TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 30

September 11 , 2022 698 days 433 0

செண்பகராமன்: மலைக்க வைக்கும் வரலாறு மறைந்தது ஏன்?

  • முதலாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், 1914 செப்டம்பர் 22. அன்று எஸ்.எம்.எஸ். எம்டன் என்கிற பிரமாண்ட ஜெர்மானியப் போர்க்கப்பல் சென்னை மீது குண்டுகளை வீசிக்கொண்டிருந்தது.
  • பிறகு கேரளக் கடற் பகுதியில் நங்கூரமிட்ட அந்தக் கப்பல், பிரிட்டிஷ் கப்பல்களைத் தடுத்து சரமாரியாகத் தாக்கியழித்துக்கொண்டிருந்தது.
  • இந்தத் தாக்குதலுக்குப் பின்னால், விடுதலைப் போராட்ட வீரர் செண்பகராமன் இருந்திருக்க வேண்டும் என்று இந்திய மக்கள் நம்பினார்கள்.
  • வெளிநாட்டில் இருந்து ஒரு படையைக் கொண்டுவந்து, பிரிட்டிஷ் இந்தியாவைத் தாக்கி, நாட்டிலிருந்து ஆங்கிலேயரைத் துரத்திவிட வேண்டும் என்பதே, சுதேசப் பற்றுமிக்க செண்பக ராமனின் திட்டமாக இருந்தது.
  • அந்தத் திட்டத்தின் ஒருபகுதிதான் சென்னை துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் என்று கருதப்படுகிறது. அந்த வீரம் செறிந்த செண்பகராமனின் உருவச் சிலையை 17.7.2008இல் சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி திறந்துவைத்தார்.

யார் இந்த செண்பகராமன்?

  • திருவனந்தபுரத்தின் தலைமைச் செயலகம் அருகில், இன்றைய ஏ.ஜி.எஸ். அலுவலகம் உள்ள இடத்துக்கு அருகே ஒரு சிறிய வீட்டில், வெங்கிடி என்று அறியப்பட்ட சிறிய குடும்பத்தில் பிறந்தார் செண்பகராமன். அங்கிருந்த மாடல் பள்ளியில் படித்துவந்த சிறுவன் செண்பகராமன், ஆங்கிலேயருக்கு எதிரான முழக்கங்களை வகுப்பிலேயே எழுப்பியவர்.
  • நாட்டிலேயே முதன்முதலாக ‘ஜெய் ஹிந்த்’ என்று அந்தச் சிறுவன் எழுச்சியுடன் கோஷமிட்டதைக் கேட்ட தலைமை ஆசிரியர் மிரண்டுவிட்டார். காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு, ஒரு போலீசும் பள்ளிக்கு வந்தார். வந்தவர் வேறு யாருமல்ல; செண்பகராமனின் தந்தை சின்னச்சாமி.
  • இது செண்பகராமன் பற்றிய நினைவேந்தல் நிகழ்ச்சியில், தமிழக காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான குமரி அனந்தன் கூறிய செய்தி.
  • பிரிட்டன் விஞ்ஞானியான வால்டர் ஸ்ட்ரிக் லேண்ட், வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள திருவனந்த புரத்தில் அப்போது தங்கியிருந்தார்.
  • ஒரு பிரபல அறிவியல் இதழில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞன் டி.பத்மநாபன் சிலந்திகளின் நிறமாற்றம் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
  • டி.பத்மநாபன் என்கிற அந்த இளம் ஆராய்ச்சியாளனால் ஈர்க்கப்பட்ட வால்டர், அவரை மேல் படிப்பு படிக்க வைக்க இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றார். அவருடன், அவருடைய உற்ற நண்பனும், நெருங்கிய உறவினருமான இளைஞன் செண்பகராமனும் அழைத்துச் செல்லப்பட்டார்.
  • ஆஸ்திரியாவில் ஒரு கல்லூரியில் சேர்ந்த செண்பகராமன், அங்கு பொறியியல் பட்டயப் படிப்பை முடித்தார். அரசியல் அறிவியலிலும், பொருளாதார அறிவியலிலும் விருதுகள் பெற்றார்.
  • 12 மொழிகளில் புலமை பெற்றிருந்த அவர், ஜெர்மனியின் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையங்களில் பொறியாளராகப் பணியாற்றிவந்தார். சுமார் 20 ஆண்டுகாலம் ஜெர்மனியில் வசித்தார் செண்பகராமன்.

