TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 26

September 7 , 2022 702 days 416 0

நிலைக்கும் ‘மாநிலங்களின் ஒன்றியம்’

  • தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் உரிமையாளர் குடும்பத்தைச் சேர்ந்த சி.எல். சுல்ஸ்பர்கர் 1952இல் இந்தியா வந்திருந்தார்; அப்படி வந்திருந்தபோது பிரதமர் ஜவாஹர்லால் நேருவை அவர் சந்தித்தார்.
  • வெவ்வேறு திசைகளில் இழுக்கக்கூடிய வேறுபாட்டு அம்சங்களே மிகுந்திருக்கும் இந்த நாட்டை, எந்த அம்சம் இப்படி ஒரே அமைப்பாக சேர்த்துப் பிடித்துக்கொண்டிருக்கிறது?” என்று இளமைத் திமிரோடு அவர் கேட்டார். ஆணவமும் வியப்பும் கலந்து அவர் கேட்ட கேள்விக்கு, நேரு மிகவும் பொறுமையாக விளக்கம் அளித்தார்:
  • ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், அது மக்களுடைய தேசிய உணர்வு; இந்த உணர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல, நீண்ட காலமாகவே மக்களுடைய உள்ளங்களில் ஊறியிருக்கிறது. இந்தியாவின் பழைய வரலாற்றைப் புரட்டினால், அரசியல்ரீதியாக இந்த நாட்டை வெவ்வேறு மன்னர்கள் ஆண்டதால் இது பிளவுபட்டுத்தான் இருந்தது, ஆனாலும் ஒரே அலகாகத் தொடர்ந்தது.
  • ஒரே விதமான பாரம்பரிய சிந்தனைகளும், அனைவருக்கும் பொதுவான கலாச்சாரப் பின்னணியும் இந்தியா முழுக்கப் பரவியிருக்கிறது. இந்திய மக்கள் அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதில் கவனம் செலுத்தியவர்கள் மன்னர்களும் மாமன்னர்களும்தாம்.
  • கடந்த காலத்திலிருந்து தொடரும் இந்தப் பொதுவான பின்னணித் தொடர்பை மேலும் வலுப்படுத்தியது இரண்டு அரசியல் நிகழ்வுகள்தாம். அதில் ஒன்று, பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டுக்கு வாணிபம் செய்ய வந்து, பிறகு இதை அடிமைப்படுத்தி ஆக்கிரமித்ததுதான்”.
  • சுல்ஸ்பர்கரின் கேள்வி அவருக்கு மட்டும் தோன்றியதல்ல, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலருக்கும் இன்றளவும் தொடர்வது. சிலர் அப்பாவித்தனமாகவும் சிலர் விஷமமாகவும் இதைக் கேட்கின்றனர்.
  • இந்தியா எப்படி ஒரே தேசிய நாடாக இன்னமும் நீடிக்கிறது என்பதுதான் அவர்கள் முன் உள்ள கேள்வி. நேருவின் பதிலும், இந்த நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களுடைய உறுதியான செயல்பாடுகள் – தன்னம்பிக்கை ஆகியவற்றின் வெளிப்பாடும்தான் அப்படி நீடிப்பதற்குக் காரணம்.
  • இந்த நாட்டுக்குள் எவ்வளவுதான் பிரச்சினைகள் வந்தாலும் சோதனைகள் ஏற்பட்டாலும் மக்கள் ஒற்றுமை காப்பார்கள் - இந்தக் குடியரசு நீடிக்கும் என்பதே அது. அது அப்படித்தான் நீடித்து வருகிறது. ‘மாநிலங்களின் ஒன்றியமாக’ இந்தியா இன்னமும் தொடர்வதற்குக் காரணம், அரசியல் சமரசங்களிலும் விட்டுக்கொடுத்து ஒற்றுமையை வளர்க்கும் கலையிலும் நாம் கைதேர்ந்தவர்களாகிவிட்டோம் என்பதால்தான்.

