TNPSC Thervupettagam

புனித ஜார்ஜ் கோட்டை நாற்காலியின் சுவாரசியமான வரலாறு

March 19 , 2021 1229 days 624 0
  • நம் நாடு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்திருந்தாலும், இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்ததும், இந்தியா குடியரசு நாடக அறிவிக்கப்பட்டதும் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதிதான்.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே நாட்டின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. எந்த ஒரு அரசியல் கட்சியையும் நமது தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சியாகவும், தேசியக் கட்சியாகவும் அங்கீகரிக்க மூன்று விதமான விதிமுறைகளை வகுத்துள்ளது.
  • ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சி தேர்தலின்போது பதிவாகும் ஓட்டுகளில் 6 சதவீதத்தை பெறுமேயானால் அந்தக் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்து விடும்.
  • 6 சதவீத ஓட்டுகளைப் பெறும் அந்தக் கட்சியில் ஒரு எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்படாமல் போனாலும்கூட அந்தக் கட்சிக்கு மாநில அந்தஸ்து உறுதியாகும்.
  • அதே நேரம் 6 சதவீத ஓட்டுகளைப் பெறாமலும் ஒரு கட்சி மாநில அந்தஸ்தைப் பெற்று விட முடியும். சட்டப்பேரவைத் தேர்தலில் 30 எம்எல்ஏக்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்தக் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்து விடும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை தேர்ந்தெடுத்த 8 எம்எல்ஏக்களை ஒரு கட்சி கொண்டிருந்தாலே போதும், அந்தக் கட்சியை மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையரால் அங்கீகரிக்கப்பட்டு விடும்.

தேசியக் கட்சி

  • ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சி 3 மாநிலங்களில் அங்கீகாரம் பெற்று இருக்குமேயானால், அந்தக் கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
  • ஒரு கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளைப் பெறாமலும், சட்டசபையில் ஒரு எம்எல்ஏ இல்லாமலும்கூட தேசியக் கட்சியாக இருக்க முடியும்.
  • நாடாளுமன்றத் தேர்தலின்போது அந்தக் கட்சி 25 எம்.பி.,க்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மொத்தம் 22 எம்.பி., க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அந்தக் கட்சி தேசியக் கட்சியாகி விடும். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட கட்சி நமது நாட்டில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் அதற்கென ஒதுக்கப்படும் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியும்.

சபாநாயகர் நாற்காலி

  • தற்போது, மாநிலத்திலும், தேசியத்திலும்  ஏராளமான கட்சிகள் தாராளமாக உள்ளன. முதல்வர் நாற்காலிக்கும், சட்டப்பேரவைத் தலைவர் நாற்காலிக்கும் முண்டியடித்து முட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
  • மாசிப்பனி தூசியையும் துளைக்கும் என்பார்கள். அந்தப் பனிக்காலத்திலும் கடும் வெயில் கொடுமையாக அனல் பறக்கிறது. அந்த அனலான வெயிலையும்விட, தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
  • "நாற்காலிக்கு சண்டை போடும் நாடு, நம் பாரத நாடு" என்பது போல, சட்டப்பேரவை நாற்காலி பற்றிய சுவாரசியமான தகவலை தெரிந்து கொள்வோம்.
  • தமிழகத்தின் சென்னையில் உள்ள கோட்டையான புனித ஜார்ஜ் கோட்டையின் நாற்காலிதான் அது. 
  • சென்னை நகரம் இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இந்த சென்னை நகரத்தின் வரலாறு 1640 ஆம் ஆண்டில் தொடங்குகிறது எனலாம். கடந்த 1640 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதிதான் புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. ஏப்ரல் 23 ஆம் தேதி புனித ஜார்ஜ் தினமாகும். அதனால்தான் புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயர் சூட்டப்பட்டது.
  • பின்னர் இடிக்கப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் 1695 ஆம் ஆண்டு அடுக்குமாடி வளாகமாகக் கட்டப்பட்டது. கோட்டையில் முதல் கூட்டம், 1893 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மாலை 3 மணிக்குத்தான் முதல் முறையாக நடந்தது.
  • சட்டப்பேரவைத் தலைவர்களாக (சபாநாயகர்களாக) இருந்தவர்கள் பதவிக் காலம் முடிந்தவுடன் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை நினைவுப் பொருளாக வீட்டிற்கே கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இச்செயல் நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியாக இருந்தது. வேறு புதிய தலைவர் வரும் போது ஒரு புதிய நாற்காலியும் செய்ய வேண்டியிருந்தது. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் வெலிங்டன் பிரபுவும், அவரது மனைவியும்தான்.
  • மிகவும் அழகான வேலைப்பாடமைந்த நாற்காலி ஒன்றைச் செய்தார். 1922 ஆம் ஆண்டு பேரவைத் தலைவராக இருந்த ராஜகோபாலச்சாரியாருக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள். (இவர் சக்கரவர்த்தி சி. ராஜகோபாலாச்சாரியர் இல்லை) இந்த நாற்காலி வழங்கும் சம்பவம் ஒரு பெரிய சட்டப்பேரவை நிகழ்ச்சியாகவே நடந்தது. பேரவைத் தலைவர்களுக்காக அன்று வெலிங்டன் பிரபு வழங்கிய நாற்காலி இன்னும் 21 ஆம் நூற்றாண்டிலும் தனது சேவையைத் தொடர்கிறது.
  • 1924 ஆம் ஆண்டு எல்.டி.சாமிக்கண்ணு என்பவர்தான் முதல் பேரவைத் தலைவராக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969 ஆம் ஆண்டு சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1870 ஆம் ஆண்டுதான் மாநிலம் தழுவிய அரசியல் என்பது ஆரம்பமானது.
  • ஏ. சுப்பராயலு ரெட்டியார்தான் முதல் முதன் மந்திரியாவார். முதல் சட்டசபைத் தலைவராக சர்.பி. ராசகோபாலாச்சாரியர். இதுதான் சென்னையில் முதன் முதலில் தோன்றிய தமிழர்களின் மந்திரி சபையாகும்.1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதிதான் சட்டப்பேரவை தொடங்கி வைக்கப்பட்டது.
  • 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது பொதுத் தேர்தல் நடந்தது. பனகல் அரசர் முதல்வராகவும், பேராசிரியர் எம்.ரத்தினசாமி சட்டப்பேரவைத் தலைவராகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி (19 – 03 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்