தற்கால அடிமைத்தனத்தின் பிற வடிவங்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை
August 22 , 2022 701 days 354 0
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையானது, தற்கால அடிமைத்தனத்தின் பிற வடிவங்களை எடுத்துரைத்து, குழந்தைத் தொழிலாளர் முறை, சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வறுமை ஆகியவை குறித்தத் தரவுகளைச் சுட்டிக் காட்டியுள்ளது.
சீனாவின் உய்குர் சிறுபான்மையினர் மத்தியில் நிலவும் கட்டாய உழைப்பு முறை, தெற்காசியாவில் வாழும் தாழ்த்தப்பட்டச் சாதியினரான தலித்துகள் எதிர்கொண்டு வரும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை மற்றும் வளைகுடா நாடுகள், பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் நிலவும் வீட்டுத் தொழிலாளர் அடிமைத்தனம் உள்ளிட்ட தற்கால அடிமை முறைகள் உலகம் முழுவதும் பரவலாக நடைமுறையில் உள்ளன.
குழந்தைத் தொழிலாளர் முறையானது (5-17 வயது), அதன் அனைத்து மோசமான வடிவங்கள் உட்பட, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறையில் உள்ளது.
ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள், மத்தியக் கிழக்கு நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் 4% முதல் 6% வரையிலான குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சதவீதமானது ஆப்பிரிக்க நாடுகளில் 21.6% ஆகவும், ஆப்பிரிக்காவின் துணை சஹாராப் பகுதியில் 23.9% ஆகவும் அதிகளவில் நிலவி வருகிறது.
கம்போடியா, இந்தியா, கஜகஸ்தான், இலங்கை மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நடத்தப்படும் கட்டாயத் திருமணம் ஒரு கவலையளிக்கக் கூடியப் பிரச்சனையாக உள்ளது.
பால்கன் நாடுகளின் சில பகுதிகளில் வாழும் 20 முதல் 24 வயதுடைய ரோமா இனப் பெண்களில் பாதிப் பேர் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப் பட்டு உள்ளனர்.