்முறையாகத் தங்கப் பதக்கத்தைப் வென்றுகொடுத்தார். அதே ஆண்டில் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 200 மீ., 400 மீ. ஓட்டப்பந்தயங்களில் மில்கா சிங் தங்கப் பதக்கம் வென்றார்.
  • 1960இல் பாகிஸ்தானில் நடைபெற்ற ‘அழைப்பு ஓட்டப் போட்டி’யில் அப்துல் காலிக் என்ற பிரபல பாகிஸ்தான் வீரரைத் தோற்கடிக்க மில்கா சிங் ஓடிய ஓட்டத்தைப் பார்த்து, அந்நாட்டு அதிபர் அயூப் கான் வியந்தார். மில்கா சிங்கை ‘பறக்கும் சீக்கியர்’ என்று அவர் பெருமைப்படுத்தினார்.
  • 1960 ரோம் ஒலிம்பிக்கில் 400 மீ. ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மில்கா சிங் நான்காமிடத்தைப் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார். அதே நேரம், 1962 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். சுதந்திர இந்தியாவில் தடகள விளையாட்டுகளுக்குத் தனி அடையாளம் ஏற்படுத்தித் தந்தவர் மில்கா சிங்.

திரையுலகம்: முறைசார்ந்த நடிப்பின் முன்னோடி

  • இந்திய சினிமாவை உலக அரங்கில் பெருமைகொள்ள வைத்த நடிகர்களில் ஒருவரான திலீப் குமார் (இயற்பெயர் முகமது யூசுப் கான்), இன்றைய பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு அருகே ஒரு பழ வியாபாரியின் 12 குழந்தைகளில் ஒருவராக 1922இல் பிறந்தவர். பின்னர் அவருடைய குடும்பம் மகாராஷ்டிரத்தில் குடியேறிவிட்டது.
  • பழ வணிகத்தை கவனித்துவந்த யூசுப், திலீப் குமார் என்னும் புனைபெயருடன் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த முதல் மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. ’ஜுக்னூ’ (1947), ‘ஷாஹீத்’ (1948) ஆகிய படங்களின் வெற்றி பாலிவுட்டில் அவரை நிலைநிறுத்தியது. 1950-களில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். துயரம் நிரம்பிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து சிறப்பாக நடித்ததால், இவர் ‘டிராஜடி கிங்’ (துயரக் கதை அரசன்) என்னும் பெயரைப் பெற்றார். அதே நேரம் வாள்சண்டைப் படமான ‘ஆன்’ (1952), நகைச்சுவைப் படங்களான ‘ஆசாத்’ (1955), ‘ராம் அவுர் ஷ்யாம்’ (1967) ஆகியவற்றிலும் சிறப்பாக நடித்திருந்தார். 1980-களில் குணச்சித்திர நடிகராகத் தன் நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்தார்.
  • முறைசார்ந்த நடிப்பு (Method Acting) என்னும் நடிப்பு வகைமையை இந்தியாவில் பிரபலப்படுத்திய முன்னோடி திலீப் குமார். எந்த நடிப்புப் பள்ளியிலும் பயிலாமல், அவரே தன் பாணியில் அதை வடிவமைத்துக்கொண்டார். பெருமதிப்புக்குரிய இயக்குநர் சத்யஜித் ராய், திலீப் குமாருடன் பணியாற்றியதில்லை என்றாலும் அவரை மிகச் சிறந்த ’முறைசார்ந்த நடிகர்’ என்று புகழ்ந்துள்ளார்.
  • அமிதாப் பச்சன். நஸீருதின் ஷா, கமல் ஹாசன், ஷாருக் கான், ஆமீர் கான், இர்ஃபான் கான், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற இந்திய நடிகர்களில் பலர், திலீப் குமாரைத் தமது ஆதர்சமாகக் கொண்டவர்கள். நிறைவாழ்வு வாழ்ந்த திலீப் குமார், கடந்த ஆண்டு காலமானார்.

