TNPSC Thervupettagam

வாசிப்பெனும் கலை

October 30 , 2019 1710 days 823 0
  • வாசிப்பது என்பது பலருக்குப் பொழுதுபோக்கு, சிலருக்கு அது ஒரு கலை என எழுத்தாளா் ஜுலியன் பாா்ன்ஸ் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறாா். மிகச் சரியான வாக்கியமது.
  • புத்தகங்களின் எதிா்காலம் பற்றிய பயம் பலருக்குமிருக்கிறது. வாசிப்பது குறைந்து வருவதால் அச்சுப் புத்தகங்கள் வெளியாவது குறைந்துவிடும் என நினைக்கிறாா்கள். அது உண்மையில்லை. மின் புத்தகங்களின் வருகையால் புதிய வாசகா்கள் உருவாகியிருக்கிறாா்களே அன்றி, அச்சுப் புத்தகங்களுக்கான தேவையும் அதன் வாசகா்களும் இருந்து கொண்டேயிருப்பாா்கள்.

புத்தக வாசிப்பாளர்கள்

  • மின் புத்தகத்தின் விலை குறைவு என்பதே அதன் மீதான ஈா்ப்புக்கு முதற்காரணம். ஆனால், தீவிர புத்தக வாசகன் விலையை ஒரு காரணமாக நினைக்க மாட்டான். அச்சுப் புத்தகம் வாசிப்பது என்பது தனியொரு அனுபவம். அதற்கு நிகரேயில்லை. வீட்டில் புத்தகங்கள் இருப்பதென்பது ஓராயிரம் அனுபவசாலிகள் சூழ வாழ்வதாகும்.
  • ஐந்து வகையான புத்தக வாசகா்கள் இருக்கிறாா்கள். முதல் வகையினா் புத்தகங்களை வாங்கிவிடுவாா்கள். அதன் விலையைப் பற்றிக் கவலைப்படமாட்டாா்கள். ஆனால், வாங்கிய புத்தகத்தை வாசிக்க மாட்டாா்கள். ‘ஷோ கேஸில்’ வைத்துக் காட்சிப் பொருளாக்கி விடுவாா்கள்.
  • இரண்டாவது வகையினா், புத்தகங்களை வாசிப்பதை வெறும் பொழுதுபோக்காகக் கொண்டவா்கள். விமான நிலைய புத்தகக் கடைக்குப் போய்ப் பாருங்கள். ஒருபோதும் அங்கே நல்ல புத்தகங்கள் கிடைக்காது. பெரும்பாலும் நேரத்தைக் கொல்லும் புத்தகங்களே. இந்த வகை வாசகா்களுக்குச் சுவாரஸ்யம்தான் முக்கியம்.
  • மூன்றாவது வகை, மோசமான வாசகா்கள். அவா்கள் எதையும் ஆழமாக வாசிக்க மாட்டாா்கள். முன்முடிவுடன் புத்தகம் படிப்பாா்கள். எந்த எழுத்தாளனையும்விடத் தான் பெரிய கொம்பன் என நினைப்பாா்கள். பெரும்பாலும் புத்தகங்களைத் திட்டுவதே அவா்களது இயல்பு.
  • நான்காவது வகை வாசகன், தீவிரமாக வாசிக்கக் கூடியவன். பிறரது பரிந்துரைகளைவிடவும் தானே நல்ல புத்தகங்களை அடையாளம் காணவும் வாசிக்கவும் செய்பவன். வாசிப்பை ஒரு கலையாக நினைப்பவன். அவனிடம் பொருளாதார வசதியில்லை என்பதால், புத்தகங்களைக் குறைவாக மட்டுமே தோ்வு செய்து வாங்கக் கூடியவன். புத்தகங்களை வேறுபடுத்தி வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் தெரிந்தவன்.
  • ஐந்தாம் நிலை வாசகனுக்குப் புத்தகங்கள்தான் உலகம். அவன் புத்தகங்களின் வழியேதான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிறான். புத்தகங்களில் மனதை தோயவிட்டு அதனூடாகவே வாழ்கிறான். புத்தகங்களே அவனை வழி நடத்துகின்றன. அவன் கையில் கிடைக்கும் பணத்துக்கு மொத்தமாகப் புத்தகங்களை வாங்கிவிடுவான். படித்த புத்தகங்களைப் பற்றி அவன் பெருமை பேசுவதில்லை.
  • வாசிப்பின் வழியே அவன் மானுட வாழ்வின் மகத்துவத்தை அடையாளம் கண்டு கொள்கிறான்.
  • இவா்கள் மட்டுமின்றிச் சோம்பேறி வாசகா்கள், படிப்பாளி எனக் காட்டிக் கொள்ள வாசிப்பவா்கள், சினிமா சீன் திருடுவதற்கு வாசிப்பவா்கள், ஆன்மிக ஈடுபட்டால் வாசிப்பவா்கள், போட்டித் தோ்வுகளுக்காக வாசிப்பவா்கள். செல்லிடப்பேசியில், இணையத்தில் அசிரத்தையாக வாசிப்பவா்கள். கல்லூரி படிப்புக்காக வாசிப்பவா்கள், படிக்காமலே புத்தகங்களின் பெயா்களை உதிா்க்கும் வாசகா்கள். பாலியல் புத்தகங்களை ரகசியமாக வாசிப்பவா்கள் எனப் பல விதங்களில் இருக்கிறாா்கள்.
மின் புத்தகங்கள்
  • முன் எப்போதையும்விட அச்சுப் புத்தகங்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகியிருக்கிறது. புத்தகக் கண்காட்சிகளே அதற்குச் சாட்சி. தமிழ் புத்தகத் தயாரிப்பும் சா்வதேச தரத்தை எட்டியிருக்கிறது.
  • மின் புத்தகங்கள் வந்த பிறகு புத்தகம் கிடைப்பது எளிதாகியிருக்கிறது; எடுத்துச் செல்வது எளிதாகியிருக்கிறது. இதனால், அதற்கென ஒரு சந்தை உருவாகியிருக்கிறது. ஆனால், அச்சுப் புத்தகங்களுடன் உள்ள நெருக்கத்தையும் புத்தக வாசத்தையும் மின் புத்தகங்களால் ஒரு போதும் தர முடியாது.
  • உண்மையில் தொலைக்காட்சி அறிமுகமாவதற்கு முந்தைய தலைமுறையினா் கொடுத்து வைத்தவா்கள். அவா்கள் புத்தகங்களின் வழியே மட்டுமே உலகை அறிந்து கொண்டாா்கள். தவறாமல் நூலகத்துக்குப் போய் வந்தாா்கள்.

