நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகமானது, இணைய வணிக நிறுவனங்களைத் தங்கள் இணைய தளங்களில் நெறிமுறை சாரா கருத்துத் திணிப்பு நடைமுறைகளை (டார்க் பேட்டர்ன்ஸ்) பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த நெறிமுறை சாரா உத்திகள், சில அறிவாற்றல் மற்றும் நடத்தைச் சார்புகளைப் பயன்படுத்தி, நுகர்வோர்கள் அந்தச் சமயத்தில் வாங்க விரும்பாத பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கச் செய்வதற்குப் பயனர்களை தூண்டும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்களானது, சில விதிமுறைகள், நிபந்தனைகள் அல்லது தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயனர்களை ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக பெரும்பாலும் ஏய்ப்பு தந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.
பல்வேறு சமூக ஊடக நிறுவனங்களும், முகநூல், ஆப்பிள், அமேசான், ஸ்கைப், லிங்க்டுஇன், மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் இவற்றைப் பயன்படுத்துகின்றன.
நெறிமுறை சாரா கருத்துத் திணிப்பு நடைமுறைகளுக்கான மற்றொரு உதாரணம் என்பது, பயனர் ஒருவருக்கு அவரின் விருப்பமின்றி விளம்பரதாரர்களால் அனுப்பப் படும் செய்திகள் ஆகும்.
நெறிமுறை சாரா கருத்துத் திணிப்பு ஆனது, பயனர் அனுபவத்தினைப் பாதிப்பதோடு, பயனர்களை நிதி மற்றும் தரவுகளைக் கையகப்படுத்துதல் நடைமுறைகளாலும் பாதிப்படையச் செய்கின்றன.
தற்போது தேவையில்லாத விளம்பரங்களின் ஒரு பகுதியாக நெறிமுறை சாரா கருத்து திணிப்புகள் தென்படுகின்றன.