TNPSC Thervupettagam

பருவ மழையும் முன்கணிப்புகளும்

August 26 , 2019 1773 days 4157 0
இதுவரை
  • தென்மேற்கு பருவக் காற்றானது வழக்கத்தை விட கிட்டத்தட்ட ஒரு வார காலம் தாமதமாக ஜூன் 07 அன்று கேரளாவிற்குள் நுழைந்தது. இருப்பினும் இது அவ்வளவு நம்பிக்கையூட்டும் விதமாக அமையவில்லை.
  • இந்தியாவானது 2018 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் தனது பருவமழைக் காலத்திற்கு முந்தைய மழையை மிகமிகக் குறைவாக பதிவு செய்துள்ளதால் நீர்த் தேக்கங்கள் தண்ணீரின்றி அருகியுள்ளன. எனவே நல்ல பருவமழை தற்போது அவசியமாகின்றது.

  • ஜூன் 27 நிலவரப்படி, அந்த மாதத்தில் இயல்பாக பெய்யும் மழையளவில் மூன்றில் இரண்டு பங்கு மழையை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது.
  • சென்னை உள்ளிட்ட பல இடங்கள் நீர்ப் பற்றாக்குறையின் பிடியில் உள்ளன. மேலும் நாட்டின் சுமார் 80% வானிலை ஆய்வுப் பிரிவுகள் பற்றாக்குறையான மழையையே பதிவு செய்துள்ளன.
  • ஆனால் பருவமழையானது சமீபத்தில், தென்னிந்தியாவின் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில்  பலத்த சேதச் சுவடுகளை விட்டுச் சென்றது.
  • அசாமும் பீகாரும் பெரும் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் இமாச்சலப் பிரதேசம் 70 ஆண்டு காலமாக இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் மிக அதிக மழையைப் பெற்றது.

மாதங்களுக்கான முன்கணிப்புகள்

  • ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் பருவ மழைக் காலத்தின் மிக முக்கியமான மாதங்கள் ஆகும். இவை ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் இந்தியா பெறும் 89 செ.மீ மழையில் ஏறக்குறைய 69% அளவில் பங்களிக்கின்றன.
  • இந்த வருடம் இந்திய வானிலை ஆய்வு மையமானது, வழக்கமாக பெய்யும் மழையளவில் ஜூலை மாதத்தில் 95% மழையையும் ஆகஸ்ட் மாதத்தில் 99% மழையையும் இந்தியா பெறும் என இந்த ஆண்டின் மே மாதத்தில் கணித்திருந்தது.

  • இந்த கணிப்பானது, ஏப்ரல் மாதத்தில் மத்திய பசிபிக் பெருங்கடலின் வெப்ப மயமாதலால் தோன்றும் எல் நினோவானது மெதுவாக வலுவிழக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.
  • எல் நினோ என்பது பொதுவாக இந்தியாவில் பருவமழை பலவீனமடைவதோடு தொடர்புடையதாகும். இருப்பினும் மேலும் இதர பல காலநிலை காரணிகளும் பருவமழை வறட்சிக்கு காரணமாக உள்ளன.

  • ஜூன் - செப்டம்பர் மாதங்களில் வழக்கமான மழைப் பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மே மாதத்தில் தெரிவித்திருந்தது.
  • இருப்பினும் ஜூன் மாதத்திற்கான குறிப்பிட்ட முன்கணிப்பை வழங்குவதை இம்மையம் தவிர்த்து வருகின்றது.
  • வரலாற்று ரீதியாக, ஜூன் மாதத்தில் பெய்யும் மழையின் அளவிற்கும் அடுத்த மாதத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

  • அரபிக் கடலில் உருவாகி குஜராத்தைத் தாக்கிய வாயு என்ற புயலானது பருவமழையின் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய தடையாக இருந்தது. மேலும் அதைப் போலவே பாகிஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளைக் கடந்து மழையைக் கொண்டு வரும் அமைப்பான மேற்கத்திய இடையூறானது தற்போது பருவமழை ஓட்டங்களைத் தடுத்துக் கொண்டு இருக்கின்றது.

  • பருவ மழைக் காலத்தின் தாமதமான முன்னேற்றமானது தேசிய அளவில் கலக்கத்தை ஏற்படுத்துகின்றது. இது பெரும்பாலும் கேரளாவில் தொடங்கி மேற்கு கடற்கரையோரமாகப் பயணிக்கும் பருவக் காற்றின் மந்தமான கிளையினால் ஏற்படுகின்றது.
  • அதே நேரத்தில், தெற்குக் கிளையாக கிழக்கிந்தியாவில் நுழையும் பருவக்காற்றின் கிளையானது, வங்காள விரிகுடாவில் உருவாகும் வெப்பச் சலன நீரோட்டங்களுடன் இணைந்து ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்பட்டு பெருமளவில் மழையை அளிக்கின்றது.

