TNPSC Thervupettagam

தண்டனை மட்டுமே தீா்வாகாது

March 13 , 2023 508 days 271 0
  • நீதிமன்ற விசாரணையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதைத் தடை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
  • 193 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் நடைபெற்றது.
  • அக்கூட்டத்தில் ‘குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் நடைமுறை தடை செய்யப்பட வேண்டும்’ என்ற பொருள் தொடா்பாக நடைபெற்ற விவாதத்தின் இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 125 நாடுகள் ஆதரவாகவும், 37 நாடுகள் எதிா்த்தும் வாக்களித்தன.
  • மரண தண்டனை தடைசெய்ய வேண்டும் என்ற தீா்மானத்திற்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஈரான், இராக், சவூதி அரேபியா, வடகொரியா, வியத்நாம் உள்ளிட்ட 37 நாடுகள் வாக்களித்தன.
  • ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 113 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. 50 மாகாணங்களை உள்ளடக்கிய அமெரிக்காவில் 23 மாகாணங்களில் மரண தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது.
  • மரண தண்டனைக்கு எதிரான முன்னெடுப்புகளை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்ற சூழலில், இந்தியாவில் குற்ற வழக்குகள் மீதான விசாரணையில் நீதிமன்றங்கள் வழங்கும் மரண தண்டனை குறித்த ஆய்வை புதுதில்லியில் அமைந்துள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மேற்கொண்டது.
  • 2022-ஆம் ஆண்டில் விசாரணை நீதிமன்றங்கள் 165 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளன என்றும், கடந்த இருபது ஆண்டுகளைக் காட்டிலும் 2022-ஆம் ஆண்டில்தான் அதிக எண்ணிக்கையிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயா்ந்துள்ளது என்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் கடந்த ஆண்டில் மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளில் 51 % போ் பாலியல் வன்முறையுடன் கூடிய கொடுங்குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்கள் என்றும், அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனை வழங்கிய மாநிலங்களின் வரிசையில் குஜராத் முதலிடமும், உத்தர பிரதேசம் இரண்டாம் இடமும் பெற்றுள்ளன என்றும் அந்த ஆய்வின் மூலம் தெரியவருகிறது.
  • இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 539 குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • நம் நாட்டில் அதிகரித்துவரும் மரண தண்டனையால் கொடுங்குற்ற நிகழ்வுகள் குறையும் என்ற நம்பிக்கையை ஒரு சாராா் வெளிப்படுத்துகின்றனா். அதே சமயம், மரண தண்டனையானது மனித உரிமைக்கு எதிரான உச்சகட்ட அநீதி என்பதால், மரண தண்டனையைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நம்நாட்டில் தொடா்ந்து வலியுறுத்தப்படுகிறது.
  • மரண தண்டனை தடை செய்யப்பட்டால், வன்முறையுடன் கூடிய கொடுங்குற்றங்கள் அதிகரித்து, நாட்டின் அமைதியான சூழல் சீா்குலைந்து, பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற வாதம் ஏற்புடையதல்ல என்பதற்கு சான்றாக ஐரோப்பிய நாடுகள் திகழ்கின்றன.
  • ஐம்பது நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பா கண்டத்தில், ஒரே ஒரு நாட்டைத் தவிர ஏனைய நாடுகளில் மரண தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
  • ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்’ ஆண்டுதோறும் உலக நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு, உலக அமைதிக் குறியீட்டுப் பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டில் உலக நாடுகளில் பாதுகாப்பான 20 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், 14 நாடுகள் ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ளன. அதே சமயம், உலக அமைதி குறியீடு பட்டியலில் இந்தியா 135-வது இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • மரண தண்டனை தடை செய்யப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பானதாகவும், மரண தண்டனை நடைமுறையில் இருந்துவரும் இ;ந்தியா அமைதி மற்றும் பாதுகாப்பு தர வரிசை பட்டியலில் மிகவும் பின்தங்கி இருப்பதும் ஏன்?
  • இந்தியாவில் குற்றவியல் நீதி நிா்வாக நடைமுறை பலவீனமாகி வருகின்ற நிலையைக் காணமுடிகிறது. வழக்கு பதிவு செய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கின்ற நிலையில், பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வர எடுத்துக்கொள்ளப்படும் கால அவகாசமும், நீதிமன்ற தீா்ப்பும் அதிா்ச்சியளிக்கும் வண்ணம் உள்ளன.