சர்வதேச கவனம் ஈர்க்கும் இந்திய நவீன எழுத்து

  • சர்வதேச அரங்கில் ரஷ்ய, ஆங்கில, லத்தீன் இலக்கியங் களுக்குத் தனி இடம் உண்டு. உலகின் கிளாசிக் படைப்புகள் பல இம்மொழிகளில் இயற்றப் பட்டுள்ளன.
  • இதற்கிடையில் பல்லாண்டுக் காலம் காலனிய ஆட்சியின் பிடியில் இருந்து மீண்ட ஒரு தேசம், சர்வதேச இலக்கிய அரங்கில் தனது இருப்பை உயர்த்துவது என்பது கவனத்திற்குரிய ஒன்று. இந்தியா தனது செழிப்பான பண்பாட்டு, மொழி அறிவால் இதை மிக எளிதாகவும் வியக்கத் தக்க வகையிலும் நிகழ்த்தியிருக்கிறது.
  • பிரிட்டிஷ் இந்தியக் கால கட்டத்து எழுத்தாளர்களுக்குப் பிறகு ஒரு புதிய எழுச்சி, இந்திய இலக்கியத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு உதயமானது. காலனிய ஆட்சியின் முடிவும் இந்தியப் பிரிவினையும் மொழிவாரி மாநிலப் பிரிப்பும் இந்த எழுத்துகளுக்கு அடிப்படையாயின.
  • இந்தப் பின்னணியில் குஷ்வந்த் சிங், சல்மான் ருஷ்டி போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உருவாகினர். ரவீந்திரநாத் தாகூர் பல்லாண்டு காலம் முன்பே நோபல் பரிசு பெற்றிருந்தாலும், இந்தியாவின் நிலை குறித்த யதார்த்தமான சித்தரிப்பு இந்திய சுதந்திரத்துக்குப் பிறகுதான் சர்வதேச ஆங்கில இலக்கிய அரங்கில் கவனம் பெற்றது.

குஷ்வந்தும் ருஷ்டியும்

  • புகழ்பெற்ற பத்திரிகையாள ரான குஷ்வந்த் சிங்கின் ‘ட்ரெயின் டூ பாகிஸ்தான்’ நாவல், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை மனோ மஜ்ரா என்னும் ஒரு கற்பனையூரைக் கொண்டு சித்தரிக்கிறது. நாடு துண்டானதால் அதுவரை வாழ்ந்து வந்த ஊரில் இருந்து சீக்கிய-இஸ்லாமிய மக்கள் இருவேறு திசையில் நாடுகடத்தப்படுகிறார்கள்.
  • பாகிஸ்தானியர்களை, இந்தியர்களை ஒருபோலப் பாதித்த இந்த நிகழ்வை குஷ்வந்த் சிங் தன் தனித்துவமான மொழியால் இயல்பாகச் சித்தரித்திருந்தார்.
  • குஷ்வந்த் சிங், தனது தடாலடியான பத்தி எழுத்தால் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றவர். இந்திய ஆங்கில எழுத்துலகில் ஒரு நட்சத்திர எழுத்தாளராகப் போற்றப்பட்டார். இலக்கியம், இதழியல் ஆகிய இரண்டு துறைகளில் தன் திறமையை வெளிப்படுத்தியவர் குஷ்வந்த் சிங்.
  • இதே இந்தியா - பாகிஸ் தான் பிரிவினையைப் பின்னணி யாகக் கொண்ட ‘மிட்நைட்ஸ் சில்ரன்’ என்னும் நாவல் வழியாக சர்வதேச இலக்கிய அரங்கில் தனிக் கவனம் பெற்றவர் சல்மான் ருஷ்டி. இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில் பிறக்கும் சலீம் சினாய் என்னும் குழந்தையை மையமாகக் கொண்ட இந்த நாவல், மாயயதார்த்த ரீதியில் இந்தியாவின் கதையைச் சொல்கிறது.
  • இந்த நாவல் சிறந்த நாவலுக்கான புக்கர் பரிசைப் பெற்றது. சல்மான் தன் விவரிப்புக்காகத் தேர்ந்தெடுத்த லத்தீன் அமெரிக்க பாணியை ஒத்த மொழிநடை, சர்வதேச அரங்கில் அவருக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. இதே பாணியில் அவர் எழுதிய ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ நாவல் பெரும் புகழையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. சர்வதேச அரங்கில் இவரது நாவலின் விற்பனை உரிமையைக் கைப்பற்ற பதிப்பகங் களுக்குள் பெரும் போட்டி நடந்ததன் வழி அவரது எழுத்தின் வல்லமையை உணரலாம்.

