TNPSC Thervupettagam

மோதல் கொலைகளும் நசுக்கப்படும் மனித உரிமைகளும்

October 8 , 2024 5 hrs 0 min 8 0
  • கடந்த 27.9.2024 அன்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் குருவம்மாள் (A.Guruvammal vs The commissioner of police Madurai city and others) என்பவரின் வழக்கில், நீதிபதி பரத் சக்ரவர்த்தி வழங்கிய தீர்ப்பு மிக முக்கிய​மானது. குருவம்மாள் தாக்கல் செய்திருந்த மனுவின் சாராம்சம் இதுதான்: 10 ஆண்டு​களுக்கு முன்பு குருவம்​மாளின் மகன் முருகன் (எ) கல்லுமண்​டையன் என்ற 26 வயது நிரம்பிய இளைஞனைத் தேடிச் சீருடை அணியாத காவல் துறையினர் அவருடைய வீட்டுக்கு வந்தனர்.
  • முருகன் வீட்டில் இல்லாததால் குருவம்​மாள், அவரது மகள், மருமகன், பேரன் ஆகியோரைத் தூக்கிச் சென்று சித்ரவதை செய்தனர். தனது குடும்பத்​தினரைக் காவல் துறை தூக்கிச் சென்றதை அறிந்து, காவல் நிலையத்தில் முருகன் சரணடைந்​திருக்​கிறார். அன்றைய நாளே முருகனையும் மற்றொரு நபரையும் அப்போதைய உதவி காவல் ஆணையர் வெள்ளைத்துரை சுட்டுக்​கொன்​று​விட்​டார்.
  • போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் தனது மகன் கொல்லப்​பட்​ட​தாகத் தனக்குச் சொல்லப்​பட்டதாக மனுவில் குறிப்​பிட்​டிருந்த குருவம்​மாள், அது மோதல் கொலையல்ல என்றும், சரணடைந்த தனது மகனைக் காவல் துறையினர் படுகொலை செய்து​விட்டனர் என்றும் பின்னர் அது குறித்துத் தான் புகார் கொடுத்தும் அது எடுத்​துக்​கொள்​ளப்​பட​வில்லை என்றும் சுட்டிக்​காட்​டி​யிருந்​தார். காவல் மரணங்​களுக்கு நீதிப​தியின் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்; ஆனால், தனது மகனின் மரணத்தில் அதுபோல நடத்தப்​பட​வில்லை; நீதி மறுக்​கப்​பட்​டுள்ளது என 10 ஆண்டுகளாக ஒரு சட்டப் போராட்​டத்தை குருவம்மாள் என்கிற அந்தத் தாயார் நடத்தி​யுள்​ளார்.

