தேசிய விளையாட்டு விருதுகள் 2019ற்கான தேர்வுக் குழுவானது விமல் குமார் (பேட்மின்டன்), சந்தீப் குப்தா (மேசைப் பந்தாட்டம்) மற்றும் மொஹிந்தர் சிங் தில்லான் (தடகளம்) ஆகியோரை துரோணாச்சாரியா விருதின் வழக்கமான பிரிவிற்காகப் பரிந்துரை செய்துள்ளது.
மெஸ்பன் பட்டேல் (ஹாக்கி), ராம்பிர் சிங் கோகார் (கபடி) மற்றும் சஞ்சய் பரத்வாஜ் (கிரிக்கெட்) ஆகியோர் துரோணாச்சாரியா விருதின் வாழ்நாள் சாதனைப் பிரிவிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு வீரர்கள் அல்லது அணிகளுக்கு வெற்றிகரமாகப் பயிற்சியளித்த மற்றும் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த வெற்றியைப் பெறுவதற்கு விளையாட்டு வீரர்களுக்கு உதவிய புகழ்பெற்ற பயிற்சியாளர்களைக் கௌரவிப்பதற்காக துரோணாச்சாரியா விருதுகள் வழங்கப்படுகின்றன.
மேலும் இந்தக் குழு அர்ஜுனா விருதுக்காக 19 விளையாட்டு வீரர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது.
அர்ஜுனா விருதினைப் பெறுவதற்கு ஒரு விளையாட்டு வீரர் முந்தைய 4 ஆண்டுகளில் சர்வதேச அளவில் தொடர்ந்து சிறந்த செயல்திறனைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் தலைமைப் பண்பு, விளையாட்டுத் திறன் மற்றும் ஒழுக்க உணர்வு ஆகிய பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும்.
5 விளையாட்டு வீரர்கள் தயான் சந்த் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
தனது விளையாட்டுத் திறன் மூலம் பங்காற்றிய மற்றும் ஓய்வுக்குப் பின்பும் கூட விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு தயான் சந்த் விருது வழங்கப்படுகின்றது.
இந்த விருதுகள் புகழ்பெற்ற ஹாக்கி வீரரான தயான் சந்தின் பிறந்த தினமான தேசிய விளையாட்டுகள் தினத்தின் போது ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படவிருக்கின்றன.
முன்னதாக, தேசிய விளையாட்டு விருதுகளைப் பெறும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 12 நபர்கள் கொண்ட ஒரு குழுவை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் பாய்ச்சுங் பூட்டியா, பெண் கிரிக்கெட் வீராங்கனை அஞ்சும் சோப்ரா, முன்னாள் நீளம் தாண்டுதல் வீரர் அஞ்சு போபி ஜார்ஜ் மற்றும் மேசைப் பந்து பயிற்சியாளர் கமலேஷ் மேத்தா ஆகியோர் இந்தத் தேர்வுக் குழுவில் இடம் பெற்ற தடகள வீரர்களாவர்.