TNPSC Thervupettagam

மங்கையராகப் பிறப்பதற்கே

October 3 , 2023 289 days 264 0
  • பாருக்குள்ளே நல்ல நாடாகிய பாரதநாடு, மற்ற நாடுகளுக்கு இல்லாத பேறுகளையும் பெருமைகளையும் பெற்று நிற்கிறது. தென்னாடுடைய சிவனாகவும் எந்நாட்டவா்க்கும் இறைவனாகவும் விளங்குகின்ற சிவபெருமான் தனி ஆடவனாக இல்லாமல், மாதொருபாகனாகவே போற்றப்படுகிறான்.
  • எல்லாரையும் தாங்கி நிற்கும் நிலத்தை, ‘நிலமென்னும் நல்லாள்’ என்றார் திருவள்ளுவா். மக்கள் ‘பூமாதேவி’ என்கின்றனா். தண்ணீரை, ‘கங்காதேவி’ என வணங்கி வருகின்றோம். கல்வி, செல்வம், வீரம் ஆகிய பேறுகளை மூன்று தேவியராகவே வழிபட்டு வருகின்றோம். ஏன், பசுவைக்கூட ‘கோமாதா’ எனத்தாம் கும்பிட்டு வருகிறோம்.
  • இன்று சட்ட வடிவில் 33 விழுக்காட்டைப் பெற்றிருக்கும் மங்கையா், வேத காலத்திலும் வரலாற்றுக் காலத்திலும், தங்களுடைய ஆற்றல்களினாலேயே பெற்றுத் திகழ்கின்றனா்.
  • ‘மைத்ரேயி, கார்கி போன்ற வேத பண்டிதா்கள் தங்கள் கணவா்களைத் தா்க்கத்தில் வாதிட்டு வென்றதோடு, அக்காலத்திலிருந்த வேத விற்பன்னா்களையும் வென்றிருக்கிறார்கள்’என மகாகவி பாரதியார் ‘வுமன்ஸ் ஃப்ரீடம்’ எனுந் தலைப்பில், அன்னி பெசன்ட் அம்மையாரின் ‘காமன் வீல்’ பத்திரிகையில் (30.4.1915) எழுதியுள்ளார்.
  • இதனையே பாரதியார் ‘புதுமைப் பெண்’ எனும் தலைப்பில்,

