TNPSC Thervupettagam

பொருளாதாரச் சரிவிலிருந்து இந்தியா மீள என்ன வழி?

September 2 , 2020 1424 days 621 0
  • ஊரடங்கின் காரணமாகக் கடும் பொருளாதாரச் சரிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டாலும் தற்போதைய புள்ளிவிவரங்கள் எதிர்பார்த்ததைவிடப் பேரதிர்ச்சியை உருவாக்கியிருக்கின்றன.
  • நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9% சரிவைச் சந்தித்துள்ளது.
  • இந்தக் காலகட்டத்தில் பொருளாதார இயக்கம் ஸ்தம்பித்துவிட்டது. நுகர்வும் முதலீடுகளும் குறைந்துவிட்டன. வேலையிழப்பும் வருமான இழப்பும் அதிகரித்தவண்ணம் உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இந்தச் சரிவுநிலை கடந்த நாற்பதாண்டுகளில் இந்தியா சந்தித்துள்ள மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி என்று மதிப்பிடப்படுகிறது.
  • கட்டுமானத் துறை பணிகள் சரிபாதிக்கும் மேலாகக் குறைந்துவிட்டன. உற்பத்தித் தொழில் துறை 39% குறைந்துள்ளது.
  • வணிகம், விடுதிகள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகிய துறைகள் 47% சரிவைச் சந்தித்துள்ளன. இந்தியப் பொருளாதாரத்துக்கு 60% பங்களிப்பை அளித்துவந்த சேவைப் பணித் துறையின் பங்களிப்பு இந்தக் காலாண்டில் 20.6% ஆகக் குறைந்துள்ளது.
  • தனிநபர் நுகர்வுதான் பொருளாதாரத்தின் முக்கியமான இயக்குவிசை. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் தனிநபர் நுகர்வு வளர்ச்சி விகிதம் 8.5% ஆக இருந்தது. தற்போது தனிநபர் நுகர்வு 24.5% சரிவைச் சந்தித்துள்ளது.
  • உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் கரோனா பாதிப்புக்கு ஆளானதில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா 9.1% சரிவையும், இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேஸில் 0.3% சரிவையும் மட்டுமே சந்தித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்த எண்கள் அரசைத் தலைகுனிய வைக்கக் கூடியவை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருக்கின்றன.
  • ஆனால், இந்தியா இந்தச் சரிவிலிருந்து மீண்டெழும் என்றும், அடுத்த காலாண்டுகளில் படிப்படியாக வளர்ச்சி நிலையை நோக்கி நகர்வோம் என்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார்.
  • ஆனால், அத்தகைய பொருளாதார மீட்சிக்குக் குறைந்தபட்சம் இரண்டாண்டுகளேனும் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.
  • அதற்கும்கூட பொறுப்பேற்பும் அர்ப்பணிப்புமிக்கக் கூட்டுச்செயல்பாடும் முக்கியம். கடவுள் செயல்என்று அரசு தன் கைகளை விரிக்கும் இன்றைய அணுகுமுறையைத் தொடருமானால், ஆண்டுகள் கடந்தும் நீடிக்கும் துயரமாக இந்த வீழ்ச்சி உருவெடுத்துவிடும்.
  • இந்தியாவைப் பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்டெடுக்க மத்திய அரசு உடனடியாக அடுத்த இரண்டாண்டுகளுக்கான ஒரு பொருளாதாரச் செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
  • அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, நிதி நிர்வாகத்துக்குப் பேர்போனவர்களை உள்ளடக்கியதாக ஒரு வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டு, அதன் வழிகாட்டுதலில் அந்தச் செயல்திட்டம் வகுக்கப்பட்டு செயலாக்கப்பட வேண்டும்.

நன்றி:  தி இந்து (02-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்