எது நீதி

  • மனித உரிமைச் செயல்​பாட்​டாளர்கள் ஹென்றி டிபேன், ஆர்.கருணாநிதி ஆகிய வழக்குரைஞர்கள் குருவம்​மாளுக்கு ஆதரவாக நின்றுள்​ளனர். காவல் துறையின் சார்பில் வெள்ளைத்துரை என்ற அதிகாரியையும் மற்ற இருவரையும் கொல்லப்​பட்​ட​வர்கள் தாக்க வந்ததாகவும் தற்பாது​காப்​புக்குச் சுட்ட​தாகவும் வாதாடப்​பட்டது. காவல் துறை அதிகாரி வெள்ளைத்துரை 10க்கும் மேற்பட்ட மோதல் கொலைகளை நடத்தி​யுள்​ளார். கொல்லப்பட்ட அனைவரும் குறிப்​பிட்ட அதிகாரியைத் தாக்க முயன்றது குறித்து நீதிமன்றம் தனது ஆச்சரியத்தை வெளிப்​படுத்​தி​யுள்ளது.
  • தமிழகக் காவல் துறை ஒரு சிறந்த காவல் துறையாக இருக்​கும்​போதும் சமீபத்திய அதன் போக்கு கவலை அளிப்பதாக உள்ளதாக​வும், கைது செய்யப்​படும் நபர்கள் காவல் துறையினரைத் தாக்க முயல்​வ​தாகக் கூறி, அவர்களைச் சுட்டுக் கொல்வது தொடர்​கிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்​திருக்​கிறது. மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் தப்பிக்க முயலும்போது அடிபட்டு​விட்​ட​தாகக் கூறி அவர்களின் கை, கால்கள் உடைக்​கப்​படுவது அதிகரித்​துள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்​பிட்​டிருக்​கிறது.
  • சமூகத்தில் பொதுப் புத்தியில் இது போன்ற மோதல் கொலைகள் வரவேற்​கப்​படு​கின்றன. இந்தப் போக்கு அடிப்​படை​யிலேயே தவறானது; சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளக்​கூடியது. இது போன்ற மோதல் கொலைகளில் எப்போதும் வழக்க​மாகக் கட்டமைக்​கப்​படும் கதையாடல்களை உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில், இந்தப் போக்கு சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசமைப்பு வழங்கிய உரிமைகள், சட்டத்தை நடைமுறைப்​படுத்தும் நிறுவனங்களான நீதிமன்​றங்கள் ஆகியவற்றின் மீது அவநம்​பிக்கையை ஏற்படுத்து​கிறது. மேலும், இது கடந்த காலத்துக் காலனி ஆதிக்​கத்தை நினைவு​படுத்து​கிறது.
  • முழுமையாக ஜனநாயகத்​துக்கு எதிராக உள்ளது. உடனடியாக மரண தண்டனை வழங்குதல் / தண்டனையை விரைவாகக் கொடுப்பதன் மூலம் குற்றம் குறையும் என்கிற பொய்யான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இது ஒருபோதும் உண்மையல்ல. சட்டம் மற்றும் சட்டத்தின் வழியில் மட்டுமே இறுதியான தீர்வு இருக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. குருவம்​மாளின் மகன் முருகன் கொலையை நியாயமான முறையில் மீண்டும் காவல் துறை உயர் அதிகாரி விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி பரத் சக்ரவர்த்தி உத்தர​விட்​டுள்​ளார்.

காவல் வன்முறைகள்:

  • குருவம்மாள் போன்ற எளிய மனிதர்​களின் அறம் சார்ந்த சட்டப் போராட்​டங்கள், பல சமயம் நமது பரந்த சமூகத்தின் பொதுப் பார்வையிலோ அல்லது ஊடகத்தின் வெளிச்​சத்திலோ விழுவ​தில்லை. அவர்கள் நியாயங்​களைப் பொதுச் சமூகம் ஒரு படிப்​பினை​யாகக் கொள்வ​தில்லை. சட்டத்தின் வழி தீர்வு கோரி அந்த மூதாட்​டியின் நெடிய போராட்டம் நடந்துள்ளது. தமிழகத்தின் ஏதோ ஓர் இடத்தில் யாரேனும் ஒருவர் காவல் துறையினரைத் தாக்க முயலும்போது சுட்டுக் கொல்லப்​பட்டதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன.
  • பொதுச் சமூகம் அதனை ஒரு சிறு செய்தி​யாகக் கடந்து​போகிறது. கைது செய்து அழைத்துச் செல்லப்​பட்​ட​வர்கள் கை, கால்கள் உடைக்​கப்​பட்டு, காவல் துறையினரே அதை ஒளிப்படம் எடுத்து ஊடகங்​களுக்கான செய்தி​யாக்கும் காலத்தில் இருக்​கிறோம். காவல் நிலையக் கழிப்​பறை​களில் விழுந்​தவர்கள் எனக் கிண்டலடிக்கும் வெகு மக்கள் ஊடகங்கள் நம்மோடு பயணிக்​கின்றன. காவல் வன்முறைகளை இயல்பான ஒன்றாகப் பார்க்க மக்களைப் பழக்கப்​படுத்துவது ஒரு வகையில் ஒரு மோசமான வன்முறை.
  • ஆட்சி​யாளர்கள் இந்த வகையில்தான் மக்களை ஆள்கிறார்கள் என்றால், அது ஜனநாயகத்​துக்கு விடுக்​கப்பட்ட சவால். காவல் துறையினரின் அனைத்துச் சட்டவிரோத வன்செயல்கள், கொலைகளைப் பாதுகாப்பது முதலமைச்​சரின் பணி அல்ல. அவர் இவற்றைத் தடுத்​திருக்க வேண்டும்.
  • வேடிக்கை பார்ப்பது அல்லது கருத்துக் கூறாமல் போவது காவல் வன்முறைகளை நியாயப்​படுத்துவதே ஆகும். சகித்​துக்​கொள்ள முடியாத காவல் சித்ர​வதைகளின் போக்கைப் பார்த்துத் தனது அறச்சீற்​றத்தை மேற்கண்ட குருவம்​மாளின் வழக்கில் உயர் நீதிமன்றம் வெளிப்​படுத்​தி​யுள்ளது. எளிய மனிதர்​களின் உயிர் வாழும் உரிமை காவல் துறையின் விருப்பு வெறுப்பு சார்ந்தது எனில், மக்களாட்சி முற்றுப்​பெற்று​விட்டதாக உணர வேண்டும்.