ஐந்து காரணங்கள்

  • இந்தியாவில் 1950 ஜனவரி 26இல் அமலுக்கு வந்த அரசமைப்பு, அச்சு அசலான கூட்டாட்சிக்கானதாக வரையறுக்கப்படவில்லை. மாறாக, மாநிலங்களைவிட மத்திய அரசுக்கே அதிக அதிகாரங்களும் பொறுப்புகளும் இருக்குமாறு வகுக்கப்பட்டது. காரணம் அன்றைய சூழலில் அது வேறு மாதிரியாக இருந்திருக்க முடியாது. வலுவான மத்திய அரசு இருக்க வேண்டும் என்ற விருப்பத்துக்குக் காரணங்களாக ஐந்து அகத் தூண்டல்களும் உத்வேகமும் வரலாற்றில் ஒன்றாக சங்கமித்துவிட்டன.
  • முதலாவது, மக்கள் கூட்டத்துக்கு தங்களுக்கு எது சரியானது என்பதை முடிவெடுக்கும் திறன் இருக்காது என்ற ஜனநாயகத்துக்கு முரணான உள்ளுணர்வு. நிலப்பிரபுத்துவத்தையும் மன்னராட்சியையும் ஆதரித்து பிறகு அரசியல் கட்சிகளில் இடம்பெற்ற பலருக்கு, வலுவான ஒரு சர்வாதிகார மையம் அவசியம் என்கிற எண்ணம் இருந்ததால் மத்திய அரசும் அப்படி அமைய வேண்டும் என்பது இன்றியமையாதது என்று கூறிவிட்டனர்.
  • இரண்டாவது, பாரத அன்னையின் இழந்த பெருமையை மீண்டும் உலகில் நிலைநாட்ட வலுவான மத்திய அரசு அமைய வேண்டும் என்பதை முன்நிபந்தனையாகவே கே.எம். முன்ஷி போன்ற இந்து மறுமலர்ச்சிக் கொள்கையாளர்கள் வலியுறுத்தினர்.
  • தன்னைக் காத்துக்கொள்ளும் வலிமையற்ற, மக்களிடம் செல்வாக்கில்லாத அரசுகள் ஆட்சி செய்த போதெல்லாம் எப்படி அந்நியர்கள் இந்த நாட்டில் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றி அடிமைகளாக்கினர் என்பதற்கு வரலாற்றிலிருந்தே அவர்களால் பல உதாரணங்களைக் காட்ட முடிந்தது. மீண்டும் அப்படி நேராமல் இருக்க வேண்டும் என்றால் மத்திய அரசு வலுவானதாக அமைய வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்தனர்.
  • மூன்றாவதாக, சுதந்திரத்துக்கு முன்னதாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த நிகழ்வு அனைவருடைய மனங்களிலும் ஆறாத வடுவையும் பெரும் துயரையும் பாகிஸ்தானுக்கு எதிரான உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் வலுவற்ற கூட்டாட்சி என்பது விரும்பத்தக்கதும் அல்ல, பகுத்தறிவுக்கும் ஏற்றதல்ல என்ற முடிவே அனைவரிடமும் ஏற்பட்டிருந்தது.
  • பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட சேதங்களும் சோகங்களும் நாட்டில் நிலையான ஆட்சி இருக்க வேண்டும், சட்டம் – ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை அனைவரிடமும் வலுவாகப் பதியவைத்திருந்தது. அது வலுவான மத்திய அரசு இருந்தால்தான் சாத்தியம் என்கிற அடிப்படையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
  • நான்காவதாக, படித்த மேல்தட்டு சிந்தனையாளர்கள், புதிய இந்தியா மதச்சார்பற்றதாகவும் நவீனமானதாகவும் அறிவியலுக்கு முன்னுரிமை தருவதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினர். இதற்கு நாட்டின் மனித வளங்களையும் இதர சாதனங்களையும் திரட்டி, வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும், அதற்குத் திறமையும் தகுதியும் உள்ளவர்களை நாடு முழுவதிலிருந்தும் தேடிக் கண்டெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதால், வலுவான மத்திய அரசு அவசியம் என்பது உணரப்பட்டது. நாடு முன்னேறவும் வளம் பெறவும் மத்திய அரசு அதிகாரங்கள் மிக்கதாக இருக்க வேண்டும் என்று நாட்டின் அதிகாரவர்க்கமும் விரும்பியது.
  • இறுதியாக, அன்றைய தேசியத் தலைவர்கள் அனைவருமே மாநில, மொழி, மத, இன எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டனர், மதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோருடைய கூட்டு செல்வாக்குக்கு இணையாக அந்த நாளில் எதுவுமே இல்லை.
  • அவர்கள் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் மரியாதையும் வெகு இயல்பானது, கேள்விக்கு அப்பாற்பட்டது. அவ்விருவருடைய ஆளுமைக்கு ஏற்ற அரசு என்றால், அது வலுவான மத்திய அரசாகத்தான் இருக்க முடியும் என்ற நிலை தோன்றிவிட்டது. அன்றைய அரசியல் களத்தில் காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல கம்யூனிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும்கூட மக்களால் மதிக்கப்பட்ட தலைவர்களாக இருந்தனர். அவர்களும் நாடு தொடர்பாக அனைத்தையுமே தேசிய நோக்கில்தான் பார்த்தார்கள், மாநிலக் கண்ணோட்டம் அவர்களுக்கு இருந்ததே இல்லை.

