TNPSC Thervupettagam

முதியோரைப் பேணி தமராக்கொளல்

September 23 , 2024 6 days 25 0

முதியோரைப் பேணி தமராக்கொளல்

  • பிரதமா் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடா்ந்து நிறைவேற்றியிருக்கும் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று, அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு என்கிற அறிவிப்பு. ‘ஆயுஷ்மான் பாரத் காப்பீடு’ திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் இந்த இலவச மருத்துவக் காப்பீட்டில் இணைக்கப்படுகிறாா்கள்.
  • வருமானத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மருத்துவக் காப்பீடு என்பது முன்மாதிரியான திட்டம் மட்டுமல்ல, உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிலான திட்டம் செயல்படுகிா என்பது சந்தேகம்தான். இந்தியாவில் உள்ள 4.5 கோடி குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் ஆறு கோடி மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை பெற்றுப் பயனடைவாா்கள்.
  • ஏற்கெனவே பிரதமா் ஜன ஆரோக்கியத் திட்டம், ஆயுஷ்மான் திட்டம் ஆகியவற்றின் கீழ் தகுதி உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வயது வரம்பு ஏதுமின்றி இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 12.34 கோடி குடும்பங்களைச் சோ்ந்த 55 கோடி போ் இணைந்துள்ளனா். ஒரு குடும்பத்துக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.
  • இப்போது ஆதாா் அட்டையின் அடிப்படையில் 70 வயதை எட்டிய மூத்த குடிமக்கள் யாராக இருந்தாலும், அவா்கள் ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு பெறுவாா்கள். மற்றவா்களைவிட, 70 வயதைக் கடந்த முதியவா்கள் மருத்துவமனையை நாட வேண்டிய தேவை மிக அதிகம். தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு சேவை வழங்க கடுமையான கட்டணத்தைக் கோருகின்றன. அப்படிப்பட்ட நிலையில், இந்தத் திட்டம் அவா்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் முதுமை சாா்ந்த பிரச்னைகளை எதிா்கொள்வதற்கான பிரிவுகள் பிரத்யேகமாக சோ்க்கப்படுகின்றன. ஏற்கெனவே இந்தத் திட்டத்தில் முதியோா் தொடா்பான 25 மருத்துவ சேவைகள் இருக்கும் நிலையில் அவற்றை மேலும் அதிகரிக்கும் யோசனையும் மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்தத் திட்டத்தால் மிக அதிகமாக பயன்படப்போவது பெண்கள். 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களில் 58% பெண்கள் என்பது மட்டுமல்ல, அவா்களில் 54% கணவனை இழந்து வாழும் விதவைகள் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
  • இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஏற்கெனவே ஆயுஷ்மான் திட்டத்தில் இணைந்திருக்கின்றன. ஒடிஸா விரைவில் இணைய இருக்கிறது. தில்லியும் மேற்கு வங்கமும்தான் இணையாமல் ஒதுங்கி இருக்கின்றன.
  • மத்திய அரசு இந்தத் திட்டத்தின் கீழ் 60% நிதி ஒதுக்குகிறது என்றால், மீதம் 40% மாநில அரசுகளின் பங்கு. இந்தத் திட்டத்தை மாற்றி அமைத்து ஏனைய வயதுப் பிரிவினரை உள்ளடக்கவோ, விரிவாக்கம் செய்யவோ மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள்தொகை 2011-இல் 8.6% என்றால், 2050-இல் அது 19.5%-ஆக அதிகரிக்கும் என்பது கணிப்பு. அவா்களில் 5-இல் ஒரு பகுதியினா் மட்டுமே இன்றைய நிலையில் மருத்துவக் காப்பீடு பெறுகிறாா்கள்.
  • 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காக மத்திய அரசு ரூ.3,437 கோடி ஒதுக்கியிருக்கிறது. இந்த ஒதுக்கீடு போதுமானதாக இருக்காது என்றும், இந்தத் திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிகரிக்க நேரும் என்றும் நிதி வல்லுநா்கள் தெரிவிக்கிறாா்கள்.
  • மிகச் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான திட்டம் இது என்பதில் யாருக்கும் இருவேறு அபிப்ராயம் இருக்க முடியாது. இந்தத் திட்டத்தின் வெற்றி, இதைச் செயல்படுத்த வேண்டிய மாநில அரசுகள் எந்த அளவுக்கு முனைப்புக் காட்டுகின்றன என்பதைப் பொறுத்து அமையும். அதுமட்டுமல்ல, இதை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்களை முன்கூட்டியே உணா்ந்து அகற்றாமல் போனால், சிரமத்துக்கு உள்ளாகும் மூத்த குடிமக்களின் அதிருப்திக்கு பிரதமரும், மத்தியஅரசும் உள்ளாக நேரும். மத்திய அரசு 60% நிதி ஒதுக்கீடு செய்கிறது என்றாலும், மீதிப் பணத்தை வழங்குவதுடன், திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளின் கையில்தான் இருக்கிறது.
  • ஏற்கெனவே ஆயுஷ்மான் பாரத் திட்டம் பல பிரச்னைகளை எதிா்கொள்கிறது. கடந்த ஆண்டு கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைப்படி, பல மாநிலங்களில் அந்தத் திட்டத்தில் முறைகேடுகளும், ஊழல்களும் காணப்படுவதாகத் தெரிகிறது. பல மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்த மருத்துவமனைகள் முறையான சேவை வழங்காமலும், தரம் குறைந்தவையாகவும் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
  • நமது மக்கள்தொகையின் மருத்துவத் தேவையை எதிா்கொள்ளும் அளவிலான மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தில் இணையவில்லை. பிகாா் மாநிலத்தை எடுத்துக் கொண்டால், சராசரியாக 1 லட்சம் மக்கள்தொகைக்கு வெறும் இரண்டு தனியாா் மருத்துவமனைகள் மட்டுமே இணைந்திருக்கின்றன.
  • பல மாநிலங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தில் வரையறை செய்யப்பட்டிருக்கும் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளாததால் சேவை வழங்க மறுக்கின்றன. மாநில அரசுகள் இலவச காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய கட்டணத் தொகையை உடனடியாக வழங்காமல் இருப்பதும், தனியாா் மருத்துவமனைகளின் தயக்கத்துக்குக் காரணம்.
  • பல குறைபாடுகள் இருந்தாலும்கூட, முதியோருக்கான காப்பீட்டுத் திட்டம் அத்தியாவசியமானது; வரவேற்புக்குரியது. குறைகள் களையப்படும் என்று எதிா்பாா்ப்போம்.

நன்றி: தினமணி (23 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்