TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 31

September 11 , 2022 698 days 457 0

பாரதியார் நினைவு நாள்: கவிஞனும் கப்பலோட்டிய தமிழனும்

  • வ.உ. சிதம்பரனார், தான் பிறந்த ஒட்டப்பிடாரம், பாஞ்சாலங் குறிச்சிக்கு அருகில் அமைந்திருந்தது குறித்து பெருமிதம் கொண்டிருந்தார். கட்டபொம்மனுக்கு துரோகம் இழைத்ததற்காக அவப்பெயர் பெற்ற எட்டயபுரம் ஜமீனில் பிறந்தவர் பாரதி. இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தொலைவு 30 கிலோமீட்டர்கூட இருக்காது. வ.உ.சி.யும் பாரதியும் குடும்ப நண்பர்களும்கூட. என்றாலும் தம் சொந்த ஊர்களில் அவர்கள் சந்தித்துக்கொண்டதே இல்லை.

முதல் சந்திப்பு

  • அவர்களின் முதல் சந்திப்பு சென்னையில் நிகழ்ந்தது. 1906இன் பிற்பகுதியில் தம் நண்பர் ஒருவரைச் சுங்குராம் தெருவில் சந்தித்துவிட்டு பிராட்வே சாலையைக் கடந்து நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பாரதி ஆசிரியராகப் பணிபுரிந்த ‘இந்தியா’ வார இதழின் அலுவலகத்தை வ.உ.சி. கண்டார். உள்ளே நுழைந்து மகாகவியைச் சந்தித்தபோது பரஸ்பர மரியாதை மட்டுமல்லாமல், கூர்மையான சில கருத்து வேறுபாடுகளும் நிறைந்த ஒரு நட்பு பூத்தது. அப்போது 34 வயதினரான வ.உ.சி., பாரதியைவிட 10 வயது மூத்தவர் என்றாலும் மகாகவியின் மகத்துவத்தை அங்கீகரிக்க, இந்த வயது வேறுபாடு தடையாக இருக்கவில்லை. ’என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சிபோல் ஒளிர்ந்துகொண்டிருந்த தேசாபிமான நெருப்பு, விளக்குப் போல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது’ என்று பின்னாளில் இந்தச் சந்திப்பைப் பற்றி பெருந்தன்மையுடன் பதிவுசெய்திருக்கிறார் வ.உ.சி.
  • அவர்கள் இருவரும் முதல்முறையாகச் சந்தித்ததற்கு அடுத்த சில ஆண்டுகளில் நிகழவிருந்ததை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அசாதாரணமான அந்தக் காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்துக்கான வெகுமக்கள் திரட்சியின் முதல் கட்டமான சுதேசி இயக்கம், அதன் உச்சத்தை அடைந்திருந்தது. வ.உ.சி விரைவில் தன்னுடைய பிரமிப்பூட்டக்கூடிய கப்பல் நிறுவனம் வழியே, சுதேசியப் பொருளாதாரப் போராட்டத்தைத் தொடங்கினார். கப்பல் நிறுவனத்துக்கு முதலீடு திரட்டுவதற்காக வ.உ.சி தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். தமிழகமெங்கும் கடுமையான பயணங்களில் அடுத்த ஆண்டு கழிந்தது. வ.உ.சி.யோடு பாரதியும் பல மேடைகளில் பங்கேற்று உரையாற்றினர். வ.உ.சி.யின் தொழில்முயற்சி குறித்து, தான் நடத்திவந்த இதழ்களில் மிக விரிவாகவும் பேரார்வத்துடனும் தொடர்ந்து எழுதிவந்தார். நடைமுறை சாத்தியமற்றதென்றாலும் லட்சியவாதம் சார்ந்த பல அறிவுரைகளையும் பாரதி என்கிற கவிஞர் வழங்கிவந்தார்.

