TNPSC Thervupettagam

பள்ளிகள் - மாணவர்களின் நிலை குறித்த தலையங்கம்

March 26 , 2022 864 days 477 0
  • கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் (யூடிஐஎஸ்இ பிளஸ்) அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் 2012-13 முதல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
  •  இதில் நாடு முழுவதும் உள்ள 10.3 லட்சம் அரசுப் பள்ளிகள் உள்பட 15.1 லட்சம் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர், பணியாளர்கள் உள்ளிட்ட பல விவரங்கள் தொகுக்கப்படுகின்றன.
  • பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 2020-21இல் அதற்கு முந்தைய ஆண்டைவிட 18.8 லட்சமும், கே.ஜி. வகுப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 29.1 லட்சமும் குறைந்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

கவலையளிக்கும் கல்விநிலை

  • 2020-21-இல், தொடக்க வகுப்பிலிருந்து மேல்நிலை வகுப்பு வரை 25.38 கோடி பேர் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள்.
  • இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 28.32 லட்சம் அதிகமாகும். எனினும், இவர்கள் யாரும் நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை.
  • ஆனால், ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, கே.ஜி. மற்றும் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளின் சேர்க்கை எண்ணிக்கையும் 3.6 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
  • கரோனா தீநுண்மி பாதிப்பால் மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • யுனெஸ்கோ அறிக்கையின்படி, உலகம் முழுவதும் சராசரியாக 35 வாரங்கள்தான் பள்ளிகள் முழுமையாகவோ பகுதியாகவோ மூடப்பட்டன.
  • ஆனால், அமெரிக்காவில் 62 வாரங்களும், இந்தியாவில் 73 வாரங்களும் மூடப்பட்டன. சாதாரணமாக, எப்போதும் விடப்படும் விடுமுறைக்குப் பிறகே மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது.
  • இந்த நீண்ட விடுமுறையால் மாணவர்களின் கற்றல் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • கரோனா காரணமாக, பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால், தனியார் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்த 39.7 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
  • தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதை "அஸர் 2021' அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • 2006 முதல் 2014 வரை தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தே வந்துள்ளது. பின்னர், 2018 வரை ஒரே சீரான அளவில் இருந்துள்ளது. ஆனால், அதன் பின்னர் குறையத் தொடங்கியுள்ளது.
  • ஆனால், இதற்கு நேர்மாறாக, 2006 முதல் குறையத் தொடங்கிய அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
  • கல்விக் கட்டணத்தை வசூலிக்க முடியாததால், சிறிய அளவிலான தனியார் பள்ளிகள் மூடப்பட்டதாலும் அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் மாறியிருக்க வாய்ப்புள்ளது.
  • தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, மகாராஷ்டிரம், கேரளம், ஆந்திரம் போன்ற முன்னேறிய, பெரிய மாநிலங்களில்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது.
  • அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருந்தாலும், அந்த மாணவர்கள் அனைவருமே பள்ளிக்கு வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
  • கரோனாவுக்கு முன்பேகூட, உத்தர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் வருகைப் பதிவு 60 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது.
  • இந்த மாணவர் சேர்க்கை அதிகரிப்பு மேலும் சில சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. பல அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை.
  • அதிகரித்த மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அளவுக்கு பொருளாதார நிலையும் தற்போது இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியிலும் ஆசிரியர்கள் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
  • உதாரணமாக, 2020 மார்ச்சில் பள்ளிகள் மூடப்பட்டபோது 2-ஆம் வகுப்பில் இருந்த குழந்தை, 2021-ஆம் ஆண்டு இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது 4-ஆம் வகுப்பில் இருந்தது.
  • இந்த ஒன்றரை ஆண்டுகளில் தனியார் பள்ளிகளாக இருந்தால் இணையவழியிலும், அரசுப் பள்ளிகளாக இருந்தால் தொலைக்காட்சியிலும்தான் பாடங்களைப் படித்திருப்பார்கள். அதில் எந்த அளவுக்கு மாணவர்களால் கவனம் செலுத்த முடிந்தது என்பது கேள்விக்குறியே.
  • கரோனா இல்லாத சமயத்திலேயே, 8-ஆம் வகுப்பு வரை "அனைவரும் தேர்ச்சி' (ஆல் பாஸ்) என்பதால், 5-ஆம் வகுப்பு மாணவர்களால் 2-ஆம் வகுப்பு பாடங்களைக்கூட சரியாகப் படிக்க முடிவதில்லை என்பதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன.
  • மாணவர்களால் புரிந்துகொள்ள இயலாத நிலையில், அவர்களுக்குப் பாடம் நடத்துவது பெரும் சிரமமாக இருப்பதாக 65.4 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதை "அஸர் 2021' அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேரடி வகுப்புகள் இல்லாததால் இணையவழி வகுப்பும் தொலைக்காட்சி வகுப்பும் மாணவர்களின் இயல்பு வாழ்க்கையையே தடம்புரளச் செய்துள்ளன.
  • நேரத்துக்கு சாப்பிடாதது, தினசரி குளிக்காதது, படிப்பில் கவனம் குவிக்க முடியாதது, செல்லிடப்பேசியிலேயே மூழ்கிக் கிடப்பது, இணையவழியிலேயே தேர்வு என்பதால் பார்த்தே எழுதுவது உள்ளிட்டவை பெரும்பாலான மாணவர்களின் இயல்பாகவே மாறி விட்டன.
  • அரசு சரியாகத் திட்டமிடுவதுடன், ஆசிரியர் - பெற்றோர் - மாணவர் சமூகம் இணைந்து செயல்பட்டால் தான் மாணவ சமுதாயம் எதிர்கொள்ளும் இந்த எல்லா குறைகளையும் சரிசெய்ய இயலும்!

நன்றி: தினமணி (26 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்