சாதகமாக்கிக்கொண்ட உணர்வு

  • இந்த ஐந்து உண்மைகளும் ஒன்று கலந்ததால், வலுவான மத்திய அரசு என்கிற கொள்கைக்குச் சிறிதளவும் எதிர்ப்பே இல்லை. நாடு சுதந்திரம் அடைந்த உடனே தேசியத் தலைவர்களுக்குப் பாராட்டும் ஆதரவும் குவிந்தவண்ணம் இருந்தாலும், அவற்றையெல்லாம் ‘வலுவான மத்திய அரசு’ என்ற கருத்துக்கு ஆதரவை உருவாக்கவும், பிறகு அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கவும், அரசமைப்பு தொடர்பான பிறவற்றின் வலுப்படுத்தல்களுக்குமே பயன்படுத்திக்கொண்டனர். மக்களிடமிருந்த ஜனநாயக ஆதரவு உணர்வுகளை இதற்குச் சாதகமாக்கிக் கொண்டனர்.
  • உதாரணத்துக்கு, உள்துறை அமைச்சர் சர்தார் படேல் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் 1947 டிசம்பர் 17இல் பேசியதைப் பார்ப்போம்: “ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரம் செய்ய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி அதிகாரத்தைக் கேட்கவில்லை, மக்களுக்கு சேவை செய்யத்தான் அதிகாரத்தைக் கோரினோம்.
  • சீக்கிஸ்தான், ஜாட்டிஸ்தான், ராஜஸ்தான் என்ற குறுகிய பிரதேச உணர்வு உங்களுக்கு இருந்தால், உலகம் இன்றிருக்கும் நிலையில் அவையெல்லாம் உங்களுக்கு எந்த நன்மையையும் செய்யாது என்பதைக் கூற விரும்புகிறேன். அவ்வாறெல்லாம் குறுகிய சிந்தனையுடன் நாம் வாழ முடியாது. இந்த அரசு மக்களுக்கானது; ஏழை - பணக்காரர், இந்து – முஸ்லிம் – பார்சி – கிறிஸ்தவர்கள் என்று அனைவருக்குமானது.
  • அரசின் நடவடிக்கைகளை நாம் எப்படி நடத்த வேண்டும் என்றால், இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் ‘இது நம்முடைய அரசு’ என்று நினைக்க வேண்டும். காலங்கள் மாறிவிட்டன, கடுமையாக உழைக்கிறவர்களுக்கு மட்டுமே அரசு சொந்தம், சோம்பேறியாக உட்கார்ந்திருப்ப வர்களுக்கு அல்ல. எப்படி, எதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சமூகத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள மக்களின் நல்வாழ்வுக்காக அரசின் அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

