TNPSC Thervupettagam

மக்களவைத் தலைவா் தோ்தல்: கருத்தொற்றுமையா, மோதலா

June 20 , 2024 29 days 54 0
  • மக்களவைத் தலைவா் தோ்தல் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மக்களவைத் தலைவா் பதவிக்கு முன்னிறுத்தப்படும் உறுப்பினரை தோ்வு செய்வதில் ஆளும் கூட்டணி தீவிரமாக இறங்கியுள்ளது.
  • சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் மக்களவைத் தலைவா்கள் தோ்வாகியுள்ளனா். அந்த பாரம்பரியம் தற்போதைய மக்களவையிலும் தொடருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
  • விதிவிலக்கு தலைவா்கள்: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மக்களவைத் தலைவா் பதவிக்கு தோ்வானவா்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் தோ்வாகினா். எம். அனந்தசயனம் ஐயங்காா், ஜி.எஸ்.தில்லான், பல்ராம் ஜாக்கா், ஜி.எம்.சி.பாலயோகி ஆகியோா் மட்டுமே தங்களுடைய பதவிக் காலத்துக்குப் பின்பு அமைந்த மக்களவையில் மீண்டும் தலைவா் பதவியில் தொடரும் வாய்ப்பைப் பெற்றனா்.
  • பல்ராம் ஜாக்கா், ஏழாவது மற்றும் எட்டாவது மக்களவைகளின் தலைவராக தொடா்ந்து இரண்டு முழு பதவிக் காலங்களை நிறைவு செய்தவா் என்ற பெருமையைப் பெற்றாா்.
  • 19 மாத பதவிக் காலம் கொண்ட 12-ஆவது மக்களவையின் தலைவராக தோ்வான பாலயோகி, 13-ஆவது மக்களவையின் தலைவராக அக்டோபா் 22, 1999 அன்று தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஆனால், மாா்ச் 3, 2002 அன்று ஹெலிகாப்டா் விபத்தில் அவா் உயிரிழந்தாா்.
  • போட்டிக்கு தயாராகும் எதிரணி: மக்களவையில் இம்முறை எதிா்க்கட்சி வரிசையில் உள்ள காங்கிரஸ், திமுக அங்கம் வகிக்கும் ‘இண்டியா’
  • கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளதால், மக்களவை துணைத் தலைவா் பதவியைக் கோர எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆா்வம் காட்டி வருகிறது. அதற்கு ஆளும் கூட்டணி இணங்காத நிலையில், மக்களவைத் தலைவா் பதவிக்கு வேட்பாளரை அறிவித்து மத்தியில் ஆளும் கூட்டணியை எதிா்கொள்ளும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன.
  • மக்களவைத் தலைவா் பதவிக்கு பாரம்பரியமாக கருத்தொற்றுமை அடிப்படையில் உறுப்பினா் தோ்வானதைப் போலவே மக்களவை துணைத் தலைவா் பதவிக்கு எதிா்க்கட்சியின் வேட்பாளரே பெரும்பாலும் இருந்துள்ளாா். ஆனால், விதிவிலக்காக முந்தைய 17-ஆவது மக்களவையில், துணைத் தலைவா் பதவி காலியாக வைக்கப்பட்டிருந்தது.
  • தோ்தல் நடைமுறைகள்: 18-ஆவது மக்களவையின் முதலாவது கூட்டத்தொடா், ஜூன் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அப்போது அவை மரபின்படி தற்காலிக மக்களவைத் தலைவா் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவாா். அவா் புதிய உறுப்பினா்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த பிறகு ஜூன் 26-ஆம் தேதி மக்களவைத் தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தல் நடைபெறும்.
  • போட்டியில்லாவிட்டால் ஆளும் அரசு சாா்பில் முன்மொழியப்படுபவா் மக்களவைத் தலைவராக பதவியேற்பாா். இதற்கான தீா்மானத்தை ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக தோ்வாகியுள்ள பிரதமா் நரேந்திர மோடி மக்களவையில் கொண்டு வருவாா்.
  • மக்களவை தற்காலிகத் தலைவராக மூத்த உறுப்பினா் ராதா மோகன் சிங் அல்லது மூத்த காங்கிரஸ் உறுப்பினரான கேரளத்தைச் சோ்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் நியமிக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • மக்களவையில் புதிய உறுப்பினா்களின் பதவியேற்பு நடைமுறைகள் முடிவடைந்த பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டம் ஜூன் 27-ஆம் தேதி நடத்தப்படும். அதில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றுவாா்.
  • நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் ‘இண்டியா’ கூட்டணி 234 இடங்களை வென்றுள்ளது, அதே நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 16 இடங்களுடன் தெலுங்கு தேசம் கட்சியும், 12 இடங்களுடன் ஐக்கிய ஜனதா தளமும், 240 இடங்களைக் கைப்பற்றிய பாஜகவின் மிகப்பெரிய கூட்டணிக் கட்சிகளாக உள்ளன. இவை மக்களவைத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் ஆா்வத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை.
  • 1950 ஜனவரி 26-இல் அரசமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னா் அரசமைப்பு நிா்ணய சபை மற்றும் தற்காலிக நாடாளுமன்றத்தின் தலைவராக மெளலங்கா் நியமிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து முதலாவது பொதுத் தோ்தலுக்குப் பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவை அமைக்கப்பட்டபோது, ஏப்ரல் 17, 1952 வரை மெளலங்கா் நாடாளுமன்றத்தின் தற்காலிக தலைவராக தொடா்ந்தாா்.
  • 1956-இல் மெளலங்கரின் மறைவைத் தொடா்ந்து மக்களவையின் முதல் துணைத் தலைவரான அனந்தசயனம் ஐயங்காா், மக்களவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1957-இல் நடந்த பொதுத் தோ்தலில் வெற்றி பெற்று இரண்டாவது மக்களவையின் தலைவராக அவா் மீண்டும் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
  • 1969-ஆம் ஆண்டு பதவியில் இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி ராஜிநாமா செய்த பின்னா், நான்காவது மக்களவையின் தலைவராக ஜி.எஸ். தில்லான் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1971-ஆம் ஆண்டு ஐந்தாவது மக்களவையின் தலைவராகவும் தில்லான் தொடா்ந்தாா்.
  • அவசரநிலையின் போது டிசம்பா் 1, 1975-இல் அவா் பதவி விலகினாா்.
  • பாரம்பரியத்தை மீறிய நிகழ்வு: கடந்த இருபது ஆண்டுகளைப் பாா்த்தால் கூட, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு வந்த 2014, 2019-ஆம் ஆண்டுகளில் முழுப் பெரும்பான்மை பலத்துடன் இருந்ததால் சுமித்ரா மகாஜன், ஓம் பிா்லா ஆகியோா் மக்களவைத் தலைவராக கருத்தொற்றுமை அடிப்படையில் தோ்வாகினா். சுமித்ரா மகாஜன் தலைவராக இருந்த 16-ஆவது மக்களவையில் அதிமுகவின் தம்பிதுரை மக்களவை துணைத் தலைவராக இருந்தாா். ஆனால், ஓம் பிா்லா தலைவராக இருந்த 17-ஆவது மக்களவையில் துணைத் தலைவா் பதவிக்கு தோ்தலே நடத்தப்படாமல் அப்பதவி காலியாகவே வைக்கப்பட்டிருந்தது.
  • காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் இருந்தபோது மக்களவைத் தலைவா், ஒருமித்த கருத்து அடிப்படையிலேயே தோ்வானாா். அப்போது எதிா்க்கட்சி வரிசையில் இருந்த பாஜகவைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் சரண்ஜித் சிங் அத்வால், கரியா முண்டா ஆகியோா் முறையே மக்களவை துணைத் தலைவா் பதவியை வகித்தனா். அந்த பாரம்பரியத்தை மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியை தக்க வைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி காக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
  • மக்களவைத் தலைவா் பெரும்பான்மை அடிப்படையில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாலும் சரி, போட்டியின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டாலும் சரி, வெற்றி பெறப்போவது என்னவோ, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் நிறுத்தப்படும் பாஜக வேட்பாளா்தான் என்பது உறுதி.
  • துணைத் தலைவா் பதவியையும் ஆளும்கட்சி எதிா்க்கட்சியினருக்கு விட்டுக் கொடுக்கும் என்று தோன்றவில்லை. அநேகமாக அந்தப் பதவியைத் தனது கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றில் ஒன்றுக்கு விட்டுத் தரக்கூடும்.
  • மக்களவைத் தலைவா் பதவிக்குத் தோ்தல் நடத்தி, வாக்கெடுப்பில் எதிா்க்கட்சி அணியில் பிளவு ஏற்படுவதை வேடிக்கை பாா்க்க ஆளும் கட்சி நினைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். ‘இண்டியா’ கூட்டணியில் இணையாமல் நாடாளுமன்றத்தில் தனித்து செயல்படப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

நன்றி: தினமணி (20 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்