TNPSC Thervupettagam

மெளலானா எனும் மாமேதை

November 5 , 2023 241 days 175 0
  • சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டில் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டிருப்பதற்குக் காரணம்... அன்று நமக்கு வாய்த்த தலைவர்கள் நாடு குறித்தும் நாட்டு மக்கள் குறித்தும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டதுதான். ஆழ்ந்த அக்கறையோடும் பரந்த மனப்பான்மையோடும் தேர்ந்த அறிவாற்றலோடும் வலுவான இந்தியாவை அவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள். அத்தகைய தலைவர்களில் ஒருவர்தான் மெளலானா அபுல் கலாம் ஆசாத்.

கல்வியில் சிறந்த தலைவர்

  • ‘குறைந்தபட்சம் அடிப்படைக் கல்வியையாவது பெறுவது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான பிறப்புரிமை’ என்று கூறியதோடு, அந்தக் கல்வியை அளிப்பதற்கான திட்டங்களை வகுத்து, கல்வித்துறையில் இந்தியர்களின் இன்றைய முன்னேற்றத்துக்கு அகலப் பாதை அமைத்துக்கொடுத்தவர் மெளலானா ஆசாத். இவர் பிறந்த நாளை ‘தேசியக் கல்வி நாள்’ ஆகக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது.
  • இந்திய விடுதலைப் போராட்டத்திலும் விடுதலைக்குப் பின்னரும் மக்களின் உயர்வுக்காகப் பங்காற்றிய தலைவர்களில் மிக முக்கியமானவர் ஆசாத். விடுதலைப் போராட்ட வீரர், கல்வியாளர், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர், பத்திரிகையாளர், எழுத்தாளர் என ஏராளமான பொறுப்புகளைத் திறம்படக் கையாண்டு, வரலாற்றில் அழுத்தமான முத்திரையைப் பதித்த ஆசாத், மத நல்லிணக்கத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர்.
  • கல்வி அமைச்சராவதற்கு முன்பே ஆசாத்துக்கு இந்தியர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. கல்விதான் அவரை மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக உருவாக்கியிருந்தது. ஒரு மனிதன் தன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றால், அது கல்வி கற்றால்தான் முடியும் என்பதில் அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
  • சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் 1888ஆம் ஆண்டு பிறந்தார் ஆசாத். இரண்டே ஆண்டுகளில் கொல்கத்தாவுக்கு அவரது குடும்பம் வந்து சேர்ந்தது. இவரது தந்தை சிறந்த அறிஞர். அதனால் வீட்டிலேயே தந்தை மூலமும் அறிஞர்கள் மூலமும் ஆசாத்துக்குக் கல்வி அளிக்கப்பட்டது. வங்கம், உருது, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமைப் பெற்றவராகத் திகழ்ந்தார். உலக வரலாறு, அறிவியல், தத்துவம், கணிதம் போன்றவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.
  • மிக இளம் வயதிலேயே வீட்டில் ஒரு நூலகத்தை அமைத்து, பலரையும் அழைத்து விவாதங்களை நடத்திவந்தார் ஆசாத். 12 வயதில் நூல் எழுதும் ஆர்வம் அவருக்கு வந்துவிட்டது. 14 வயதில் இலக்கிய இதழ்களுக்குக் கட்டுரைகளை எழுதினார். 15 வயதில் தன்னைவிட இரண்டு மடங்கு வயது அதிகமானவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்துவிட்டார்! 16 வயதில் படிப்பை முடித்து, ஒரு பத்திரிகையையும் வெளி யிட்டார். 18 வயதில் ஒரு செய்தித்தாளின் ஆசிரியராகவே பொறுப்பேற்றுவிட்டார்.

இந்தியாவின் இன்றியமையாத அங்கம்

  • கிலாபத் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இளைஞராக இருந்த ஆசாத்துக்கு, காந்தி மீதும் அவரது கொள்கைகள் மீதும் மரியாதை ஏற்பட்டது. காந்தியும் கிலாபத் இயக்கத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் ஆசாத். காந்தி, நேரு ஆகிய தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகினார். இந்தியர்களுக்கு உயர் கல்வி அளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், 1920ஆம் ஆண்டு அலி சகோதரர்களுடன் இணைந்து, ‘ஜாமியா மிலியா’ இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தை டெல்லியில் நிறுவினார். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவு இன்றியே இயங்கியது.
  • ஒத்துழையாமை இயக்கம், வெள்ளை யனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். 35 வயதில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகி, அந்தப் பொறுப்பை வகித்த இளம் தலைவர் என்கிற சிறப்பைப் பெற்றார். இந்தியப் பிரிவினையின்போது, இஸ்லாமியத் தலைவர்கள் பலர் காந்தியை எதிர்த்தனர். அப்போது காந்திக்கு ஆதரவை நல்கினார் ஆசாத். பிரிவினையால் ஏற்பட்ட வன்முறைகளைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்குமான நடவடிக்கைகளிலும் இறங்கினார்.
  • ‘நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்திய தேசியத்தின் பிரிக்க முடியாத ஒற்றுமையின் ஒரு பகுதி நான். இந்த உன்னதமான கட்டமைப்புக்கு நான் இன்றியமையாதவன். நான் இல்லாமல் இந்தக் கட்டமைப்பு முழுமையடையாது. ஒருபோதும் இதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்று முழக்கமிட்டார்.

