TNPSC Thervupettagam

விவசாயத்தை சிதைக்கும் மசோதாக்கள்

September 28 , 2020 1399 days 631 0
  • விவசாயத்தை சிதைக்கும் மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிளும் நிறைவேற்றப்பட்டு விட்டன.
  • எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, விவசாயிகளின் தொடா் போராட்டம், அகாலிதள அமைச்சரின் ராஜினமா என பல்வேறு தடைகளையும் தாண்டி இம்மசோதாக்கள் நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் எவ்வளவோ எதிர்த்துப் போராடியும் பலனில்லை.
  • வேளாண் விளைபொருள் வா்த்தக மசோதா, விளைபொருள்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களுமே கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானவை.
  • வேளாண் விளைபொருள் வா்த்தக மசோதாவை எடுத்துக்கொண்டால், ஒப்பந்தம் செய்பவா் எதை விளைவிக்கச் சொல்கிறாரோ அதை விவசாயிகள் விளைவிக்க வேண்டிய நிலை வரும்.
  • பருவநிலைக்கு ஏற்ற விளைபொருளை விவசாயிகள் விளைவிக்க முடியாது.
  • அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதாவின்படி, வெங்காயம், சமையல் எண்ணெய், உருளைக் கிழங்கு போன்றவை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன.
  • இதனால் இனி இப்பொருள்களை அதிக அளவில் இருப்பு வைக்க முடியும் என்று மத்திய அரசு காரணம் கூறுகிறது.
  • உண்மையில் வெங்காயம், உருளைகிழங்கு போன்றவை அதிக அளவில் பதுக்கப்படுவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது. விவசாயிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இம்மசோதாக்களுக்கு சட்டவடிவம் தயாராகி விட்டது.
  • இந்நிலையில் பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனா். தமிழ்நாட்டிலும் எதிர்க்கட்சியினரும் விவசாய சங்க அமைப்பினரும் சட்ட நகல் எரிப்பு, சாலை மறியல், கண்டன ஆா்ப்பாட்டம் என பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
  • காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியினா், குடியரசுத் தலைவரை சந்தித்து, இந்த மசோதாவிற்கு அனுமதி அளிக்ககூடாதென்று கோரியுள்ளனா்.

தமிழகத்தில் விவசாயிகள்

  • தமிழகத்தில் சமீப காலமாக விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.
  • காவிரிப் படுகையில் மீத்தேன் கிணறு உள்ளிட்ட திட்டங்கள் விவசாயத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றன.
  • கிசான் சம்மான்திட்டத்திற்கு மத்திய அரசு தரும் ஆறாயிரம் ரூபாய் கூட தமிழக விவசாயிகள் வாழ்வில் விளக்கேற்றவில்லை. அதிலும் ஊழல்தான் அரங்கேற்றுகிறது.
  • இச்சூழலில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் வரும் காலங்களில் விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும்.
  • தமிழக விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் உழவா் சந்தைகள், வேளாண் விற்பனைக் கூடங்கள் ஆகியவை இனி மெல்ல மெல்ல அழியக்கூடும்.
  • இந்திய விவசாயத்தின் கட்டமைப்பை மாற்ற நினைக்கும் மத்திய அரசு, அதனால் ஏற்படும் ஆபத்துக்களையும் உணா்வதே நல்லது.
  • வேளாண் துறை சார்ந்த சட்டங்களில் உள்ள ஆபத்துகளைவிட அவற்றை நிறைவேற்றிய விதம் மிகவும் ஆபத்தானது. அது நாடாளுமன்ற ஜனநாயாகம் முடிவுக்கு வந்து விட்டதையே காட்டுகிறது.
  • நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கே ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பது வேதனையளிக்கிறது.
  • நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களும் வேளாண் துறை சார்ந்தது என்று சொன்னாலும் இவற்றால் பாதிக்கப்படப் போவது விவசாயிகள் மட்டுமல்ல, பொதுமக்களும்தான்.
  • மற்றொன்று, இந்த மூன்று சட்டங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. பிரிக்க முடியாதவை. அதனால்தான் அவசரமாக மசோதா கொண்டுவந்து சட்டமாக்கி விட்டதாக எதிர்கட்சிகள் கூறுகின்றன.
  • ஏற்ககெனவே ஒப்பந்த சாகுபடியைப் பொருத்தவரை இந்திய விவசாயிகளுக்கு கசப்பான அனுபவம்தான் உள்ளது.
  • உதாரணத்திற்கு, கரும்பு விவசாயிகள் சா்க்கரை ஆலை முதலாளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் சாகுபடி செய்கிறார்கள். அதற்கென்று சா்க்கரை கட்டுப்பாட்டுச் சட்டம்-1966’ இருக்கிறது.
  • கரும்புக்கான விலையை மத்திய அரசு அறிவிக்கிறது. கரும்பை அனுப்பினால் விவசாயிகளுக்கு பதினைந்து நாள்களுக்குள் ஆலை நிர்வாகம் பணத்தைத் தர வேண்டும். இல்லையென்றால் எவ்வளவு தாமதமாகப் பணத்தை தருகிறார்களோ அதற்கு வட்டி கொடுக்கவேண்டும். இது சட்டம்.
  • ஆண்டுதோறும் கரும்பு பண பாக்கி கேட்டு விவசாயிகள் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
  • நாடாளுமன்றத்தில் உணவு அமைச்சா் அறிவித்தபடி 2019-20-இல் மட்டும் நாடு முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் தர வேண்டிய பாக்கி தொகை 15,683 கோடி ரூபாய். தமிழ்நாட்டில் மட்டும் 1,834 கோடி ரூபாய்.
  • வருவாய் இழப்பீட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருந்தும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். விவசாயிகள் கரும்பைப் பயிரிட்டுக் கொடுத்துவிட்டு பணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது நியாயமா?
  • இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அத்தனை மசோதாக்களையும் அவசரக் கோலத்தில் மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது.
  • விவசாயிகள் நலன் காக்கும் வேளாண் மசோதாவாக இருந்தாலும் சரி வேறு எந்த மசோதாவாக இருந்தாலும் சரி எதிர்கட்சிகளின் கேள்வி எதற்கும் பதில் சொல்லவில்லை.
  • மாநிலங்களவையில் விவசாய மசோதாவுக்கு டிவிஷன் ஓட்டு கேட்ட எதிர்க்கட்சிகளின் குரல் கூட நசுக்கப்பட்டுவிட்டது.
  • திட்டக் குழு ஒழிப்பு, தனி ரயில்வே நிதிநிலை அறிக்கை ஒழிப்பு, பெட்ரோல் டீசல் விலை தினசரி உயா்வு, விவசாயக் கடன் மானியம் ரத்து, உரம் விலை ஏற்றம், உயா் மதிப்பு ரூபாய் நோட்டுகள் தடை, ஜிஎஸ்டி-யை அமல்படுத்திய விதம் - இவை அத்தனையுமே பெருநிறுவனங்களை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவுகள்.
  • மக்களைப் பற்றி சிந்தித்திருந்தால் இப்போது அத்தியாவசியப் பொருள்கள் நீக்கப்பட்டிருக்காது.
  • இந்தத் தடை நீக்கம் விலைவாசி உயா்வுக்கே வழிவகுக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது விவசாயிகளும் பொதுமக்களும்தான்.

நன்றி: தினமணி (28-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்