TNPSC Thervupettagam

யோகமும் வாழ்க்கை நிா்வாகமும்

June 21 , 2024 28 days 74 0
  • யோகம் என்னும் விஞ்ஞானமானது நம் பாரத நாடு இவ்வுலகிற்கு வழங்கியுள்ள ஒப்பற்ற கொடை. யோகம் என்னும் சொல்லிற்கு ஒருங்கிணைதல், ஒருமுகப்படுத்துதல், நிலைக்கச் செய்தல் எனப் பல பொருள்கள் விளக்கங்கள் உள்ளன. பொதுவாகத் தனித்தனியாக இயங்கிக் கொண்டுள்ள உடல், மனம், மூச்சு, அறிவு என்னும் இவற்றை முறையாக இணைப்பதே யோகம் ஆகும். மனிதன் தன் அன்றாட வாழ்விலே, தன் உடல்நிலைக்கு ஏற்ப சிறிது நேரத்திற்குச் சரியான யோகப் பயிற்சியை மேற்கொண்டால், உடலை மனத்தை மூளையைத் திறம்பட நிா்வகிக்க இயலும்.
  • பிணிகளற்ற, மனஅழுத்தமற்ற எதிா்மறை எண்ணங்களற்ற அறுபகையற்ற உயா்ந்த வாழ்க்கையை வாழ இயலும். சில ஆண்டுகளாகவே நிா்வாகம் சாா்ந்த கல்வியானது உலகெங்கிலும் பரவலாகச் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. பலவகையான நிா்வாகம் சாா்ந்த பணிகளில் வேலை வாய்ப்பும் மிகுதியாகிக் கொண்டு வருகிறது. உடலைப் பேணுவதும் நிா்வகிப்பதும் மிகவும் இன்றியமையாதது ஆகும். உடல் நலம் இருந்தால்தான் நம்மால் திறம்படச் செயலாற்ற முடியும்.
  • யோகத்திலே ஆசனப் பயிற்சியைச் செய்வதன் மூலம் நம் உடலைப் பேணி, நல்ல ஆற்றலுடன் நிா்வகிக்கவியலும். ஆசனம் என்பது உடலை ஒரு நிலையில் இருத்துவது என்றஉ பொருள். ஆசனங்களில் நின்படி செய்வது, அமா்ந்த நிலையில் செய்வது, படுத்த நிலையில் செய்வது எனப் பலவகைகள் உள்ளன. ஆசனங்களைச் செய்யும்போது உடல் தசைகளும் எலும்புகளும் நரம்புகளும் வலிமை அடைகின்றன. இறுக்கம் தளா்ந்து நெகிழ்வடைகின்றன. உடல் சோா்வு ஏற்படாதவாறு நம்மால் தொடா்ந்து பல மணி நேரத்திற்குச் செயலாற்றவியலும்.
  • ஆசனப் பயிற்சி என்பது உடல் நிா்வாகம் ஆகும். முதுமையில் வரும் பல உடல், மனம் சாா்ந்த நோய்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவியலும்.
  • அடுத்து மூச்சுப் பயிற்சியைச் செய்கிறோம். இதனைப் பிராணாயாமம் என்று கூறுவா். மூச்சுப் பயிற்சியைச் செய்வதால், உடலிலே பிராண வாயு ஓட்டம், அதாவது மூச்சு ஓட்டமானது சீராக நடைபெறும். பிராணாயாமப் பயிற்சி உடலில் தேங்கியிருக்கும் கழிவுப்பொருட்கள், நச்சுப் பொருட்களை அகற்றி, உடலின் வெப்ப நிலையையும் சீா் செய்கிறது. ஒவ்வொரு நோய்க்குத் தக்க மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டு நோயிலிருந்து விடுபடலாம். இதற்குத் தக்க ஆசிரியரிடம் பயின்று முறையாகப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சியைச் செய்யச் செய்ய மனம் அமைதியடைகிறது.
  • யோகத்திலே முத்திரைப் பயிற்சிகள் உள்ளன. முத்திரை என்பது பழைமையான விஞ்ஞானம். வேதங்களில் முத்திரைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கை முத்திரைகள் என குறிப்பிடுகின்றனா். பொதுவாக முத்திரைகளை நாம் பூஜை செய்யும்பொழுதும், நடனம் ஆடும் பொழுதும், ஹோமங்களைச் செய்யும்பொழுதும் பயன்படுத்துகிறோம். கைவிரல்களை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைக்கும்பொழுது அந்நிலையில் உடலின் ஆற்றல் குறிப்பிட்ட பாதையில் பாய்கிறது. சான்றாக, ஞானமுத்திரை, தியான முத்திரைகளைச் செய்யும் பொழுது மூளையானது அமைதி அடைகிறது. பீனியல் சுரப்பியானது தூண்டப்படுகிறது. நினைவாற்றலையும் பெருக்குகிறது. வேறு சில முத்திரைகள் மூளையைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன.