கல்வி அமைச்சர் ஆசாத்

  • 1947ஆம் ஆண்டு நேரு அமைச்சரவை யில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் மெளலானா ஆசாத். அடிப்படைக் கல்வியை ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை யாக மாற்றுவதற்காக நாடு முழுவதும் பயணித்தார்.
  • 14 வயது வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி, பெண்களுக்கான கல்வி, முதியோருக்கான கல்வி போன்றவற்றில் அக்கறை செலுத்தினார். ஆரம்பம், இடைநிலைக் கல்வி, அறிவியல் கல்வி, பல்கலைக்கழகங்களை நிறுவுதல், ஐஐடி போன்ற ஆராய்ச்சி - உயர்கல்விக்கான வழிகளை மேம்படுத்துதல், பல்கலைக்கழக மானியக் குழுவை (யுஜிசி) உருவாக்குதல் போன்ற பல முக்கியமான செயல்பாடுகள் இவரது முயற்சியில் மேற்கொள்ளப்பட்டன.
  • சாகித்ய அகாடமி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி, கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் போன்ற பல அமைப்புகளையும் நிறுவினார். இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை (CSIR) அமைப்பதற்குத் தூண்டுகோலாகத் திகழ்ந்தார்.

நல்லிணக்கத்தின் அடையாளம்

  • கல்வி அமைச்சராக 11 ஆண்டுகள் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய மெளலானா ஆசாத், மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தார். ‘இந்திய இந்துவாக, இந்திய கிறிஸ்துவராகப் பெருமை கொள்வதுபோல் நானும் இந்திய முஸ்லிமாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்’ என்றார்.
  • பிளாட்டோ, அரிஸ்டாட்டிலுடன் காந்தியால் ஒப்பிடப்பட்ட மெளலானா ஆசாத், 1958ஆம் ஆண்டு, 69ஆவது வயதில் மறைந்தார். அவர் இறுதியாக எழுதிய ‘India Wins Freedom’ என்கிற நூல் 1959ஆம் ஆண்டு வெளிவந்து, இன்றளவும் முக்கியமான புத்தகமாகக் கருதப்படுகிறது.
  • “நம்மிடம் தலைவர்கள் இருக்கிறார்கள், தலைவர்கள் இருப்பார்கள். ஆனால், மௌலானா ஆசாத் பிரதிநிதித்துவப் படுத்திய தனிச்சிறப்பு வாய்ந்த பண்பு இனி யாரிடமும் வெளிப்பட வாய்ப்பில்லை" என்றார் அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு.
  • இந்தியாவில் கல்வி, சமூக மேம்பாட்டிற் கான அவரது பணி இந்தியாவின் பொருளாதாரம், சமூக வளர்ச்சிக்கு வழிகாட்டுவதில் முக்கியப் பங்களித்தது. இந்திய தேசியவாதிகளில் ஒருவரான மெளலானா ஆசாத், நவீன இந்தியாவின் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
  • தேசத்திற்கு அவர் ஆற்றிய விலை மதிப்பற்ற பங்களிப்பிற்காக, மௌலானா ஆசாத்துக்கு அவர் உயிரோடு இருந்த போதே ‘பாரத ரத்னா’ வழங்க முடிவு செய்யப்பட்டது. பாரத ரத்னா தேர்வுக் குழுவில் அங்கம் வகித்ததால், அவ்விருதைப் பெற அவர் மறுத்துவிட்டார். அவர் மறைவுக்குப் பிறகு, 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் ‘ஆசாத்’ பெயரில் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன.
  • 2008 ஆம் ஆண்டு முதல் மெளலானா ஆசாத் பிறந்த நாளான நவம்பர் 11, ‘தேசியக் கல்வி நாள்’ ஆகக் கொண்டாடப்பட்டு வருகிறது

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்