நாட்டில் பருவமழையின் பரவல்

  • பருவ மழையானது தெற்கு மற்றும் கிழக்கு இந்தியா முழுவதையும் உள்ளடக்கியதாகும்.
  • ஜூலை 15 ஆம் தேதிக்குள் பருவ மழையானது தனது கடைநிலைப் பகுதியான மேற்கு ராஜஸ்தானின் எல்லையை எட்டியிருக்க வேண்டும். ஆனால் பருவமழையின் தாமதமான வருகையில் இம்முறை அது எட்டப்பட வாய்ப்பில்லை.
  • அதற்கடுத்த வாரத்தில் இது மத்திய இந்தியா, குஜராத் மற்றும் உத்திரப் பிரதேசத்தின் பெரும்பகுதிக்கு மேலும் முன்னேறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் அவ்வாறு நிகழவில்லை.

  • இருப்பினும் புவியியல் பரவலானது மழையின் அளவை தெளிவற்றதாக ஆக்குகின்றது.
  • இந்தியாவின் 36 வானிலை மைய துணைப் பிரிவுகளில் இரண்டு மட்டுமே வழக்கமான மழைப் பொழிவை பதிவு செய்துள்ளன. அவற்றில் 27 மையங்கள் பற்றாக்குறையான மழைப் பொழிவைப் பெற்றுள்ளன.
  • ஜூன் 30-க்குள் வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்த துடிப்பு உருவாகி பருவமழைக்கு ஒரு குறிப்பிடத்தக்க உந்துதலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நிகழவில்லை.

பருவமழை முன்னறிவிப்பு முறைகள்

  • 2010 ஆம் ஆண்டு வரை, இந்திய வானிலை ஆய்வு மையமானது புள்ளி விவர மாதிரிகள் முறையை மட்டுமே பயன்படுத்தியது.
  • இவை முக்கியமாக பருவமழையின் செயல் திறனுடன் தொடர்புடைய காலநிலை அளவுருக்களை அடையாளம் காண்பதை உள்ளடக்கியது. உதாரணமாக அந்த அளவுருக்கள் வடக்கு அட்லாண்டிக் மற்றும் வடக்கு பசிபிக் இடையேயான கடல் பரப்பின் வெப்பநிலை சாய்வு விகிதம், பூமத்திய ரேகை பசுபிக் பகுதியில் உள்ள சூடான நீரின் அளவு மற்றும் யூரேசியப் பகுதியில் பனிப் பரப்பின் அளவுகள் ஆகியனவாகும்.

  • பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மேற்கண்டவற்றின் மதிப்புகளானது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள உண்மையான மழையின் மதிப்புகளுடன் தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. பின்னர் புள்ளியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட ஆண்டின் பருவ மழை பற்றிய முன்கணிப்பு மதிப்பிடப்படுகின்றது.
  • இருப்பினும் இம்முறையானது தவறு என நிருபிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையானது குறிப்பாக 2002, 2004 மற்றும் 2006 ஆகிய  ஆண்டுகளில் பெரிய வறட்சி மற்றும் மழைப் பற்றாக்குறையை முன்னறிவிப்பதில் தனது அடையாளத்தை இழந்தது.

