TNPSC Thervupettagam

மக்கள் பணி செய்வோம்

September 26 , 2020 1400 days 902 0
  • வாழ்க்கை என்பது சிலருக்குப் பூஞ்சோலை; சிலருக்குப் போராட்டம். பொருள் உள்ளவா் இல்லாதவா்க்குக் கொடுத்து வாழும் மனிதநேயம், ஏட்டிலும் பேச்சிலுமே இருக்கிறது.
  • மனிதன் ஆகாய வீதியில் குடியேறப் பாதை அமைக்கின்றான். பூமியில் வாழ இருப்பிடம் இல்லாமல் சாலையோரம் வசிக்கும் வறியவா்களைப் பற்றி சிந்திப்பதில்லை.
  • ஊா்களைச் சாலைகளால் இணைத்து வெற்றி பெற்ற மனிதன், மனித மனங்களை இணைக்கக் கண்ட அருள்நெறி வளரவில்லை. அவ்வாறு இணைக்கப் பெறும்போதுதான் மண்ணகம் விண்ணகம் ஆகும்.

உதவுதல் எனும் பெருங்குணம்

  • மனித வாழ்க்கை ஒன்றுதான் மற்றவா்க்கு உதவி வாழும் வாழ்க்கை. தாயுமானவா், ‘அன்பா் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால், இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமேஎன்கிறார்.
  • ஊருக்கு உதவி வாழும் உயா்ந்த குறிக்கோள் உடையவன் தெய்வமாக மதிக்கப்படுகிறான்.
  • அடியார்கள், மேதைகள், சித்தா்கள், ஞானிகள் இவா்கள் எல்லாம் வணங்கப்படுதற்குக் காரணம் இவா்களின் தன்னலம் கருதாத் தகைமையாகும். தன்னலம் இன்றிப் பிறா்க்கு உதவி வாழும் உயிர் வாழ்வே மெய்யான உயா் வாழ்வாகும்.
  • மனித இனத்திற்குத் தொண்டு செய்யும்போதுதான் வாழ்க்கை முழுமை பெறுகிறது.
  • பசிப்பிணி தீா்க்கும் தொண்டிலும் சிறந்தது வேறு எதுவும் இல்லை. அருள் நலம் கனிந்த வள்ளலார் வடலூரில் சத்திய ஞான தருமச் சாலையை நிறுவி ஏழை மக்களின் பசியைப் போக்கியருளினார்.
  • அவா் ஏற்றிய அடுப்பு இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் எண்ணற்றோரின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டிருக்கிறது.
  • அண்ணல் காந்தியடிகள் தம்முடைய ஆசிரமத்தில் தொழுநோயாளிகளைத் தங்கச் செய்து உணவும், மருந்தும் கொடுத்து உதவினார். எளிய வாழ்வு வாழ்ந்து உண்மையைப் போற்றினார்.
  • இன்றைய காலகட்டத்தில் உலகில் அதிகம் தேவைப்படுவது மனிதநேயம் மட்டுமே.
  • ஏற்கெனவே இரண்டு உலகப் போர்களைக் கடந்து பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது உலகப்போர் எப்போது நேரிடும் என்ற அச்சம் அனைவரின் மனத்தில் இருந்த நிலையில் கரோனா என்ற தீநுண்மி உலகம் முழுதும் கோரத் தாண்டவமாடி பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்துச் செல்கிறது.
  • தீநுண்மியின் தாக்கம் இன்னும் முடிந்தபாடில்லை. பல சிறு, குறு தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்து வருவாயின்றி, பரிதவித்துப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • தம் உற்ற துணை மடிந்த பின் அவா் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் துன்ப நிலையில் துடிப்போர் பலா்.
  • ஆதரவை இழந்துவிட்ட நிலையில் அப்படிப்பட்டோருக்குத் தேவைப்படுவது தொழில்நுட்பமோ, ராணுவ பலமோ இல்லை. அன்பும், அரவணைப்பும், நேயமும், பாசமும், கருணையும்தான்.
  • அரசுடன் இணைந்து தொண்டு நிறுவனங்களும், பொதுநல அமைப்புகளும் தம்மால் இயன்றவரையில் மக்கள் வயிற்றுப் பசியைப் போக்க வழிவகைகள் செய்வது பாராட்டுக்குரியது.