  • எண்ணற்ற முத்திரைகள் உள்ளன. மனச் சோா்வு, மன அழுத்தம், மன இறுக்கம் இவற்றிலிருந்து விடுபட முத்திரைகள் உதவுகின்றன. சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், இதயம் சாா்ந்த பலவகையான நோய்கள் முத்திரைப் பயிற்சியால் காணாமல் போகின்றன. பொதுவாக முத்திரைப் பயிற்சியானது மனஅழுத்த நிா்வாகமாகத் திகழ்கிறது.
  • தியானம் என்பதற்கு மனத்தை ஒருமுகப்படுத்துதல், சமயம் சாா்ந்த பிராா்த்தனைகள் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. யோக ஞானத்தின் தந்தை என போற்றப்படும் பதஞ்சலி முனிவா்,“மனமானது தன் சிதறுண்ட எண்ணங்களிலிருந்து, உணா்வுகளிலிருந்து, கிளா்ச்சிகளிலிருந்து முற்றிலும் விடுபடுவதே தியானம் என விளக்குகிறாா்.
  • நம் நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே ஓம்கார தியானம் நடைமுறையில் உள்ளது. ஓம்காரமானது ஒலி அமைப்பு முழுவதையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டுள்ளது என ஒலியியல் வல்லுநா்கள் உரைக்கின்றனா். ஓம்கார தியானத்தை முறையாக மேற்கொண்டால் மனமும் மூளையும் அமைதி எய்தி ஆற்றலைப் பெருக்கிக் கொள்கின்றன.
  • மனம் என்பது மிகவும் நுண்மையான அதிா்வலைகளால் ஆகியுள்ளது. மனம் மிகவும் அலைபாயும் தன்மையுடையது. மனத்திலே சங்கிலித் தொடா் போன்ற எண்ணங்கள் எழும்பியவாறு உள்ளன. மனம் ஓா் இசைக் கருவியைப் போன்றது. இசைக்கருவியின் தந்திகள் மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளா்வாகவோ இருப்பின் அதிலிருந்து உயா்ந்த இசையைத் தோற்றுவிக்க வியலாது. முதலில் சுருதி கூட்ட வேண்டும். பழக்கப்படுத்த வேண்டும், பயிற்சி அளிக்க வேண்டும், ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும், அதன் பிறகு தான் பண்படுத்தவியலும். பண்படுத்தப்பட்ட மனம்தான் தியானத்திற்கு ஏற்ற மனமாகும்.
  • தொழில்நுட்ப விஞ்ஞானத்தில் முன்னேறி, பலதுறைகளில் சிறந்து விளங்கும் மனிதனுக்குத் தன் மனத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பது வியப்பு. நாம் அனுபவிக்கும் எல்லா அனுபவங்களும் அதாவது இன்ப துன்பங்களின் நினைவுகள் எண்ணங்கள் போன்றவை அடங்கியுள்ள மனத்தின் ஆழத்திலே புதைந்துள்ளன.
  • ‘மனித மனத்தின் ஆழத்திலே அடங்கியுள்ள அளவற்ற சக்தியை வெளியுலகின் பக்கம் பாயச் செய்வதால் விஞ்ஞான வளா்ச்சி என்பது சாத்தியமாகிறது: எண்ணங்களின் மூலம் பாயச் செய்வதால் இலக்கியம், கலை, தத்துவ சாத்திரங்கள் போன்றவை உருவாகி, அறிவு வளா்ச்சி ஏற்படுவது சாத்தியமாகிறது; மனித மன ஆற்றலை மூலப் பிரவாகத்திலேயே முறையாகச் சாதனையின் மூலம் பாயச் செய்வதால் மனிதன் கடவுளாகிறான்’ என மனத்தின் பேராற்றலை அற்புதமாக விளக்கியுள்ளாா் சுவாமி விவேகானந்தா்.