  • புதிய அளவுருக்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் இந்திய வானிலை ஆய்வு மையமானது தன்னை மேம்படுத்தியது. எனினும் அதே அடிப்படை நுட்பத்தை மாற்றாமலும் வைத்திருக்கின்றது.
  • 2015 ஆம் ஆண்டில் தான் அது ஒரு மாறும் தன்மை கொண்ட அமைப்பை பரிசோதிக்கத் தொடங்கியது.
  • இது ஒரு குறிப்பிட்ட நாளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உள்ள நிலம் மற்றும் கடல் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வெவ்வேறு உயரங்களில் காற்றின் வேகம் போன்றவற்றின் அடிப்படையில் வானிலை மாதிரியை உருவாக்குகின்றது. சக்தி வாய்ந்த கணினிகள் இந்த வானிலை மாறிலிகளானது நாட்கள், வாரங்கள், மாதங்களில் எவ்வாறு மாறும் என்பதனைக் கணக்கிடுகின்றன.
  • இந்த வானிலை மாறிலிகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தன்னுடன் எவ்வாறு தொடர்புடையவை என்பதைக் காட்டும் இயற்பியல் சமன்பாடுகளைத் தீர்ப்பதன் மூலம் இதைக் கண்டறிய முடியும்.
  • உலகெங்கிலும் உள்ள வானிலை மையங்கள் அனைத்தும் இத்தகைய நுட்பங்களுக்கு மாறினாலும் அவை பருவமழைக் காலத்தை முன்னறிவிப்பதற்கு முற்றிலுமாக நம்பகத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்படவில்லை.
  • உள்ளூர் வானிலை முன்னறிவிப்புகள் அல்லது 10-15 நாட்களுக்கு முன்னரே வானிலை மாற்றங்கள் குறித்து விவசாயிகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக இந்திய வானிலை ஆய்வு மையமும் பல தனியார் வானிலை ஆய்வு மையங்களும் அதிகளவில் இந்த அதிநவீன மற்றும் உயர் தெளிவுத் திறன் கொண்ட கணினி மாதிரிகளையே நம்பியுள்ளன.

 

  • நிச்சயமற்ற பிம்பங்களை மட்டுமே தரும் நீண்ட கால முன்னறிவிப்புகளுக்குப் பதிலாக பருவ மழைக் காலத்தின் செயல்திறன்களைப் பற்றிய விரிவான தகவல்களை அளிக்கும் இந்த குறுகிய கால கணிப்புகள் மிகவும் நம்பகமானவை ஆகும். மேலும் அவை விதை விதைப்பு குறித்து விவசாயிகள் முடிவெடுக்கவும் உதவுகின்றன.
  • இந்த மாதிரிகளானது வெப்ப அலைகள் அல்லது குளிர் அலைகளை கணிப்பதற்கும் உதவியாக இருக்கும். எனவே நகர்ப்புற திட்டமிடுபவர்களுக்கும் அரசிற்கும் அது பயனுள்ளதாகவும் இருக்கும்.
  • புள்ளி விவர மாதிரியானது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புத் தத்துவத்தின் அடிப்படையாக தொடர்ந்து இருந்து வருகின்றது. ஆனால் அதன் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

பருவ மழை மற்றும் இந்தியாவின் நீர்ப் பற்றாக்குறை

  • நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் நீர் நெருக்கடியானது நிலத்தடி நீர்வளங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் மழை நீர் மற்றும் மேற்பரப்பு நீரை போதுமான அளவு சேமிப்பதில்லை என்பதாலும் ஏற்படுகின்றது.

  • மத்திய நீர் ஆணையமானது அதன் நீர்த் தேக்கங்கள் எவ்வாறு நீரை சேமித்து திறந்து விட வேண்டும் என்பதற்கான பரிந்துரையில் ஜூன் 01 ஆம் தேதி நீர்த் தேக்கங்கள் காலியாக இருக்க வேண்டும் என்றும் பருவமழையின் போது அவை படிப்படியாக நிரப்பப்பட்டு மழைக்காலம் அல்லாத மாதங்களில் அவற்றில் தண்ணீர் கிடைக்கும் என்றும் கூறுகின்றது.
  • ஜூன் மாதமானது 17 செ. மீ அல்லது மழைக் காலத்தின் மழையில் 20%க்கு மட்டுமே பங்களிக்கின்றது. மேலும் இது அதிகரிக்கும் என அறியப்படுவதால் விவசாயிகள் ஏற்கனேவே விதைப்பதை தாமதப் படுத்தியுள்ளனர் மற்றும் ஒப்பிட்டளவில் அவர்கள் விரைவாக வளரும் பயிர் வகைகளைச் சார்ந்துள்ளனர்.
  • மேலும், பல விவசாயிகள் தங்களது காலநிலை அல்லது நடைமுறையில் உள்ள நீர் அளவிற்குப் பொருந்தாத வகையில் மிகுதியான அளவில் நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை நடவு செய்கின்றனர்.
  • ஜூலை மாத மழையால் வறண்ட நிலங்களைத் தற்காலிகமாக வளப்படுத்த முடியுமே தவிர நிலத்தடி நீர்ப் பற்றாக்குறை மற்றும் போதுமான அளவு நிரப்பப்படாத நீர்த்தேக்கங்களினால் ஏற்படும் கடுமையான நீர் நெருக்கடியை இதனால் தீர்க்க முடியாது.

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்