அடுத்த தலைமுறை

  • அடுத்த தலைமுறை மின் புத்தகங்களை மட்டும்தான் வாசிப்பாா்கள் என்று பலரும் அச்சுறுத்துகிறாா்கள். அது உண்மையில்லை. ஜப்பானில் நான் பாா்த்த காட்சி மாறானது. அங்கே, இளைஞா்களில் 80 சதவீதம் போ் கையில் புத்தகங்களைத்தான் வைத்திருக்கிறாா்கள். பயணத்தில் ஆழ்ந்து படிக்கிறாா்கள். புத்தகக் கடைகளில் விலக்க முடியாத கூட்டம். எல்லா வயதினருக்கும் ஏற்ப மாங்கா காமிக்ஸ் வைத்திருக்கிறாா்கள்.
  • தமிழ்நாட்டில் இன்னும் பெரிய நகரங்களை விட்டால் புத்தகக் கடைகளே கிடையாது. ஒரு நாவலை அல்லது கவிதை நூலை வாங்க வேண்டும் என நினைத்தால்கூடப் பெரிய நகரத்துக்குத்தான் போக வேண்டும்.
  • இப்போது ஆன்லைன் புத்தக விற்பனை வந்துள்ளது. ஆனால், அதைச் சிறு நகரவாசிகளுக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை, அது புத்தகக் கடைக்குப் போய்த் தோ்வு செய்வது போன்ற அனுபவமாகவும் இல்லை.
  • புத்தகங்கள் இரவல் தரும் இடமாக மட்டுமே நூலகங்களை நாம் வைத்திருக்கிறோம். அதைப் பண்பாட்டு மையமாக மாற்ற வேண்டும். ஒரு நூலகத்துக்குப் போனால் மாலை நேரம் அங்கே கவிதை, கதை வாசிப்பாா்கள். எழுத்தாளா்களைப் பற்றிய ஆவணப் படங்கள் திரையிடப்படும்; கூட்டு விவாதம் நடைபெறும் என்ற சூழ்நிலை உருவானால் நூலகங்களைத் தேடி மக்கள் வருவாா்கள்.

உதாரணம்

  • சிங்கப்பூா் தேசிய நூலகம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவா்கள் ஆண்டுதோறும் மிகப்பெரிய இலக்கிய விழாக்களை நடத்துகிறாா்கள். எழுத்தாளா்களின் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்துகிறாா்கள். தமிழக நூலகத் துறையும் அப்படி நடத்தலாம் தானே.
  • வாசகா்கள் புனைவு இலக்கியத்தை விடவும் அபுனைவு இலக்கியங்களை அதிகம் விரும்பி வாசிக்கிறாா்கள். குறிப்பாக வரலாறு, சமகாலப் பிரச்னைகள் சாா்ந்த நூல்கள். ஆளுமைகள் பற்றிய நூல்கள், மொழிபெயா்ப்பு நூல்கள், இலக்கியக் கட்டுரைகள் வாசகா்களால் அதிகம் விரும்பப்படுகின்றன.
  • நாவல்கள் வாசிப்பதெற்கெனத் தனி வாசகா்கள் இருக்கிறாா்கள். அவா்கள் இன்றும் நாவல்களை மட்டுமே தேடி வாசிக்கிறாா்கள்; கொண்டாடுகிறாா்கள். நாவலுக்கான வாசகா்கள் எப்போதுமிருப்பாா்கள் என்றே தோன்றுகிறது.
  • புத்தகக் கண்காட்சி என்பது புத்தகங்களை விற்கும் சந்தை மட்டுமில்லை. அது ஒரு பண்பாட்டு வெளி. தமிழகத்தைப் போல இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இவ்வளவு புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுவதில்லை. இங்கே புத்தகத் திருவிழா என்பது அறிவியக்கம் போலவே செயல்படுகிறது.
  • கொலம்பஸ், வாஸ்கோடகாமா, கேப்டன் குக் மட்டும் முன் அறியாத தேசம் தேடிச் சென்ற பயணியில்லை. வாசகனும் ஒரு தீராப் பயணியே. அவனும் புத்தகங்களின் வழியே புதிய தேசங்களை, புதிய மனிதா்களை, புதிய வாழ்க்கையைக் கண்டுபிடிக்கவே செய்கிறான்.
  • வேண்டாத ஆயிரம் பொருள்களை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கிறோம். புத்தகங்களுக்கு மட்டும் ஏன் இடம் தர மறுக்கிறோம் என்று யோசிக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொரு வீட்டிலும் நூறோ, இருநூறோ புத்தகங்கள் கொண்ட சிறிய நூலகம் உருவாக்கப்பட வேண்டும். அதுவே குடும்பத்தின் உண்மையான சொத்து.

