இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட, சமய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களில் பூஜை மற்றும் பல்வேறு வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கச் செய்வதற்கான பல்வேறு சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப் பாராளுமன்றக் குழுவானது அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசினால் பாதுகாக்கப்பட்ட 3,693 நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல் பொருள் தளங்கள் இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப் படுகின்றன.
அதில், நான்கில் ஒரு பங்கிற்கு (820) சற்று குறைவானவையே வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.
மீதமுள்ளவை எந்தவொரு செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் நினைவு சின்னங்களாகக் கருதப் படுகின்றன என்பதால் அங்கு புதிய சமயச் சடங்குகளைத் தொடங்கவோ அல்லது நடத்தவோ முடியாது.
வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட இடங்களில் கோவில்கள், மசூதிகள், தர்காக்கள் மற்றும் தேவாலயங்கள் ஆகியவை அடங்கும்.
இந்தியத் தொல்லியல் துறையின் விதிகளின்படி, பாதுகாக்கப்பட்ட தளங்களுக்கான பொறுப்பினை அத்துறை ஏற்ற போது "வழிபாட்டுத் தலங்களாக அவை செயல்பாட்டில் இருந்தால்" மட்டுமே வழிபாட்டு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நமாஸ் நடைபெறும் தாஜ்மஹால் செயல்பாட்டில் உள்ள நினைவுச் சின்னத்திற்கான சிறந்த உதாரணம் ஆகும்.
மற்ற குறிப்பிடத்தக்கச் செயல்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களில் கன்னோஜில் உள்ள மூன்று மசூதிகள், மீரட்டில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம், டெல்லியின் ஹவுஸ் காஸ் கிராமத்தில் உள்ள நிலா மசூதி மற்றும் லடாக்கில் உள்ள பல புத்த மடாலயங்கள் ஆகியவை அடங்கும்.