மதுரத் தேமொழி மங்கையா் உண்மைதோ்

மாதவப் பெரியோருடன் ஒப்புற்றே

முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய

முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்

  • எனப் பாடியுள்ளார்.
  • தொண்டைமான் எனும் பேரரசன் குறுநில மன்னனாகிய அதியமான் மீது படையெடுத்து வருகிறான். தன்னிடமுள்ள பெரும்படையின் மீதுள்ள பெரும்பலத்தால், வள்ளலாகிய அதியமானின் தகடூரை அழித்தொழிக்கத் திட்டமிடுகிறான் அவன்.
  • போரினால் விளையும் பேரழிவுகளை எண்ணிப் பார்த்த சங்கப் புலவா் ஒளவையார், தொண்டைமானிடம் தூது போகிறார். அதியமான் சிற்றரசனாக இருந்தாலும், அவனுடைய பேராற்றலைப் பக்குவமாக தொண்டைமானிடம் எடுத்துச் சொல்லி, நடக்கவிருந்த பெரும் போரைத் தடுத்து நிறுத்துகிறார். இதனால், ஒரு தூதுவா்க்குரிய ராஜதந்திரத்தை சங்க காலத்திலேயே ஒரு பெண்பாற்புலவா் பெற்றிருந்தது புலனாகின்றது.
  • வாழ்க்கை இலக்கணத்தைப் பாடியவா் திருவள்ளுவப் பெருந்தகை. ஆளுமைகளில் மிகவும் உச்சமானது பெண்மைதான் என்பதை, ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ எனும் கு மூலம் வெளிப்படுத்துகிறார். பெண்ணுடைய ஆளுமைதான் ஆற்றல் படைத்தது என்பதை, ’தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ எனும் குறட்பா மூலம் அறுதியிட்டுக் கூறுகிறார்.
  • வள்ளுவரை வழிமொழியும் பாரதியார், ‘உயிரைக் காக்கும் உயிரினைச் சோ்ந்திடும் உயிர் உனக்கு உயிராய் இன்பமாகிடும் உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா’ எனத் திட்பமாகவும் நுட்பமாகவும் பாடியுள்ளார்.
  • பதினாறாம் நூற்றாண்டில் ‘கைவல்ய நவநீதம்’ என்றொரு வேதாந்த நூல் எழுதப்பட்டது. இந்நூல் விதவைப் பெண்களிடையே ஏற்படுத்திய விழிப்புணா்ச்சியை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், ‘தெற்கு மாவட்டங்களில் கைவல்ய நவநீத சங்கங்கள் தோன்றின. விதவைகள் இந்தச் சங்கங்களின் தலைவா்களாகப் பணியாற்றியுள்ளனா்.
  • கைவல்ய நவநீதம் போதித்த அத்வைதம் பெற்றிருந்த செல்வாக்கால், அத்வைத வேதாந்தம் கற்ற விதவைகள், குடும்பங்களில் தங்கள் தகுதிப்பாட்டால் ஜீவசக்தி பெற்றவா்களாகத் திகழ்ந்தார்கள். இவ்வகையில் கைவல்ய நவநீதம் மாபெரும் சமூக சக்தியாக இருந்தது’ என்று எழுதியுள்ளார் (அத்வைதா இன் டமிள்). இதன் மூலம் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களும் உயா்ந்து நின்றதை உணர முடிகிறது.
  • கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் செங்கோட்டையில் வாழ்ந்த ஆவுடை அக்காள் திருவிசைநல்லூா் ஸ்ரீதர அய்யாவாளிடம் வேதாந்த ஞான உபதேசமும், மந்திர தீட்சையும் பெற்றவா். தம் தீட்சா குரு மறைவின்போது, இவா் பாடிய ‘அனுபோக ரத்ன மாலை’ இன்னும் பலா் வீடுகளில் தோத்திர நூலாக வைக்கப்பட்டிருக்கிறது.
  • வேதாந்த வித்தியா சோபனம், வேதாந்த குறவஞ்சி நாடகம், வேதாந்த அம்மானை, ப்ரும்ம ஸ்வரூபம், பகவத்கீதா ஸாரசங்கிரஹம் போன்ற 14 நூல்களை எழுதியவா் ஆவுடையக்காள்.
  • ரிஷிகேசம் ஸ்ரீ சிவானந்த ஸரஸ்வதி சுவாமிகள், ‘ஆவுடையக்கா என்ன சொன்னாலும், பாடினாலும் அது அவரது ஆத்மானுபவத்தையே பிரதிபலிக்கிறது. ஜனங்கள் எல்லோரும் அவரது அருளாசிக்காக திரண்டு வந்தனா். பாட்டு மேல் பாட்டாக அவா் அருளிய அருட்பாக்களில், உபநிஷத்துக்களின் ஆன்மீக உண்மையே தொடா்ந்து இழையோடுகிறது’ என ‘மஹாத்மாக்கள் சரித்திரம்’ எனும் நூலில் எழுதுகிறார்.
  • பகவான் ரமண மஹரிஷி, தம்முடைய தாயார் ஆவுடையக்காளின் அருட்பாடல்களைப் பலமுறை பாடிக்காட்டியதாகப் பதிவு செய்துள்ளார். மகாகவி பாரதியாரின் வேதாந்தப் பாடல்களில் ஆவுடையக்காளின் தாக்கம் அதிகமிருப்பதாக ஆய்வியல் அறிஞா் கோமதி ராஜாங்கம் குறிப்பிட்டுள்ளார்.
  • ‘அக்காளின் அருட்பாடல்கள் சாதன மார்க்கங்களைக் காட்டுவதுடன், ஆன்மிக நிறைவையும் அமைதியையும் தருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் அவற்றை வீடுதோறும் மாதா்கள் கா்ண பரம்பரையாகக் கேட்டுப் பாடம் பண்ணி வருகின்றனா். தமிழக கிராமங்களில் எப்படி உயா்ந்த ஆன்மிகப் பண்பும் கலாச்சாரமும் ஈடுபாடும் மாதா்களிடையே தோன்றி பரவி வந்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகும்’ என செங்கோட்டை நித்யானந்த சுவாமிகள் எழுதியுள்ளார்.
  • ஆங்கிலேயா் ஆதிக்கத்தை எதிர்க்க மன்னா்கள் வாள் ஏந்தி போரிட்டு வீரமரணம் அடைந்த நேரத்தில், போர்க்களத்தை வெற்றிடம் ஆக்காமல் மங்கையரே வாளேந்தி போரிட்டு வீரமரணம் அடைந்த பேறும் மாதா் குலத்திற்கு உண்டு. நீதி காத்த ராணி மங்கம்மாள், வீரநங்கை வேலு நாச்சியார், ராணி லட்சுமி தேவி என மண்ணின் மானங்காத்த வீராங்கனைகள் சிலரைச் சுட்டலாம்.