விளையாட்டு: ஒலிம்பிக் நாயகி

  • இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் பெண் என்கிற பெருமையை கர்ணம் மல்லேஸ்வரி படைத்தது, ஒரு வரலாற்றுச் சாதனை.
  • சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பில் பல வீராங்கனைகள் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால், பதக்கம் வென்றதில்லை என்கிற குறை இருந்துவந்தது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் 2000இல் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில்தான் இந்தக் குறை முடிவுக்குவந்தது.
  • அந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 44 வீரர்கள், 21 வீராங்கனைகள் என 65 பேர் பங்கேற்றார்கள். பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் சோபிக்காமல் போனார்கள். ஆனால், முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஆந்திரத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, வெண்கலப் பதக்கம் வென்று, சிட்னி ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம்பெறக் காரணமாக இருந்தார்.
  • மகளிருக்கான பளுதூக்குதல் 69 கிலோ பிரிவில் பங்கேற்ற மல்லேஸ்வரி ‘ஸ்நாட்ச்’ பிரிவில் 110 கிலோவையும், ‘கிளீன் & ஜெர்க்’ பிரிவில் 130 கிலோவையும் தூக்கி வெற்றியை வசப்படுத்தினார். வெண்கலப் பதக்கத்தைப் பெறுவதற்காக மல்லேஸ்வரி தலைகுனிந்தபோது, தேசம் தலை நிமிர்ந்தது. இந்த வெற்றியின் மூலம் தனிநபர் பிரிவில் முதன்முதலாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்கிற சிறப்பையும் மல்லேஸ்வரி பெற்றார்.

இசை: நேருவைக் கலங்கவைத்த லதாவின் பாடல்

  • இந்தியா முழுவதும் இசையாக வியாபித்திருப்பவர் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருதைப் பெற்ற இரண்டாவது பாடகர் இவர்.
  • அவருடைய தந்தை பண்டிட் தீனாநாத் இசைக் கலைஞர், நாடக நடிகர். `மெஹல்' என்னும் திரைப்படத்தில் ஹேம்சந்த் பிரகாஷ் இசையில் `ஆயேகா ஆனேவாலா' என்னும் பாடலைப் பாடி தன்னுடைய இசை வாழ்க்கையை லதா தொடங்கினார். அவருடைய குரலில் 1960இல் வெளியான `மொகல் இ ஆஸம்' படத்தின் `பியார் கியா தோ தர்னா கியா' கிளாஸிக் ரகம். இந்திய மொழிகள், அயல் நாட்டு மொழிகள் உள்ளிட்ட 36 மொழிகளில் லதா மங்கேஷ்கரின் குரலை உலகின் பல நிலப்பரப்புகளில் வாழ்ந்த மக்களும் கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
  • லதா மங்கேஷ்கருக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு நெடிய பாரம்பரியம் கொண்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தன்னுடைய அண்ணனாகவே மதித்தவர் லதா மங்கேஷ்கர். சிவாஜியும் தன்னுடைய உடன்பிறவா சகோதரியாகவே லதா மங்கேஷ்கரை மதித்தார்.
  • ஹோட்டல்களில் தங்குவதற்கு லதா விரும்பமாட்டார் என்பதற்காக, அவர் சென்னைக்கு வந்தால் தங்குவதற்கு லதாவுக்காக தன்னுடைய அன்னை இல்லம் வளாகத்திற்குள்ளேயே ஒரு சிறிய பங்களாவை சிவாஜி கட்டியிருந்தார். பின்னணிப் பாடல்களைப் பாடு வதற்காக சென்னைக்கு லதா வரும் போதெல்லாம் அந்தப் பங்களாவில் தங்குவதையே லதா வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி நிஜமான ‘பாசமலர்’களாக சிவாஜியும் லதாவும் விளங்கினார்கள்!
  • இளையராஜாவின் இசையில் பிரபு நாயகனாக நடித்த `ஆனந்த்’ திரைப்படத்தில் லதா பாடிய `ஆராரோ ஆராரோ’ என்னும் காதல் தாலாட்டை கேட்டபிறகுதான், லதாவின் குரல் இனிமையைத் தமிழ் மட்டுமே அறிந்த செவிகள் கண்டுகொண்டன. இந்த வரிசையில் `என் ஜீவன் பாடுது’ திரைப்படத்துக்காக இளையராஜா எழுதி இசையமைத்து லதா பாடி யிருக்கும் `எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்’ முக்கியமானது.
  • சி. ராமச்சந்திரா இசையில் பிரதீப்குமார் எழுதிய `யே மேரே வதன் கே லோகோ' என்னும் தேசபக்திப் பாடலை 1962இல் லதா மங்கேஷ்கர் பாடியதைக் கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் நேரு கண்கலங்கினார். இந்தியா, சீனா இடையிலான போரில் இந்திய மண்ணைக் காக்க வீரமரணம் எய்திய வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்தப் பாடல் அமைந்திருந்தது. இதை ஏறக்குறைய 40 ஆண்டுகள் வரை தன்னுடைய இசை நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் லதா மங்கேஷ்கர் தவறாமல் பாடிவந்தார்.

