TNPSC Thervupettagam

தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை

February 27 , 2021 1275 days 622 0
  • தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சரான O. பன்னீர் செல்வம் அவர்கள் இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
  • 2020-21 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட கணிப்புகளின்படி தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியானது (GSDP) ரூ. 19.43 இலட்சம் கோடியாக உள்ளது.
  • இது 2021-22 ஆம் ஆண்டில் ரூ.23.42 இலட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • கோவிட் நோய்த் தொற்றிற்கு எதிர்வினை ஆற்றியதற்காக தமிழ்நாடு அரசிற்கு ரூ.13,352.85 கோடி ரூபாய் செலவினமானது ஏற்பட்டுள்ளது.
  • வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 55.67 இலட்சம் குடும்பங்களின்  முதன்மை வருமானம் ஈட்டுபவர்களுக்கு விபத்து மற்றும் உயிர்க் காப்பீடானது வழங்கப் படுகின்றது.
  • அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு வரம்பை 4 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாக இந்த பட்ஜெட் உயர்த்தியுள்ளது.
  • கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கள்ளபாளையத்தில் ஒரு தொழிற்துறைப் பூங்கா அமைப்பதற்கான அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.
  • ஏறத்தாழ 40 இலட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பானது வழங்கப்பட இருக்கின்றது.
  • பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான மானியமானது ரூ.70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • கணினி அறிவியல் பாடமானது 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ/மாணவிகளுக்குப் பயிற்றுவிக்கப்பட இருக்கின்றது.
  • இந்தியாவின் பட்டாசுத் தொழிற்சாலை மையமான சிவகாசியில் தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட இருக்கின்றன. 

நிதி ஒதுக்கீடுகள்

  • ரூ.144 கோடி நிதியானது அம்மா சிறிய மருத்துவமனைகளுக்கு (கிளினிக்) ஒதுக்கப் பட்டுள்ளது.
  • உயர் கல்வித் துறைக்காக ரூ. 5,478.19 கோடி நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இது 8.42% ஆக அதிகரித்து உள்ளது.
  • ரூ.688.48 கோடி நிதியானது மாற்றுத் திறன் கொண்ட நபர்களின் நலனுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது.
  • இது “ரைட்ஸ்” (RIGHTS) எனப்படும் ஒரு சிறப்புத் திட்டத்தை நோக்கிச் செலுத்தப்பட உள்ளது.
  • ரூ.6,683 கோடி நிதியானது கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ரூ.7,217 கோடி நிதியானது மீன் வளத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.34,181 கோடியானது ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விவசாயத் துறைக்கான நிதி ஒதுக்கீடானது 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 7.8% என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • மாநிலத்தின் விவசாயத் துறைக்கு ரூ.1738 கோடி நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கூடுதலாக ரூ.5000 கோடி நிதியானது பயிர்க் கடன் தள்ளுபடிக்காக ஒதுக்கப் பட்டுள்ளது.
  • இயற்கைப் பேரிடர் காலத்தில் நெல் இழப்பிற்கான நிவாரணமானது ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு ரூ.13,000 ரூபாயிலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ரூ.4371 கோடி நிதியானது மாநிலத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும், கடந்த 10 ஆண்டுகளில் அரசின் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், 12.5 இலட்சம் மக்களுக்கு ரூ.1791 கோடி மதிப்பிலான தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

கடன்

  • தமிழ்நாட்டின் ஒட்டு மொத்தக் கடன் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வாக்கில் ரூ.5.70 இலட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வாக்கில் ரூ.4.85 இலட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • மாநிலமானது 2021-22 ஆம் ஆண்டில்  நிதிப் பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்காக ரூ.84,686.75 கோடி அளவிற்கு நிகரக் கடனை வாங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வரி வருமானம் மற்றும் நிதிப் பற்றாக்குறை

  • 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையானது மாநிலத்தின் சரக்கு மற்றும் சேவை வரி வருமானம் ரூ.45,395.50 கோடி என்றும் மதிப்புக் கூட்டு வரி வருமானம் ரூ.56,413.19 கோடி என்றும் மாநிலத்தின் கலால் வரி வருமானம் ரூ.9,613.91 கோடி என்றும் கணித்துள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் (மத்திய நிதிநிலை அறிக்கையில்) மத்திய வரியின் மூலமான தமிழ்நாட்டின் பங்கானது ரூ.32,849.34 கோடியிலிருந்து ரூ.23,039.46 கோடியாக (2020-21 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பு) குறைக்கப் பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட கணிப்பில் மாநிலத்திற்கே உரிய வரி வருமானமானது ரூ.1.04 இலட்சம் கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இது 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கையில் இருந்ததை விட ரூ.23,561 கோடி குறைவானது ஆகும்.
  • இது 2021-22 ஆம் ஆண்டில் ரூ.1.35 இலட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • ஒட்டு மொத்த வருமான ரசீதுகள் ரூ.2,18,991.96 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் வழங்கப்படும் ஊதியம், ஓய்வூதியம் வட்டி மற்றும் திட்டம் தொடர்பான செலவினம், வருவாய் செலவினம் ஆகியவற்றிற்கு ரூ.2,60,409.26 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான ஒட்டு மொத்த வருவாய்ப் பற்றாக்குறையானது ரூ.41,417.30 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட கணிப்பில் தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக் குறையானது ரூ.96,884.97 கோடி என்ற அளவிற்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இது மாநிலத்தின் GSDPயில் 4.99% ஆகும்.
  • இது 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்கும்.

GSDP

  • தமிழ்நாடு 2020-21 ஆம் ஆண்டில் (2020-21 ஆம் ஆண்டின் அடிப்படை விலையை அடிப்படையாகக்  கொண்டு) 2.02% என்ற அளவில் நேர்மறையான GSDP வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது அகில இந்திய அளவில் 7.7% என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சியாகக் கணிக்கப் பட்டிருந்தது.
  • இதில் 5.23% என்ற அளவு பங்குடன் முதல்நிலைத் துறையானது வலுவான செயல்பாட்டாளராக விளங்கியது. இதில் கால்நடை மற்றும் மீன்வளத் துறைகள் மிக வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தன.
  • 2020-21 ஆம் ஆண்டில்  இரண்டாம் நிலைத் துறையின் வளர்ச்சி 1.25% என்ற அளவிலும் சேவைத் துறையின் வளர்ச்சி 1.64% என்ற அளவிலும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்