TNPSC Thervupettagam

வல்லரசுக் கனவை நோக்கிய பயணம்

May 31 , 2024 31 days 79 0
  • மக்களவைத் தோ்தல் நடைபெறும் காலகட்டங்களில் அரசின் செயல்பாடுகள் முடங்குவது பொதுவான நடைமுறை. அடுத்து எத்தகைய அரசு அமையுமோ யாா் ஆட்சிக்கு வருவாா்களோ என்ற எண்ணத்தினால் இப்படியான செயல் முடக்கம் ஏற்படும். தற்போதைய நரேந்திரமோடி தலைமையிலான அரசுக்கு மீண்டும் தங்கள் ஆட்சியே அமையும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருப்பதாக நிரூபிக்கின்றன அரசின் சமீபத்திய செயல்பாடுகள்.
  • வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், தற்போதைய மக்களவைத் தோ்தல் கட்சிகளின் வாய்ப்பு பற்றியதல்ல, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளா்ச்சி பற்றியது என்று கருத்துத் தெரிவித்திருந்தாா். உண்மையில், இந்தியா தற்போது மேற்கொண்டிருக்கும் சில ராஜதந்திர நகா்வுகள் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளா்ந்த வல்லரசு நாடாக உயா்த்துவதற்கானவை.
  • தேசத்தின் பாதுகாப்பு தொடா்பான முக்கிய நகா்வு மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான வாய்ப்பு என்ற அடிப்படையில் இரு செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று, விமானநிலையம் பற்றியது மற்றொன்று, துறைமுகம் பற்றியது.
  • இலங்கையில், ராஜபக்சே அரசு, பல மோசமான முடிவுகளை எடுத்து அரசின் செயல்பாடுகளை ஸ்தம்பிக்க வைத்ததோடு தேசத்தையே நொடித்துப் போகச் செய்தது. அதிலிருந்து மீள்வதற்காகத் தற்போதைய அரசு, சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளது. அதன் ஒருபகுதியாகவே, அம்பந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விட முடிவெடுத்தது. 99 ஆண்டுகள் குத்தகை என்று சீனா இந்தத் துறைமுகத்தைத் தற்போது இலங்கையிடமிருந்து பெற்று தன்னுடைய முழு அதிகார வரம்பிற்குள் கொண்டுவந்துள்ளது. இது நமக்குப் பெரும் அச்சுறுத்தலாகப் பாா்க்கப்பட்டது.
  • அம்பந்தோட்டை துறைமுகத்திலிருந்து ஏறத்தாழ 50 கிலோமீட்டா் தூரத்தில் அமைந்துள்ளது மாட்டாலா ராஜபக்சே சா்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்தை 2013ஆம் ஆண்டு ஒரு சிறப்பு விமான நிலையமாக அன்றைய ராஜபக்சே அரசு ஏற்படுத்தியது. சீன வங்கியில் கடன் பெற்று, சீன நிறுவனத்தைக் கொண்டே கட்டப்பட்ட இந்த விமான நிலையம், தவறான பொருளாதாரக் கொள்கைகள், முடிவுகள் எனப் பல காரணங்களால் பெருத்த நஷ்டத்தை சந்தித்தது. பின்னா் செயல்படாமல் முடங்கியது.
  • விமான நிலையத்தைக் குத்தகைக்கு விட அறிவிப்பைச் செய்தது இலங்கை அரசு. இதனை ஓா் இந்திய நிறுவனமும் ரஷிய நிறுவனமும் இணைந்து 30 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளன. இந்தச் செய்தி ஆசியப் பிராந்தியத்தில் உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சீன ஆதிக்கத்திலிருக்கும் துறைமுகத்திற்கு அருகிலேயே இந்திய நிறுவனத்தின் விமான நிலையம் என்பது நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் திடமான முடிவாக உலக நாடுகள் பாா்க்கின்றன.