செண்பகராமனின் முயற்சிகள்

  • இந்தியப் பெருங்கடலில் எம்டன் கப்பல் நின்றிருந்த இரண்டாம் மாதத்தில், ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் செண்பகராமன் ஈடுபட்டிருந்தார் என்று சான்றுகள் கூறுகின்றன. ஜெர்மனியில் இருந்தபோது, செண்பகராமன், மற்ற இந்தியப் புரட்சி வீரர்களின் உதவி எம்டன் கப்பலுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.
  • எம்டன் கப்பலின் முதன்மை அதிகாரியாக இருந்த லெப்டினன்ட் வோன் மூக் எழுதிய எம்டன் நினைவுக்குறிப்புகளில் இது குறித்த தெளிவுகள் உண்டு.
  • முதலாம் உலகப் போரில் நடுநிலை நிலைப்பாட்டுடன் இருந்த சுவிட்சர்லாந்தை மையமாகக்கொண்டு சுதந்திர இந்தியாவுக்கான ஆதரவாளர்கள் சங்கத்தை நிறுவினார் செண்பகராமன். பெர்லினை மையமாகக் கொண்டு ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் ‘புரோ இந்தியா’ என்ற பெயரில் இந்திய விடுதலை ஆதரவு முன்னெடுப்புகளை அவர் தொடங்கினார். கவிக்குயில் சரோஜினிதேவியின் சகோதரரான வீரேந்திரநாத் சட்டோபாத்தியாய (சாட்ரோ) இவருடைய நெருங்கிய கூட்டாளியாக இருந்தார்.
  • முதலாம் உலகப் போர் காலத்தில் இங்கிலாந்தின் உளவுப்பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரியான ஜோன் வெலிங்கர், தனக்குக் கீழிருந்த ‘ஆர்’ என்பவரின் தலைமையில் இவர்களைக் கொன்றழிக்க சுவிட்சர்லாந்துக்கு உளவாளிகளை அனுப்பியிருந்தார். பிரபல நாவலாசிரியர் சாமர்செட் மாம்தான் ‘ஆர்’ என்கிற அந்த அதிகாரி. பின்னாளில் மாம், இந்தியப் புரட்சிப்படைகளில் இருந்தவர் களின் வாழ்க்கையைத் தழுவி பல கதாபாத்திரங்களையும் படைத்தார்.

பாழான திட்டங்கள்

  • இதனிடையே உளவுப்படை வருவதை அறிந்த செண்பகராமனும் சாட்ரோவும் பெர்லினுக்கே புறப்பட்டுச் சென்றனர். அங்கு ‘இந்திய சுதந்திர லீக்’ (இன்டியன் இன்டிபென்டன்ஸ் லீக்) அமைப்பின்கீழ் இந்திய வீரர்கள் ஏராளமாகக் கூடினர். ‘செம்பக்’ என்று அழைக்கப்பட்ட செண்பகராமனும், சாட்ரோவும் இணைந்து, ‘சாட்ரோ-செம்பக் பெர்லின் கமிட்டி’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர்.
  • பிற புரட்சிப் படையினரும் இவர்களுடன் கைகோத்தனர். பணம், ஆயுதங்கள் ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு இந்தியக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டும்; பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வேண்டும்; இந்தியாவை, ஜனநாயக, சோசலிச அரசமைப்பு கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்பதே இந்தக் கமிட்டியின் திட்டம்.
  • 1914இல் ஜூலை 31-ஆம் தேதி ஐ.என்.வி. எனப்படும் ‘இந்தியன் நேஷனல் வாலன்டரி கார்ப்ஸ்’ எனப்படும் இந்திய தேசிய தன்னார்வப் படை உருவாக்கப்பட்டது. பெர்லினில் அந்தப் படையினருக்குச் செண்பகராமன் எழுச்சி உரை ஆற்றினார். இந்தியர்களுடன் வெளி நாட்டவரையும் உள்நாட்டவரையும் உணர்வூட்டி ஒன்றுசேர்க்க விரும்பிய அவர், அங்கிருந்த முஸ்லிம்களையும், சீக்கியர்களையும் ஒவ்வொருவராக சந்தித்துப் பேசினார்.
  • இதன் காரணமாகவே அடுத்த சில மாதங்களுக்குள் நிகழ்த்தப்பட்ட எம்டன் கப்பல் தாக்குதலில் செண்பகராமனின் ‘கைகள்’ இருந்தன என்ற சந்தேகம் உறுதிப் படுத்தப்பட்டது. ஆனால், முதலாம் உலகப் போரில் ஜெர்மனி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து செண்பகராமனின் அத்தனை திட்டங்களும் பாழாயின.
  • இவை நடந்து முடிந்த பின்பு ஒரு ஜெர்மானிய நிறுவனத்தில் பொறியாளராகத் தற்காலிகப் பணியில் சேர்ந்த செண்பகராமன், இந்திய விடுதலைக்காகத் தொடர்ந்து முயன்றுகொண்டே இருந்தார். 1930இல் இந்தியன் சேம்பர் ஆப் காம்ர்ஸின் (இந்திய வர்த்தக சபை) பெர்லின் பிரதிநிதியாகத் தேர்வானார். நாஸிகளுக்குத் துணையாக நின்ற தேசிய மக்கள் கட்சியில் (நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி) ஐரோப்பியர் அல்லாத ஒரே அயல்நாட்டுக்காரரும் அவரே.