இணைந்து பணி

  • 1907இல் சூரத்தில் நடந்த கொந்தளிப்பு மிகுந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு ஒன்றாகப் பயணித்து, லோகமான்ய திலகருடைய அணியின் சார்பாகச் செயல்பட்டதில், அதற்கு வலுச்சேர்த்ததில் இருவருக்கிடையிலான பிணைப்பு மேலும் வலுப்பட்டது. திலகர், அரவிந்தர் உள்ளிட்ட தலைவர்களை முதன்முறையாகச் சந்தித்துவிட்டு பாரதியும் வ.உ.சியும் இரட்டிப்பு உத்வேகத்துடன் திரும்பினர்.
  • சூரத் பிளவுக்கு அடுத்த மூன்று மாதங்களில் சுதேசி இயக்கம் உச்சத்தை அடைந்தது. சுதேசிக் கப்பல்களைச் செலுத்தியது நீராவியா தேசப்பற்றுப் பிரச்சாரமா எனத் திகைக்கும் அளவுக்கு வ.உ.சி.யின் செயல் வேகம் இருந்தது. வ.உ.சியுடன் சுப்பிரமணிய சிவா இணைந்த பிறகு இந்த நிலை மேலும் தீவிரமடைந்தது. தமிழ் மேடைப் பேச்சின் வரலாற்றாசிரியர் பெர்னார்ட் பேட் ’பேச்சின் பிழம்பு’ (‘Oratorical incandescence’) என்று குறிப்பட்டதுபோல் இருவரின் பேச்சாற்றலும் ஒளிர்ந்தன. வ.உ.சியும் சிவாவும் அரசியல் தொடர்பாடலுக்கான ஊடகமாகத் தமிழை வலுப்படுத்தினர். தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் அன்றாடம் நிகழ்ந்த பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வ.உ.சி தொடங்கிய சுதேசி கப்பல் கம்பெனியின் போட்டி, பிரிட்டிஷ் நீராவி கப்பல் நிறுவனத்துக்கு எதிராகத் தீவிர அறைகூவலை விடுத்தது. இதையடுத்து வ.உ.சி இன்னொரு போராட்ட வடிவத்தைக் கையிலெடுத்தார். பிரிட்டிஷாருக்குச் சொந்தமான கோரல் ஆலையில் தொழிலாளர் போராட்டத்துக்குத் தலைமை வகித்து அனைத்து கோரிக்கைகளையும் வென்றெடுத்தார்.
  • அப்போது பிரிட்டிஷார் காரியத்தில் இறங்கினர். நெல்லை மாவட்ட ஆட்சியர் எல்.எம். விஞ்சு, அழைத்து மிரட்டியபோதும் வ.உ.சி பின்வாங்க மறுத்தார். நாடகீயத் தருணங்கள் மிக்க இந்த உரையாடலைப் பாரதி உணர்ச்சிப் பெருக்கான கவிதைகளில் பிரமாதமாகப் பதிவுசெய்திருக்கிறார்.

ராமனுக்கு ஒப்புமை

  • 12 மார்ச் 1908 அன்று வ.உ.சியும் சிவாவும் கைதுசெய்யப்பட்டனர். அடுத்த நாள் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் வன்முறை வெடித்தது. அரசு சொத்துகளை மக்கள் தீக்கிரையாக்கினர். பின்னாளில் இது ‘திருநெல்வேலி எழுச்சி’ என்று அழைக்கப்படலானது.
  • வ.உ.சி மீது தேசதுரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. திருநெல்வேலிக்குப் பயணித்த பாரதி வ.உ.சியை சிறையில் சந்தித்த பிறகு, அச்சந்திப்பைப் பற்றி எழுதிய பதிவுக்குத் தமிழ் இதழியல் வரலாற்றில் என்றும் தனியிடம் உண்டு. அரசாளச் சொன்னாலும் காட்டுக்குச் செல் என்றாலும் மலர்ந்த செந்தாமரையைப் போன்ற ராமனின் முகம் இருந்ததாகச் சொன்ன கம்ப ராமாயண வரியை வ.உ.சி.க்குப் பொருத்திக்காட்டினார் பாரதி வ.உ.சி மீதான தேசதுரோக வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது என்றாலும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை யாராலும் நம்ப முடியவில்லை. ஒரு ஆயுள் மட்டுமே உள்ள மனிதனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்பது எவரும் அறியாதது.