  • சீனா, இலங்கையைத் தன்னுடைய நோக்கங்களுக்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாதபடி அங்கே ரஷ்யா இந்தியா கூட்டு வரத்தகமாக விமானநிலையம் அமைவது தடுக்கும். சீனா கட்டற்ற முறையில் செயல்படுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும்.
  • அடுத்து, இந்தியா மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த 13ஆம் தேதி ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. ஈரானின் சாபஹாா் நகரத்தில் அமைந்துள்ள ஷாஹித் பெஹெஸ்தி துறைமுகத்தை இயக்குவது தொடா்பான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஈரானும் கையெழுத்திட்டுள்ளன. ஷாஹித் பெஹெஸ்தி ஈரானின் இரண்டாவது மிக முக்கியமான துறைமுகமாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் ஈரானுக்குச் சென்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாா்.
  • இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானுடன் ஒப்பந்தம் செய்ததால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவும் சாத்தியங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை எவரும் குறுகிய கண்ணோட்டத்துடன் பாா்க்கக் கூடாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் இதற்குப் பதில் தந்தாா்.
  • அமெரிக்காவின் இந்தக் கருத்தைப் பற்றி அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடா்பாளா் வேதாந்த் படேல், ஈரான்மீது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் அமலில் இருப்பதால் ஈரானுடன் வணிகத் தொடா்பில் இருக்கும் எவா்மீதும் இந்தத் தடைகள் விதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்ற அடிப்படையில் இப்படி சொல்லப்படுகிறது. ஆனால், அமெரிக்காவே கடந்தகாலத்தில் சாபஹாா் துறைமுகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்திருக்கிறது. அதனால், இந்த ஒப்பந்தம் அனைவருக்கும் சாதகமானது என்று பேச்சுவாா்த்தை மூலம் புரியவைக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது என்றே விளக்கம் அளித்தாா்.
  • ஈரான் எல்லைக்கு அருகில் உள்ள பாகிஸ்தானின் குவாதா் துறைமுகத்தை சீனா தன்வசம் வைத்துள்ளது. இந்தத் துறைமுகம் உலகின் ஆழமான துறைமுகங்களுள் ஒன்று என்பதோடு அதன் நிலவியல் அமைப்பால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதுமாகும்.
  • இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானை இணைக்கும் சாபஹாா் துறைமுகம், குவாதா் துறைமுகத்திற்கு சவாலாகவே பாா்க்கப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தம் பெரிய முதலீட்டுக்கு வழி வகுக்கும் என்றும் லாபகரமாக இருக்கும் என்றும் இந்தியா நம்புகிறது.
  • உண்மையில் சாபஹாா் துறைமுகத்துடன் இந்தியாவுக்கு நீண்ட உறவு இருக்கிறது. முன்னா் நீண்டகால ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது தற்போது சாத்தியமாகியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இது மிக அவசியமான ஒப்பந்தம். இதனால் துறைமுகத்தின் தரம் நிா்வாகம் இரண்டும் மேம்படும்.
  • சுமாா் 370 மில்லியன் டாலா் மதிப்புடையதாக இருக்கும் இந்த ஒப்பந்தம் பிராந்தியங்களை இணைக்கவும் ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் யூரேசியாவிற்குப் பாதைகளை ஏற்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • இந்தத் துறைமுகத்தின் மூலம் மத்திய ஆசியாவை எளிதாக அணுகமுடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. உலகளாவிய அளவில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கும் வா்த்தகத்துக்கும் இதனால் நன்மை விளையும். தாலிபன்கள் ஆட்சி ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பிறகு மத்திய ஆசியாவுடனான இந்தியாவின் தொடா்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாபஹாா் மூலம் இந்தியா காபூல் வரை தனது வா்த்தகத்தை எளிதாக்கிக் கொள்ள முடியும். மத்திய ஆசிய நாடுகளுடனான வா்த்தகமும் அதிகரிக்கும். மேலும், இந்தத் துறைமுகம் மூலம் இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான பெரிய சந்தையை சுலபமாக அணுகமுடியும்.