ஹிட்லருடன் மோதல்

  • ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லருடன் ஆரம்பத்தில் செண்பகராமன் நல்ல நட்புடன் இருந்தார். ஆனால் ‘ஆரிய வம்சத்தாரல்லாத இந்தியர்களை, பிரிட்டிஷார் ஆட்சி செய்கிறார்கள் என்றால், அது இந்தியர்களின் தலைவிதி’ என்கிற ஹிட்லரின் கூற்றைக் கேட்டு தேசப்பற்றாளனான செண்பகராமன் வேதனை கொண்டார் (1931 அக்டோபர் 10ஆம் தேதி, ஹிட்லரின் இந்தப் பேச்சு பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது). அந்த நாள்களில் ஹிட்லர் ஒரு சர்வாதிகாரியாக வளந்திராத நேரம்.
  • இதனைத் தொடர்ந்து ஹிட்லருக்குச் செண்பகராமன் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “திருவாளர் ஹிட்லர், நீங்கள் ரத்தத்தைவிட சிவப்பான தோலுக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்; எங்கள் தோல் கறுத்ததாக இருக்கலாம்; ஆனால் எங்கள் இதயங்கள் கறுப்பானவைகளல்ல” எனக் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
  • அதற்குப் பிறகு ஹிட்லரின் எதிர் நடவடிக்கைகளால் இருவருக்குமான தொடர்பில் பெரும்பிளவு ஏற்பட்டது. 1933 ஜனவரியில் ஜெர்மனியின் சான்ஸிலரானார் (அதிபர்) ஹிட்லர். ஜூன் மாதத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒழித்துக்கட்டி சர்வாதிகார சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
  • பின்னர் நாஸிகளின் அட்டூழியம் தொடங்கியது. பெர்லினில் குடியிருந்த செண்பகராமனின் வீட்டுக்குள் புகுந்த அவர்கள், அவரை மிகக் கொடூரமாகத் தாக்கி, வெளியே இழுத்து வீசிவிட்டுச் சென்றனர். படுகாயம் அடைந்த செண்பகராமன் சிகிச்சைக்காக இத்தாலி சென்றார்.
  • அவரது தலையில் ரத்தம் உறைந்து கட்டி ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பணம் இல்லாததால் செண்பகராமனால் உயர்சிகிச்சையைப் பெற முடியவில்லை. ஒரு சாதாரண மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செண்பகராமன், 1934 மே 28 அன்று மரணத்தை தழுவினார்.
  • ஹிட்லருக்கு எதிராக ஒருவரும் நாவைக்கூட அசைக்க முடியாதிருந்த அந்தச் சூழலில், சொந்த நாட்டுக்காகத் தனது கணவர் ஹிட்லரை எதிர்த்து நின்றார் என்றும், இதனால் வேதனையைப் பெற்ற அவர், இடிந்துபோன மனிதனாக உயிரிழந்தார் என்றும் அவருடைய மனைவி லக்ஷ்மி பாய் பின்னாளில் வேதனையுடன் பதிவுசெய்துள்ளார்.