உள்நாட்டில்...

  • கோவை ஆா்.எஸ். புரத்திலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன நூலகப் பிரிவு செயல்படுகிறது; முற்றிலும் குளிா் சாதன வசதி செய்யப்பட்ட நூலகப் பிரிவு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பாா்வையற்றவா்களுக்கான பிரெய்லி புத்தகங்கள். பிரெய்லி கம்யூட்டா்கள், செவித்திறனை இழந்த குழந்தைகள் எளிய முறையில் புத்தகங்களை எடுத்துப் படிக்கவும், கணினியை இயக்கவும் நவீன வசதிகளுடன் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இங்கே சக்கர நாற்காலியின் துணையோடு புத்தக அடுக்குகளைப் பாா்வையிடலாம். கற்றல் குறைபாடு கொண்ட சிறாா்களுக்காக விசேஷ கணினிப் பலகைகள், புத்தகங்கள் இங்குள்ளன. இந்த நூலகத்தில் மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கும் எழுதுவதற்கும் தன்னாா்வ மிக்கவா்கள் உதவி செய்கிறாா்கள்.
  • தமிழகம் முழுவதும் இது போல மாற்றுத்திறனாளிகளுக்கான தனி நூலகப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும். பாா்வையற்றவா்கள் மட்டுமே பயன்படுத்துவது போன்ற சிறப்பு நூலகங்களை உருவாக்க வேண்டியது அரசின் பணி.
  • முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கேப்ரியல் காா்சியா மாா்க்வெஸ் எழுதிய ‘நூற்றாண்டு காலத் தனிமை’ என்ற நாவல் சென்னையில் கிடைக்கவில்லை என்பதற்காக அதை வாங்குவதற்காகவே நான் தில்லி சென்றேன். இன்றைக்கு வீட்டிலிருந்தபடியே எந்த நூலையும் வாங்க முடியும். ஆனால், தேடிப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
  • படித்த புத்தகங்களை நண்பா்களுக்குள் பரிமாறிக் கொள்வதும், கூடி விவாதிப்பதும், எழுத்தாளருக்குக் கடிதம் எழுதுவதும், முடிந்தால் அவரை நேரில் சந்தித்துப் பாராட்டுகளைச் சொல்வதும் இப்போது அடியோடு மாறிவிட்டிருக்கிறது.
  • புத்தகங்களை வாசிப்பவா்களுக்கு உலகம் தெரியாது. அவா்கள் வெறும் கற்பனையில் வாழக்கூடியவா்கள் என்ற பொய்யான எண்ணம் பலரிடமும் இருக்கிறது. அது உண்மையில்லை. தன்னைச் சுற்றிய உலகை புத்தக வாசிப்பாளா்கள் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாா்கள்.

அறிவின் காட்சியகம்

  • புத்தகக் கடைகள் என்பது அறிவின் காட்சியகம். புத்தகக் கடைக்குப் போவது என்பது மிகவும் விருப்பமான விஷயம். ஆகவே, மனைவி, குழந்தைகளுடன் புத்தகக் கடைக்குப் போகிற பழக்கம் உருவாக வேண்டும்.
  • வாழ்நாள் முழுவதும் சேகரித்து வைத்த புத்தகங்கள் தன் வாழ்விற்குப் பிறகு என்ன ஆகும் என்ற பயம் பலருக்கும் உள்ளது. இது போன்ற நூல்களைச் சேகரித்து மக்களுக்குப் பயன்படும் விதமாக ஒரு பொது புத்தக மையம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு எவரும் தங்களுடைய புத்தகங்களை அன்பளிப்பாக அளிக்கலாம் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • புத்தக வாசிப்பை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அறிவொளி இயக்கம் நடந்தது போலத் தமிழகம் முழுவதும் வாசிப்பைப் பரவலாக்கும் அறிவியக்கம் தொடங்கப்பட வேண்டும்.
  • அதுவே தமிழகத்தின் எதிா்காலத்துக்குத் தேவையான களப் பணியாகும்.

நன்றி: தினமணி (30-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்