தேசியவாத புனிதத் தலம்

  • வ.உ.சி.க்கு விதிக்கப்பட்ட கொடூரமான தண்டனை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அளிக்கப்பட்ட அச்சுறுத்தல். அதை உணர்ந்த பாரதி, பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்டிருந்த புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். ஆனாலும் வ.உ.சியின் அரசியல் திட்டங்களுக்கான பாரதியின் பிரச்சாரம் விடாமல் தொடர்ந்தது. வ.உ.சிக்கு ஆதரவாக வழக்காடுவதற்கு ஒன்றும், மூழ்கிவிடும் நிலையில் இருந்த அவருடைய கப்பல் நிறுவனத்தை மீட்பற்கு மற்றொன்றுமாக பாரதி இரண்டு நிதிகளைத் திரட்டினார்- .
  • சிறையில் வ.உ.சியின் துன்பங்கள் தொடர்ந்தன. பழிவாங்கும் எண்ணம்கொண்ட அரசு, அவரைச் செக்கிழுக்க வைத்தது. ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்…’ என்ற காலத்தால் அழியாத கவிதையை பாரதி எழுத, இதுவே வித்து. அசலான தேசப்பற்றாளர்களுக்கு வ.உ.சி அடைக்கப்பட்டிருந்த கோவைச் சிறைதான் 'தேசியவாத புனிதத் தலம்' என்றும் பாரதி குறிப்பிடுகிறார்.
  • மேல்முறையீட்டில் வ.உ.சிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டு, அவர் டிசம்பர் 1912இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் 18 மாதங்களுக்குப் பிறகே தன்னுடைய நண்பரைச் சந்திக்க அவர் புதுச்சேரிக்குச் செல்ல வாய்த்தது. அது ஒரு உணர்வுபூர்வமான சந்திப்பாக இருந்திருக்கும் என்பதில் ஐயமிருக்க முடியாது. பாரதியின் வீட்டில் வ.உ.சி தங்கியிருந்த மூன்று நாளும், அவர்கள் இருவரும் 'வாசிப்பிலும் எழுத்திலும் ஆழ்ந்திருந்தனர்' என்று காவல் துறை அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

அரசியல் பிளவு

  • சுதேசிய இயக்கத்தின் தோல்வியின் காரணமாக தேசபக்தர்கள் வாழ்வாதாரத் திற்கும் போராட வேண்டியிருந்தது. பொருளீட்ட வ.உ.சி. எல்லா வகைகளிலும் முயன்றார். உணர்வுரீதியாக உடைந்திருந்த பாரதி, தலைமறைவு வாழ்க்கையை முடித்துக்கொண்டு தன்னுடைய இறுதி நாட்களைக் கழிக்கச் சென்னைக்குச் சென்றுவிட்டார்.
  • இதற்கிடையில் அரசியல் பிளவுகளும் வெடிக்கக் காத்திருந்தன. காந்தியின் எழுச்சி, திலகரின் தொண்டர்களை நிலைகுலைய வைத்திருந்தது. மகாராஷ்டிரத்தில் திலகரைப் பின்பற்றியோர் இந்து மகாசபையில் இணைய, தமிழகத்தில் திலகரின் தொண்டர்கள் காந்தியை நோக்கி நகர்ந்தனர். பாரதியோ தயக்கமின்றி காந்தியை மகாத்மா என்றழைத்தார். வ.உ.சி. திலகரின் பாதையிலிருந்து வழுவாமல், காந்தியை அரசியல்ரீதியாக எதிர்த்து நின்றார். இந்த இருவேறு அரசியல் பாதைகள் இருவரின் நட்பை எப்படி பாதித்தது என்பதை அறியச் சான்றுகள் இல்லை.

உண்மை அஞ்சலி

  • 1908இல் கப்பலோட்டிய வ.உ.சி. சிதம்பரம் 1920இல் கோயம்புத்தூருக்குக் குடிபெயர்ந்து, குறைந்த ஊதியம் அளித்துவந்த எழுத்தர் பணியில் சேர்ந்தார். இருவரும் சந்தித்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அத்தோடு இல்லாமல் போயின. செப்டம்பர் 1921இல் பாரதி மறைந்தது நாளிதழ்ச் செய்தியாகவே வ.உ.சி.யை எட்டியது.
  • மரணிப்பதற்கு மூன்று ஆண்டுகள் முன்பாக 1933இல் வ.உ.சி தன்னுடைய நண்பர் குறித்து ஒரு நினைவுரையை வெளியிட்டார். அவருடைய மறைவுக்குப் பின் வெளியான இந்த நினைவுரை வ.உ.சி.யின் உண்மையுணர்வுக்கும் நேர்மைக்கும் சாட்சியமாக விளங்குகிறது. தன்னடக்கத்தோடு பாரதியின் மேதைமைக்குப் புகழுரை செலுத்தியிருக்கிறார் வ.உ.சி.
  • தீவிர சைவர்கள் தம்முடைய இறுதிக் கணங்களில் திருவாசகம் கேட்பது வழக்கம். வ.உ.சி.யோ தன் மரணப்படுக்கையில் பாரதி பாடல்களைக் கேட்டார். தன் உற்ற நண்பருக்கு வ.உ.சி. செலுத்திய உண்மை அஞ்சலி இது.