இசை: முதல் சபாவும் மியூசிக் அகாடமியும்

  • ஐக்கிய நாடுகள் அவையின் துணை அமைப்புகளில் ஒன்றான யுனெஸ்கோ கலாச்சார நகரங்களில் ஒன்றாக சென்னையை அறிவித்ததில் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இசை விழாக்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
  • குறிப்பிட்ட ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது, உலகில் எங்கும் நடக்காத அரிய வைபவம். இதைக் காண்பதற்கென்றே உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் வந்துசெல்கிறார்கள்.
  • காலனியாதிக்கக் காலத்தில் ஆங்கிலேயர் களின் பொழுதுபோக்கிற்காக ‘பூனா கயான் சமாஜ்’ பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றது. 1883 ஆகஸ்ட் 18இல் அன்றைய மதராஸ் ஜார்ஜ்டவுன் பகுதியிலிருந்த பச்சையப்பர் பள்ளியில்தான் பூனா கயான் சமாஜின் கிளை தொடங்கப்பட்டது.
  • இதுதான் மதராஸின் முதல் சபா. 1887இல் விக்டோரியா மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நினைவாக `மதராஸ் ஜூபிளி கயான் சமாஜ்' என்று இதன் பெயர் மாற்றப்பட்டது. இந்த மன்றத்தின் சார்பாக இரண்டு இசைப் பள்ளிகளின் மூலம் மாணவர்களுக்கு இசையும் கற்றுத் தரப்பட்டது.
  • இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 1883 முதல் 1888 வரையிலான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த அமைப்பு எதனால் வீழ்ச்சியடைந்தது என்னும் விவரம் ஆவணப்படுத்தப்படவில்லை.
  • மற்றொருபுறம் கடந்த 94 ஆண்டுகளாக மார்கழி இசை விழாவை தங்கு தடையின்றி நடத்திவரும் பெருமையைப் பெற்றது மியூசிக் அகாடமி. இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்திலும்கூட இங்கே நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன.
  • ஆழிப் பேரலைத் தாக்குதலுக்கு அடுத்த ஆண்டு, புகழ்பெற்ற இசை மேதை ஸுபின் மேத்தா சென்னைக்கு முதன்முறையாக வந்திருந்தார். அவரோடு புகழ்பெற்ற ஜெர்மன் சிம்பொனி இசைக் கலைஞர்களின் குழுவும் வந்திருந்தது.
  • சுனாமியால் உயிர்களைப் பறிகொடுத்த குடும்பங்களுக்கும் பாதிப்படைந்தவர்களுக்கும் நினைவஞ்சலியாக ஓர் இசை நிகழ்ச்சியை மியூசிக் அகாடமியில் ஸுபின் மேத்தா நடத்தினார். அதற்காக அன்றைய நாளில் அகாடமியில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து ஸுபின் மேத்தாவை வரவேற்றிருக்கிறது மியூசிக் அகாடமி.

மகளிர்: ஏற்றம் தரும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்

  • கிராமப்புறப் பெண்களின் கைகளில் நேரடியான பணப்புழக்கம் குறைவு. அவர்களின் வருவாய்க்கு வழிசெய்யவும் அவர்களது திறமைக்குக் களம் அமைத்துத் தரவும் உருவாக்கப்பட்டது ‘மகளிர் சுயஉதவிக் குழு’ திட்டம்.
  • 80-களில் இது தொடங்கப்பட்டாலும் 90-களில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக அறியப்பட்டது. தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.
  • இதன் கீழ் கிராமங்கள்தோறும் எட்டு முதல் பத்துப் பெண்கள் கொண்ட தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. குழுவில் இருக்கும் பெண்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. சிறுதொழில் பயிற்சி, கைவினைக் கலை பயிற்சி போன்றவையும் வழங்கப்படுகின்றன.
  • சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாட்டையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. சுகாதாரக் கணக்கெடுப்பு, கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஓய்வூதியம் உள்ளிட்ட வங்கிப் பரிவர்த்தனை தொடர்பானவற்றுக்கு உதவுதல் போன்றவற்றிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
  • இந்தியா முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. இவற்றில் ஆறு கோடிக்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இவர்களது பங்களிப்பு அளப்பரியது.
  • முகக்கவசம், கிருமிநாசினி தயாரிப்பு போன்றவற்றில் இவர்களே அதிகமாக ஈடுபட்டனர். 27 மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டன.
  • மகளிர் சுயஉதவிக் குழுவினர் மேற்கொள்ளும் தொழில்களில் உணவகத் தொழில் முக்கியமானது. நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் அதிகமான உணவகங்களை இவர்கள் நடத்திவருகிறார்கள்.
  • கேரளப் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக அம்மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘குடும்ப’ திட்டம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்னோடித் திட்டமாகக் கருதப்படுகிறது.