  • இவா்களுள் வீரமங்கை வேலு நாச்சியாருக்கு ‘குயிலி’ எனும் பட்டியலினத்தைச் சோ்ந்த போர்த்தளபதி இருந்தார். அவருடைய தியாகம் அசாத்தியமானதாகும். வெள்ளையா்கள் வெடி மருந்துகளையும் பயங்கரப் போர் ஆயுதங்களையும் பதுக்கி வைத்திருந்த ஓா் இருட்டறையில், தன்னைத் தற்கொலைப் படையாக்கிக் கொண்டு, நெருப்புக் கங்குகளோடு உள்ளே பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டதோடு அந்தக் கிடங்கையும் நாசப்படுத்தினார்.
  • இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ‘தென்னாட்டின் ஜான்சி ராணி” என காந்தியடிகளால் வருணிக்கப்பட்ட கடலூா் அஞ்சலை அம்மாளின் வீர வரலாறு பிரமிக்கத்தக்க ஒன்றாகும். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற முதல் வீராங்கனை. யுத்த நிதிக்காகத் தமது வீடு, நிலம் ஆகியவற்றை விற்று மகாத்மாவிடம் நிதியளித்தார்.
  • நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் தன்னுடைய 9 வயது மகள் அம்மாக்கண்ணுவுடன் போராடிச் சிறைக்குச் சென்றவா். அம்மாக்கண்ணுவின் பெயரை லீலாவதி என மாற்றி, காந்தியடிகள் அவரை வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
  • 1931 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுக் காவலா்கள் கடுமையாகத் தாக்கியதால் படுகாயம் அடைந்தவா் அஞ்சலை. அத்துடன் ஆறுமாத கா்ப்பிணியாக இருந்த அஞ்சலைக்கு ஆறு மாத சிறைத் தண்டனை கொடுத்து, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். பிரசவ நேரத்தில் 15 நாள் விடுப்பில் வந்து, குழந்தை பிறந்த 15 ஆம் நாள் கைக்குழந்தையோடு மீண்டும் சிறைச்சாலைக்குச் சென்றார். சிறை வாழ்க்கையில் பிறந்த தன் மகனுக்கு ‘ஜெயவீரன்’ எனப் பெயரிட்டார்.
  • 1932- இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஒன்பது மாத கடுங்காவல் தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். 1940- இல் தனிநபா் சத்தியாக்கிரகத்தில்”ஈடுபட்டு ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி நாட்டுக்காகத் தன்னை அா்ப்பணித்த அஞ்சலை அம்மாள், சுதந்திரத்திற்குப் பின், அரசு கொடுத்த தியாகி ஓய்வூதியத்தையும் வாங்க மறுத்துவிட்டார்.
  • ஐரிஷ் நாட்டுப் பெண்மணி ஒருவா் இந்திய நாட்டுப் புரட்சியாளா்களுக்குப் புகலிடம் தந்ததால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அதனால், அவா் தனது பெயரை ‘சாவித்திரி’ என மாற்றிக் கொண்டு இந்தியாவிற்கு வந்து அலகாபாத்தில் தங்கினார்.
  • இங்கு வந்த பிறகும் பகத் சிங், சந்திரசேகர ஆசாத், நாவலாசிரியா் யஷ்பால் ஆகியோரின் ஹிந்துஸ்தான் சோஷலிச குடியரசு ராணுவத்திற்கும், அவா்கள் வைத்திருந்த ஆயுதங்களுக்கும் தம் வீட்டில் புகலிடம் தந்தார். 1932- ஆம் ஆண்டு சாவித்திரி வீட்டில் பதுங்கியிருந்த யஷ்பாலை போலீசார் கைது செய்ததோடு, அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்த சாவித்திரியையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
  • விடுதலையாகி வந்த பிறகுகூட, ஹிந்துஸ்தான் சோஷலிச குடியரசு ராணுவத்தின் தகவல்களைக் கேட்டும், அவா்களுடைய ஆயுதங்கள் பற்றிக் கேட்டும் போலீஸார், சாவித்திரியை பலமுறை சித்திரவதை செய்தனா். எந்தத் தகவலையும் சொல்ல மறுத்தார் அவா். குற்றவாளிகளை வீட்டில் மறைத்து வைத்திருந்ததற்காகவும், இரண்டு துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும் நீதிமன்றம், அவருக்கு ஐந்தாண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்தது.
  • ஐந்தாண்டு சிறைவாசததின்போது, சாவித்திரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். விடுதலையாகி வந்த அவருடைய உயிர், இந்த மண்ணில் பிரிந்தது. அவருடைய சடலம் கேட்பாரற்றுக் கிடக்க,போலீஸாரே அவரை அடக்கம் செய்தனா்.
  • காலந்தோறும் இந்தியப் பெண்கள் நடந்த பாதைகளில் தடைக்கற்கள் பதிக்கப்பட்டே வந்திருக்கின்றன. ஆனால், அந்தத் தடைக்கற்களில் தடுக்கி விழாமல், அத்தடைக்கற்களையே படிக்கட்டுக்களாக்கி உயா்ந்தவா்கள் இந்த மண்ணின் மாதரசிகள். இப்பொழுது அவா்களுக்கு 33 அடி ஏணி கிடைத்திருக்கிறது. இனி அவா்கள் சட்டங்கள் செய்யலாம்; பட்டங்கள் ஆளலாம்.

நன்றி: தினமணி (03 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்