அரசின் பொறுப்பு:

  • காவல் வன்முறை​களில் நாம் பாதிக்​கப்பட மாட்டோம் என்கிற திடமான நம்பிக்கை, அவற்றைக் கொண்டாடவும் கடந்து​போவதற்​குமான மனநிலையை உருவாக்கு​கிறது. சாத்தான்​குளத்தில் எந்தத் தவறும் செய்யாத ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய எளிய வணிகர்கள் கொல்லப்​பட்​டுள்ளனர் என்பதை மறந்து​விடக் கூடாது.
  • அவர்களின் கொலையை நியாயப்​படுத்திய காவல் துறையின் கதையாடல்​களைச் சமூகம் மறக்க​வில்லை. தவறு செய்தவர்​களைத் தண்டிப்பது எனக் காவல் வன்முறையை நியாயப்​படுத்​தினால், அந்தத் தண்டனை அதிகாரம் காவல் துறையினருக்கு சட்டத்தில் எங்கே வழங்கப்​பட்​டுள்ளது?
  • குற்றங்​களைத் தொழில் முறையில் செய்பவர்​களைச் சட்டத்தின் வழியில் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தர முடியும். சில குற்ற வழக்கு​களில் சாட்சிகள் கலைக்​கப்​படு​வதால் விடுதலை நிகழ்​கிறது. இது காவல் துறையினர் சட்டத்தின் முன் சாட்சிகளை நிறுத்து​வதில் காட்டும் கவனச் சிதறல்​களால் நிகழ்​வ​தாகும். பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நீதி வழங்கு​வதற்கான திட்டங்கள் இருந்த​போதும், அரசின் நிர்வாகத் தாமதங்​களால் அது பாதிக்​கப்​பட்​ட​வர்​களைச் சென்றடைவதில் தாமதம் ஏற்படு​கிறது.
  • சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் உரிய குற்ற முறையீடு ஆகியவை தொழில் முறைக் குற்றவாளி​களைச் சட்டத்தின் மூலம் தடுக்கப் போதுமானவை. இவ்வளவுக்கும் இந்தியா​விலேயே அதிகத் தடுப்புக் காவல் சிறைவாசம் தமிழகத்​தில்தான் விதிக்​கப்​படு​கிறது.
  • தமிழக முதல்வர் நாள்தோறும் நிகழும் இந்தக் காவல் வன்முறை​களைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். காவல் துறையின் மோதல் சாவுகளை அவர் ஏற்றுக்​கொள்​கிறாரா என்பதும் முக்கியமான கேள்வி. உள் துறை அமைச்சர் என்ற பொறுப்பை வகிக்கும் அவர், தவறு செய்யும் காவல் அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகளை ஜனநாயக ஆர்வலர்கள் அறிய விரும்​பு​கின்​றனர்.
  • சிறைக் கொடுமைகள், சித்ர​வதையை நெருக்கடி நிலைக் காலத்தில் அனுபவித்த ஒருவர் நடத்தும் ஆட்சி​யில், சித்ர​வதையே காவல் துறையின் மொழியாக மாறுவது ஏற்புடையதல்ல. ஒவ்வொரு காவல் வன்முறை​யும், சித்ர​வதையும் நீதி பரிபாலன முறை என்ற நீதிமன்​றங்​களின் மீது நிகழ்த்தும் தாக்குதல் என்பதை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மோதல் சாவுகள், காவல் வன்முறைகள்​-சித்​ர​வதைகளைத் தடுக்கச் சமூகத்தின் அனைத்துத் தரப்பும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய தருணம் இது!

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்