இலக்கியம்: இந்தியாவின் நவீன கவி

  • இந்தியாவின் தேசியக் கவியாக இன்றைக்கும் திகழ்பவர் ரவீந்திரநாத் தாகூர். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் அவர்தான். ‘கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்புக்காக 1913 இல் நோபல் அவருக்கு அளிக்கப்பட்டது.
  • அவரது ‘ஜன கண மன’ பாடல் 1950, ஜனவரி 24 இல் நாட்டுப்பண்ணாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதுபோல் தாகூரின் ‘அமர் சோனார் பங்க்ளா’ என்னும் பாடல் 1971இல் வங்கதேசத்தின் நாட்டுப்பண்ணாக அறிவிக்கப்பட்டது.
  • செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த அவர், கல்லூரிப் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். கல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை ஒரே நாளில் கைவிட்டார். இங்கிலாந்தில் சட்டப் படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டார்.
  • இலக்கியத்திலும் மெய்யியலிலும் ஆர்வமுடன் இருந்தார். ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் புலமை கொண்டிருந்தார். ஆனால், தன் தாய்மொழியான வங்க மொழியில்தான் தாகூர் கவிதைகளை எழுதினார். அதில் தொடக்கத்தில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
  • அவர் எழுதிய ‘கீதாஞ்சலி’ நூலை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மீண்டும் தாகூர் லண்டன் சென்றிருந்தபோது, தனது கீதாஞ்சலி மொழிபெயர்ப்பை அவரது நண்பரும் ஓவியருமான வில்லியம் ரோதென்ஸ்டினுக்கு அளித்துள்ளார்.
  • அவர் வழியாக அந்த நூல் இங்கிலாந்து இலக்கிய வட்டத்தில் பரவலாக வாசிக்கப்பட்டுக் கவனம்பெற்றது. தாகூருக்கு நோபல் பரிசு கிடைக்க இது காரணமாக அமைந்ததால் நோபல் பரிசையே ரோதென்ஸ்டினுக்குச் சமர்ப்பணம் செய்தார்.
  • இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அளித்த நைட்ஹுட் பட்டத்தை ஜலியான் வாலாபாக் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பி அளித்தார். காந்தியின் கருத்துகள் மீது முரண்பாடு இருந்தாலும், அவரது போராட்டத்துக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்.
  • தமிழ்க் கவி பாரதியார், தாகூரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர். தாகூரின் கட்டுரைகளை பாரதி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்தியக் கவிதை மரபில் மேற்கின் நவீனத்தைத் தொடங்கிவைத்தவர் என தாகூர் கருதப்படுகிறார். தாகூர் நிறுவிய சாந்திநிகேதன், இன்று விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக மேற்கு வங்கத்தில் செயல்பட்டுவருகிறது.

தமிழ்நாடு: முதல் மகளிர் காவல் நிலையம்

  • தமிழகத்தில் முதன்முறையாக 1974 இல்தான் காவல் துறையில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். திமுக ஆட்சி நடைபெற்றுவந்த அந்தக் காலத்தில் சென்னை மாநகரக் காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
  • பெண் துணை ஆய்வாளர், தலைமைக் காவலர், 20 பெண் காவலர்கள் இப்படிச் சேர்க்கப்பட்டார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் மகளிர் காவல் படைகள் உருவாக்கப்பட்டன.
  • ஆனால், 1992 இல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது காவல் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கியது. நாட்டுக்கே முன்னோடியாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.
  • ஒரு பெண் காவல் ஆய்வாளர், 3 பெண் துணை ஆய்வாளர்கள், 6 பெண் தலைமைக் காவலர்கள், 24 பெண் காவலர்களால் அந்தக் காவல் நிலையம் நிர்வகிக்கப்பட்டது. படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்தக் காவல்நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டன.

நன்றி: தி இந்து (11 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்