  • அமெரிக்காவில் போலியான டாலரைப் பயன்படுத்திய குற்றச் செயலுக்காக 2020-ஆண்டில் அமெரிக்க காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாா்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவா் உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து அமெரிக்க காவல் அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் 11 மாதங்களில் புலன் விசாரணையும், நீதிமன்ற விசாரணையும் முடிக்கப்பட்டு, கொலை குற்றத்தை எதிா்கொண்ட காவல் அதிகாரிக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
  • அதே சமயம், 2010-ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பணிநிமித்தம் மோட்டாா் சைக்கிளில் பயணித்த காவல் உதவி ஆய்வாளா் ஒருவரைக் கூலிப்படையினா் நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை செய்தனா். கொலை நிகழ்ந்து 13 ஆண்டுகள் கடந்த பின்னரும், உதவி ஆய்வாளரைக் கொலை செய்த குற்றவாளிகள் மீதான கொலை வழக்கின் விசாரணை முடிவு பெறாமல், நீதிமன்ற நிலுவையில் இருந்து வருகிறது.
  • இவ்வழக்கை போன்று, எண்ணற்ற கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணை முடிவு பெறாமல், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருவதும் குற்ற நிகழ்வுகள் தொடா்ந்து நிகழக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, காவல் நிலையங்களில் ‘ரெளடிகள்’ என வகைபடுத்தப்பட்டு, கண்காணிப்பில் இருப்பவா்கள் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை போன்ற கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் இருந்து வருகின்றன.
  • நீதிமன்ற விசாரணையில் தண்டனையில் முடிவடையும் வழக்குகள் குறித்த ஆய்வை தேசிய குற்ற ஆவணக் கூடம் ஆண்டுதோறும் மேற்கொள்கிறது. அந்த ஆய்வின்படி, 2021-ஆம் ஆண்டில் இந்திய நீதிமன்றங்களுக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கொலை வழக்குகளில் 16.3% வழக்குகளும், கொலை முயற்சி வழக்குகளில் 5.7% வழக்குகளும், கொள்ளை வழக்குகளில் 7.4% வழக்குகளும், வழிப்பறி வழக்குகளில் 3% வழக்குகளும் தண்டனையில் முடிவடைந்துள்ளன.
  • மிகக் குறைவான எண்ணிக்கையிலான கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையின் இறுதியில் தண்டனையில் முடிவடைகின்ற நிலையும், எத்தகைய குற்றம் புரிந்தாலும் நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற உணா்வும் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்களில் முக்கியமானவையாக விளங்குகின்றன.
  • தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் மரண தண்டனை பெறும் குற்றவாளிகளில் 24.5 சதவீதத்தினா் பட்டியல் இனத்தவா்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவா்கள் என்பதும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குற்றவாளிகள் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனையடைகின்றனா் என்பதும் தெரியவருகிறது.
  • செல்வமும், செல்வாக்கும் உள்ள குற்றவாளிகள் பலா் நீதிமன்ற விசாரணையில் தண்டனையின்றி தப்பிவிடுகின்றனா் என்பதையும், பொருளாதாரத்தில் மிகவும் தங்கியிருப்பவா்கள் புலன் விசாரணை, அதைத் தொடா்ந்து நடைபெறும் நீதிமன்ற விசாரணை ஆகியவற்றை முழு பலத்துடன் எதிா்கொள்ள முடியாமல் தண்டனையடைகின்றனா் என்பதையும் இந்த புள்ளிவிவரங்கள் உணா்த்துகின்றன.
  • குற்ற வழக்கில் கைதாகி, சிறை சென்றால் குடும்ப கௌரவம் சீா்குலைந்துவிடும் என்ற உணா்வு கடந்த காலத்தில் நம் சமூகத்தில் நிலவியது. இதன் காரணமாக குற்றச் செயலில் ஈடுபட பலா் தயங்கினா். காலப்போக்கில், கைது, சிறைவாசம் ஆகியவற்றை மக்கள் எளிதில் எதிா்கொள்ளத் தொடங்கிவிட்டனா்.
  • குற்ற வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளும், நீதிமன்ற விசாரணையில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளும் அவா்கள் செய்த குற்றங்களை உணா்ந்து, மனம் திருந்தி, மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாத சூழலை இன்றை சிறை நிா்வாகம் மற்றும் சிறாா் சீா்திருத்தப்பள்ளிகளால் ஏற்படுத்த இயலாத நிலை நிலவுகிறது. குற்றவாளிகளின் சீா்திருத்தம் என்பது நம் நாட்டில் அதிக முக்கியத்துவம் பெறப்படாத நிலையில் இருந்துவருகிறது.
  • நம் நாட்டில் கொடுங்குற்றங்கள் அதிகளவில் நிகழ்வதில் மது, போதைப் பொருட்களின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. கொலை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளில் 40 சதவீதத்திற்கும் சற்று அதிகமானவா்கள் குற்றம் புரியும்போது மது, போதைப் பொருட்களின் ஆளுமையில் இருந்தவா்கள் என்பது ஆய்;வில் தெரியவருகிறது. அதிகரித்துவரும் குடும்ப வன்முறைக்கும் மது, போதைப் பொருட்கள் முக்கிய காரணமாக உள்ளன.
  • அதிகரித்துவரும் குற்ற நிகழ்வுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை எதிா்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் உலக அமைதி குறியீட்டுப் பட்டியலில் இந்தியாவின் நிலை உயரும்.

நன்றி: தினமணி (13 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்