கவனம் ஈர்த்த பெண் எழுத்து

  • ஆங்கில இலக்கிய அரங்கில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் புக்கருக்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட இந்திய எழுத்தாளர் அனிதா தேசாய். ‘க்ளியர் லைட் ஆஃப் டே’ என்னும் இவரது நாவல் இந்தியப் பிரிவினையை மையமாகக் கொண்டது. இவரது அடுத்த நாவலான ‘இன் கஸ்டடி’ உருது கவிதைகளின் மீது மோகம் கொண்ட இந்திப் பேராசிரியர் ஒருவரின் கதையைப் பின்புலமாகக் கொண்டது.
  • பிரபல உருதுக் கவிஞர் நூரை நேர்காணல் செய்யும் அரிய வாய்ப்பு அந்த இந்திப் பேராசிரியருக்குக் கிடைக்கிறது. ஆனால், உருதுக் கவிஞரின் பரிதாப நிலையைக் கண்டு, அதை மேற்கொள்ளாமல் தவிர்க்கிறார் பேராசிரியர்.
  • கவிஞரின் நிலையுடன் உருதுக் கவிதையின் நிலையையும் அனிதா தேசாய் இந்த நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார். யதார்த்தவாத நடையில் எழுதப்பட்ட இந்த நாவல் சர்வதேச அரங்கில் பெரும் கவனம் பெற்றது.
  • தன் முதல் சிறுகதைத் தொகுப்புக்காக புலிட்சர் விருது வென்று சர்வதேச இலக்கிய அரங்கில் கவனத்தை ஈர்த்தவர் ஜும்பா லாஹிரி. ‘இன்டர்பிரிட்டர் ஆஃப் மாலடீஸ்’ என்னும் தலைப்பில் வெளியான 10 சிறுகதைகளின் தொகுப்பு, அதன் கூற்று மொழியாலும் தனித்துவமான பண்பாட்டுப் பின்னணியாலும் அமெரிக்க ஆங்கில இலக்கிய உலகில் பெரிதும் கொண்டாடப்பட்டது.
  • திருமணமான இந்திய ஆணைக் காதலிக்கும் ஆங்கிலப் பெண், அமெரிக்காவில் வாழும் இந்திய வங்கக் குடும்பம் எனப் பலதரப்பட்டவர்களின் வாழ்க்கையை இந்தக் கதைகள் வழி லாஹிரி சித்தரித்துள்ளார். புலம்பெயர் சூழலின் அடையாளச் சிக்கல், நவீன வாழ்க்கை முறை போன்ற பண்புகள் லாஹிரியின் எழுத்தினுடைய மையம். யதார்த்த முறையில் கதைகள் சொல்வது இவரது மொழித் திறன்.
  • கலாச்சார சிக்கலை மையமாகக் கொண்ட ‘நேம்சேக்’ என்னும் நாவலை லாஹிரி எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் வாழப் புறப்படும் இந்திய வங்கக் குடும்பம்தான் நாவலின் பின்னணி. இந்த நாவல் இதே பெயரில் மீரா நாயர் இயக்கத்தில் படமாகவும் வெளியானது.

அருந்ததியின் புதுமைப் படைப்பு

  • தென்னிந்தியப் பின்னணியில் எழுதப்பட்ட அருந்ததி ராயின் ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவல், சர்வதேச அரங்கில் எதிர்பார்க்கப்படாத வரவேற்பைச் பெற்றது. கேரளத்தில் அய்மனம் என்னும் சிற்றூரில் நடக்கும் கதையை, துள்ளலான மொழியில் ராய் கூறியிருந்த விதம் சர்வதேச அரங்கில் கவனத்தைப் பெற்றுத்தந்தது. சல்மான் ருஷ்டிக்குப் பிறகு ராயின் இந்த நாவல் புக்கர் பரிசைப் பெற்றது.
  • வங்க-கேரளப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளின் விவரிப்பில் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கலாச்சார முரண், கதை நிகழும் கேரளத்தின் அரசியல், வர்க்கப் பாகுபாடு எனப் பல அம்சங்கள் இந்த நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும். தீவிரத்தன்மை கொண்ட இந்த நாவலை குழந்தைகளின் உயரத்துக்கு ராய் இழுத்து வந்துள்ளார். இது வாசகர்களுக்கு புது வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடியது.
  • தி கல்கத்தா குரோமோசோம்’ என்னும் அமிதவ் கோஷின் மருத்துவப் புலனாய்வு நாவல் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இந்தியாவில் மலேரியா பாதிப்பை ஆராய்ந்து நோபல் பரிசு பெற்ற ரொனால்டு ராஸை நாயகனாகக் கொண்டது இந்த நாவல். கொல்கத்தா, நியூயார்க் ஆகிய இரண்டு நகரங்களில் இந்த நாவலின் கதை நடைபெறுகிறது.
  • சென்னையில் பிறந்த பத்திரிகையாளார் அரவிந்த் அடிகாவின் ‘ஒயிட் டைகர்ஸ்’ நாவலும் புக்கர் பரிசு வழியாக ஆங்கில இலக்கிய உலகில் கவனம் பெற்றது.
  • சமீபத்தில் தன் இந்தி நாவல் ‘டூம் ஆஃப் சான்ட்’க்காக சர்வதேச புக்கர் பரிசு பெற்ற கீதாஞ்சலிக்கும் கவனம் கிடைத்துள்ளது. இப்படிப் பல்வேறு வகைமைகளில் சர்வதேச அரங்கில் இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. வருங்காலங்களில் இந்தப் பட்டியல் நீளும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

நன்றி: தி இந்து (20 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்