பாரதியார் நினைவு நாள்: காலத்தை வென்ற பாரதியின் வரிகள்

  • இன்பமும் ஓர் கணத் தோற்றம்
  • இளமையும் செல்வமும் ஓர் கணத் தோற்றம்
  • உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
  • அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
  • உயிர்த் தீயினிலே வளர் ஜோதியே
  • என்றன் சிந்தனையே என்றன் சித்தமே
  • உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
  • உன் கண்ணில் நீர் வடிந்தால்
  • என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
  • எடுத்த காரியம் யாவினும் வெற்றி
  • எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே
  • எண்ணிய முடிதல் வேண்டும்
  • நல்லவே எண்ணல் வேண்டும்
  • எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை
  • எல்லோரும் இந்நாட்டு மன்னர்
  • ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
  • வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
  • அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
  • அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
  • வெந்து தணிந்தது காடு - தழல்
  • வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
  • தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
  • சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
  • வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
  • பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
  • நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
  • பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப்
  • பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,
  • மேவி இரண்டுங் கலந்து-குழல்
  • மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
  • சீவிக் குழல் முடிப்பேன் யான்
  • மணி வெளுக்கச் சாணையுண்டு
  • மனம் வெளுக்க வழியில்லையே எங்கள் முத்து
  • மாரியம்மா எங்கள் முத்து மாரி
  • மெல்லத் தமிழ் இனிச் சாகும் - அந்த
  • மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
  • என்றந்தப் பேதை உரைத்தான்
  • காசிநகர்ப் புலவர் பேசும் உரைதான்
  • காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
  • காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்
  • சாதி இரண்டொழிய வேறில்லை’யென்ற
  • தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்
  • சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
  • சொற்புதிது சோதிமிக்க நவ கவிதை
  • சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி
  • சொல்லில் விளைந்த சுடரே சக்தி
  • தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
  • இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
  • தனியொருவனுக்கு உணவில்லையெனில்
  • ஜகத்தினை அழித்திடுவோம்
  • தீக்குள் விரலை வைத்தால் - நின்னைத்
  • தீண்டுமின்பம் தோன்றுதடா
  • தேமதுரத் தமிழோசை
  • உலகமெலாம் பரவும்வகை
  • செய்தல் வேண்டும்
  • நல்லதோர் வீணை செய்தே - அதை
  • நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
  • நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
  • நிறைந்த சுடர் மணிப் பூண்
  • பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
  • பாலித்திட வேண்டும்
  • பாழ்பட்டு நின்ற தாமோர் பாரதம் தேசந் தன்னை
  • வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க
  • பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்
  • கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
  • மனதில் உறுதி வேண்டும்
  • வாக்கினிலே இனிமை வேண்டும்
  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
  • இனிதாவது எங்கும் காணோம்
  • வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
  • வான் புகழ் கொண்ட தமிழ்நாடு
  • விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
  • வேண்டியபடி செலும் மனம் கேட்டேன்
  • விதியே விதியே தமிழ்ச் சாதியை
  • என்செயக் கருதி யிருக்கின்றாயடா?