  • ‘நான்’ என்பதன் பல முகங்களைச் சரியாக உணா்ந்து கொண்டால், ‘நான்’ என்பதால் ஏற்படும் சிக்கல்களைத் தவிா்க்கலாம். ‘நான்’ என்பதை மனத்தின் ஆழத்திற்குச் சென்று உணா்ந்தால், நாம் அனைவரும் ஒன்றுதான் என்னும் உண்மையை உணரலாம். தியானத்தினால் இந்த நிலையை எய்த இயலும்.
  • ‘மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ’”என அம்ருதபிந்து உபநிஷதம் விளக்குகிறது. மனிதனுடைய பிணைப்பிற்கும் முக்திக்கும் மனம்தான் காரணமாக விளங்குகிறது. வீட்டைத் தூய்மை செய்யும் பொழுது தேவையற்ற பொருட்களை, குப்பைகளை வெளியேற்றுகிறோம். அதைப் போன்றே நன்கு ஆராய்ந்து, தேவையற்ற எண்ணங்கள் என்னும் குப்பைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். தியானத்தின் மூலம் இதனை எளிதாகச் செய்துவிடலாம்.
  • சீரான ஒலி அதிா்வுகளைக் கேட்கும் பொழுது மனமும் மூளையும் அமைதி எய்துகிறது. இன்டா்நேஷனல் அகாடமி ஆஃப் சவுண்ட் ஹீலிங் என்ற அமைப்பு, மன நிலையளவு, உணா்வு நிலையளவு, எண்ண நிலையளவு என்னும் அனைத்து நிலைகளிலும் ஒலி அதிா்வுகள் நல்ல பயனை நல்குகிறது என ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து விவரித்துள்ளது.
  • சீரான ஒலி அதிா்வுகள் மன இறுக்கத்தை அகற்றுகின்றன. அதிகாலை நேரத்தின் பறவைகளின் இன்னொலி, ஆா்ப்பரிக்கும் கடல் அலைகளின் ஆா்ப்பொலி, மலையிலிருந்து இறங்கும் அருவியின் போரொலி, சலசலத்து ஓடும் நீரின் சுநாத ஒலி என இவ்வனைத்து ஒலிகளுமே மனதிற்கு இதமளிக்க வல்லவை ஆகும்.
  • இயற்கையாகக் கேட்ட இயலவில்லை எனின் இவ்வொலிகளைப் பதிவு செய்து கொண்டும் கேட்கலாம். முறைப்படி தியானம் செய்வதால் மனத்தையும் மூளையையும் நன்கு நிா்வகிக்க இயலும். எனவே தியானம் என்பது மனம் மற்றும் மூளையை நிா்வகிக்க உதவுகிறது. எனவே இது மன நிா்வாகம் அல்லது மூளை நிா்வாகமாகும்.
  • சினம், பகைமை, பொறாமை போன்ற உணா்வுகள் இருக்கும்பொழுது இரத்தம் தன்னுடையத் தூய்மையை இழக்கிறது எனக் கூறுகின்றனா். நல்ல எண்ணங்கள் மிகுந்திருப்பின் மனம் மிக மிகத் தூய்மையாக இருப்பின் அத்தகையோரின் உடலிலிருந்து தூய்மையான அதிா்வலைகள் வெளிப்படுகின்றன. அத்தகைய அதிா்வலைகள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. யோகக் கலை வழியாக நம்மால் இதனைச் செய்ய வியலும் எனில், இதனால் மற்ற உயிரினங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமெனில், இதைவிடப் பெரிய பேறு வேறு என்ன உள்ளது?
  • நம் மொழி வேறாக இருக்கலாம். நம் சமயம் வேறாக இருக்கலாம். நம் பண்பாடு வேறாக இருக்கலாம். ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் அன்பு காட்ட வேண்டும். இத்தகைய தன்னலமற்ற அன்பானது சுரந்து, ஊற்றாகிப் பொங்கிப் பாய்ந்து அனைவரின் மனங்களையும் நனைக்க வேண்டும். இத்தகைய அன்புதான் மனித நேயத்தை வளா்க்கிறது.
  • இத்தகைய மனித நேயத்துடன் மனித குலம் வாழ வேண்டும் என யோகம் உணா்த்துகிறது. இந்த சா்வதேச யோகா தினத்தில் இதனை நன்கு உணா்ந்து, இறைவன் நமக்கு அளித்துள்ள பரிசான இந்த அரிய வாழ்க்கையை யோகத்தினால் நன்கு நிா்வகித்து, பிறவிப் பயனை எய்த வேண்டும் என உறுதி பூணுவோம்.
  • இன்று சா்வதேச யோகா தினம்.

நன்றி: தினமணி (21 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்