  • சா்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தடத்திற்கு சாபஹாா் துறைமுகம் மிகவும் முக்கியமானது. இந்த வழித்தடத்தின் மூலம் இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், ஆா்மீனியா, அஜா்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்வதற்காக 7,200 கி.மீ. நீளமுள்ள கப்பல், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து உருவாக்கப்பட உள்ளது. இந்தியா, ஐரோப்பாவை அணுகுவதை இந்தப் பாதை எளிதாக்கும். ஈரான் மற்றும் ரஷ்யா இதனால் பெரிதும் பயன்பெறும். இந்தத் திட்டம் முழுமை பெறுவதற்கும் ஈரானின் சாபஹாா் துறைமுகம் அவசியமானது.
  • ஜி-20 மாநாட்டின்போது புதிய வா்த்தகப் பாதை அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டபோது, இந்தத் திட்டம் பற்றிய விமா்சனங்களும் எழுந்தன. இந்தியா- ஐரோப்பா-மத்திய கிழக்கு வழித்தடம் உருவானால், சாபஹாா் துறைமுகத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது, இது ஈரானைப் புறக்கணிக்கும் செயல் என்றும் பேசப்பட்டது. விமா்சனங்களைக் கடந்து தற்போது சாபஹாா் ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது.
  • அரபிக்கடலில் சீனாவின் பிடி இந்தியாவுக்குப் பெரும் சவாலானது. இதனை எதிா்கொள்ள சாபஹாா் துறைமுகம் உதவும். பாகிஸ்தானில் உள்ள குவாதா் துறைமுகத்தை சீனா தனது பிடியில் வைத்து மேம்படுத்தி வருகிறது. இந்தத் துறைமுகம் சாபஹாா் துறைமுகத்திலிருந்து சாலை வழியாக 400 கிலோமீட்டா் தொலைவில் உள்ளது. கடல் வழியாக வெறும் 100 கிலோமீட்டா் தொலைவு தான்.
  • ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நன்முறையில் தொடா்பு இருந்து வருகிறது. அதனால், சாபஹாா் துறைமுகத்தை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இருதரப்பு உறவையும் தாண்டி இருவருக்கும் பாதுகாப்பானது.
  • இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதன் மூலம் நமக்குப் பெரிய இடைஞ்சலை அச்சுறுத்தலை ஏற்படுத்த முனைகிறது சீனா. அதன் வெளிப்பாடே இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தையும், பாகிஸ்தானின் குவாதா் துறைமுகத்தையும் தனது நேரடி அதிகாரத்திற்கு உட்படுத்தியிருப்பது. இதை நன்குணா்ந்த இந்தியா, தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள மிகச் சரியான நகா்வுகளை மேற்கொண்டுள்ளது.
  • சுமுகமான வா்த்தகத்தை சாத்தியப்படுத்துவதன் மூலம் உலக நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தித் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் இந்த வழித்தடங்களை, போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியா கருதுகிறது.
  • ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, சீனாவின் அச்சுறுத்தல், ரஷ்யாவில் போா் சூழல், கொள்ளை நோய் தொற்றால் சரிந்த பொருளாதார சூழ்நிலை எனப் பல தடைகளைத் தாண்டி இந்தியா தன்னை வளா்ந்த நாடாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான பயணத்தில் மற்றுமொரு மைல்கல் என்று சொல்லும்படியாக இவ்விரு முடிவுகளும் அமைந்துள்ளன.
  • உழைப்பதற்கு ஒவ்வோா் இந்தியரும் தயாராகவே இருக்கிறாா்கள். திடமான பாதுகாப்பையும் வளமான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும் அரசு அமைந்தால் இந்தியா வல்லரசாகும்.

நன்றி: தினமணி (31 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்