பாரதியார் நினைவு நாள்: பாரதியின் இலக்கிய வீச்சு

  • மகாகவி பாரதி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். தன் பாடல்கள் வழியாக மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியவர். இந்த அடையாளத்துக்கு அப்பால், தமிழுக்குப் பெருந்தொண்டு புரிந்தவர் பாரதி.
  • தமிழில் மரபுக் கவிதை, புதுக் கவிதை என இரண்டு வடிவங்கள் இருக்கின்றன. மரபுக் கவிதை வடிவத்தில் எழுதிவந்த பாரதி, மேற்கில் உருவான ‘வசன கவிதை’ என்னும் வடிவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ‘இவ்வுலகம் இனிது...’ மூலம் தமிழில் புதுக் கவிதை வரலாற்றைத் தொடங்கிவைத்தார்.
  • அந்த வகையில் வால்ட் விட்மனின் கவிதைகள் பாரதிக்கு முன்னுதாரணமாக இருந்தன எனச் சொல்லப்படுகிறது. புதுக் கவிதைதான் இனி தமிழில் கோலோச்சப்போகிறது என்று பாரதி முன்பே உணர்ந்திருந்தார் என்கிற வகையில் அவருடைய இந்த முயற்சியைப் பார்க்கலாம்.
  • வ.வே.சுப்பிரமணியத்தின் ‘குளத்தங்கரை அரச மரம்’ (1917) என்னும் சிறுகதைதான் தமிழில் முதல் சிறுகதையாகச் சொல்லப் பட்டது. ஆனால், அதற்கு முன்பு 1910இல் ‘அதிலொரு பங்கு’ என்னும் தலைப்பில் பாரதி எழுதிய கதைதான் தமிழின் முதல் சிறுகதை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேற்குலகில் உருவானது சிறுகதை வடிவம். ஆங்கிலப் புலமை பெற்றிருந்த பாரதி, மேற்குலகில் நடைபெற்ற இலக்கிய மாற்றத்தைக் கவனித்து வந்திருக்கிறார். அதன் அடிப்படையில் இந்த வடிவத்தைத் தமிழில் முயன்றுபார்த்துள்ளார்.
  • பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் / தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’ எனத் தன் பாடல் வரியின்வழி மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பாரதி பேசியுள்ளார். தமிழ் மொழிக்கு மொழி பெயர்ப்புகள் வளம் சேர்க்கும் என்பதை அறிந்து, பல மொழிபெயர்ப்புகளைத் தமிழுக்குத் தந்துள்ளார். தமிழ், சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழிப் புலமை கொண்டவர் பாரதி. கீதையை மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலக் கவிஞர் ஜான்ஸ்கரின் கவிதையை ‘கற்பனையூர்’ என்ற தலைப்பில் தமிழாக்கியுள்ளார். வேதரிஷிகளின் பாடல்களைத் தமிழாக்கி யுள்ளார். வங்கக் கவி பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘வந்தே மாதரம்’ பாடலை மொழி பெயர்த்துள்ளார். தாகூர் சிறுகதைகள், விவேகானந்தர் சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல மொழி பெயர்ப்புகளைச் செய்துள்ளார்.

பாரதியார் நினைவு நாள்: கடைசித் தமிழர் உள்ளவரை

  • தமிழறிஞர்களும் தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களுமாய் 126 ஆளுமைகள் சுப்பிரமணிய பாரதி குறித்து எழுதிய, பேசிய கருத்துகளைத் திரட்டி 646 பக்கங்களில் ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’ (பொருநை-பொதிகை-கரிசல், கதைசொல்லி, கலைஞன் பதிப்பகம் கூட்டு வெளியீடு) என்ற தலைப்பில் பெருந்தொகுப்பொன்றை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
  • இவற்றில் பெரும்பாலானவை கிடைப்பதற்கு அரிதானவை. சில கட்டுரைகள், தமிழ்நாட்டுக்கு வெளியே வாராணசியிலும் நகுலன் வழியாகத் திருவனந்தபுரத்திலிருந்தும் தேடிச் சேகரிக்கப்பட்டவை. பாரதியின் 125ஆவது பிறந்தநாளில் இதே தலைப்பில் சிறிய அளவில் வெளியான இந்நூல், இடைப்பட்ட ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட புதிய கட்டுரைகளையும் சேர்த்து பாரதி நினைவு நூற்றாண்டுச் சிறப்பு வெளியீடாகப் பெருநூல் வடிவத்தைக் கண்டுள்ளது.

தலைவர்கள் பார்வையில்...