பொருளாதாரம்: வளர்ச்சிக்கு வித்திட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள்

  • ஐந்தாண்டுத் திட்டங்கள் என்பவை கட்டுப்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்படும் தேசியப் பொருளாதாரத் திட்டங்கள். 1928இல் சோவியத் ஒன்றியத்தின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை அந்நாட்டு அதிபர் ஜோசப் ஸ்டாலின் செயல்படுத்தினார். இதனால் ஈர்க்கப்பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சுதந்திரத்திற்குப் பிறகு 1951இல் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் .
  • இதற்காக ‘இந்தியத் திட்டக் குழு’ உருவாக்கப்பட்டது. முதல் தலைவர் அப்போதைய பிரதமர் நேரு. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டு, குறைவாக இருக்கும் வளங்களைப் பெருக்கி, சமச்சீரான வகையில் அவற்றைப் பயன்படுத்தத் திட்டமிடுவதே திட்டக்குழுவின் தலையாய நோக்கம். 1951 முதல் 2012 வரை 12 ஐந்தாண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  • முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெறும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 1956இல் நடைமுறைக்கு வந்த இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்டது. கிராமப்புற இந்தியாவைச் சீரமைக்கவும் அது உதவியது. இந்தியா- பாகிஸ்தானின் போரினாலும், கடுமையான வறட்சியாலும் தடைப்பட்ட வேளாண் உற்பத்தி, மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தினால் பெருக்கப்பட்டது. அணைகளும் சிமெண்ட் ஆலைகளும் அந்தக் காலகட்டத்தில் அதிகம் நிறுவப்பட்டன. பஞ்சாபில் கோதுமை அதிக அளவில் உற்பத்தி செய்யும் போக்கு அப்போதே தொடங்கியது.
  • மக்களின் வாழ்க்கைத் தரத்தை நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் உயர்த்தியது. செல்வமும் பொருளாதார ஆற்றலும் நாட்டில் சில இடங்களில் மட்டும் குவிவதைத் தடுத்து, அவற்றைத் தேசமெங்கும் பரவலாக்குவதற்கு அது முயன்றது. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியது. வறுமையையும், வேலை இல்லாத் திண்டாட்டத்தையும் அகற்றி, சமூக ஏற்றுத்தாழ்வுகளைக் களைவதற்கு ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் பெருமளவில் உதவியது.
  • ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் மக்களின் உற்பத்தித் திறனைப் பெருக்கியது. இந்தியாவின் பொருளாதாரத்தைச் சரிவிலிருந்து மீட்பதற்கு எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் உதவியது. அதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் விஸ்வரூப வளர்ச்சியை நோக்கிச் சென்றது. மக்களின் வாழ்க்கைத் தரம் ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டத்தினால் வெகுவாக மேம்படுத்தப்பட்டது. ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்கு ஆதரவு அளிக்கும் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. அது சமூக நீதியையும் சமத்துவத்துடன் இணைந்த வளர்ச்சியையும் உறுதிப்படுத்தியது.
  • காடுகளின் பரப்பை அதிகரிப்பது, மாசுபட்ட ஆறுகளைத் தூய்மைப்படுத்துவது போன்ற சுற்றுச்சூழல் மேம்பாடு சார்ந்த அம்சங்களில் பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் கவனம் செலுத்தியது. அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதையும் இது உறுதிசெய்தது. உள்நாட்டு உற்பத்தியை பத்து விழுக்காடு அளவுக்கு உயர்த்தி, வேலைவாய்ப்பைப் பெருக்குவது பதினோராம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்தது. அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கும் முயற்சிகள் வேகமெடுத்தன.
  • நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை 9 சதவீத அளவுக்கு உயர்த்தும் நோக்கில் 12ஆம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2015 இல் நரேந்திர மோடியின் ஆட்சியில் ‘இந்தியத் திட்டக் குழு’ கலைக்கப்பட்டு ‘நிதி ஆயோக்’ உருவாக்கப்பட்டது. திட்டக் குழுவின் கலைப்பு ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு முடிவுரை எழுதியது.

நன்றி: தி இந்து (07 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்