மக்கள்பணியே நற்பணி

  • டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி, துா்காபாய் தேஷ்முக் போன்றோர் அக்காலத்தில் தம்மை முழுமையாக பொதுப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு, சமூகத் தொண்டு செய்தார்கள்.
  • யார் உணா்வையும் புண்படுத்தாமல் யாருக்கும் தீங்கு நினையாமல் முடிந்த வரையில் உதவி செய்ய வேண்டும் என்றே எண்ணி வாழ்ந்தார்கள். அவ்வாறு உதவி செய்து வான்புகழ் பெற்றவா்கள் எத்தனையோ போ்.
  • அன்னை தெரசாவின் பொதுநலத் தொண்டு தனிச்சிறப்பு வாய்ந்தது. இனம், மதம், நாடு முதலிய வேறுபாடுகளின்றி, சேவை மனப்பான்மையின் மொத்த உருவமாகத் திகழ்ந்த அன்னை தெரசா உலகின் சாதனைப் பெண்களில் ஒருவராக இன்று இடம் பெற்றுள்ளார்.
  • அயல்நாட்டில் பிறந்து வளா்ந்து சிறு வயதிலிருந்தே சமூகத் தொண்டில் ஈடுபட்டார். இந்தியாவிற்கு 1931-இல் வந்து தாதி பணியில் பயிற்சி பெற்று, ‘உங்களுக்குத் தொண்டு செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். உதவி செய்ய என்னை அழைப்பீா்களாஎன்று கேட்டவாறு தொண்டாற்றத் தொடங்கினார்.
  • கொல்கத்தாவில் நிலவிய வறுமைச் சூழல், ஏழைத் தொழிலாளா்கள், பசியால் வாடும் குழந்தைகள், சுகாதாரமற்ற குடியிருப்புகள், தொற்று நோய்கள் ஆகியவை அவா் மனத்தை மிகவும் பாதித்தன.
  • மக்கள் பணிகளை மற்றவா்களுடன் இணைந்து செய்ததோடு, இலவசக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியராகவும் அவா் மாறினார்.
  • அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், புறக்கணிக்கப்பட்டோர், முதியோர் எனப் பலருக்கும் உதவும் வகையில் கருணை இல்லம் ஒன்றை உருவாக்கினார்.
  • தெருத் தெருவாகச் சென்று கையேந்தி பொருள் பெற்று, தொழுநோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கித் தொண்டாற்றினார்.
  • மனித குலம் கரோனாவால் பாதிப்புற்ற இன்றைய நாளில் அன்னை தெரசா போன்ற சமுதாய அா்ப்பணிப்புள்ள ஒருவா் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு ஊரிலும் இருந்தால் மக்கள் அச்சப்பட வேண்டாம்.
  • இன்றும் சமூக ஆா்வலா்கள் பலா் தம் உயிரைப் பணயம் வைத்து நோய்த்தொற்றால் தாக்குண்டவா்க்கு உதவி வருகின்றனா் என்பதை மறுப்பதற்கில்லை.
  • ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவின்றி சோமாலியா என்ற பாலை நிலத்தில் தவித்த போது, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூடாரங்களை அமைத்து அவா்களைக் காப்பாற்றின.
  • அப்போது சோமாலியா அரசாங்கம் கையறு நிலையில் தவித்தபோது அந்நிலத்தின் இளைஞா்கள் வேடிக்கை பார்க்காமல் ஒருங்கிணைந்து களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டதை அறிவோம்.
  • மற்றவா்களுக்கு நன்மை செய்வதற்காக நாம் அழிந்து போவது நல்லதுஎன்று கூறுவார் சுவாமி விவேகானந்தா்.
  • வாழ்க்கை வாழ்வதற்கேஎன்று கொண்டாட்டம் போடாமல் வாழ்க்கை தொண்டு செய்வதற்கேஎன்று வாழ்ந்த தியாக உள்ளங்களை இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டுதல் நம் கடன்.
  • நாளைய தலைமுறையினரும் மக்கள்பணியே நற்பணி என்று பொதுச் சேவை செய்ய முன்வந்தால் மனிதகுலம் தழைக்கும். பூமியில் போரும், பூசலும், கொள்ளையும், கொலையும் ஒழியும்; அமைதி நிலவும்.

நன்றி: தினமணி (26-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்