  • பாரதி குறித்து வ.உ.சி., ராஜாஜி, திரு.வி.க., எஸ்.சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா, ப.ஜீவானந்தம், கே.பாலதண்டாயுதம், மு.கருணாநிதி, வைகோ, என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, பழ.நெடுமாறன் என்று பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் தத்தம் நோக்கிலிருந்து பாரதியைக் கொண்டாடியிருக்கிறார்கள். பாரதியின் பாடல்களைப் போலவே, ‘வருத்தமின்றி பொருளைப் புலப்படுத்தும்’ அவரது சிறந்த உரைநடைப் பாணியையும் போற்றியுள்ளார் உ.வே.சா., பாரதியின் பாரத மாதா திருப்பள்ளியெழுச்சியை மாணிக்கவாசகரோடும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரோடும் ஒப்பிட்டுப் பாநலம் பாராட்டியுள்ளார் ப.ஜீவானந்தம்.
  • தமிழ்நாட்டில் உப்புச் சத்தியா கிரகத்தைத் தலைமையேற்று நடத்திய ராஜாஜி, ‘தமிழர்களாகிய நாம் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் பெற்று, சுதந்திரப் போராட்டத்தில் நமக்கு ஒரு சிறந்த இடம்பெற முடிந்ததற்குப் பாரதியாரே காரணமானவர்’ என்று விடுதலைக் கவியை நினைவுகூர்ந்துள்ளார். பாரதியின் பாடல் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையொட்டி 1928இல் சட்டப்பேரவையில் பேசிய எஸ்.சத்தியமூர்த்தி, ‘இருக்கும் அத்தனை பாரதியார் பாடல் பிரதிகளையும் பறிமுதல் செய்துவிட்டாலுங்கூட தனியொரு தமிழ் மகனே உயிர் வாழும் அளவும் இப்பாடல்கள் தமிழினத்தின் விலைமதிக்கவொண்ணா பிதுரார்ஜிதச் செல்வமாக நிலைத்து நிற்கும்’ என்று முழக்கமிட்டுள்ளார்.

திராவிடக் கவி

  • தேசிய இயக்கங்களான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மட்டுமின்றி தென்னகத்தை மையமாகக் கொண்ட திராவிட இயக்கமும் பாரதியைப் போற்றியிருக்கிறது என்பதற்கான உதாரணம், ‘பாரதி பாதை’ என்ற தலைப்பிலான அண்ணாவின் கட்டுரை. ‘எந்தக் கலாச்சாரத்துக்கு நீர் ஆதரவு தருவீர் என்று பாரதியாரைக் கேட்க, யாருக்கும் வாய்ப்பில்லை. கேட்டிருந்தால், நிச்சயமாக அவர் திராவிடக் கலாச்சாரத்தையே விரும்பியிருப்பார்’ என்பது அண்ணாவின் துணிபு. தேசியக் கவிஞர் என்ற அடையாளத்தால் மறைக்கப்பட்ட புரட்சிக்கவிஞர் பாரதி என்பது அவரது மதிப்பீடு.
  • பாரதியின் அத்வைதம் உள்ளிட்ட இன்ன பிற சார்புகளைச் சுட்டிக்காட்டும் விமர்சனங்கள் திராவிட இயக்கத்தில் இன்றளவும் தொடர்கின்றன. அதே நேரத்தில், பாரதிதாசனின் பார்வை வழியே குணம்நாடி பாரதியை அணுகும் போக்கே பிரதானமாக இருக்கிறது. 1985இல், சென்னை கிண்டியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் முத்தமிழ் மன்ற விழாவில் பேசிய மு.கருணாநிதி, பாரதிதாசனின் நினைவுக் குறிப்புகளிலிருந்து பாரதியின் புதுச்சேரி நாட்களை நினைவுகூர்ந்துள்ளார்: ‘பலரறிய புதுவை நகரத்தினுடைய நடுவீதியில் நின்று, முஸ்லிம்களுடைய கடையிலே தேநீரை வாங்கி அருந்தி, இந்துக்கள்-முஸ்லிம்கள் என்ற பேதம் இல்லை என்பதைச் செயல்மூலம் காட்ட அந்தக் காலத்திலேயே முயற்சி எடுத்துக்கொண்ட பெருமை பாரதிக்கு உண்டு’.
  • முஸ்லிம்களுடைய தேநீர்க் கடையிலே இந்து என்று சொல்லப்படுகிற ஒருவர் தேநீர் அருந்துவதேகூட, மதவிரோதம் என்று கருதப்பட்ட சூழல் அது. அந்தச் சூழலை விரும்புபவர்களும்கூட பாரதியின் உருவப்படங்களை இன்றைக்கு கையிலேந்தி நிற்கிறார்கள். சமய நல்லிணக்கத்தைக் காண விரும்பிய பாரதியை வரலாற்றிலிருந்து மீண்டும் துலக்கியெடுத்தாக வேண்டும்.

நன்றி: தி இந்து (11 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்